|
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
|
170
|
குலவிய குற்றமெனக் கூறப்
படுமே
அவாவே பற்றே பேதைமை யென்றிவை
புனையுமடை பவமும் வினைசெய லாகும்
உணர்ச்சி யருவுரு வாயி லூறே
நுகர்ச்சி பிறப்பு மூப்புப்பிணி சாவிவை
நிகழ்ச்சிப்பய னாங்கே நேருங் காலைக் |
|
அவா
பற்று பேதைமை என்றிவை-வேட்கையும் பற்றும் பேதைமையுமென்ற இம் மூன்றும்; குலவிய குற்றமெனக்
கூறப்படும் -வினைக்கும் அதன் பயனாய துன்பத்துக்கும் ஏற்கப் பொருந்திய குற்றமென அறிஞர்களாற்
கூறப்படும்; புனையும் பவமும் அடைவினையும் செயலாகும்-உருப்படுத்தும் பவமும் அதனையடுத்து வரும்
வினையும் செய்கையாகும்; ஆங்கே நேருங்காலை-அப்பொழுது குற்றம் வினையென்ற இரண்டாலும்
விளையும் பயனைக் கருதுமிடத்து; உணர்ச்சி பிறப்பு மூப்பு பிணி சாவு இவை நிகழ்ச்சிப்
பயன் - உணர்ச்சியும் பிறப்பும் முதுமையும் நோயும் சாக்காடும் என்ற இவை குற்றவினை நிகழ்ச்சியின்
பயனாகும் எ -று.
இப்
பகுதி பேதைமை முதல் பன்னிரண்டாகக் கூறிய நிதானங்களைக் குற்றமும் வினையும் பயனுமென
மூவகைப்படுத்து, பேதைமை பற்று வேட்கை யென்ற மூன்றும் குற்றமென்றும், பவமும் செய்கையும்
வினையென்றும், உணர்ச்சி முத லேனை யேழும் பயனென்றும் கூறியவாறாயிற்று. அவாவும் வேட்கையும்
ஓரினமாதலின், வேட்கையை அவாவென்றார். வேட்கை மிகுதியாற் பற்றும், பற்றுமிகுதியாற்
பேதைமையும் தோன்றி மன முதலிய கருவிகளைக் குற்றப்படுத்தலின், அவ்வியைபு பற்றி, "அவாவே
பற்றே பேதைமை யென்றிவை" யென முறை செய்தார். தோற்றத்துக்கு வேண்டுங் காரணங்களைத்
தொகுத்தல் பற்றி, பவத்தைப் "புனையும் பவம்" என்றும், தோற்றிய வுருவின்பாலுளவாகும்
அசைவும் அசைவின்மையும் வினையாகலின், "அடைவினை" யென்றும் கூறினார். குற்றமும் வினை
நேர்பட்ட வழிப் பயனுமுண்டாதல் ஒருதலையாதலின், "ஆங்கே நேருங்காலை" யென்றார். செய்கையின்
பயன் "நிகழ்ச்சிப் பயன்" எனப்பட்டது. |
|