தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

       



405




410
வைதன்மீய திட்டாந் தத்துச்
சாத்தி யாவிளா விருத்தி யாவது
சாதன தன்ம மீண்டு

சாத்திய தன்ம மீளா தொழிதல்
சத்த நித்த மமூர்த்தத் தென்றால்
யாதொன் றியாதொன்று நித்தமு மன்றது
அமூர்த்தமு மன்று பரமாணுப் போலெனின்
அப்படித் திட்டாந்த மாகக் காட்டப் பட்ட

பரமாணு நித்தமாய் மூர்த்த மாதலிற்
சாதன வமூர்த்த மீண்டு
சாத்திய நித்த மீளா தொழிதல


402
உரை
412

       வைதன்மிய திட்டாந்தத்துச் சாத்தியா வியாவிருத்தியாவது - வைதன்மிய திட்டாந்தப் போலிவகையில் கூறப்படும் சாத்தியா வியாவிருத்தி யென்னும் திட்டாந்தப் போலியாவது ; சாதன தன்மம் மீண்டு-வைதன்மிய திட்டாந்தத்துக் கேற்ப மீளுதற்குரிய சாதன சாத்திய மிரண்டனுள் சாதன தன்மம் மீண்டு நிற்க; சாத்திய தன்மம் மீளாதொழில் - சாத்தியப் பொருளின் தன்மம் மாத்திரம் மீளாது வைதன்மிய திட்டாந்தத்தின்கண் பொருந்தி யிருப்பதாம் ; சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால்- சத்தம் நித்தத்துவமுடையது அமூர்த்தத்துவமுடையதாகையால் என்று சொல்லி; யாதொன்று யாதொன்று நித்தமு மன்று அது அமூர்த்தமும் அன்று பரமாணுப்போல் எனில் - யாதொரு பொருள் நித்தமன்று அஃது அமூர்த்தமன்று என அதற்கு விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழி கூறிப் பரமாணுவைப்போல என வைதன்மிய திட்டாந்தம் காட்டினால், அப்படித் திட்டாந்தமாகக் காட்டப்பட்ட பரமாணு - அவ்வாறு வாதியாவான் வைதன்மிய திட்டாந்தமாகக் காட்டிய பரமாணுவானது; நித்த மாய மூர்த்த மாதலின்-நித்தமாயும் மூர்த்தமாயும் இருத்தலால்; சாதன அமூர்த்தம் மீண்டு - சாதனமாகிய அமூர்த்தத்துவத்துக்கு மீட்சியாகிய மூர்த்தத்துவம் பொருந்தி நிற்ப; சாத்திய நித்தம் மீளாதொழிதல்- சாத்திய தன்மமாகிய நித்தத்தின் மீட்சியான அநித்தத்துவம் இப்பரமாணுவின்கண் இல்லாதொழிதலால் இதுகுற்றமாயிற்று எ-று.

         மீளுதல், எதிர்மறை முகத்தால் வலியுறுதல்; அஃதாவது சத்தம் நித்தம் அமூர்த்தமாதலின் என்றவழி, யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தமெனவரும் வியாத்திக்கு மறுதலையாய் யாதொன்று நித்தமல்லாதது அஃது அமூர்த்தமன்றென வியாத்தி வசனம் கூறி, குடம்போல எனத் திட்டாந்தம் காட்டி, அதன்பால் நித்தமன்மையும் அமூர்த்தமன்மையும் வெளிப்படையாதலால், அவ்வாற்றால் சாத்திய தன்மமான நித்தத்துவத்தையும் சாதன தன்மமான அமூர்த்தத்துவத்தையும் வலியுறுத்துவதாம். உடன்பாட்டாலும் எதிர் மறையாலும் பொருளுண்மை வற்புறுத்துவது நன்றாதலின், இரண்டிற்கும் முறையேயுரிய திட்டாந்தங்கள் சாதன்மிய திட்டாந்தமெனவும் வைதன்மிய திட்டாந்த மெனவும் வழங்கலாயின. சாதன்மியம்-சாத்திய சாதன தன்மங்களையுடையது; வைதன்மியம் - மறுதலைச் சாத்திய சாதன தன்மங்களையுடையது. இவற்றை அன்னுவய திட்டாந்த மென்றும் வெதிரேக திட்டாந்த மென்றும் பிறரெல்லாம் கூறுப.

       
 "சத்தம் நித்தம் அமூர்த்தத்து" என்பது சாதனத்தோடு கூடிய சாத்திய வசனம். இதன் விபக்கத் தொடர்ச்சி மீட்சிமொழிக்குரியவை சாத்திய சாதனங்களின் மறுதலைத் தன்மிகளாதலின், அது 'யாதொன்று யாதொன்று நித்தமன்று அஃது அமூர்த்தன்மன்று" என்பதனால் உரைக்கப்பட்டது. இதனை வற்புறுத்தற்குக் காட்டும் வைதன்மிய திட்டாந்தம் "பரமாணுப்போல்" என்பது இதன்பால் சாத்தியமாகிய சத்தத்தின் தன்மத்துக்கு மீட்சியாய் நித்தமன்மையும், சாதனமாகிய அமூர்த்தத்திற்கு மீட்சியாய அமூர்த்தமன்மையும் பொருந்துமாயின், இது குற்றமில்லாத வைதன்மிய திட்டாந்தமாம். பரமாணுவின்கண் சாதன தன்ம மீட்சியாகிய மூர்த்தத்துவம் மீண்டு நீலைபெறுதலின், "சாதனவமூர்த்தம் மீண்டு" என்றும், சாத்தியமான சத்ததன்மமான நித்தத்தின் மீட்சியாகிய அநித்தத்துவம் காணப்படாமையால், அச் சாத்திய தன்மம் மீட்சிபெறாமையை, "சாத்திய நித்தம் மீளா தொழிதல்" என்றும் கூறினார். எனவே, பரமாணுவாகிய வைதன்மிய திட்டாந்தத்தில் சாத்திய தன்ம மீட்சி பொருந்தாது சாதன தன்ம மீட்சியொன்றே பொருந்துதல்பற்றிக் குற்றமாதலின், வைதன்மிய திட்டாந்தப் போலி யெனப்படுவதாயிற்று.