தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

30

அந்த வுதவிக் காங்கவள் பெயரைத்
தந்தையிட் டனனினைத் தையனின் துறவியும்
அன்றே கனவி னனவென வறைந்த
மென்பூ மேனிமணி மேகலா தெய்வம்
என்பவட் கொப்ப வவனிடு சாபத்து
35 நகர்கடல் கொள்ளநின் றாயரும் யானும்
பகருநின் பொருட்டா லிப்பதிப் படர்ந்தனம்
என்றலு மறவணன் றாளிணை யிறைஞ்சிப்

30
உரை
37

       அந்த உதவிக்கு - அந்த வுதவி குறித்து, ஆங்கு - நினக்குப் பெயரிடும் நாளில், அவள் பெயரை - அம்மணிமேகலையின் பெயரையே, நினைத் தந்தை இட்டனன் - உனக்கு உன் தந்தையாகிய கோவலன் இட்டான்; தையல் நின் துறவியும் - அவன் மகளாகிய உனது துறவினையும்; அன்றே கனவின் நனவென அறைந்த-அன்றிரவே அவன் கனவிற் றோன்றி நனவிற் றெளியப் பேசுவது போலச் சொல்லிய; மென் பூமேனி மணிமேகலா தெய்வம் என்பவட்கு ஒப்ப - மெல்லிய பூப்போன்ற மேனியையுடைய அம்மணிமேகலா தெய்வமெனப்படும் அவள் கருத்துக்கேற்ப; அவன் இடு சாபத்து - அவ்விந்திரனிட்ட சாபத்தால்; நகர் கடல்கொள்ள, காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல் கொண்டொழியவே; நின் தாயரும் யானும் - நினக்குத் தாயாகிய மாதவியும் சுதமதியு முதலாயினாருடன் யானும்; பகரும் நின் பொருட்டால் - பலரும் புகழும் உன்னைக் காணும் பொருட்டு; இப்பதிப்படர்ந்தனம் - இக் காஞ்சியம்பதியை யடைந்தேம்; என்றலும் - என்று அறவணவடிகள் கூறினாராக எ - று.

      வானாவர் தலைவன் தன் விழாத் தவிர்தலின். என்பவட்கொப்ப, அவனிடு சாபத்தின் நகர் கடல்கொள்ள, நின் பொருட்டால் இப்பதிப் படர்ந்தனம் என்றலும் என இயைக்க, வானவர் தலைவனாகிய அவன்,. நோக்கி, எவ்வந் தீரென, பவ்வத்தெடுத்துப் பாரமிதை முற்றவும், உதவும் பெற்றிறள் என்று சாரணர் காரணம் கூற, அந்த உதவிக்கு அவள் பெயரைத் தந்தை இட்டனன்; அவட்கொப்ப, சாபத்து, கடல்கொள்ள, படர்ந்தனம் எனக் கூட்டிக் கொள்க. விழாக்கோள் மறந்தது காரணமாக இந்திரன் சினங்கொண்டு இட்ட சாபத்தால் நகர் கடல்கொள்ளப்பட்டது கூறுவான் தொடங்கிய அறவணன், மணிமேகலை இட்ட சாபமும் அக் கடல்கோட்கு ஏதுவாதலின் அதனையும் கூட்டி ''மணிமேகலா தெய்வம் என்பவட்கொப்ப அவனிடு சாபத்து'' என்றான். தன் விழாக்கோள் மறந்த சிறு பிழைக்குப் பெருநகர மொன்றை யழிக்குஞ் சினங்கொண்ட இந்திரன்பால் மணிமேகலைக்கு அருவருப்புண்டாகா வண்ணம், அவன் கோவலன் குலத்து முன்னோனுக்குற்ற இடுக்கண் களைந்த வரலாற்றையும், அவனது அருட்பணியை மேற்கொண்டாற்றிய மணிமேகலா தெய்வத்துக்கும் மணிமேகலைக்கும் உள்ள தொடர்பைக் காட்டுதற்குக் கோவலற்குச் சாரணர் உரைத்தவற்றையும் எடுத்தோதினான். இது மணிமேகலை நகரழிவு குறித்து வருந்தாமை விளைவித்தது. நினையென்புழி நான்காவதன்கண் இரண்டாவது மயங்கிற்று. தையல் மகளென்னும் பொருட்ரு; இதனை விளியாக்கினுமமையும். துறவு துறவியென நின்றது. பகரும் என்பதை ''இப்பதி'' யென்பதனோடு டியைத்தலுமொன்று. இந்திரவிழாவை மறந்தது குறித்து மணிமேகலா தெய்வம் சாபமிட்ட வரலாற்றை முன்னே, ''வானவன் விழாக்கோள் மாநக ரொழிந்தது, மணிமேகலா தெய்வ மற்றது பொறாஅள், அணி நகர் தன்னை யலைகடல் கொள்கென, இட்டனள் சாபம்'' (மணி. 25: 197-200) என்றமையின். ஈண்டுவாளாது ''என்பவட்கொப்ப'' என்றொழிந்தார்.