தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

       

430




435




440
எனவிரு வகை யுண்மையின
உபயாவி யாவிருத்தி யுள்ள பொருட்கட்
சாத்திய சாதன மீளா தபடி
வைதன் மியதிட் டாந்தங் காட்டல்
சத்த நித்த மமூர்த்த மாதலின்
என்றாற் கியாதொன் றியாதொன்று நித்தமன்

றமூர்த்தமு மன்றா காசம்போ லென்றால்
வைதன்மியா திட்டாந்த மாகக் காட்டப்பட்ட
ஆகா சம்பொரு ளென்பாற்கு
ஆகாச நித்தமு மமூர்த்தமு மாதலாற்
சாத்திய நித்தமுஞ் சாதனமா வுள்ள

அமூர்த்தமு மிரண்டு மீண்டில வின்மையின

429
உரை
440

       உண்மையின் உபயாவியா விருத்தி-உண்மையின் உபயா வியா விருத்தியென்னும் வைதன்மிய திட்டாந்தப் போலியாவது; உள்ள பொருட்கண் சாத்திய சாதன மீளாதபடி - உள்ளதாகிய பொருளொன்றின்கண் சாத்திய சாதன தன்மங்களின் மீட்சித் தன்மங்கள் பொருந்தாதபடி; வைதன்மிய திட்டாந்தம் காட்டல் - வைதன்மிய நெறிக்குரிய திட்டாந்தம் உரைத்தலாம்; சத்தம் நித்தம் அமூர்த்தமாதலின் என்றாற்கு-சத்தம் நித்தமாம் அமூர்த்தமாதலால் என்றோதிய வாதிக்கு; யாதொன்று யாதொன்று நித்தமன்று அமூர்த்தமுமன்று - யாதொரு பொருள் நித்தமல்லாதது அஃது அமூர்த்தமல்லாதது என்று விபக்கத் தொடர்ச்சி மீட்சி கூறி ; ஆகாசம்போல் என்றால் - ஆகாசம்போல என வைதன்மிய திட்டாந்தங் காட்டினால் ; வைதன்மிய திட்டாந்தமாகக் காட்டப்பட்ட ஆகாசம்-வைதன்மிய நெறியால் திட்டாந்தமாகக் காட்டப்பட்ட ஆகாசத்தை ; பொருள் என்பாற்கு - பொருளென்று மேற்கொள்ளும் அவ்வாதிக்கு ; ஆகாசம் நித்தமும் அமுர்த்தமும் ஆதலால் -அவ்வாகாசம் நித்தத்துவமும் அமூர்த்தத்துவமுமாகிய தன் மங்களையுடையதாகையால் ; சாத்திய நித்தமும் - சாத்திய தன்மமான நித்தத்துவமும் ; சாதனமாவுள்ள அமூர்த்தமும் -சாதன தன்மமான அமூர்த்தத்துவமுமாகிய இரண்டும், மீண்டில - இரண்டிற்கும் மீட்சியாகிய நித்தமன்மையும் அமூர்த்தமன்மையும் பொருந்தா தொழிதலின் குற்றமாயிற்று எ - று.

         சத்தம் நித்தம், அமூர்த்தமாகலின் என்று கூறும் வாதி பக்கத்துக்கு விபக்க வியாத்தி வசனம் "யாதொன்று யாதொன்று நித்தமன்று அஃது அமூர்த்தமன்று" என்பதாகலின், அதனை யெடுத்தோதினார். இதற்கு விபக்கவாதி காட்டும் திட்டாந்தம் இதவென்பார், "ஆகாசம்போல்" என்றார். எனவே, ஆகாசம் நித்த மன்மையும் அமூர்த்த மன்மையுமாகிய இரண்டு தன்மங்களையுமுடைய தென்பது பெறப்படும். சத்தம் நித்தமென்ற வாதி, ஆகாசம் உள்பொருளென்று கொள்ளும் கொள்கையுடையனாயின, அதன்பால் நித்தத்துவமும் அமூர்த்தத்துவமும் என்ற தன்மங்களுண்டென்ப தெய்துதலின், "ஆகாசம் பொருளென்பாற் காகாசம் நித்தமும் அமூர்த்தமுமாதலால்" என்றும், இவ்விரண்டும் சாத்திய சாதனங்களின் தன்ம மன்மையின், "சாத்திய நித்தமும் சாதனமாவுள்ள வமூர்த்தமும் இரண்டும் மீண்டில" என்றும் கூறினார். ஈண்டு, ஆகாசம் உள்ளதொரு பொருளாகக்கொண்டு கூறுதலின், இஃது உண்மையின் உபயாவியா விருத்தியாயிற்று.