எஞ்சியோர் மருங்கின் ஈமஞ்சாற்றி
நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும்-உயிர் வாழ்ந்திருப்போரிடம் ஈமம் உண்டென்பதைக்
கூறி உள்ளம் நடுங்குமாறு புரியும் நெய்தற்பறையின் ஒலியும், துறவோர் இறந்த தொழுவிளிப்
பூசலும்-துறவியர் இறந்ததனாற் போந்த துதிமுழக்கமும், பிறவோர் இறந்த அழுவிளிப் பூசலும்-இல்லறத்தோர்
இறந்ததனாலாகிய அழுகை யொலியும், நீள்முக நரியின் தீவிளிக்கூவும்-நீண்ட முகத்தையுடைய
நரியின் தீய ஒலியினையுடைய கூப்பீடும். சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்-இறப்போரை
யழைக்கும் பேராந்தையின் குரலும், புலவூண் பொருந்திய குராலின் குரலும் - புலாலாகிய
உணவைப் பொருந்திய கோட்டானின் ஒலியும், ஊண்தலை துற்றிய ஆண்டலைக் குரலும் - உணவாகத்
தலை முளையைக் கடித்துண்ட ஆண்டலைப் பறவையின் முழக்கமும், நன்னீர்ப் புணரி நளிகடல்
ஒதையின் இன்னா இசைஒலி என்றும் நின்று அறாது-தூநீர்ச் சேர்க்கை யினையுடைய செறிந்த
கடல் ஓசையைப்போல் இன்னாதனவாகிய முழக்கம் என்றும் நின்று நீங்காமல் ;
நெய்தல்
- சாப்பறை ; அஃது ஈமஞ்சாற்றுதலை 1"மணங்கொண்டீண்,
டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே, தொண்டொண்டொண் ணென்னும் பறை" என்பதனாலுமறிக.
முன் துறவோர் என்றமையின் பிறவோர் இல்லறத்தாராயிற்று. தொழுவிளியாகிய பூசல்,
அழுவிளியாகிய பூசல் என்க ; விளி - ஓசை. பயிர்தல் - அழைத்தல், 2"போழ்வாய்க்கூகை,
சுட்டுக்குவியெனச் செத்தோர்ப் பயிரும், கள்ளியம் பறந்தலை" என்பதனால் பேராந்தை
இறந்தோரை அழைக்குமென்பதும் போதரும். ஆண்டலை - ஆண்மகனது தலை போன்ற வடிவமுள்ள
ஒருவகைப் பறவை; இதனை, 3"நீண்ட
பலி பீடத்தி லரிந்துவைத்த நெடுங்குஞ்சிச் சிரத்தைத்தன் னினமென் றெண்ணி, ஆண்டலைப்புள்
அருகணைந்து பார்க்கு மாலோ" என்பதனானறிக. நெய்தலோசை முதலிய இன்னா இசையொலி கடலோதையின்
என்றும் நின்றறாதென்க.
|