|
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
|
260
|
இந்நால் வகையான் மனத்திரு
ணீங்கென்று
முன்பின் மலையா மங்கல மொழியின்
ஞான தீப நன்கனங் காட்டத்
தவத்திறம் பூண்டு தருமங் கேட்டுப்
பவத்திற மறுகெனப் பாவை நோற்றனளென். |
|
இந்
நால்வகையால் - இக் கூறிய சுருதி முதலிய நான்கு நெறியால்; மனத்திருள் நீங்கு என்று -
மனமயக்கம் கெடுவாயாக என்று; முன்பின் மலையா-முன்னுக்குப் பின் முரணுதல் இல்லாத; மங்கல
மொழியின் - அறமாகிய சொற்களால்; ஞானதீபம் நன் கனம் காட்ட - ஞானமாகிய விளக்கத்தைத்
தெளியக் காட்டினாராக; பாவை - பாவைபோலும் மணிமேகலை; தவத்திறம் பூண்டு- உண்மை ஞானத்துக்குரிய
தவத்தின் கூறுகளை மேற்கொண்டு; தருமம் கேட்டு - பல்வகை யறநெறிகளையும் தெளிவுறக் கேட்டு;
பவத்திறம் அறுகு என நோற்றனள்-பிறப்புக்கேதுவாகிய குற்றங்களின் நீங்குவேனென நோற்கலுற்றாள்
எ - று.
"இந்
நால்வகையால் மனத்திருணீங்" கென்றது, நியமப் பொருட்டாய் வந்த அனுவாதம். இவ்வாறு
கொள்ளாது, மைத்திரி, கருணை, முதிதை, உபேக்ஷை யென்ற நால்வகை யெனக் கொண்டு அவற்றால்
மயக்கமும் வெகுளியும் காமமும் நீங்குக என்று கோடலு மொன்று; அக் காலை மயக்கத்தோடு
ஏனைக் காம வெகுளியும் உபலக்கணத்தாற் கொள்ளப்படும். முன்னுக்குப் பின் மலைவு தோன்றக்
கூறுவது குற்றமாதலின், அதனை விலக்கற்கு, "முன்பின் மலையா மொழி" யென்றார். மங்கல
மாவது அறமாதலின், அறவுரையை, "மங்கல மொழி" யென்றார். "மலையா வறத்தின்" (28. 100)
என்றும் "முரணாத் திருவறம்" (30. 6) என்றும் முன்பும் கூறியிருத்தல் காண்க. அஞ்ஞானத்தை
இருளென்ப வாதலின், அவ் வியைபே பற்றிச் சான்றோர் ஞானத்தை ஒளியாகக் கூறும் சிறப்புத்
தோன்ற, "ஞானதீபம்" என்றும், அதனை ஐயந்திரிபறக் காண்பிக்கும் சிறப்பினை, "நன்கனம்
காட்ட" என்றும் கூறினார். தானம், சீலம் எனப் பத்து வகையான பாரமிதைகளை, தவத்திறமென்றார்
எண்வகைப்படுதலின். அறநெறியை, "தருமம்" என்று பொதுப்படக் குறித்தார். அவை, நற்காட்சி,
நல்லொழுக்கம், நல் வாய்மை, நல்வாழ்க்கை, நற்செய்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி,
நற்செய்கை என்பனவென்று பரமத திமிரபானு வென்னும் நூல் கூறுகிறது. அறுகு : செய்கென்னும்
வாய்பாட்டுத் தன்மை வினைமுற்று.
தானந்
தாங்கிச் சீலம் தலைநின்று உணர்ந்தோன். வணங்கிச் சென்றடைந்தபின், மொழிவோன்,
வாமன் ஏமக் கட்டுரை, ஈரறு பொருளின் ஈந்த நெறியுடைத்தாய், தோன்றி மீட்டும் தொடர்தலின்
மண்டில வகையா யறியக் காட்டி, கண்ட நான்குடைத்தாய், சந்திவகை மூன்றுடைத்தாய், தோற்றம்
மூன்று வகையாய், காலமூன்றுடைத்தாய், உறுதியாகி, இடனாகி, ஆறு வழக்கு முகமெய்தி, நயங்கணான்
காற்பயன்களெய்தி, நால்வகை வினாவிடை யுடைத்தாய், எல்லாந் தானேயாகிய பேதைமை முதலிய
பன்னிரண்டும் அறியிற் பெரும் பேற்றிகுவர் ; அறியார் நரகறிகுவர் ; பேதமை முதலியன
இவை ; மண்டில வகை இவை; கண்டம் இவை; நயங்கள் இவை; வினாவிடை யிவை; கட்டும் வீடும்
காரணம் தருதற்குரியோரில்லை ; காமம் வெகுளி மயக்கம் காரணம்; பற்றறுத்திடுதல், செற்ற
மற்றிடுக, மயக்கங் கடிக, மனத்திருள் நீங்குக என்று காட்ட, தவத்திறம் பூண்டு, பாவை,
தருமம் கேட்டு, அறுகென நோற்றனள் என, வினை முடிபு கொள்க.
மணிமேகலை
27 ஆம் காதை முதல்
ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் எழுதியவுரை முடிந்தது.
|
|