பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை





10




15
முரணாத் திருவற மூர்த்தியை மொழிவோன்
அறிவு வறிதா யுயிர்நிறை காலத்து
முடிதயங் கமரர் முறைமுறை யிரப்பத்
துடித லோக மொழியத் தோன்றிப்
போதி மூலம் பொருந்தி யிருந்து
மாரனை வென்று வீர னாகிக்
குற்ற மூன்று முற்ற வறுக்கும்
வாமன் வாய்மை யேமக் கட்டுரை
இறந்த காலத் தெண்ணில்புத் தர்களுஞ்
சிறந்தருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது்

6
உரை
15

       முரணாத் திருவறமூர்த்தியை மொழிவோன்-முன்பின் மாறு பாடில்லாத அறங்களின் வடிவாகிய புத்ததேவன் வரலாற்றினைச் சுருங்கக் கூறலுற்ற அறவணன்; உயிர்-உயிர்கள்; அறிவு வறிதாய் நிறை காலத்து - நல்லறிவின்றி நிரம்பியிருந்த காலத்தில்; முடி தயங்கு அமரர் முறைமுறை இரப்ப-முடியணிந்து விளங்குந்தேவர்கள் தன்னை முறைப்படி வணங்கி நிலவுலகிற் றோன்றி அறங்கூற வேண்டுமெனக் குறையிரந்து நின்றதனால்; துடிதலோகம் ஒழியத் தோன்றி - துடித லோகத்தை விட்டு மண்ணுலகிற் றோன்றி; போதி மூலம் பொருந்தி யிருந்து-புத்த கயை யென்னுமிடத்தே அரசமரத்தினடியில் எழுந்தருளியிருந்து; மாரனை வென்று வீரனாகி - மாரனென்னும் தேவனை வென்றதனால் வீரனாக விளங்கி; குற்ற மூன்றும் முற்றவறுக்கும்-மூவகைக் குற்றங்களையும் அறவே கெடுத்து இலவாக்கும்; வாமன் வாய்மை எமக் கட்டுரை - புத்த தேவனது மெய்ம்மை நிறைந்ததும் உயிர்கட்குப் பாதுகாப்புமாக எடுத்தோதியதும்; இறந்த காலத்து எண்ணில் புத்தர்களும் - அவர்க்குப் பின் தோன்றிய அளவிறந்த புத்த சங்கத்தோர் பலராலும்; சிறந் தருள்கூர்ந்து-உயிர்க்ள்பால் மிக்க அருள்கொண்டு; திருவாய் மொழிந்தது - மறவாது நிலைபெற வற்புறுத்தப்பட்டது. மாகிய அறம் ஈண்டு யான் கூறலுறுவது எ - று.

       துடிதலோகத்து அமரர் இரப்ப, தோன்றி, இருந்து, வீரனாகி, அறுக்கும் வாமன் கட்டுரையும் புத்தர்களும் மொழிந்ததுமாகிய அறம் என இயைத்து, ஈண்டு யான் கூறலுறுவதென்பதை இசை யெச்சத்தாற் பெய்துரைத்து முடிக்க. புத்தன், தருமம், சங்கம், என்ற மூன்றனுள், புத்தனையும் சங்கத்தையும் இதனாற் கூறி, தருமத்தை யுரைத்தற்கு முகஞ் செய்கின்றார்; இவ்வாறே சாந்தி தேவரும் தாமெழுதிய போதி சரியாவதார பஞ்சிகை (ii 8) யிலும் கூறுதல் காண்க. இவ்வாறு புத்தனையும் சங்கத்தையும் கூறியபின் தருமங் கூறுபவாயினும் வழிபடுமிடத்து புத்தன், தருமம், சங்கம் என்ற மூன்றையும் இம் முறையே வழிபடுவரென வறிக.

       புத்தனது உடமபைத் தன்ம காயமென்றும், அவனை அறத்தின் வடிவமென்றும் திவ்வியாவதானம் முதலிய நூல்கள் கூறுதலால், இவரும் திருவறமூர்த்தி" யென்றார். அறிவு, தானந்தாங்கிச் சீலம் தலை நிற்றற்கேதுவாகிய நல்லறிவு. மக்களென்னாது "உயிர்" என்றார். நல்லறிவு வயிதாயினமையின் ; "அவ்வுயிர் போஒ மளவுமோர் நோய்" (குறள்: 848) என்றாற்போல. புத்தன் பிறத்தல் வேண்டித் துடித லோகத்தே தேவர்குறையிரந்து நின்றசெய்தியை, "தேவரெல்லாம்,. தொக்கொருங்கீண்டித் துடிதலோகத்து, மிக்கோன் பாதம் விழுந்தன ரிரப்ப"

       (12:72-4) என்று முன்னரும் கூறுப. வடநூல்கள், புத்தர் தாமே நிலவுலகிற் றோன்றுதற் கெண்ணி, இடமும் காலமும் குறித்துக்கொண்டு தோன்றுவரென்று கூறுகின்றன. போதி - அரசமரம். புத்தர் பலரும் போதி மரத்தையே இருக்கையாய்க் கொள்ளவில்லை; விபாசி யென்னும் புத்தர் பாதிரி மரத்தையும், சிகி யென்பார் பூவரசினையும் கொண்டன ரெனப் பாலிமொழியிலுள்ள நூல்கள் கூறுகின்றன வென்பர். தீ நெறியிற் செலுத்தும் தேவனை மாரனென்றும், அவனுக்கு முப்பத்தாறு கோடி தானை வீரரும், இரதி அரதி திருஷணை என மூன்று பெண்மக்களும். விப்பிரமன், ஹர்ஷன், தருப்பன் என மூன்று ஆண்மக்களு முண்டென்பர். அவன் வரலாற்றை அசுவகோசர், க்ஷேமேந்திரர் முதலியோர் எழுதிய வடநூங்களுட் காண்க. வென்று: காரணப் பொருட்டு. ஆதி புத்தனுக்குப் பின்னர் பல புத்தர்கள் உளராயின ரென்றும். அவர் தொகுதியைப் புத்தசங்கமென்றும் அவர் ஆதிபுத்தன் கூறிய அறங்களை வழிவழியாய்த் தோன்றி யறிவுறுத்துவ ரென்றும் கூறுபவாதலின், "எண்ணில் புத்தர்களும் திருவாய் மலர்ந்தருளியது" என்றார். குற்ற மூன்றாவன மன மொழி மெய் மூன்றானும் உண்டாகும் பத்து வகைக் குற்றம். காம முதலிய மூன்றெனினுமாம்.