ஊரலருரைத்த காதை




60




65

ஆங்ஙன மன்றியும் ஆயிழை கேளாய்
ஈங்கிம் மாதவர் உறைவிடம் புகுந்தேன்
மறவணம் நீத்த மாசறு கேள்வி
அறவண வடிகள் அடிமிசை வீழ்ந்து
மாபெருந் துன்பங் கொண்டுள மயங்கிக்
காதல னுற்ற கடுந் துயர் கூறப்
பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம்
பிறவா ருறுவது பெரும்பே ரின்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோ ருறுவ தறிகென் றருளி
ஐவகைச் சீலத் தமைதியுங் காட்டி
உய்வகை இவைகொளென் றுரவோ னருளினன்

58
உரை
69

       ஆங்ஙனம் அன்றியும் - அஃதன்றியும், ஆயிழை கேளாய் - வாய்ந்தமாலையே கேட்பாயாக, ஈங்கு இம்மாதவர் உறைவிடம் புகுந்தேன்-இங்கு இச்சங்கத்தார் உறையுமிடம் புகுந்த யான், மறவணம் நீத்த மாசறு கேள்வி - பாவத் தன்மைகளைத் துறந்த குற்றமற்ற மெய்யறிவுடையரான, அறவண வடிகள் அடிமிசை வீழ்ந்து-அறவணவடிகளின் திருவடிமீது விழுந்து, மாபெருந்துன்பங்கொண்டு உளம் மயங்கி-மிக்க பெருந்துன்பத்துடன் மணங்கலங்கி, காதலன்உற்ற கடுந்துயர் கூற-என் காதலன் அடைந்த கொடிய துயரத்தைக்கூற, பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் - உலகில் பிறந்தவர் அடைவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும் பேரின்பம்-பிறவாதவர் அடைவது மிக்க பற்றின்வருவது முன்னது-முதற்கண் கூறப்பட்ட பிறப்புப்பற்றினால் உண்டாவது, பின்னது அற்றோர் உறுவது - பின்னருரைத்த பிறவாமை பற்றினை அற்றோர் அடைதற்குரியது, அறிக என்று அருளி - இவற்றை அறிவாயாகவென்று நால்வகை வாய்மையையும் அருளிச் செய்து, ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி - காமம், கொலைகள், பொய்,. களவு என்னும் ஐந்தினையும் முற்றத் துறந்தலாகிய ஐவகைச் சீலங்களையும் உணர்த்தி, உய்வகை இவைகொள் என்று-உய்யும் வழி இவையே இவற்றைக் கொள்க என்று உரவோன் அருளினன்-திண்ணிய அறிவினையுடைய அவ்வடிகள் அருளினர்;

ஆங்ஙனமன்றியும் கேளாய் என்றது மணிமேகலை

பரத்தைமைக் குரியளல்லாக் காரணம் அதுவாம்; யாம் இருவேமும் தவநெறி நிற்றற்குரிய காரணத்தையும் கேள் என்றபடி, மாதவர்-பௌத்த சங்கத்தார். பாவங்கள் பத்துவகைப்படு மென்பர். இவற்றின் விரியை இந்நூலின் 24:30-ஆம் காதைகளானறிக. பிறவார்-பிறப்பினீங்கினோர்; வீடுபெற்றோர், 'பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம்', என்பது முதலியவற்றால் துக்கம், துக்க நிவாரணம், துக்கோற்பத்தி, துக்க நிவாரண மார்க்கம் என்னும் நான்கு வாய்மையும் முறையே கூறப்பட்டன; 1"துன்பந் தோற்றம் பற்றே காரணம், இன்பம் வீடே பற்றிலி காரணம், ஒன்றிய வுரையே வாய்மை நான்காவது," என்பதுங் காண்க. சீலம் ஐந்தனையும், 2"கள்ளும் பொய்யுங் காமமுங் கொலையுங், உள்ளக் களவுமென் றுரவோர் துறந்தவை" என்பதனானறிக. உய்வகை இவை என்றமையால் வீட்டைவார்க்கு வாய்மையும் சீலமும் இன்றியமையாதன வென்ப தாயிற்று,. உரவோன் அருளினன் ஆதலால் யாம் தவநெறி நிற்றற்கே யுரியம் என விரித்துரைக்க.


1 மணி. 3 : 186-8. 2 மணி. 24 : 77-8.