|
தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை
|
210 |
ஆசிரயா சித்த மாறா னவனுக்
கேற்ற தன்மி யின்மை காட்டுதல்
ஆகாசம் சத்த குணத்தாற் பொருளா மென்னின்
ஆகா சம்பொரு ளல்லவென் பாற்குத்
தன்மி யசித்த மநைகாந் திகமுஞ |
|
ஆசிரயாசித்தம்-ஆசிரயாசித்த
மென்னும் அசித்த வேதுப் போலியாவது; மாறானவனுக்கு ஏற்ற தன்மியின்மை காட்டுதல் -வாதியாகிய
தன்னோடு மாறுபட்ட பிரதிவாதிக்கு அவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தன்மியல்லாத வொன்றைத்
தன்மியாகச் சொல்லி அதற்குரிய ஏதுவொன்றைக் கூறிக் காட்டுவதாம்; ஆகாசம் பொருளாம்
- ஆகாசம் பொருளாகும்; சத்த குணத்தால்-சத்தமாகிய குணமுடைமையால்; என்னில்-என்று சொன்னால்;
ஆகாசம் பொருள் அல்ல என்பாற்கு - ஆகாசத்தைப் பொருளாகக் கொள்ளாத பிரதிவாதிக்கு;
தன்மி அசித்தம் - அவ்வாகாசமாகிய தன்மி அசித்தமாம்; ஆகவே ஆசிரயமாகிய தன்மி யசித்தமாய்
நிற்றலால் அதனைச் சாதித்தற்கு வந்த ஏது ஆசிரயாசித்தமாயிற் றென்க.
|
இன்மை: அன்மைப் பொருட்டாய் அதனையுடைய
தன்மிமேனின்றது. காட்டுதல்: அத்தனமியையும் அதன் சாத்திய தன்மத்தையும் பக்க வசனமாக
நிறுத்தி ஏதுவொன்று காட்டிச் சாதித்தலைக் குறித்து நின்றது. ஏதுவொன்று கூறிக் காட்டுத
லென்னாதவழி அப்பிரசித்த விசேடிய மென்னும் பக்கப்போலியாய் முடியுமெனவறிக. இனி, நியாயப்பிரவேச
முடையார், ஆகாயம் ஒரு பொருளன் றென்பானொருவனை நோக்கி, "ஆகாசம் திரவியம் குணாசிரயத்தையுடைமையால்"
என்பது ஆசிரயாசித்த மென்பர்; பதார்த்தசங்கிரக முடையார், இருள் திரவியம் கருமை நிறமாகிய
பண்புடைமையால் என்று காட்டுவர்; இவர் இதனை அனுமேயாசித்தமென வழங்குப பாயினும், சீதரர்
அனுமேயா சித்த மாவது ஆசிரயாசித்தமென்றே விளக்குவர். ஆசிரயம்: பக்கவசனத்து எழுவாயாகிய
பொருள். நியாய சூத்திரமுடையார், ஆசிரயா சித்தத்துக்கு, "கடவுளென்பது இல்லை, அக் கடவுட்குத்
தேகமின்மையால்" என்று உதாரணங் காட்டுவர்; வாற்சாயனார் முதலாயினோர், சாத்தியா
சமத்துக்குக் காட்டும் உதாரணமும் விளக்கவுரையும் ஆசிரயாசித்த மாகிய ஏதுப்போலிக்கும்
ஒத்தவா யிருப்பது ஈண்டு நோக்கத்தக்கது. அவர் "நிழல் ஒரு திரவியம் இயக்க முடைமையால்"
என்பர். ஏனை நியாய நூல்களில் இம்மணிமேகலை யாசிரியர் கொண்டதற்குமேலாக ஏகதேசாசித்த
மென்றும் வியாப்பியத்துவாசித்த மென்றும் கூறுவாரும் சொரூபாசித்தம், வியாப்பியத்துவாசித்தம்,
ஆசிரயாசித்தம், ஞானாசித்தம் என நால்வகைப்படுத் துரைப்பாருமெனப் பல திறத்தர் ஆசிரியர்.
அவற்றையெல்லாம்1 விரிந்த நூல்களுட்
கண்டுகொள்க.
|
1
பௌஷ்: பாடி, 4. 838. 9 உரை, சிவநெறி. பக். 31.2.
|
|