பதிகம்
 
6.
  • மீன் ஏறு உயர்த்த கொடி வேந்தனை வென்ற பொற்பில்
  • தான் ஏறு அனையான் உளன் சீவகசாமி என்பான்
  • வான் ஏற நீண்ட புகழான் சரிதம் இதன்னைத்
  • தேன் ஊற நின்று தெருண்டார் அவை செப்பல் உற்றேன்
   
7.
  • கோடாத செங் கோல் குளிர் வெண் குடைக் கோதை வெள் வேல்
  • ஓடாத தானை உருமுக் குரல் ஓடை யானை
  • வாடாத வென்றி மிகு சச்சந்தன் என்ப மன்னன்
  • வீடாத கற்பின் அவன் தேவி விசயை என்பாள்
   
8.
  • சேந்து ஒத்து அலர்ந்த செழுந் தாமரை அன்ன வாள் கண்
  • பூந்தொத்து அலர்ந்த பசும் பொன் கொடி அன்ன பொற்பின்
  • ஏந்து ஒத்து அலர்ந்த முலையின் அமிர்து அன்ன சாயல்
  • வேந்தற்கு அமுதாய் விளையாடுதற்கு ஏது வாமே
   
9.
  • கல்லார் மணிப் பூண் அவன் காமம் கனைந்து கன்றிச்
  • சொல்லாறு கேளான் நனி சூழ்ச்சியில் தோற்ற வாறும்
  • புல்லார் புகலப் பொறி மஞ்ஞையில் தேவி போகிச்
  • செல் ஆறு இழுக்கிச் சுடுகாடு அவள் சேர்ந்த வாறும்
   
10.
  • நாள் உற்று நம்பி பிறந்தான் திசை பத்தும் நந்தத்
  • தோள் உற்று ஓர் தெய்வம் துணையாய்த் துயர் தீர்த்த வாறும்
  • கோள் உற்ற கோன் போல் அவன் கொண்டு வளர்த்த வாறும்
  • வாள் உற்ற கண்ணாள் மகன் வாழ்க என நோற்ற வாறும்
   
11.
  • நெஞ்சம் புணையாக் கலை மாக் கடல் நீந்தி ஆங்கே
  • வஞ்சம் மறவர் நிரை வள்ளல் விடுத்த வாறும்
  • விஞ்சைக்கு இறைவன் மகள் வீணையில் தோற்ற வாறும்
  • நஞ்சு உற்ற காம நனி நாகரின் உய்த்த வாறும்
   
12.
  • முந்நீர்ப் படு சங்கு அலற முரசு ஆர்ப்ப மூதூர்ச்
  • செந்நீர்க் கடியின் விழவாட்டினுள் தேம்கொள் சுண்ணம்
  • மைந்நீர் நெடுங்கண் இரு மங்கையர் தம்முள் மாறாய்
  • இந்நீர்ப் படியேம் இவை தோற்றனம் என்ற வாறும்
   
13.
  • சுண்ணம் உடைந்து சுரமஞ்சரி சோர்ந்து தோழி
  • வண்ணம் நெடுங் கண் குண மாலையை வைது மாறிப்
  • புண் மேல் புடையில் புகைந்து ஆண் உருவு யாதும் நோக்காள்
  • கண் நோக்கு உடைந்து கடிமாடம் அடைந்த வாறும்
   
14.
  • பொன் துஞ்சு மார்பன் புனல் ஆட்டிடைப் புன்கண் எய்தி
  • நின்று எஞ்சுகின்ற ஞமலிக்கு அமிர்து ஈந்த வாறும்
  • அன்றைப் பகலே குண மாலையை அச்சுறுத்த
  • வென்றிக் களிற்றை விரிதார் அவன் வென்ற வாறும்
   
15.
  • தேன் ஊறு தீம் சொல் குண மாலையைச் சேர்ந்த வாறும்
  • கோன் ஊறு செய்வான் கருதிச் சிறை கொண்ட வாறும்
  • வான் ஆறு இழிந்து மழை மின் என வந்த ஓர் தேவன்
  • ஊன் நாறு ஒளி வேல் உரவோன் கொண்டு எழுந்த வாறும்
   
16.
  • தேங்காத மள்ளர் திரள் தோள் இணை சிக்க யாத்த
  • பூங் கச்சு நீக்கிப் பொறி மாண்கலம் நல்ல சேர்த்தி
  • நீங்காத காதல் உடையாய் நினைக்க என்று பின்னும்
  • பாங்கு ஆய விஞ்சை பணித்து ஆங்கு விடுத்த வாறும்
   
17.
  • பைந் நாகப் பள்ளி மணி வண்ணனின் பாயல் கொண்டு
  • கைந் நாகம் துஞ்சும் கமழ் காந்தள் அம் சாரல் போகி
  • மைந் நாக வேலி மணி பல்லவ தேயம் நண்ணிக்
  • கொய் நாகச் சோலைக் கொடி அந் நகர் புக்க வாறும்
   
18.
  • அத்தம் அனைய களிற்று அந் நகர் மன்னன் மங்கை
  • முத்தம் உரிஞ்சும் முகிழ் மென் முலை மின் அனாளைப்
  • பைத்து அங்கு ஓர் நாகம் பனி மா மதி என்று தீண்டச்
  • சித்தம் குழையற்க எனத் தீர்த்து அவள் சேர்ந்த வாறும்
   
19.
  • பொன் பூண் சுமந்த புணர் மெல் முலைக் கோடு போழ
  • நல் பூங் கழலான் இரு திங்கள் நயந்த வாறும்
  • கல் பாடு அழித்த கன மா மணித் தூண் செய் தோளான்
  • வெற்பு ஊடு அறுத்து விரைவின் நெறிக் கொண்ட வாறும்
   
20.
  • தள்ளாத சும்மை மிகு தக்க நல் நாடு நண்ணி
  • விள்ளா விழுச்சீர் வணிகன் மகள் வேல் கண் நோக்கம்
  • உள் ஆவி வாட்ட உயிர் ஒன்று ஒத்து உறைந்த வாறும்
  • கள் ஆவி நாறும் கமழ் கோதையின் போய வாறும்
   
21.
  • இன்னீர் அமிர்து அன்னவள் கண் இணை மாரி கற்பப்
  • பொன் ஊர் கழலான் பொழி மா மழைக் காடு போகி
  • மின் நீர வெள் வேலவன் மத்திம தேய மன்னன்
  • கொன்னூர் கொடு வெம் சிலை கண்டு எதிர் கொண்ட வாறும்
   
22.
  • திண் தேர் அரசர் திறல் சிங்கங்கள் வில்லும் வாளும்
  • கண்டு ஆங்கு உவந்து கடி பெய்து இவண் காத்தும் என்று
  • கொண்டார் குடங்கை அளவே உள கண்ணினாளைப்
  • புண் தாங்கு எரிவேல் இளையோற்குப் புணர்த்த வாறும்
   
23.
  • மதியம் கெடுத்த வய மீன் எனத் தம்பி மாழாந்து
  • உதிதற்கு உரியாள் பணியால் உடன் ஆய வாறும்
  • நிதியின் நெறியின் அவன் தோழர் நிரந்த வாறும்
  • பதியின் அகன்று பயந்தாளைப் பணிந்த வாறும்
   
24.
  • கண் வாள் அறுக்கும் கமழ்தார் அவன் தாயொடு எண்ணி
  • விண் வாள் அறுக்கும் நகர் வீதி புகுந்த வாறும்
  • மண் மேல் விளக்காய் வரத்தில் பிறந்தாள் ஒர் கன்னிப்
  • பெண் ஆர் அமிர்தின் பெரு வாரியுள் பட்ட வாறும்
   
25.
  • துஞ்சா மணிப் பூண் சுரமஞ்சரி என்னும் நாமத்து
  • அம் சாயல் பூத்த அகிலார் துகிலாய் பொன் அல்குல்
  • எஞ்சாத இன்பக் கொடி தாழ்த்ததும் பன்றி எய்து
  • நஞ்சு ஊறும் வேலான் பகை நாம் அறக் கொன்ற வாறும்
   
26.
  • புண் தோய்த்து எடுத்த பொரு வேல் எனச் சேந்து நீண்ட
  • கண் போன்ற மாமன் மகள் கண் மணிப் பாவை அன்ன
  • பெண் பால் அமிர்தின் நலம் பெற்றதும் பொற்பச் செங் கோல்
  • தண் பால் மதி தோய் குடை தண் நிழல் பாய வாறும்
   
27.
  • திறை மன்னர் உய்ப்பத் திரு நிற்பச் செங்கோல் நடப்பக்
  • குறைவு இன்றிக் கொற்றம் உயரத் தெவ்வர் தேர் பணிய
  • உறைகின்ற காலத்து அறம் கேட்டு உரும் உற்ற பாம்பின்
  • அறிவன் அடிக் கீழ் அரசு அஞ்சித் துறந்த வாறும்
   
28.
  • கோணைக் களிற்றுக் கொடித் தேர் இவுளிக் கடல் சூழ்
  • வாள் மொய்த்த தானை அவன் தம்பியும் தோழன் மாரும்
  • பூண் மொய்த்த பொம்மல் முலையாரும் புலம் துறப்ப
  • வீணைக் கிழவன் விருந்து ஆர் கதிச் சென்ற வாறும்
   
29.
  • தேன் வாய் உமிழ்ந்த அமிர்து உண்டவன் போன்று செல்வன்
  • வான் வாய் வணக்கும் நலத்தார் முலைப்போகம் வேண்டான்
  • ஏனோரும் ஏத்த அவன் எய்திய இன்ப வெள்ளம்
  • ஈனோர்க்கு உரைப்பாம் பதிகத்துள் இயன்ற வாறே