தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

       

320




325
தன்மி விசேட விபரீத சாதனந்
தன்மி விசேட லபாவஞ் சாதித்தல்
முன்னங் காட்டப் பட்ட வேதுவே
பாவமா கின்றது கருத்தா வுடைய
கிரியையுங் குணமுமா மதனை விபரீத
மாக்கிய தாதலாற் றன்மி விசேடங்

கெடுத்தது தீய வெடுத்துக்காட் டாவன

319
உரை
325

       தன்மி விசேட விபரீத சாதனம்-தன்மி விசேட விபரீத சாதன மெனப்படும் விருத்தப் போலியாவது; தன்மி விசேட அபாவம் சாதித்தல்-தன்மியின் சிறப்பியைபாகிய பாவத்தை அபாவமாகச் சாதிப்பது; முன்னம் காட்டப்பட்ட ஏதுவே - பாவம் திரவிய குணகன்மமன்றென முன்னர்க் காட்டியபக்கவசனத்து ஏதுவாகிய திரவிய குணகன்மத் துண்மையின் வேறாதலால் என்பதே; பாவ மாகின்றது-பாவமானது; கருத்தாவுடைய கிரியையும் குணமுமாம் அதனை - கருத்தாவாகிய வாதியாற் கொள்ளப்படாத தொழிலுங் குணமுமாம் என்பதைச் சாதித்து; விபரீ தமாக்கியதாதலால்-அவ்வாதி யெடுத்தோதிய கருத்துக்கு மறுதலை முடிபைப் பயந்தமையால்; தன்மி விசேடம் கெடுத்தது - தன்மியின் சிறப்பியைபைக் கெடுத்தது எ - று.

          தன்மியையும் அதன் தன்மத்தையுங் கொண்டு, உய்த்துணரப்படும் தன்மியின் சிறப்பியைபு "தன்மி விசேட"மென வறிக. பாவமாகிய தன்மி, திரவியகுண கன்மமன்றெனவே, திரவியகுண கன்ம மன்மை தன்மியின் விசேடமாயிற்று. முன்னங் காட்டப்பட்ட ஏது தன்மிச் சொரூப விபரீத சாதனமாய்கெட்டமையின், பாவமானது திரவியகுண கன்மமாம் என்றாகிப் பாவத்தின் விசேடத்தைக் கெடுத்தலின், "பாவமாகின்றது கிரியையும் குணமுமாமதனைச் சாதித்து விபரீதமாக்கியது" என்றார். இதனால் தன்மியின் விசேடம் கெடுவது பயனாயினமையின், "தன்மி விசேடம் கெடுத்து" என்றார். பக்கவசனம் கூறிய வைசேடிகனாகிய வாதியைக் "கருத்தா" வென்றும், அவன் மேற்கொள்ளாத கருத்தை அவன் கூறிய ஏதுவே எய்துவித்தலின் "உடைய" என்றும் கூறினார். உடைய என்றது எதிர்மறைக் குறிப்பு. சாத்தனென்பான் என்ற்பாலதைச் சாத்தினென்கின்றவன் என்பதுபோல, பாவமாவதெனற் பாலது "பாவமாகின்ற" தெனப்பட்டது. பாவமாகின்றது கிரியையுங் குணமுமாமது என்பது எழுவாயும் பயனிலையுமா யியைந்து ஒரு சொன்னீர்மைப்பட்டு அன்சாரியையும் ஐயுருபுமேற்று விபரீதமாக்கிய தென்பதனோடு முடிந்தது.


       
  இனி, தன்மிச் சொரூப விபரீத சாதனத்துக்குக் காட்டிய பக்க வசனமும் எதுவுமே கொண்டு, தன்மி விசேட விபரீதசாதனத்தை இம் மணிமேகலை யாசிரியர் விளக்கியதுபோலவே, நியாயப் பிரவேச முடையாரும் விளக்குகின்றார். தன்மி விசேட பாதையெனக் கூறி மேற் கொள்ளும் குமரிலபட்டரும், இவ்வாறே தன்மிச் சொரூப பாதைக்குக் கூறிய வேதுவையே கொண்டு பொருள்களின் பல்வகை இயைபுகட்கு உண்மை காண்கின்றார். 1 சிவநெறிப் பிரகாச வுரைகாரர், விருத்தத்தைச் சாத்திய விபரீத வியாத்தன் என்றும், சாதன விபரீத வியாத்த னென்றும் இருவகைப் படுத்து, "சாத்திய விபரீத வியாத்தனாவது, சத்தம் அநித்யமாக வேண்டும், காரியமாகையால், ஆகாசம்போல் என்னுமிடத்துக் காரியத்துவம் என்கிற ஏதுவானது தன்னுடைய சாத்தியமான நித்தியமா யிருக்கிறதற்கு விபரீதமான அநித்தியமா யிருக்கிறத னோடே வியாப்தமாகையால் சாத்திய விபரீதமமென்னும் ஏத்துவா பாசன், சாதன விபரீத வியாப்தனாவது,மனம் அநித்தியமாகவேண்டும். சேதனமாகையால், ஆன்மாவைப்போ லென்னுமிடத்து; அநித்தியத்துவ மானது சாதனமான சேதனத்துவத்துக்கு விபரீதமான அசேதனத் துடன் வியாப்தமாகையால் சாதன விபரீத வியாப்தன்" என்று விளக் குவர். இவ்வாறே அவரவரும் கூறுவனவற்றை யறிந்து கொள்க.

சுலோக. வார்த். அனுமான, 100-101.