மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை

       




5
இளங்கோன் கண்ட இளம்பொற் பூங்கொடி
விளங்கொளி மேனி விண்ணவர் வியப்பப்
பொருமுகப் பளிங்கின் எழினி வீழ்த்துத்
திருவின் செய்யோள் ஆடிய பாவையின்
விரைமல ரைங்கணை மீன விலோதனத்து
உருவி லாளனொ டுருவம் பெயர்ப்ப

1
உரை
6

       இளங்கோன் கண்ட இளம்பொற் பூங்கொடி-அரசிளங்குமரன் கண்ணுற்ற அழகிய இளம் பூங்கொடியனைய மணிமேகலை, விளங்கு ஒளி மேனி விண்ணவர் வியப்ப-விளங்குகின்ற பேரொளி பொருந்திய திருமேனியையுடைய வானவர்களும் வியக்குமாறு, பொருமுகப் பளிங்கின் எழினி வீழ்த்து - பளிங்கினாலாய பொருமுக வெழினியை வீழ்த்து, திருவின் செய்யோள் ஆடிய பாவையின் - திருமகளாடிய பாவையைப்போல, விரைமலர் ஐங்கணை மீன விலோதனத்து உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப - மணம் பொருந்திய மலராகிய ஐந்தம்புகளையும் மீனக்கொடியையும் உடைய அநங்கனுடன் தன் உருவத்தை வெளிப்படுத்த ;

       பொற்பூங்கொடி - காமவல்லியுமாம் ; இது பொன்னுலகத்துள்ள தென்பர். எழினி - திரைச்சீலை ; பொருமுக வெழினி-மூவகைத் திரைச் சீலைகளுள் ஒன்று ; அரங்கின் வலத்தூண் இரண்டிலும் உருவு திரை யாய் அமைவது ; எழினி மூன்றனையும் 1"ஒருமுக வெழினியும் பொரு முக வெழினியும் ; கரந்துவர லெழினியும் புரிந்துடன் வகுத்து"என் பதனாலறிக. திருவின் செய்யோள் - திருவாகிய செய்யோள் ; திருமகள்- இன் : சாரியை. ஆடிய பாவையின் - ஆடுதற்குக் கொண்ட பாவை யுருவைப்போல ; கொல்லிப் பாவையுருக்கொண்டு ஆடினமையின் அக் கூத்தும் பாவை யெனப்படும் ; அது போர் செய்தற்குச் சமைந்த கோலத்துடன் அவுணர் மோகித்து விழும்படி திருமகளாடியது ; பதினோராடலுளொன்று ; 2"செருவெங் கோல மவுணர் நீங்கத், திரு வின் செய்யோ ளாடிய பாவையும்' என்பது காண்க. "உருவி லாளனொ டுருவம் பெயர்ப்ப" என்பதன் கருத்து இவளுருவைக் கண்டவுடன் இளங்கோவனுக்குக் காமவுபாதை உண்டாயிற் றென்பதாம்.


சிலப். 3 : 109-10.  2 சிலப். 6 : 60-1.