கனகமாலையார் இலம்பகம்
 
1557.
  • இரங்கு மேகலை அல்குல்
  • இன் கனித் தொண்டை அம் துவர்வாய்
  • அரங்கக் கூத்திகண் அன்பின்
  • மனையவள் துறந்து செல்பவர் போல்
  • பரந்த தீம்புனல் மருதம்
  • பற்று விட்டு இனமயில் அகவும்
  • மரம் கொல் யானையின் மதம் நாறு
  • அருஞ் சுரம் அவன் செலற்கு எழுந்தான்
   
1558.
  • கலவ மாமயில் எருத்தில் கடிமலர் அவிழ்ந்தன காயா
  • உலக மன்னவன் திருநாள் ஒளிமுடி அணிந்து நின்றவர் போல்
  • பலவும் பூத்தன கோங்கம் பைந்துகில் முடி அணிந்து அவர் பின்
  • உலவு காஞ்சுகியவர் போல் பூத்தன மரவம் அங்கு ஒருங்கே
   
1559.
  • ஓங்கு மால் வரை வரையாடு
  • உழக்கலின் உடைந்து உகு பெருந்தேன்
  • தாங்கு சந்தனம் தரளத்
  • தழுவி வீழ்வன தகை சால்
  • ஆங்கண் மால் உலகு அளப்பான்
  • ஆழி சங்கமொடு ஏந்தி
  • தேம் கொள் மார்பு இடைத் திளைக்கும்
  • செம்பொன் ஆரம் ஒத்து உளவே
   
1560.
  • வீழ்ந்து வெண் மழை தவழும்
  • விண் உறு பெருவரை பெரும் பாம்பு
  • ஊழ்ந்து தோல் உரிப்பன போல்
  • ஒத்த மற்று அவற்று அருவி
  • தாழ்ந்து வீழ்ந்தவை முழவின்
  • ததும்பின மதுகரம் பாடச்
  • சூழ்ந்து மா மயில் ஆடி
  • நாடகம் துளக்கு உறுத்தனவே
   
1561.
  • கருவி தேன் எனத் தூங்கும்
  • கதிர் அணி இறுங்கொடு தினை சூழ்
  • பொருவில் யானையின் பழுப்
  • போல் பொங்கு காய்க்குலை அவரை
  • அருவி ஐவனம் கரும்பும்
  • அடக்கருங் கவைக் கதிர் வரகும்
  • உருவ எள் பயறு உழுந்தும்
  • அல்லவும் எல்லை இன்று உளவே
   
1562.
  • யாணை வெண் மருப்பு உலக்கை அறை உரல் ஐவனம் இடித்த
  • தேன் நெய் வாசவல் குவவித் தீம் கனி வாழையின் பழனும்
  • ஊனை உண்டவர் உருகும் பசுந்தினைப் பிண்டியும் ஒருங்கே
  • மானின் நோக்கியர் நோக்கி வழி தொறும் ஈவது அவ் வழியே
   
1563.
  • குறிஞ்சி எல்லையின் நீங்கிக் கொடி
  • முல்லை மகள் மகிழ்ந்து ஆடச்
  • செறிந்த பொன் இதழ்ப் பைந்தார்க்
  • கொன்றை அம் செல்வற்குக் குரவம்
  • அறிந்து பாவையைக் கொடுப்பத்
  • தோன்றி அம் சுடர் ஏந்த
  • நிறைந்த பூங் குருந்து உகு தேன்
  • நீர் பெய்து ஆர்த்தன சுரும்பே
   
1564.
  • அரக்கு உண் பஞ்சிகள் திரட்டி அருமணி மரகதப் பலகைப்
  • பரப்பி இட்டன போலக் கோபங்கள் பயிர் மிசைப் பரவ
  • உரைத்த மென்தயிர்ப் பித்தைக் கோவலர் தீம் குழல் உலவ
  • நிரைக் கண் மாமணி கறங்க நீள் நிலம் கடந்தனன் நெடியோன்
   
1565.
  • வள்ளி வாரிய குழியின் வளர் பொன்னும் வயிரமும் இமைக்கும்
  • சுள்ளி வேலியின் நீங்கித் துறக்கம் புக்கிடும் எனச் சூழ்ந்து
  • வெள்ளி வெண்திரள் விசித்து நிலத்தொடு தறி புடைத்தவை போல்
  • துள்ளி வீழ் உயர் அருவி வன கிரி தோன்றியது அவணே.
   
1566.
  • அண்ணல் தான் செலும் முன்னா அணிமலர்ப் பூம் பொழில் அதனுள்
  • வண்ண மாச்சுனை மாநீர் மணி தெளித்து அனையது ததும்பித்
  • தண் என் தாமரை கழுநீர் நீலம் தாது அவிழ் ஆம்பல்
  • எண் இல் பன்மலர் கஞலி இனவண்டு பாண் முரன்று உளதே
   
1567.
  • கானகத்தின் ஏகுகின்றான் கடி பொழில் கவின் கண்டு எய்தித்
  • தானத்தில் இருத்தலோடும் தையலாள் ஒருத்தி தானே
  • வானத்தின் இழிந்து வந்த வானவர் மகளும் ஒப்பாள்
  • நானமும் பூவும் சாந்தும் நாற வந்து அருகு நின்றாள்
   
1568.
  • குறிஞ்சிப் பூங் கோதை போலும்
  • குங்கும முலையினாள் தன்
  • நிறைந்த பொன் கலாபம் தோன்ற
  • நெடுந் துகில் விளிம்பு ஒன்று ஏந்திச்
  • செறிந்தது ஓர் மலரைக் கிள்ளித்
  • தெறித்திடாச் சிறிய நோக்கா
  • நறும் புகைத் தூது விட்டு
  • நகைமுகம் கோட்டி நின்றாள்
   
1569.
  • அணிகல அரவத்தாலும் அமிழ்து உறழ் நாற்றத்தாலும்
  • பணிவருஞ் சிங்க நோக்கில் பணை எருத்து உறழ நோக்கி
  • மணிமலர் நாகம் சார்ந்து வழையோடு மரவ நீழல்
  • துணிவருஞ் சாயல் நின்றாள் தோன்றல் தன் கண்ணின் கண்டான்
   
1570.
  • கண்டவன் கண்ணின் நோக்க நடுங்கித் தன் காதில் தாழ்ந்த
  • குண்டலம் சுடர ஒல்கிக் கொடி நடுக்குற்றது ஒப்ப
  • நுண் துகில் போர்வை சோர நுழை மழை மின்னின் நிற்ப
  • எண் திசை மருங்கும் நோக்கி இயக்கி கொல் இவள் மற்று என்றான்
   
1571.
  • எண்ணத்தில் இயக்கி என்றே இருப்ப மற்று எழுதலாகா
  • வண்ணப் பூங் கண்கள் அம்பா வாள் நுதல் புருவம் வில்லா
  • உள் நிறை உடைய எய்வான் உருவச் சாதகத்துக்கு ஏற்பப்
  • பெண் நலம் கிடந்த பேதை பெண் நலம் கனிய நின்றாள்
   
1572.
  • முறுவல் முன் சிறிய தோற்றா முகை நெறித்து அனைய உண்கண்
  • குறு நெறி பயின்ற கூந்தல் குறும்பல் கால் ஆவிக் கொள்ளாச்
  • சிறு நுதல் புருவம் ஏற்றாச் சேர் துகில் தானை சோர
  • அறியுநர் ஆவி போழும் அநங்கனை ஐங்கணையும் எய்தாள்
   
1573.
  • வடுப் பிளவு அனைய கண்ணாள் வல்லவன் எழுதப்பட்ட
  • படத்திடைப் பாவை போன்று ஓர் நோக்கினள் ஆகி நிற்ப
  • அடிப் பொலிந்தார்க்கும் செம்பொன் அணிமணிக் கழலினான் அம்
  • மடத்தகை குறிப்பு நோக்கி மனத்து இது சிந்திக்கின்றான்
   
1574.
  • கடி மாலை சூடிக் கருப்பூரம் முக்கித்
  • தொடை மாலை மென் முலையார் தோள் தோய்ந்த மைந்தர்
  • கடை மாலை மற்று அவரே கண் புதைப்பச் செல்லும்
  • நடை மாலைத்து இவ் உலகம் நன்று அரோ நெஞ்சே
   
1575.
  • நாவி அகலம் எழுதி நறு நுதலார்
  • ஆவி தளிர்ப்ப அவர் தோள் மேல் துஞ்சினார்
  • தூவி ஒழி புள்ளின் தோன்றித் துயர் உழப்பக்
  • காவி நெடுங் கண் புதைத்து ஆங்கு அகல்வார் நெஞ்சே
   
1576.
  • இன்புகை ஆர்ந்த இழுதார் மென் பள்ளி மேல்
  • அன்பு உருகு நல்லார் அவர் தேள் மேல் துஞ்சினார்
  • தம் புலன்கள் குன்றித் தளரத் தம் காதலார்
  • அன்பு உருகு கண் புதைத்து ஆங்கு அகல்வர் நெஞ்சே
   
1577.
  • என்பினை நரம்பில் பின்னி
  • உதிரம் தோய்த்து இறைச்சி மெத்திப்
  • புன் புறம் தோலைப் போர்த்து
  • மயிர் புறம் பொலிய வேய்ந்திட்டு
  • ஒன்பது வாயில் ஆக்கி ஊன்
  • பயில் குரம்பை செய்தான்
  • மன் பெருந் தச்சன் நல்லன்
  • மயங்கினார் மருள என்றான்
   
1578.
  • வினைப் பெருந் தச்சன் நல்லன்
  • மெய்ம்மை நாம் நோக்கல் உற்றால்
  • எனக்கு உற்றுக் கிடந்தது என்று ஆங்கு
  • இருகணும் புதைத்து வைக்கும்
  • நினைப்பினால் பெரியர் என்னான்
  • நீந்தினார் கலைகள் என்னான்
  • மனத்தையும் குழையச் செத்தும்
  • மாண்பினன் மாதோ என்றான்
   
1579.
  • என்று அவன் இருப்ப மாதர்
  • என் வரவு இசைப்பின் அல்லால்
  • ஒன்றும் மற்று உருகல் செல்லான்
  • என்று எடுத்து ஓதுகின்றாள்
  • மன்றல் அம் தோழிமாருள்
  • வனத்து இடைப் பண்ணை ஆடக்
  • குன்று இடைக் குளிர்க்கும் மின் போல்
  • குழாம் மழை முகட்டில் செல்வான்
   
1580.
  • மயில் இனம் இரிய ஆங்கு ஓர்
  • மடமயில் தழுவிக் கொண்ட
  • வெயில் இளம் செல்வன் போல
  • விஞ்சையன் என் கொண்டு ஏகத்
  • துயிலிய கற்பினாள் தன் துணைவி
  • கண்டு இடுவித்திட்டாள்
  • அயில் இயல் காட்டுள் வீழ்ந்தேன்
  • அநங்க மா வீணை என்பேன்
   
1581.
  • தாய் இலாக் குழவி போலச்
  • சாதுயர் எய்து கின்றேன்
  • வேய் உலாம் தோளினார் தம்
  • விழுத்துணைக் கேள்வ நின் கண்டு
  • ஆயினேன் துறக்கம் பெற்றேன்
  • அளித்து அருளாது விட்டால்
  • தீயினுள் அமிர்தம் பெய்த ஆங்கு
  • என் உயிர் செகுப்பல் என்றாள்
   
1582.
  • மணி எழு அனைய தோளும் வரை என அகன்ற மார்பும்
  • தணிவு அருங் கயத்துப் பூத்த தாமரை அனைய கண்ணும்
  • பணிவு அரும் பகுதி அன்ன முகமும் என்று அயர்ந்து காமப்
  • பிணி எழுந்து அவலிக்கின்ற பேதை நீ கேள் இது என்றான்
   
1583.
  • போதொடு நானம் மூழ்கிப்
  • பூம் புகை தவழ்ந்து முல்லைக்
  • கோதை கண் படுக்கும் கூந்தல்
  • குரை வளி பித்தோடு ஐயேய்
  • ஏதம் செய் மலங்கள் நெய்த்தோர்
  • இறைச்சி என்பு ஈருள் மூளை
  • கோதம் செய் குடர்கள் புன் தோல்
  • நரம்பொடு வழும்பிது என்றான்
   
1584.
  • விழுக்கொடு வெண் நஞ்சு அல்லா
  • உகிர் மயிர் உமிழ் கண் பீளைப்
  • புழுப் பயில் குரம்பை பொல்லாத்
  • தடி தடிக் கீழ்ந்த போழ்தில்
  • விழித்தியார் நோக்கு கிற்பார்
  • பிள்ளையார் கண்ணுள் காக்கை
  • கொழிப்பரும் பொன்னின் தோன்றும்
  • கொள்கைத்தால் கொடியே என்றான்
   
1585.
  • உருவம் என்று உரைத்தியாயின்
  • நிறைந்த தோல் துருத்தி தன்னைப்
  • புருவமும் கண்ணும் மூக்கும்
  • புலப்பட எழுதி வைத்தால்
  • கருதுவது ஆங்கு ஒன்று உண்டோ
  • காப்பியக் கவிகள் காம
  • எரி எழ விகற்பித்திட்டார்
  • இறைச்சிப் போர் இதனை என்றான்
   
1586.
  • காதல் மாமன் மட மகளே
  • கருங் குழல் மேல் வண்டு இருப்பினும்
  • ஏதம் உற்று முரியும் நுசுப்பு
  • என்று உன்னியல்பு ஏத்துவேன்
  • ஓதம் போல உடன்று உடன்று
  • நைய நீ ஒண் தாமரைக்
  • கோதை போல்வாய் ஒளித்து ஒழிதல்
  • கொம்பே குணன் ஆகுமே
   
1587.
  • வண்ணத் திங்கள் மதி முகத்த வாளோ கருங் கயல்களோ
  • உண்ணும் கூற்றோ ஒளி வேலோ போதோ உணர்கலேனால்
  • பண்ணின் தீம் சொலாய் படா முலைப் பாவாய் கொடியே பாங்கின்
  • உண்ணும் தேனே அமிர்தே என் இன் உயிரே எங்கணாயோ
   
1588.
  • இலவம் போது ஏர் எழில் தகைய சீறடிகள் அஞ்சி ஒல்கிப்
  • புலவன் சித்திரித்த பொன் சிலம்பு நகப் பூ நிலத்து மேல்
  • உலவும் போழ்தும் என் ஆவி மலர் மேல் மிதித்து ஒதுங்குவாய்
  • கலவ மஞ்ஞை அனையாய் கண் காதல் ஒழிகல்லேனால்
   
1589.
  • பணி செய் ஆயத்துப் பந்தாடு கின்றாயைக் கண்டு மாழ்கிப்
  • பிணி செய் நோயேன் யான் கிடப்பப் பிறர் வாய் அது கேட்டலும்
  • துணிக போதும் என விடுத்தாய் போந்தேன் துயர் உழப்ப நீ
  • மணி செய் மேகலையாய் மாற்றம் தாராய் மறைந்து ஒழிதியோ
   
1590.
  • இயக்கி நின்னோடு இணை ஒக்கும் என்று நலம் செகுப்பான்
  • மயக்கிக் கொண்டு போய் வைத்தாய் என் மாதரைத் தந்து அருள் நீ
  • நயப்ப எல்லாம் தருவல் எனத் தொழுது நல் யானை தன்
  • வயப்பிடி கெடுத்து மாழாந்தது ஒப்ப மதி மயங்கினான்
   
1591.
  • மல்லல் தொல் வளத்து மத்திம
  • நல் நாட்டு வண் தாமரை
  • புல்லும் பேரூர்ப் புகழ்த் தத்தன்
  • காதல் சின தத்தைக்கும்
  • செல்வ நாமற்கும் சித்திரமா
  • மாலைக்கும் சுற்றத்தார்க்கும்
  • அல்லல் செய்தேன் அவண் சென்றால்
  • என் உரைக்கேன் என் செய்கேனோ
   
1592.
  • உண்ணு நீர் வேட்டு அசைந்தேன் என உரைப்பக் காட்டுள் நாடி
  • நண்ணிப் பொய்கை தலைப்பட்டு நல் தாமரை இலையினுள்
  • பண்ணி நீர் கொண்டு வந்தேன் படா முலைப் பாவாய் என்று
  • அண்ணல் ஆற்றாது அழுது அழுது வெந்து உருகி நைகின்றானே
   
1593.
  • குழை கொள் வாள் முகத்துக் கோல்
  • வளையைக் காணான் குழைந்து அழுகின்ற
  • அழகன் சொல்லும் அணி செய்
  • கோதை காமமும் கண்டும் கேட்டும்
  • முழவுத் தோளான் முறுவலித்து
  • ஈங்கே இரு நீ என்று
  • இழையச் சொல்லி இறையான்
  • இளையானை எய்தினானே
   
1594.
  • என்னை கேளீர் என் உற்றீர்
  • என்ன பெயரீர் என்றாற்குப்
  • பொன் அம் குன்றின் பொலிந்த
  • தோள் நம்பி ஒருபொன் பூங் கொடி
  • என்னும் நீராளை ஈங்கே
  • கெடுத்தேன் என் பாவத்தால்
  • பல் நூல் கேள்வி உடையேன் யான்
  • பவதத்தன் என்பேன் என்றான்
   
1595.
  • கைப் பொருள் கொடுத்தும் கற்றல்
  • கற்றபின் கண்ணும் ஆகும்
  • மெய்ப் பொருள் விளைக்கும் நெஞ்சின்
  • மெலிவிற்கு ஓர் துணையும் ஆகும்
  • பொய்ப் பொருள் பிறகள் பொன்னாம்
  • புகழும் ஆம் துணைவி ஆக்கும்
  • இப் பொருள் எய்தி நின்றீர்
  • இரங்குவது என்னை என்றான்
   
1596.
  • அன்பு நூலாக இன்சொல்
  • அலர் தொடுத்து அமைந்த காதல்
  • இன்பம் செய் காமச் சாந்தின்
  • கைபுனைந்து ஏற்ற மாலை
  • நன்பகல் சூட்டி விள்ளாது
  • ஒழுகினும் நங்கை மார்க்குப்
  • பின் செலும் பிறர் கண் உள்ளம்
  • பிணை அனார்க்கு அடியது அன்றே
   
1597.
  • பெண் எனப் படுவ கேண்மோ
  • பீடு இல பிறப்பு நோக்கா
  • உள் நிறை உடைய அல்ல
  • ஓர் ஆயிரம் மனத்த வாகும்
  • எண்ணிப் பத்து அம்கை இட்டால்
  • இந்திரன் மகளும் ஆங்கே
  • வெண்ணெய்க் குன்று எரி உற்றாற்
  • போன்று மெலிந்து பின் நிற்கும் அன்றே
   
1598.
  • சாம் எனில் சாதல் நோதல் தன்னவன் தணந்த காலைப்
  • பூமனும் புனைதல் இன்றிப் பொற்புடன் புலம்ப வைகிக்
  • காமனை என்றும் சொல்லார் கணவன் கைதொழுது வாழ்வார்
  • தேமலர்த் திருவோடு ஒப்பார் சேர்ந்தவன் செல்லல் தீர்ப்பர்
   
1599.
  • அன்னள் நின் தோழி ஐயா அவள் என்னைக் கண்ட கண்ணால்
  • பின்னைத் தான் பிறரை நோக்காப் பெருமட மாது தன்னை
  • என்னை யான் இழந்து வாழுமாறு என இரங்கினானுக்கு
  • அன்னளோ என்று நக்கான் அணி மணி முழவுத் தோளான்
   
1600.
  • இனையல் வேண்டா இம் மந்திரத்தை
  • ஓதி நீ ஒருவில் ஏ அளவு
  • அனைய எல்லை சென்றால்
  • இயக்கி கொணர்ந்து அருளும்நீ
  • புனை செய் கோல் வளையைக் கைப்
  • படுதி என்று ஆங்கு அவன் போதலும்
  • அனைய மாதரைக் கண்டு ஆங்கு
  • அடி புல்லி வீழ்ந்து அரற்றினான்
   
1601.
  • பட்ட எல்லாம் பரியாது உரைத்தான் அவளும் கேட்டாள்
  • விட்டாள் ஆர்வம் அவன் கண் இவன் மேல் மைந்து உறவினால்
  • மட்டார் கோதை மனை துறந்தாள் மைந்தனும் மங்கை மேலே
  • ஒட்டி விள்ளா ஆர்வத்தனன் ஆகி உருவம் ஓதினான்
   
1602.
  • மெழுகு செய்படம் வீழ்முகில் மத்தகத்து
  • ஒழுகும் வெள் அருவித் திரள் ஓடை சூழ்ந்து
  • இழுகு பொன் மதத்தின் வரைக் குஞ்சரம்
  • தொழுது வேய் முதல் தூசம் கொண்டு ஏறினான்
   
1603.
  • நிரைத்த தீவினை நீங்க நெடுங் கணார்
  • வரைக்கண் ஏறலின் வால் அரிப் பொன் சிலம்பு
  • உரைத்து மின் இருள் மேல் கிடந்தாலும் ஒத்து
  • அரைத்து அலத்தகம் ஆர்ந்தது ஒர் பால் எலாம்
   
1604.
  • சாந்தும் கோதையும் தண் நறும் சுண்ணமும்
  • ஆய்ந்த பூம் புகையும் அவியும் சுமந்து
  • ஏந்து பொன் விளக்கு ஏந்தி இடம் பெறா
  • மாந்தர் சும்மை மலிந்த ஒர் பால் எலாம்
   
1605.
  • துறந்த மன்னவர் தூமுடி தோள்வளை
  • நிறம் கொள் ஆரம் பைம் பூண் நிழல் குண்டலம்
  • பிறங்கு வெம் கதிர் மின்னொடு பின்னி வீழ்ந்து
  • உறங்குகின்றன போன்ற ஒர் பால் எலாம்
   
1606.
  • கருவித் தேன் கலை கையுறக் கீண்டுடன்
  • மருவிப் பைங்கறி வாரிப் பழம் தழீஇ
  • வெருவி நாகம் பிளிற்ற விரைந்து உராய்
  • அருவி நின்று அதிரும் ஒருபால் எலாம்
   
1607.
  • வெம் கதிர்க் கடவுள் வியன் தேர் வரைத்
  • தங்கு சந்தனக் கோட்டு இடைப் பட்டு எனப்
  • பொங்கு மான் குளம்பின் குடை பொன் துகள்
  • மங்குலாய்த் திசை யாவையும் அல்கின்றே
   
1608.
  • சுனைய நீலமும் சுள்ளியும் சூழ்மலர்
  • நனைய நாகமும் கோங்கமும் நாறு இணர்ச்
  • சினைய சண்பகம் வேங்கையோடு ஏற்றுபு
  • முனைவன் மேல் துதி முற்று எடுத்து ஓதினான்
   
1609.
  • முனிமை முகடு ஆய மூவா முதல்வன்
  • தனிமைத் தலைமை தனது தான் என்ப
  • தனிமைத் தலைமை தனது தான் என்றால்
  • பனிமலர் தூய் நின்று பழிச்சவாறு என்னே
   
1610.
  • மலர் ஏந்து சேவடிய மால் என்ப மாலால்
  • அலர் ஏந்தி அஞ்சலி செய்து அஞ்சப் படுவான்
  • அலர் ஏந்தி அஞ்சலி செய்து அஞ்சப் படுமேல்
  • இலரே மலர் எனினும் ஏத்தாவாறு என்னே
   
1611.
  • களிசேர் கணை உடைய காமனையும் காய்ந்த
  • அளிசேர் அறவழி அண்ணல் இவன் என்பர்
  • அளிசேர் அறவழி அண்ணல் இவனேல்
  • விளியாக் குணத்துதி நாம் வித்தாவாறு என்னே
   
1612.
  • இன்னணம் ஏத்தி இறைவன் அடி தொழுது
  • அன்னம் உறங்கும் மணிவரை மேல் நின்று
  • பொன்னம் கழலான் இழிந்து பொழி மழை
  • மின்னின் நடந்து மிகுசுரம் சென்றான்
   
1613.
  • மாலைக் கதிர்வேல் மலங்க மணிமலர்க்கு
  • ஓலை விடுகண் உருகு கொடி இடை
  • ஏலம் கமழ் குழல் ஏழையவர் அன்ன
  • ஆலைக் கரும்பின் அக நாடு அணைந்தான்
   
1614.
  • வழைச்சறு சாடி மட்டு அயின்று மள்ளர் தாம்
  • கழைக் கரும்பு எறிந்து கண் உடைக்கும் எந்திரம்
  • மழைக் குரல் என மயில் அகவ வார் செந்நெல்
  • புழைக் கடைப் புனல் அலைத்து ஒழுகும் பொற்பிற்றே
   
1615.
  • தாமரை மலர் தலை அடுத்துத் தண் கமழ்
  • தூமலர்க் குவளை கால் அணைத்துத் தோல் அடிக்
  • காமரு பெடை தழீஇ அன்னம் கண்படும்
  • தேமலர்த் தடம் தழீஇத் திசைக்கண் மல்கின்றே
   
1616.
  • கண் பயில் இளங் கமுகு எருத்தின் காய் பரீஇக்
  • கொண்டு இள மந்திகள் எறியக் கோட்டு இடைத்
  • திண் கனி முசுக்கலை சிதறும் தேம்பொழில்
  • மண்டு அமர் கடந்தவன் மகிழ்வொடு ஏகினான்
   
1617.
  • களிறு மாய் கதிர்ச் செந்நெல் கழனி நாட்டு இடை
  • ஒளிறு வேல் நரபதி நகரம் ஒய் எனப்
  • பிளிறு வார் இடி முரசு ஆர்ப்பப் பெய்கழல்
  • வெளிறு இலாக் கேள்வியான் விருப்பொடு எய்தினான்
   
1618.
  • புற நகர் மண மகன் ஒருவன் போதர்வான்
  • இறை மகன் வினாயினான் என்ன பேரவே
  • துறை வளர் நாட்டொடு நகரம் சொல் என
  • அறிக என்று அலரி வாய் கமழக் கூறினான்
   
1619.
  • மத்திம தேசமாம் நாடு மற்று இந் நாட்டு
  • எத்திசை நிதியமும் இறை கொண்டு இல்லவர்க்கு
  • உய்த்தும் ஊர் கொடுப்பவரே ஏமமா புரம்
  • இத்திசைக்கு ஐய நீ புதியை போன்ம் என
   
1620.
  • அன்னதே என்றலின் அடிசில் காலமால்
  • என்னொடு பேசினாய் தவிர் மற்று ஈங்கு எனப்
  • பொன் நகர் புக்க பின் அறிவல் போக என்றான்
  • வில் மரீஇ வாங்கிய வீங்கு தோளினான்
   
1621.
  • புணர் மருப்பு யானையின் புயல்கொள் மும்மதம்
  • மணமகள் கதுப்பு என நாறும் மாநகர்த்
  • துணைமலர்க் கண்ணியும் செம்பொன் மாலையும்
  • இணைமலர்த் தாரினான் இடறி ஏகினான்
   
1622.
  • வண்டு கொப்புளித்து உணும் மாலை மார்பனைக்
  • கண்டு உவப்பு அளித்தவர் கடைக்கண் ஏக்கற
  • மண்டபப் பளிக்கு அறை மருங்கு ஒர் மா நிழல்
  • கொண்டு அவற்கு அளித்தது ஓர் குளிர் கொள் பொய்கையே
   
1623.
  • வண்சிறைப் பவளச் செவ்வாய்ப்
  • பெடை அன்ன மடமை கூரத்
  • தண்கய நீருள் கண்ட
  • தன் நிழல் பிறிது என்று எண்ணிக்
  • கண்டனம் கள்வ மற்று உன்
  • காதலி தன்னை நீர்க் கீழ்ப்
  • பண்டையம் அல்லம் வேண்டா
  • படுக்க என்று ஊடிற்று அன்றே
   
1624.
  • செயிர்ப்பொடு சிவந்து நோக்கிச்
  • சேவலின் அகலச் சேவல்
  • அயிர்ப்பது என் நின்னை அல்லால்
  • அறியலேன் அன்றி மூக்கின்
  • உயிர்ப்பது உன் பணியினாலே
  • ஊடல் நீ என்று பல்கால்
  • பயிர்ப்பு அறச் சிறகால் புல்லிப்
  • பணிந்து பாண் செய்தது அன்றே
   
1625.
  • கலை உணர் மகளிர் நெஞ்சில்
  • காமத்தின் கனிந்த ஊடல்
  • நிலை உணர் மைந்தர் நீக்கி
  • நெறியினால் புணர்ந்தது ஒப்ப
  • அலர் மிசைப் பெடையின் ஊடல்
  • அன்பு கொள் சேவல் நீக்கிக்
  • குலவிய புணர்ச்சி நோக்கிக்
  • குன்று அனான் சிந்திக் கின்றான்
   
1626.
  • தன்னை யான் முகத்தை நோக்கின்
  • தான் முலை முகத்தை நோக்கும்
  • பின்னை யான் பலவும் பேசில்
  • தான் ஒன்று மிழற்றும் பைம் பூண்
  • பொன் அவாம் சுணங்கு போர்த்த
  • பொங்கு இள முலையினாள் என்
  • முன்னையாள் போன்று தத்தை
  • முகத்துளே தோன்று கின்றாள்
   
1627.
  • பரிவு உற்றால் பயன் இன்றியும் பாவைமார்
  • முரிவு உற்றார்களின் மூர்ச்சனை செய்பவால்
  • பிரிவில் தோன்றிய பேர் அன்பு எனப்படும்
  • எரியின் மூழ்கி இறந்து படும் கொலோ
   
1628.
  • வாளி அம்பு அன வாள் தடம் கண்ணி தன்
  • தோளும் மென் முலைப் பாரமும் தொல் நலம்
  • நாளும் நாளினும் நைந்து நைந்து உள் சுடப்
  • பூளை மெல் அணை மேல் புரளும் கொலோ
   
1629.
  • உருகி வாடி என் உற்றது கொல் எனக்
  • கருகி வாடிய காமரு கோதை தன்
  • இரு கண் நீரும் இடை முலை பாய்ந்து உகக்
  • குருகு பாய் தடம் ஆக அழும் கொலோ
   
1630.
  • வண்டு வாழ் பயில் கோதை மணம் முதல்
  • கண்ட ஞான்று தன் கண் எனும் கைகளால்
  • நொண்டு கொண்டு பருகிய நோக்கம் ஒன்று
  • உண்டு என் ஆவி உருக்கி இடுவதே
   
1631.
  • காதலாள் உடலுள் உயிர் கைவிடின்
  • ஏதம் என் உயிர் எய்தி இறக்கும் மற்று
  • ஆதலால் அழிவு ஒன்று இலள் அல்லதூஉம்
  • மாதர் விஞ்சையும் வல்லளும் அல்லளோ
   
1632.
  • காதல் மிக்குழிக் கற்றவும் கைகொடா
  • ஆதல் கண்ணகத்து அஞ்சனம் போலுமால்
  • தாது துற்றுபு தங்கிய வண்டு அனார்க்கு
  • ஏதம் இற்று என எண்ணும் என் நெஞ்சு அரோ
   
1633.
  • நற வெம் கோதையர் நல் நலம் காதலான்
  • மற வெம் காமத்து வந்துற்ற தீவினைப்
  • பறவைத் தேர் நரகத்துப் பதைக்குங்கால்
  • அறிவன் அல்லது அங்கு ஆர் சரண் ஆகுவார்
   
1634.
  • வேட்கை ஊர்தர விம்முறவு எய்திய
  • மாட்சி உள்ளத்தை மாற்றி மலர்மிடை
  • காட்சிக்கு இன் பொய்கைக் காமர் நலன் உண்டு
  • மீட்டும் அங்கு இருந்தான் விடை ஏறு அனான்
   
1635.
  • நேரார் நேரும் நீள் நிதி துஞ்சும் நிறை கோயில்
  • ஆரா வெம் போர் ஆய் தடமித்தன் அரசற்கும்
  • நாரார் கற்பின் நாகிள வேய்த் தோள் நளினைக்கும்
  • சீரால் தோன்றிச் செல்வமோடு எல்லாம் திருத் தக்கான்
   
1636.
  • விண்டார்த் தேய்க்கும் வெம்பரி மான் தேர் விசயன் என்று
  • உண்டா நின்றான் தன் புகழ் ஊழி உலகு ஏத்த
  • வண்டார் சோலை வார் மணம் நாறப் புகுகின்றான்
  • கண்டான் சேர்ந்தான் காளையைக் கல்விக் கடலானே
   
1637.
  • இந்நாட்டு இவ்வூர் இவ்விடம் எய்தார் இவண் வாழ்வார்
  • எந்நாட்டு எவ்வூர் எப்பெயராய் நீ உரை என்றாற்கு
  • அந் நாட்டு அவ்வூர் அப் பெயர் அல்லாப் பெயர் சொன்னான்
  • பொய்ந் நாட்டேனும் பொய் அல ஆற்றால் புகழ் வெய்யோன்
   
1638.
  • வாமான் திண் தேர் வள்ளலும் உள்ளம் மிகை கொண்டு எம்
  • கோமாற்கு உய்ப்பன் கொள் பயன் மிக்கோன் கொலை வேலான்
  • ஏ மாறு இல்லா இந்திரனேயும் இவன் ஒவ்வான்
  • போமாறு ஆய்வென் பொற்போடு கூடும் வகை என்றான்
   
1639.
  • பூங் கழலானைப் புண்ணிய
  • நம்பி முகம் நோக்கி
  • ஈங்கு இது நின்நாடு இப் பதி
  • நின் ஊர் இது நின் இல்
  • வீங்கிய திண் தோள் வெல்
  • புகழாய் நின் கிளை என்றாற்கு
  • ஆங்கு அது எல்லாம் அண்ணலும்
  • நேர்ந்து ஆங்கு அமைக என்றான்
   
1640.
  • மன்னவன் சிறுவன் ஆங்கு ஓர்
  • மாங்கனி உண்ணல் உற்று
  • மின் அவிர் கணையின் பல் கால்
  • பிழைப்பு எய்து மீண்டு நிற்பப்
  • பொன் அவிர் கழலினான் அப்
  • பொரு சிலை கணையின் வாங்கி
  • இன் அமிர்து ஊறுகின்ற
  • இருங் கனி அற எய்திட்டான்
   
1641.
  • எய்த அக் கணையும் மாவின் இருங் கனி அதுவும் பூமிக்கு
  • எய்த அச் சிலையின் எல்லை அணுகலும் ஏந்தல் நோக்கி
  • எய்த அவ் விடத்து நின்றே எய்த அத் தடக்கை கொண்டாற்கு
  • எய்தச் சென்று ஐயன் ஆரத் தழுவிக் கொண்டு இதனைச் சொன்னான்
   
1642.
  • வண் சிலை கொண்ட வாறும் வார்கணை தொடுத்த வாறும்
  • கண் கணை வைத்த வாறும் கல் செய் தோள் இருந்த வாறும்
  • திண்சரம் விட்டவாறும் சென்ற கோல் போந்த வாறும்
  • கண்டு எலாம் வியந்து நோக்கி வில் உடைக் கடவுள் என்றான்
   
1643.
  • மரா மரம் ஏழும் எய்த வாங்குவில் தடக்கை வல்வில்
  • இராமனை வல்லன் என்பது இசை அலால் கண்டது இல்லை
  • உரா மனம் இவன் கண் இன்றி உவக்குமா செய்வல் என்று
  • குராமலர்க் காவின் நீங்கிக் கோயிலே கொண்டு புக்கான்
   
1644.
  • வழிவரல் வருத்தம் ஓம்பி வயிரப் பூண் அணிந்த மார்பன்
  • அழிகவுள் யானை வேந்தற்கு அவன் திறம் அறியச் சொன்னான்
  • மொழி எதிர் விரும்பி மன்னன் மூரிவில் தடக்கை யாற்குக்
  • கழி பெரு முகமன் கூறிக் காதலம் காளை என்றான்
   
1645.
  • கிலுத்தம் கூர்ப் பரங்கள் என்னும் இரண்டினுள் கிலுத்தம் சார்ந்து
  • நலத்தகு விரல்கள் ஐந்தின் இம்பர் மூ விரலின் நீளம்
  • சிலைத் தழும்பியானைத் தோலின் நூற்றுரை சிறு மீன் ஒத்த
  • இலக்கணக் கிடக்கை கண்டே ஏவினுக்கு அரசன் என்றான்
   
1646.
  • அண்ணல் அம் சிலை வலாருள் அமோக மா ஆசானின் பின்
  • விண் நகு வெள்ளி வெற்பின் விஞ்சையர் உலகின் அல்லால்
  • மண்ணகத்து இல்லை என்பார் வாயினை மடங்க வந்தான்
  • புண்ணகத்து உறையும் வேலான் எனப் புகழ்ந்து அரசன் சொன்னான்
   
1647.
  • வில் திறல் நம்பி தேற்றான் விருந்தினன் இவனும் அன்றி
  • மற்றும் ஓர் நால்வர் உள்ளார் மாண்பினால் வளர்ந்தது இல்லை
  • கொற்றம் நீ கொடுக்கல் வேண்டும் குறை எனக் குருசில் நேர்ந்தான்
  • அற்றை நாள் ஆதி ஆக அவர்களும் பயிலுகின்றார்
   
1648.
  • கழலின் செந்தாமரை அடிகள் புல்லித் தம் காதல் கூர
  • நிழலின் நீங்கார் நினைத்தன நினைப்பின் அமைவான் ஆக்கி
  • அழலின் சாராது அகலாது ஒழுக ஒரு நாள் அவன் போகிப்
  • பொழிலின் மிக்கதனில் புக்கான் மணமகளிர் போல் பொலிந்ததே
   
1649.
  • பாசிப் பாசத்துப் பைம்பொன்
  • நிரைத்தாலி பூத்த வேங்கை
  • மாசில் வெண் துகிலை நீர் தோய்த்து
  • மேல் போர்த்த வண்ணமே போல்
  • காசில் மட்டு ஒழுகப் பூத்த அழிஞ்சில்
  • கண் ஆர் கவின் கொண்டன
  • பேசில் செந்தலைய வெண் கறைய
  • புன்கம் பொரி அணிந்தவே
   
1650.
  • கோடு தையாக் குழிசியோடு ஆரம் கொளக் குயிற்றிய
  • ஓடு தேர்க்கால் மலர்ந்தன வகுளம் உயர் சண்பகம்
  • கூடு கோழிக் கொழு முள் அரும்பின அம் கோசிக
  • ஆடை பூத்தன பாதிரி வெண் கடம்பு பந்தணிந்தவே
   
1651.
  • வெருகு வேட்பச் சிரிப்பன போல்
  • முகைத்த முல்லை வெய்ய வாய்
  • அரவு பைத்து ஆவித்து அன்ன
  • அம்காந்தள் அவிழ்ந்து அலர்ந்தன
  • குரவம் கொண்ட குறும் பூழ் போல்
  • கொழுங்கால் முகை சுமந்தன
  • குருதிக் கூர் எயிறு கூத்தியர்
  • கண் கொண்ட கொடித் தளவமே
   
1652.
  • சொன்ன நல் மலரும் அல்லனவும்
  • வீழ் பலவின் சூழ் சுளைகளும்
  • நன்மை நூலின் நயம் தோன்ற
  • நன்பொன் விரல் நுதியினால்
  • பன் மணியும் முத்தும் பவளமும்
  • பைம் பொன்னும் கோத்தால் ஒப்ப
  • என்ன அமரரும் மருளத்
  • தொடுத்தான் இன மாலையே
   
1653.
  • ஊன் உண் சிங்கக் குழவி
  • எயிற்று ஏர் ஒளி எயிற்றினான்
  • தேன் உண் போதின் பிணையலும்
  • பந்தும் புனைந்து தேம் ஆர்ந்த
  • நானம் தோய்த்து நனை கலவை
  • நாறும் மதம் தெளித்த பின்
  • பால் உண் தீம் சொல்லாள் ஓர்
  • படுவி வண்டு ஆர்ப்ப வந்து இறைஞ்சினாள்
   
1654.
  • நெடிய வாள் கண்கள் வாயா
  • இமைப்பு எனும் சொல்லின் மற்று எம்
  • கொடியிற்கு ஒத்த இவை என்றாள்
  • நம்பியும் கொள்க என்றான்
  • வடுவும் வேலும் மலரும்
  • கயலும் வனப்பு அழித்த கண்
  • அடி அம் சிலம்பினாட்கு உய்த்து
  • இறைஞ்சிக் காட்ட அவள் கொண்டாள்
   
1655.
  • கொண்டு கோதை மலர் எழுத்து
  • மெல் விரலின் மேல் தாங்கி நோக்கும்
  • வண்டு சேர்ந்த குழலாள்
  • வரும் முலைகள் பாய வண்தார்
  • விண்டு தேன் துளிப்ப வேல்
  • தடம் கண் தாம் ஆடும் நாடகம்
  • கண்டு வாழாதவர் வாழ்க்கை
  • எல்லாம் சவரர் வாழ்க்கையே
   
1656.
  • ஆம்பல் நாறும் அரக்கார் பவள வாயார் அமுதம் அன்னார்
  • பாம்பு பைத் தாங்கு அனைய பவழப் பட அரவு அல்குலார்
  • தாம்பலரும் மருட்ட அகில் தவழும் தண் பூவணைக்
  • காம்பின் மென் தோள் கவின் வளர வைகல் கலப்பு என்பவே
   
1657.
  • ஆகம் தான் ஓர் மணிப் பலகையாக முலைகள் நாய் ஆகப்
  • போகக் கேற்ற புனை பவழ அல்குல் கழகம் ஆக
  • ஏக இன்பக் காமக் கவறாடல் இயைவது அன்றேல்
  • ஆக நோற்றிட்டு அடங்கல் ஆண்மைக்கு அழகு என்பவே
   
1658.
  • பின்னி விட்ட பிடித் தடக்கை இரண்டு
  • போன்று திரண்டு அழகார்
  • கன்னிக் கலிங்கம் அகிலார்ந்து
  • கவவிக் கிடந்த குறங்கினாள்
  • மின்னுக் குழையும் பொன் தோடும்
  • மிளிர எருத்தம் இடம் கோட்டி
  • என்னும் இமையாள் நினைந்து இருந்தாள்
  • இயக்கி இருந்த எழில் ஒத்தாள்
   
1659.
  • கொடு வெம் சிலையைக் கொளை அமைத்துக்
  • கொதி நீர்ப் பகழி கொளவாங்கிக்
  • கடு வெம் குறவன் எயப்பட்ட
  • கன்னிப் பிணையின் நிலை கலங்கித்
  • தொடி தோள் நடப்பத் தோள் தேம்பத்
  • துணை வெம் முலைகள் பசப்பு ஊர
  • நெடுமாத் தொகை மென் சாயல்
  • நெஞ்சிற்கு இவ்வாறு உரைக்கின்றாள்
   
1660.
  • ஒன்றே எயிற்றது ஒரு பெரும்
  • பேய் உலகத்தை அங்காந்து
  • நின்றாற் போல நிழல் உமிழ்ந்து
  • நெடு வெண் திங்கள் எயிறு இலங்க
  • இன்றே குருதி வான வாய்
  • அங்காந்து என்னை விழுங்குவான்
  • அன்றே வந்தது இம் மாலை
  • அளியேன் ஆவி யாதாம் கொல்
   
1661.
  • வருந்தி ஈன்றாள் மறந்து ஒழிந்தாள்
  • வளர்த்தாள் சொல் கேட்டு இல் கடிந்தாள்
  • முருந்தின் காறும் கூழையை
  • முனிவார் நின்னை என் முனிவார்
  • பொருந்திற்று அன்றால் இது என்னாய்
  • பொன்றும் அளித்து இவ் உயிர் என்னாய்
  • திருந்து சோலைக் கருங் குயிலே
  • சிலம்ப இருந்து கூவுதியால்
   
1662.
  • பெரு வெண் திங்கள் மால் அகப்பூ
  • மலைந்து பெட்ப நகுகின்றது
  • உருவு கொண்ட குரல் அன்றில்
  • உயிர் மேல் ஆம்பல் உலாய் நிமிரும்
  • ஒரு பெண் பாலேன் யான் ஆக
  • உலகம் எல்லாம் பகை ஆகி
  • எரிகொன்று ஈன்ற இலைப் பலிபோல்
  • இருத்தியால் என் இன்னுயிரே
   
1663.
  • வேம் என் நெஞ்சம் மெய் வெதும்பும்
  • விடுக்கும் ஆவி வெய்துயிர்க்கும்
  • பூ மென் குழலார் புறம் நோக்கி
  • நகுவார் நகுவது ஆயினேன்
  • தாம மார்பன் தான் புனைந்த
  • தண் என் மாலை புணை ஆக
  • யாமக் கடலை நீந்துவேன்
  • யாரும் இல்லாத் தமியேனே
   
1664.
  • செம் பொன் கடம்பன் செவ்வேலும்
  • காமன் சிலையில் தொடுத்து அலர்ந்த
  • அம்பும் வென்ற வரி நெடுங் கண்
  • அம் மாமதி வாள் முகத்தினாள்
  • வம்பு பூத்து முருகு உலாய்த்
  • தேன் கொப்புளித்து நின்றது ஓர்
  • கொம்பு வெம் தீயிடைப் பட்டது
  • ஒத்தாள் விரை செய் கோதையே
   
1665.
  • மணி நிற மாமை சாயல் வளையொடு வண்டு மூசும்
  • அணிநிறப் போர்வை ஆய அரும் பெறல் நாணும் விற்றுப்
  • பணி நலம் புதியது உண்டான் பன் மலர் மாலை கொண்டேன்
  • பிணி நிறப் புறஞ் சொல் என்னும் பெரும் ஞிமிறு ஆர்ப்ப என்றான்
   
1666.
  • காதலான் காதல் போல அகன்று நீண்டு அலர்ந்த வாள் கண்
  • போது உலாம் கோதை மாதர் புனைந்து அலர் தொடுத்த மாலை
  • ஆதலால் அலரது ஆகாது ஒழியுமே அழுங்கல் என்று
  • மாது உலாம் மழலைச் செவ்வாய் மடக்கிளி மொழிந்தது அன்றே
   
1667.
  • என்னை உள்ளம் பிணித்து
  • என் நலம் கவர்ந்த ஈர்ந் தாரினான்
  • தன்னை யானும் பிணிப்பேன்
  • எனத் தன் மணிச் செப்பினுள்
  • மன்னும் மாலை கொடுத்து அவனுக்கு
  • உய்த்து ஈ எனத் தொழுது கொண்டு
  • அன்னம் என்ன ஒதுங்கிச் சிலம்பு
  • அரற்றச் சென்று அணுகினாள்
   
1668.
  • அணுகி முன் நின்ற அநங்க
  • விலாசினி அம் கை கூப்பிப்
  • பிணையல் நீட்டப் பெருந் தகை
  • அஃது ஏலான் முகம் நோக்கலும்
  • துணையில் தோகை என் நங்கைக்குத்
  • தொங்கல் தொடுப்பாயும் நீ
  • மணி செய் மென் தோள் மருந்து நீ
  • ஆருயிரும் நீயேல் என்றாள்
   
1669.
  • மன்னர் கோயில் உறைவார்
  • பொறி செறித்த மாண்பினரே
  • என்ன அஞ்சினாய் என்று அவனை
  • நக்காட்கு அஃது அன்று கோதாய்
  • இன்ன கொள்கையேற்கு ஏலாது
  • என்ன இலங்கு எயிற்றினாள்
  • அன்னம் அன்ன நடையினாள்
  • தான் வருந்தும் என நேர்ந்தான்
   
1670.
  • குலிகம் ஆர்ந்த கொழுந் தாமரை
  • அன்ன வண் கை நீட்டி
  • ஒலியல் ஏற்றான் இஃது ஊழ்
  • வினையால் உள்ளம் சுடுமால் என்ன
  • இலை கொள் பைம் பூண் இளமுலையாள்
  • போகிக் கனக மாலை
  • மெலிய வெம்பி நைகின்றாள்
  • உய்யும் வகை தொடங்கினாள்
   
1671.
  • நீர் செய் காந்த மணி கூந்தளம்
  • பாவை நீண்டு அழகிய
  • ஏர் செய் சாந்தின் கழுநீர் விரை
  • கமழும் பூக்கள் கோத்த
  • வார் செய் தண் தாமரை வளை அமை
  • வரையின் வெள் அருவி நீர்
  • சீர் செய் கோமகளைச் சேர்த்தினாள்
  • சீதம் செய்யாது ஒழிந்தனவே
   
1672.
  • பவ்வத் தங்கண் பிறந்து பனி
  • பெயர்க்கும் தண் ஊற்றது ஆகி
  • எவ்வம் மன்னர் பட உலகம்
  • விற்கும் அருமணியினைச்
  • செவ்வன் நூலில் சித்திரிக்கப் பட்ட
  • அதனைச் சேர்த்திப் பின்னும்
  • மவ்வல் நாறும் குழலாட்கு
  • மற்றும் இவைகள் நாடினாள்
   
1673.
  • களிசெய் கோசிக நீர் விழக்
  • கடி மாலை மேல் தொடர்ந்து கீழ்
  • நளி செய் தண் பூஞ்சலம் சயனம்
  • ஆக்கி நல் நீர் பிலிற்றும் வாய்க்
  • குளிர் கொள் சாந்து ஆற்றி பொன்
  • ஆலவட்டம் கொண்டு ஏந்தி வீசச்
  • சளிகொள் சந்தின் கொழுஞ் சாந்தம்
  • ஆகம் முழுதும் மெழுகினாள்
   
1674.
  • கொம்மை வெம் முலையில் சாந்தம் குளிர் செயாது ஆவி வாட்ட
  • அம் மென் மாலை முகம் கரிய நீர் துளும்ப நின்று நீடி
  • வெம்மை மிக்கது வீரன் தொடுத்த விளங்கு மாலை
  • பொம்மல் ஓதிக்குத் தானே துணை ஆம் புணை ஆயிற்றே
   
1675.
  • வாசநீலம் கழுநீர் குவளை படை சாற்றி வந்து
  • ஓசனைக் கண் உடையும் நெடுங் கண் கனகமாலை
  • தாசி தூது ஆகத் தாமம் புணை ஆகச் செல்லும் நாளுள்
  • காசில் கல்விக் கடலைக் கரை கண்டார் காளை மாரே
   
1676.
  • பொரு சரம் சலாகை வெய்ய புகன்றனர் துரக்கு மாறும்
  • வருகணை விலக்கு மாறும் வாள் அமர் நீந்து மாறும்
  • கருவியுள் கரக்கு மாறும் கணை புறம் காணு மாறும்
  • விரிய மற்று அவர்க்குக் காட்ட வீற்று இருந்து அவரும் கற்றார்
   
1677.
  • வேல் உடைத் தடக்கையார்கள் வேழ மேல் சென்றபோழ்தில்
  • கால் இடைக் கரக்கு மாறும் கை இடைத் திரியு மாறும்
  • வால் இடை மறியுமாறும் மருப்பு இடைக் குளிக்கு மாறும்
  • நூல் இடைக் கிடந்த வாறே நுனித்தவன் கொடுப்பக் கொண்டார்
   
1678.
  • கொடி நெடுந் தேரின் போரும் குஞ்சரம் குறித்த போரும்
  • கடு நடைப் புரவிப் போரும் கரப்பறக் கற்று முற்றி
  • இடன் அறிந்து இலங்கும் வை வாள் இரும் சிலை குந்தம் மூன்றும்
  • உடன் அறிந்து உம்பரார்க்கு உரைப்பருந் தகையர் ஆனார்
   
1679.
  • தானையுள் அன்றி நின்ற தனி இடம் ஒற்றி மன்னர்
  • தானை மேல் சென்ற போழ்தும் வென்றியில் தளர்தல் இன்றித்
  • தானையை உடைக்கும் வெம் போர்த் தருக்கினார் மைந்தர் என்று
  • தானை சூழ் மன்னற்கு உய்த்தார் மன்னனும் தருக என்றான்
   
1680.
  • மழையொடு சூழ்ந்து கொண்ட வான் துகள் சிலையின் நீக்கிக்
  • குழை முகம் நெற்றி நக்கக் கோல வில் பகழி வாங்கி
  • இழை பக இமைப்பின் எய்திட்டு எறிந்து மின் திரிவவே போல்
  • விழைவுறு குமரர் புக்குச் சாரியை வியத்தர் ஆனார்
   
1681.
  • விசயனே விசயன் வில் போர்க் கதம்பனே முருகன் வேல் போர்த்
  • திசை எலாம் வணக்கும் வாள் போர்க்கு அந்தணன் செம் பொன் நாமன்
  • அசைவு இலான் யானைத் தேர்ப் போர்க்கு அலசனே அசல கீர்த்தி
  • வசை இலான் புரவிச் சேன் என்று யாவரும் புகழப் பட்டார்
   
1682.
  • காவலன் மக்கள் ஆக்கம் கண்டு கண் குளிர்ந்து நோக்கி
  • ஏவலான் அரசன் ஒன்றோ இரு பிறப் பாளன் அல்லார்க்கு
  • ஆவது அன்று இன்ன மாட்சி அவனை யான் நிகளம் பெய்து
  • காவல் செய்திடுவல் வல்லே காளையைக் கொணர்மின் என்றான்
   
1683.
  • கல்வியும் கொடிது போலும்
  • காவலன் காளை தன்னை
  • ஒல்லலன் சிறை செய்கின்றான்
  • என்றவன் கருதிற்று ஓரார்
  • பல்சனம் பரிந்து நிற்பப்
  • பார்த்திப குமரன் சேர்ந்தான்
  • வில் வலான் கொண்டு வேந்தன்
  • வேறு இருந்து இதனைச் சொன்னான்
   
1684.
  • புள் முழுது இறைஞ்சும் கோட்டுப்
  • பொரு களிறு அனைய தோன்றல்
  • மண் முழுது அன்றி வானும்
  • வந்து கை கூடத் தந்தாய்
  • கண் முழுது உடம்பில் பெற்றேன்
  • காளை கைம்மாறு காணேன்
  • பண் முழுது உடற்றும் தீம் சொல்
  • பாவை நின் பாலள் என்றான்
   
1685.
  • முடி கெழு மன்னன் சொல்ல
  • மொய் கொள் வேல் குருசில் தேற்றான்
  • வடிவமை மனன் ஒன்று ஆக
  • வாக்கு ஒன்றா மறுத்த லோடும்
  • தடி சுவைத்து ஒளிறும் வேலான்
  • தன் கையால் முன் கை பற்றி
  • இடி முரசு அனைய சொல்லால்
  • இற்றென விளம்பு கின்றான்
   
1686.
  • பூவியல் கோயில் கொண்ட
  • பொன் அனாள் அனைய நங்கை
  • காவியம் கண்ணி வந்து
  • பிறத்தலும் கணிகள் ஈண்டி
  • மூவியல் திரிதல் இன்றிச்
  • சாதக முறையில் செய்தார்
  • ஏவியல் சிலையினாய்க்கே உரியள்
  • என்று உரைப்ப நேர்ந்தான்
   
1687.
  • வார் உலாம் முலையினாட்கும்
  • வரிசிலைத் தடக்கை யாற்கும்
  • சீர் உலாம் கோலம் செய்தார்
  • செப்பினார் வதுவை நல் நாள்
  • பார் எலாம் அறிய நின்று
  • படா முரசு ஆர்ப்பத் தீ வேட்டு
  • ஏர் உலாம் கோதை இன்பத்து
  • இள நலம் பருகுகின்றான்
   
1688.
  • முலைக் கடாக் களிறு முத்தம்
  • சூட்டிய ஓடை பொங்க
  • நாண் எனும் தோட்டி மாற்றி
  • ஆட்டிய சாந்தம் என்னும்
  • முக படாம் அழித்து வெம்போர்
  • ஓட்டற ஓட்டிப் பைந்தார்
  • உழக்கி இட்டு வந்த அன்றே
   
1689.
  • ஒண் மணிக் குழை வில் வீச
  • ஒளிர்ந்து பொன் ஓலை மின்ன
  • வண்ண மேகலைகள் ஆர்ப்ப
  • வான் சிலம்பு ஒலிப்ப முத்தும்
  • கண்ணியும் பசும் பொன் நாணும்
  • கதிர் முலை புடைப்பக் காமர்
  • அண்ணல் அம் குமரன் தன்னொடு
  • ஆயிழை ஆடினாளே
   
1690.
  • மூசுதேன் வாரி அல்குல்
  • பட்டபின் முலைகள் என்னும்
  • மாசு அறு கந்தின் மென் தோள்
  • மணித் தொடர்க் கொளுத்தி வாள்கண்
  • ஆசு அறு வயிரத் தோட்டி நுதல்
  • அணிந்து அமுதச் செவ்வாய்
  • காசு அறு கவளம் ஆகக்
  • களிறு கோள் பட்டது அன்றே
   
1691.
  • ஒப்பு இணை தனக்கு இலாதான்
  • உறுவரை அகலம் மூழ்கிச்
  • செப்பு இணை அனைய செங் கேழ்
  • வன முலை பொருது சேப்பக்
  • கற்பக மரத்தைப் புல்லிக்
  • கை விடாது ஒழிந்து காமத்
  • துப்புரவு உமிழும் காம
  • வல்லியின் தோற்றம் ஒத்தாள்
   
1692.
  • காய்வுறு வேட்கை தன்னால்
  • கங்குலும் பகலும் விள்ளான்
  • வேய் வெறுத்து அமைந்த தோளான்
  • விழுத்திரை அமுதம் என்று
  • சேய் நலம் கடந்த செல்வன்
  • திரு நலம் தெளித்திட்டு ஆற்ற
  • வாய் விடாள் பருகி இட்டாள்
  • மடக் கிள்ளை மருட்டும் சொல்லாள்
   
1693.
  • திரை இடைக் கொண்ட இன்னீர்
  • அமுது உயிர் பெற்றது என்னும்
  • உரை உடைக் கோதை மாதர்
  • ஒளி நலம் நுகர்ந்து நாளும்
  • வரை உடை மார்பன் அங்கண்
  • வைகினன் என்ப மாதோ
  • கரை கடல் அனைய தானைக்
  • காவலன் காதலானே
   
1694.
  • வாளினால் மிடைந்த கண்ணாள்
  • வருமுலைத் தடத்துள் வைகித்
  • தோளினால் மிடைந்து புல்லித்
  • தொண்டை வாய் அமுதம் மாந்திக்
  • காளை செல்கின்ற நாளுள்
  • கட்டியங் காரன் மூதூர்
  • மீளி வேல் குருசிற்கு உற்றார்க்கு
  • உற்றது விளம்பல் உற்றேன்
   
1695.
  • வெண் மதி இழந்த மீன் போல்
  • விடலைக்குத் தம்பி மாழாந்து
  • ஒண் மதிச் சூழ்ச்சி மிக்கான்
  • உள் உழி உணர்தல் செல்லான்
  • புள் மதித்து உடைந்த போது
  • பொழிந்து மட்டு ஒழுகும் நல்நாட்டு
  • உள்மதி வருந்த நாடி
  • ஒளி நகர் எய்தினானே
   
1696.
  • வெள்ளி வெண் மலைக்கு வேந்தன்
  • ஒருமகள் வேல் கண் பாவை
  • ஒள் இழை அவளைக் கேட்பான்
  • உறுவலி செல்லும் ஆங்கண்
  • வள் இதழ் கோதை தானே இட்டது
  • ஓர் வண்ணம் தன்னைக்
  • கொள்ளத் தான் முரலல் உற்றுக்
  • கோலமை வீணை கொண்டாள்
   
1697.
  • ஆடகச் செம் பொன் ஆணி
  • ஆன் நெய் வார்ந்து அனைய நுண்கோல்
  • மாடகம் நொண்டு கொண்டு
  • மாத்திரை நிறைய வீக்கிச்
  • சூடகம் அணிந்த முன் கைத்
  • தொகு விரல் சேப்ப எற்றித்
  • தோடு அலர் கோதை கீதம்
  • துணிவினில் பாடுகின்றாள்
   
1698.
  • இறும் மருங்குல் போது அணியின்
  • என்று இனைந்து கையின்
  • நறு மலர்கள் சிந்துவார்
  • நண்ணார் துறந்தார்
  • நண்ணார் துறப்ப நனி
  • வளையும் தோள் துறப்பக்
  • கண் ஓவா முத்து உறைப்பத்
  • தோழி கழிவேனோ
   
1699.
  • பூமாலை சூடின் பொறை ஆற்றா நுண் மருங்குல்
  • ஏமாராது என்று இனைவார் எண்ணார் துறந்தார்
  • எண்ணார் துறப்ப இன வளையும் தோள் துறப்ப
  • மண்ணார் வேல் கண் துயிலா தோழி மருள்வேனோ
   
1700.
  • வண்டு ஊத அம் மருங்குல் நோம் என்று பூ மாலை
  • கொண்டு ஓச்சும் காதலார் கூடார் துறந்தார்
  • கூடார் அவர் துறப்பக் கோல் வளையும் தோள் துறப்பத்
  • தோடார் பூங் கண் துயிலா தோழி துயர்வேனோ
   
1701.
  • ஊன் தகர்த்த அனைய போன்றும்
  • ஊடு எரி முளைப்ப போன்றும்
  • தோன்று பூ இலவத்து அங்கண்
  • தொகை அணில் அனைய பைங்காய்
  • கான்ற மென் பஞ்சி ஆர்ந்த
  • மெல்லணை யாழ் கை நீக்கித்
  • தேன் தயங்கு இணர் பெய் கோதை
  • சிந்தையின் நீட்டினாளே
   
1702.
  • நுண்ணிய வரியொடு திரண்டு நோக்குநர்
  • கண் மனம் கவற்றிய காமர் தொண்டை வாய்
  • அண்ணலை நினைந்து வெய் துயிர்ப்ப ஆய் நலம்
  • வண்ணத்தின் மழுங்கி வாள் கண்ணி வாடினாள்
   
1703.
  • மின் தவழ் மணி வரை மாலை மார்பனைப்
  • பொன் தவழ் இள முலை பொருது புல்லும் நாள்
  • என்று கொல் என நினைந்து இருந்த செவ்வியுள்
  • சென்றனன் சீவகற்கு இளைய செல்வனே
   
1704.
  • ஐ விலின் அகல நின்று ஆங்கு
  • அடி தொழுது இறைஞ்சினாற்கு
  • மை விலை பெற்ற கண்ணாள்
  • மைந்தனை மருண்டு நோக்கிக்
  • கை விலும் கணையும் இல்லாக்
  • காமன் போந்து இருக்க என்ன
  • மொய் வெல்லும் குருதி வேலான்
  • மூவில் கண் இறைஞ்சி நின்றான்
   
1705.
  • திங்கள் வாள் முகமும் நோக்கான்
  • திருமுலைத் தடமும் நோக்கான்
  • அம் கதிர்க் கலாபம் மின்னும்
  • அணி அல்குல் பரப்பும் நோக்கான்
  • செங் கயல் கண்ணினாள் தன்
  • சீறடிச் சிலம்பு நோக்கி
  • எங்கு உளார் அடிகள் என்னா
  • இன்னணம் இயம்பினானே
   
1706.
  • பொறி குலாய்க் கிடந்த மார்பின்
  • புண்ணியன் பொன்றினானேல்
  • வெறி குலாய்க் கிடந்த மாலை
  • வெள் வளை முத்தம் நீக்கி
  • நெறியினால் நோற்றல் என்றோ
  • நீள் எரி புகுதல் ஒன்றோ
  • அறியலென் கொழுநன் மாய்ந்தால்
  • அணி சுமந்து இருப்பது என்றான்
   
1707.
  • காய் தழல் கவரப் பட்ட
  • கற்பக மரத்தின் கன்றி
  • ஆய் கழல் குருசில் வாடி
  • அற்புத் தீ அழலுள் நிற்ப
  • வாய் மொழிந்து உரைக்கல் உற்றாள்
  • வனைகுழல் கற்றை வண் தார்த்
  • தோய் பிழி துளிக்கும் கண்ணிச்
  • சுரும்பு சூழ் கொம்பனாளே
   
1708.
  • மது முகத்து அலர்ந்த கோதை
  • மாற்றம் மைந்தற்கு உரைப்பாள்
  • கொதி முகக் குருதி வை வேல்
  • குருசிலோ நம்மை உள்ளான்
  • விதி முக மணங்கள் எய்தி
  • வீற்று இருந்து இன்பம் உய்ப்ப
  • மதிமுகம் அறியும் நாமே
  • வாடுவது என்னை என்றாள்
   
1709.
  • வேண்டியது எமக்கு நேரின்
  • வில் வலாய் நும் ஐயனாரைக்
  • காண்டி என்று உரைப்பக்
  • காளை எழுமையும் அடிமை நேர
  • மாண்டது ஓர் விஞ்சை ஓதி
  • மதிமுகம் தைவந்திட்டாள்
  • நீண்டது பெரிதும் அன்றி
  • நினைத்துழி விளக்கிற்று அன்றே
   
1710.
  • பொற்புடை அமளி அங்கண்
  • பூவணைப் பள்ளி மேலால்
  • கற்பக மாலை வேய்ந்து
  • கருங் குழல் கை செய்வானை
  • முற்படக் கண்டு நோக்கி
  • முறுவல் கொள் முகத்தன் ஆகி
  • விற் படை நிமிர்ந்த தோளான்
  • தொழுது மெய் குளிர்ந்து நின்றான்
   
1711.
  • செய்த விஞ்சையைத் தேமொழி மாற்றலும்
  • மையல் நெஞ்சொடு வண்டு இமிர் தாரினான்
  • பொய்யது அன்மையின் பூங் கழலான் அடிக்கு
  • எய்துகேன் அருளாய் என்று இறைஞ்சினான்
   
1712.
  • மதுக்கை மாலையும் வண்டு இமிர் சாந்தமும்
  • புதுக்கச்சு ஆர்ந்த பொன் வாளும் சுரிகையும்
  • கதுப்பின் நானமும் காமர் கலங்களும்
  • பதிக்கண் தம் எனப் பாவையும் ஏவினாள்
   
1713.
  • மணியின் மேல் புறம் போர்த்து அன்ன மாக்கதிர்
  • துணிய வீசும் துளங்கு ஒளி மேனியன்
  • பணியின் பல் கலம் தாங்குபு சென்ற பின்
  • அணிசெய் கோதை அம் காமினி ஓதினாள்
   
1714.
  • சாந்தினால் மெழுகித் தட மாமலர்
  • ஆய்ந்த தாமங்கள் நாற்றி அகில் புகை
  • ஏந்தி இட்டு இளையாரொடு நீங்கினாள்
  • காந்தி வண்டு உணும் கற்பகக் கோதையே
   
1715.
  • தூமம் ஆர்ந்த துகில் அணைப் பள்ளி மேல்
  • காமன் தம்பியின் காளை கிடந்தபின்
  • ஏம மாபுரத்து இட்டது ஓர் மா தெய்வம்
  • நாம நல் ஒளி நந்தனை என்பவே
   
1716.
  • மின்னும் பூணும் மிளிர் கதிர் ஆரமும்
  • பொன்னும் பூத்தது ஓர் கற்பகப் பூமரம்
  • அன்ன காளை அமர் துயில் தேறினான்
  • மன்னும் வெம் சுடர் மாக்கல் இவர்ந்ததே
   
1717.
  • செய்ய வாய் நெடிய கண்ணாள்
  • செல்க என விடுக்கப் பட்ட
  • வெய்ய வாள் தடக்கை வீரன்
  • இருத்தலும் விசயன் என்பான்
  • கையவாம் சிலையினானைக் கண்டு
  • வந்து அருகு சேர்ந்தான்
  • பையவாய்ப் பரந்த அல்குல்
  • பாவையர்க்கு அமிர்தம் அன்னான்
   
1718.
  • தெய்வமே கமழும் மேனித் திரு ஒளி கலந்த மார்பின்
  • ஐய நீ யாரை என்றாற்கு அவன் உரை கொடாது விட்டான்
  • பையவே பெயர்ந்து போகிப் பனிமலர்க் கோதை மார்பின்
  • மையல் அம் களிறு போலும் மைத்துனற்கு இதனைச் சொன்னான்
   
1719.
  • சந்தனக் களியும் பூவும் தமனியக் குடத்துள் நீரும்
  • கெந்தம் நாறு அகிலும் முத்துக் கிளர் ஒளி விளக்கும் ஏந்தி
  • அந்தில் வில் பயிற்றும் தானம் வழி பட ஆங்குச் சென்றாள்
  • மந்திர மடந்தை அன்னாள் வசுந்தரி வந்து சொன்னாள்
   
1720.
  • ஆர் அகில் சேக்கை நீங்கி வெறு நிலத்து அடிகள் தாமே
  • நீரிதின் கிடந்தது என் கொல் என்று யான் நினைந்து போகிச்
  • சேர் துணை கழறச் சென்றேன் செல்வியோடு ஆங்குக் கண்டேன்
  • போர் பல கடந்த வேலோய் மாயம் கொல் போற்றி என்றாள்
   
1721.
  • கணை கடி கண்ணி சொல்லக் காணிய யானும் சென்றேன்
  • மணி இலங்கு ஒண் பொன் வைவாள் கேடக மருங்கு வைத்த
  • இணை கடி சீயம் அன்னான் இளமையும் வனப்பும் ஏரும்
  • துணை அமை வடிவும் சொல்லி நின்பொறி ஒற்றிக் கொண்டான்
   
1722.
  • நீண்ட தோள் நெடிய செங்கண் நீலமாய்ச் சுரிந்த குஞ்சிப்
  • பூண்டது ஓர் ஆர மேனிப் பொன் உரைத்து இட்டது ஒக்கும்
  • காண்தகு காதில் தாழ்ந்த குண்டலம் குவளைப் பைந்தார்
  • ஆண் தகை அழகன் யார் கொல் அறியலன் அவனை என்றான்
   
1723.
  • இனத்து இடை ஏறு போலும் எறுழ் வலி உரைத்த மாற்றம்
  • மனத்து இடை மகிழ்ந்து கேட்டு மைந்தன் நந்தட்டனே ஆம்
  • புனத்து இடை மயில் அனாளால் பொருள் உரை பெற்று வந்தான்
  • எனத் தவிராது சென்று ஆங்கு எய்தினள் என்ப அன்றே
   
1724.
  • கருமுகில் பொடித்த வெய்யோன் கடலிடை நடப்பதே போல்
  • திருமுகம் சுடர நோக்கிச் சீவகன் சென்று சேர்ந்தான்
  • தருமனை அரிதின் கண்ட தனஞ்சயன் போலத் தம்பி
  • திருமலர்த் தடக்கை கூப்பிச் சேவடி தொழுது வீழ்ந்தான்
   
1725.
  • தாமரைத் தடக்கை கூப்பித் தாள் முதல் கிடந்த தம்பி
  • தாமரைத் தடத்தை ஒத்தான் தமையனும் பருதி ஒத்தான்
  • தாமரைக் குணத்தினானை மும் முறை தழுவிக் கொண்டு
  • தாமரைச் செங் கணானும் தன் உறு பரிவு தீர்ந்தான்
   
1726.
  • என் உறு நிலைமை ஓராது எரி உறு தளிரின் வாடிப்
  • பொன் உறு மேனி கன்றிப் போயினீர் பொறி இலாதேன்
  • முன் உற இதனை ஓரேன் மூரிப் பேர் ஒக்கல் எல்லாம்
  • பின் உறு பரிவு செய்தேன் பேதையேன் கவலல் என்றான்
   
1727.
  • ஆக்கமும் கேடும் உற்றீர் அடிகளே அல்லீர் மேலைப்
  • பூக் குலாம் அலங்கல் மாலைப் புள் கொடியாற்கும் உண்டே
  • வீக்கு வார் முலையினார் போல் வெய்து உயிர்த்து உருகி நைய
  • நோக்கினீர் என்னை என்றான் நுதி அழல் குட்டம் ஒப்பான்
   
1728.
  • குரவரைப் பேணல் இன்றிக் குறிப்பு இகந்து ஆய பாவம்
  • தரவந்த பயத்தினால் இத் தாமரைப் பாதம் நீங்கிப்
  • பருவருந் துன்பம் உற்றேன் பாவியேன் என்று சென்னி
  • திருவடி மிசையின் வைத்துச் சிலம்ப நொந்து அழுதிட்டானே
   
1729.
  • பரிந்து அழுகின்ற தம்பி பங்கயம் அனைய செங் கண்
  • பொருந்துபு துடைத்து வேண்டா புலம்புதல் காளை என்று
  • மருந்து அனாள் உறையும் கோயில் மடுத்து உடன் கொண்டு புக்கான்
  • அருந்ததிக் கற்பினாளை அடி பணிந்து அவனும் கண்டான்
   
1730.
  • கொழுநனைக் குறிப்பினாலே
  • குமரன் யார் என்று நோக்கக்
  • கழுமிய கற்பினாய் நின்
  • மைத்துனன் ஐயன் என்ன
  • எழுமையும் பெறுக இன்ன
  • இளங்கிளைச் சுற்றம் என்றாள்
  • கொழு மலர்த் தடம் கண் செவ்வாய்க்
  • குவிமுலைக் கொம்பு அனாளே
   
1731.
  • குடவரை அனைய மார்பில் குங்குமம் எழுதிக் கோல
  • வடவரை வைரச் சாதி வால் ஒளி கலந்த பைம் பூண்
  • தடவரை மார்பின் மின்ன தம்பியோடு அமிர்தம் உண்டான்
  • பட அரவு அல்குலாளும் பான்மையால் விருந்து செய்தாள்
   
1732.
  • விருந்து அவள் செய்த பின்றைத்
  • தம்பியும் தானும் வேறா
  • இருந்துழி என்னைக் காணது
  • உற்றதை எவன் கொல் என்று
  • பொருந்தினார் செய்தது எல்லாம்
  • புரை விடுத்து உரைமோ என்னக்
  • கருங் கழல் செங் கண் பைந்தார்க்
  • காளை ஈது உரைக்கின்றானே
   
1733.
  • புண் உமிழ் குருதி போர்த்த
  • பொரு களம் போன்று தோன்றி
  • அண்ணல் அம் கதிரும் அத்தம்
  • அடைந்து செவ்வான் கொள் அந்தித்
  • துண் எனக் களத்தின் நீங்கித்
  • தொல் நகர்ப் புறத்துத் தொக்கே
  • எண்ணுமின் செய்வது என்றான்
  • பதுமுகன் எரியும் வேலான்
   
1734.
  • மின் என மிளிரும் பைம்பூண் புத்திசேன் வெகுண்டு வெய்ய
  • கல் நவில் தோளினானைக் காண்கலேம் ஆயின் இன்னே
  • மன்னனை வாளினாலே வானகம் காட்டி மூதூர்
  • தன்னையும் சவட்டிப் போகிச் சாமியைச் சார்தும் என்றான்
   
1735.
  • சிலையொடு திரண்ட திண் தோள் தேவ மாதத்தன் என்பான்
  • மலை உடை உருமின் சீறி மாற்றலன் உயிரை உண்டல்
  • இலை உடைக் கண்ணியீர்க்கு இஃது எளிது நம் குருசில் உண்மை
  • உலைவினோடு இன்மை ஆராய்ந்து ஒறுப்பதே துணிமின் என்றான்
   
1736.
  • பவ்வத்துப் பிறந்த வெய்ய பருதி போல் திறலினாற்குத்
  • தெவ்வரைக் கிழங்கினோடும் தின்று நீ சொன்னவாறே
  • எவ்வத்தைத் தணித்தும் என்றான் சீதத்தன் என்னலோடும்
  • மவ்வல் அம் மணந்த தண் தார் பதுமுகன் இதனைச் சொன்னான்
   
1737.
  • நம்பி நந்தட்டன் கேட்க
  • நங்கட்குக் குரவர் உள்ளார்
  • தம் பரிவு அகற்றி ஓம்பி
  • நீர்க் கடன் மரபு தாங்கு இக்
  • கம்பம் செய் பரிவு நீங்கிக்
  • கற்பிப்பார்க்கு உவர்த்துச் சொல்லார்
  • இம்பர் இவ் உலகம் ஒப்பாய்க்கு
  • என்னை யான் உரைப்பது என்றான்
   
1738.
  • ஓம் படை சாற்றல் பாலது உள்ளவர்க்கு ஆகும் அன்றே
  • ஆம் புடை என்கண் இல்லை அங்கை என் கண்களாகத்
  • தேம் படு தாரீனீர்க்கும் செல்வற்கும் செய்வ செய்தேன்
  • காம்பு அடு காட்டுத் தீயின் கனன்று உடன் எழுக என்றேன்
   
1739.
  • கோட்டு இளங் குழவித் திங்கள்
  • இரண்டு அன்ன எயிற்றுக் கோளே
  • வேட்ட ஓர் சிங்கம் சூழ்ந்த
  • வேங்கையின் இனத்தின் வெய்ய
  • வாள் படை எழுந்து வாழ்க
  • சீவகன் என்னும் ஆங்கண்
  • பாட்டினை ஒருவன் எங்கள்
  • பரிவு அறப் பாடினானே
   
1740.
  • வருவர் நம் கேள்வர் இன்னே வாள் நுதல் பசலை தீர
  • உருகி நைந்து உடன்று முன் கை வளை உக மெலிய வேண்டா
  • அருவி மும் மதத்த யானை அதிர்ந்துழிக் கார் என்று எண்ணித்
  • தெரிவில பேதை முல்லை பூத்தன தெளி இது என்றான்
   
1741.
  • பாட்டினைக் கேட்டலோடும் பழம் பகை நட்பும் ஆமே
  • ஓட்டியும் கோறும் அன்றே நம்பி தான் உண்மை பெற்றால்
  • நாட்டிடம் பரந்து போகி நாடுதும் நாங்கள் என்னா
  • ஈட்டமும் வேறும் ஆகி இலைப்புரை கிளைத்திட்டேமே
   
1742.
  • மணி பொதி துகிலின் தோன்றும்
  • மஞ்சு சூழ் வரைகள் நாடி
  • அணி நகர் யான் சென்று எய்தி
  • மாலை தன் மனையைச் சேர்ந்தேன்
  • துணை மலர்க் காந்தள் ஊழ்த்துச்
  • சொரிவ போல் தோன்றி முன்கை
  • அணி வளை நலத்தோடு ஏக
  • அங்ஙனம் இருந்து நைவாள்
   
1743.
  • என்னைக் கண்டு அடிசில் ஆக்க
  • ஐயர்க்கு என்று அவலம் நீங்கப்
  • பொன்னைக் கண்ட அனைய சாயலவர்
  • புரிந்து அடிசில் ஏந்தத்
  • துன்னி நோய் உற்ற மஞ்ஞைத்
  • தோற்றம் போல் இருந்த நங்கை
  • பின்னை நாள் குவளை நீர் வீழ்
  • பெற்றிய கண்ணள் ஆகி
   
1744.
  • அடிகளை இன்றி நீரே உண்ணவும் வல்லீர் ஆனீர்
  • கடியிர் நீர் ஐயனீ¦ரே எனக் கசிந்து உருகிக் காய் பொன்
  • கொடி துகள் ஆர்ந்த வண்ணம் குழைந்து மாநிலத்து வீழ்ந்த
  • பெடை மயில் சயலாள் தன் பேது கண்டு ஆங்கு மீண்டேன்
   
1745.
  • செல்வனை இன்று நாடிச்
  • சேவடி தொழுதல் ஒன்றோ
  • அல்லது இவ் உடம்பு நீங்க
  • வேற்றுலகு அடைதல் ஒன்றோ
  • எல்லை இவ் இரண்டின் ஒன்றை
  • இப்பகல் முடிப்பல் என்னா
  • மல்லிகைக் கோதை ஐம் பால்
  • மலைமகள் மனையைச் சேர்ந்தேன்
   
1746.
  • மணி ஒலி வீணை பண்ணி
  • மாண்ட கோல் தடவ மாதர்
  • அணிமுலைத் தடத்தின் ஒற்றி
  • வெப்பரால் தட்பம் மாற்றிப்
  • பிணை மலர்க் கோதை கீதம்
  • பாட யான் பெரிதும் பேதுற்று
  • இணை மலர்க் கண்ணிக்கு ஒவ்வா
  • இளி வரு கிளவி சொன்னேன்
   
1747.
  • சொல்லிய என்னை நோக்கித்
  • துளங்கல் நும் அடிகள் பாதம்
  • புல்ல யான் புணர்ப்பல் என்று
  • பொழுது போய்ப் பட்ட பின்றை
  • எல் இருள் விஞ்சை ஓதி
  • இவ்வழி இடுவித்திட்டாள்
  • சொல்லுமின் அடிகள் நீரும்
  • போந்தவாறு எனக்கும் என்றான்
   
1748.
  • தாதையார் உவப்பச் செய்வான்
  • தாழ் கச்சில் பிணிப்புண்டு ஐய
  • போதரா நின்ற போழ்தில்
  • போர்ப்புலிக் குழாத்தின் சீறிக்
  • காதல் நம் சுற்றம் எல்லாம்
  • கை இலங்கு எஃகம் ஏந்திச்
  • சாதலே புரிந்து தோன்றும்
  • தன்மை அந் நகரில் கண்டேன்
   
1749.
  • கண்ட பின் நின்னைக் காண்பேன் கருவரை உலம்பிப் பல்கால்
  • விண்டுவும் உடைய வாலின் வெடித்துராய் வெகுண்டு நோக்கா
  • எண் திசையோரும் எள்கக் குஞ்சரம் இரியப் பாயும்
  • ஒண்திறல் சிங்கம் அன்ன கதழ் ஒளி உடற்சி கண்டேன்
   
1750.
  • சினம் தலைப் பெருக்கித் தீக் கோள்
  • உறுப்பினைச் சுருக்கித் தீப்போல்
  • அனன்று நில்லாத கண்ணால்
  • நிறுத்தின செவியிற்றாகி
  • முனம் புக அடக்கிப் பின் போந்து
  • இருந்து பாய்வான் அமைந்த
  • இனம் தலைப் புலியோடு ஒக்கும்
  • தோழர் நின்னிடத்தில் கண்டேன்
   
1751.
  • கூட நீர் நின்ற பெற்றி கண்டு இப்பால் நோக்குவேற்கு ஓர்
  • கேடகம் வாளொடு ஏந்திக் கெடுக இந் நகரம் என்னா
  • மாடத்தின் உச்சி நின்ற மலை மகள் தன்மை கண்டே
  • ஆடவர்க்கு உழுவை ஒப்பாய் அஞ்சினேன் அதன்கண் என்றான்
   
1752.
  • பெண் இடர் விடுப்ப வாழ்வின்
  • சாதலே பெரிது நன்று என்று
  • எண்ணினேன் நமர்கள் வீயும்
  • இயல்பினான் நெருங்கப் பட்டுக்
  • கண்ணி நான் இயக்கன் தன்னைச்
  • சிந்தித்தேன் கடவுள் வாழ்த்தி
  • அண்ணல் வந்து அழுங்கத் தோன்றி
  • ஆங்கு என்னைக் கொண்டு போந்தான்
   
1753.
  • மந்திரம் மூன்றும் தந்து வானவன் விடுப்பச் செல்வேற்கு
  • இந்திர திருவில் சூழ்ந்த இன மழைக் குழாத்தின் வேழம்
  • கொந்தழல் காட்டுத் தீயால் வளைப்புண்ட குழாத்தை நோக்கிச்
  • சிந்தித்துக் கவன்று நிற்பத் திருமழை பொழிந்தது அன்றே
   
1754.
  • வெல் களிற்று அச்சம் நீக்கி விரைவொடு வனத்தின் ஏகிப்
  • பல்லவ தேயம் நண்ணித் தனபதி என்னும் மன்னன்
  • நல் வனப்புடைய தேவி திலோத்தமை பெற்ற நம்பி
  • செல்வன் மற்று உலோக பாலன் திருமகள் பதுமை என்பாள்
   
1755.
  • அரிகுரல் கோழி நாமத்து அரவு அவள் கடித்தது ஆகத்
  • திருவிழை அவளைத் தீர்த்தேன் தீர்விலா நண்பு வேண்டிப்
  • பொரு களி யானை மன்னன் புனை இழை அவளைத் தந்தான்
  • இரு மதி கழிந்த பின்றை இடை இராப் பொழுதில் போந்தேன்
   
1756.
  • வாவிப் புள் நடையினாளை வஞ்சித்துத் தக்க நாட்டை
  • மேவி யான் காணல் உற்றுச் சார்தலும் இப்பர் உள்ளான்
  • தூவிப் பொன் மாட மூதூர்ச் சுபத்திரன் என்னைக் கண்டே
  • ஆவிக் கண் அறிவு போல அளவளாய் அன்பு பட்டான்
   
1757.
  • பண் அமை தேரின் ஏறி
  • அவனொடு யான் இருந்து போகி
  • விண் உயர் செம்பொன் மாடத்து
  • இழிந்து அவண் விளங்கப் புக்கேன்
  • வெண் நிலா முத்தம் சூழ்ந்த
  • வெம் முலைத் தடம் கணாளை
  • மண் எலாம் செல்ல நின்ற
  • மகிழ்ச்சியின் மகிழ்ந்து தந்தான்
   
1758.
  • அவ் வழி இரண்டு திங்கள் கழிந்த பின் அவள் இல் நீங்கி
  • இவ் வழி நாடு காண்பான் வருதலும் இறைவன் கண்டே
  • செவ் வழிபாடர் ஆகிச் சிலைத் தொழில் சிறுவர் கற்ப
  • மை வழி நெடுங் கணாளைத் தந்தனன் மதலை என்றான்
   
1759.
  • தான் உழந்து உற்ற எல்லாம்
  • தம்பியை உணரக் கூறித்
  • தேன் உழந்து அரற்றும் தாரான்
  • குரவரைச் சிந்தித்தாற்கு
  • வான் இழிந்தாங்குக் கண்ணீர்
  • மார்பகம் நனைப்பக் கையால்
  • ஊன் உமிழ்ந்து இலங்கும் வேலான்
  • ஒற்றி மற்று இதனைச் சொன்னான்
   
1760.
  • திண் பொருள் எய்தலாகும் தெவ்வரைச் செகுக்கல் ஆகும்
  • நண்பொடு பெண்டிர் மக்கள் யாவையும் நண்ணல் ஆகும்
  • ஒண் பொருள் ஆவது ஐயா உடன் பிறப்பு ஆக்கல் ஆகா
  • எம்பியை ஈங்குப் பெற்றேன் என் எனக்கு அரியது என்றான்
   
1761.
  • தேனில் பால் எனச் செல்வன் தம்பியோடு
  • ஆனியம் பல கழிய ஆயிடை
  • வேனில் குன்று எனத் தோழர் வெந்து மெய்
  • ஊனின் நைகின்றார் செய்வது உன்னினார்
   
1762.
  • நாடுமின் இனி நாங்கள் செய்வது என்று
  • ஈடினால் இருந்து எண்ணி நால்வரும்
  • ஆடும் மஞ்ஞை அம் சாயல் தத்தை மெய்
  • வாடல் ஒன்றிலள் வஞ்சம் ஆம் கொலோ
   
1763.
  • கள்ளம் உண்டு எனில் காண்டும் நாம் என
  • மௌள எய்தினார் வினவக் கூறினாள்
  • வள்ளற்கு உற்றதும் மறைந்த வண்ணமும்
  • வெள்ளி வெண் மலை வேந்தன் பாவையே
   
1764.
  • மற்று அவள் சொல்லக் கேட்ட மைந்தர்கள்
  • இற்ற தம் உயிர் இயல்பின் பேர்த்து அவண்
  • பெற்ற மாந்தரின் பெரிது மெய் குளிர்ந்து
  • அற்றம் அன்மையின் அவலம் நீங்கினார்
   
1765.
  • திருவின் சாயல் தன் சீறடிச் சிலம்பு
  • உருவக் குஞ்சிவாய் உறுத்தி ஒய் என
  • உருகும் உள்ளத்தின் உடம்பு வீங்கினார்
  • பருகு காதலின் பாடி ஆடினார்
   
1766.
  • பைத்து அரவத் திரை சிந்திய பல்கதிர்
  • மொய்த்து எரி நித்திலம் வைத்த அன பல்லினள்
  • இத் திருவின் உருவம் தொழுதார் தமது
  • எத்துயரும் கெடும் என்று இன சொன்னார்
   
1767.
  • ஐயனை யாம் அவண் எய்துவம் ஆயிழை
  • நொய்தின் உரை பொருள் உண்டு எனின் நொய்து என
  • மை எழுத்து ஊசியின் மாண்டது ஓர் தோட்டிடைக்
  • கை வளர் கோதை கரந்து எழுத்திட்டாள்
   
1768.
  • ஆங்கு உருக்கார் அரக்கு இட்டு அதன் மீ மிசைப்
  • பூங் குழையால் பொறி ஒற்றுபு நீட்டத்
  • தேம் குழலாள் தொழுதாள் திசை செல்க எனப்
  • பாங்கர் அங்குப் படர்குற்றனர் அன்றே
   
1769.
  • வேந்து இரியக் கணை வித்திய வெம் சிலைக்
  • காய்ந்து இரிக்கும் புருவக் கருங் கண்ணியர்
  • ஆய்ந்து அரிக்கும் நறவம் மலர் மாலையை
  • வேய்ந்து அரிக்கும் மிஞிறு ஆர்ப்ப விடுத்தாள்
   
1770.
  • அலங்கு வெண்மதி ஐப்பசி அடைய அப்பகலே
  • நிலம் கொண்டு ஓங்கின நிரம்பின புகர் சுழி உடைய
  • உலம்பி முன் இருதாள்களும் உமிழ்வன போல்வ
  • விலங்கு பாய்வன விடுகணை விலக்குவ கலிமா
   
1771.
  • அள்ளல் சேறு அருமணல் புனல் அருவரைப் படினும்
  • உள்ளம் போல் செல்வ உரன் அசைவு இல்லன அமருள்
  • கொள்ளி மண்டிலம் போல் கொடிபடத் திரிந்திடுவ
  • வெள்ளி மால் வரைத் தாழ்வதில் மேம்படப் பிறந்த
   
1772.
  • ஈர் ஐஞ் ஞூற்றினை இருபதின் முரணிய தொகைய
  • வீரர் ஏறின விளங்கு ஒளிப் பக்கரை அமைந்த
  • தாரும் புட்டிலும் அரற்றுவ சாமரை அணிந்த
  • ஓரும் கூடின மள்ளரும் ஒலித்து எழுந்தனரே
   
1773.
  • வடித்த போத்தொடு வன் செலல் அத்திரி
  • கடுத்த ஒட்டகம் கால் செல்வ யாவையும்
  • நொடிப்பின் மாத்திரை நூற்று வில் ஏகுவ
  • எடுத்த பண்டம் இயைந்து உடன் என்பவே
   
1774.
  • ஞாலம் விற்பன பைங்கிளி நல் நிறத்து
  • ஆலும் மா பவளக் குளம்பு ஆர்ந்தன
  • காலின் நொய்யன கண் வெளவு காட்சிய
  • நால்கு பண்ணினர் நால்வரும் ஏறினார்
   
1775.
  • நாளும் புள்ளும் நயத்தகு நல் நிலைக்
  • கோளும் ஓரையும் கொண்ட நிமித்தமும்
  • ஆளும் மாந்தரின் ஆய்ந்து கொண்டு ஆயிடைத்
  • தாளின் ஊக்குபு சாத்தொடு எழுந்தவே
   
1776.
  • பறையும் சங்கும் பரந்து ஒலித்து ஆர்த்து எழ
  • உறை கொள் வாளினோடு ஒண் சுடர்வேல் மினச்
  • சிறை அழிந்தது ஓர் செம்புனல் போன்று அவண்
  • அறை கடல் படை ஆர்ப்பொடு எழுந்தவே
   
1777.
  • காய்த்த செந்நெலின் தாழ் கதிர் நெற்றி மேல்
  • பூத்த முல்லையின் போது பொழிந்து உக
  • நீத்த நீர் வயல் அன்னமும் நாரையும்
  • ஏத்தல் சால் முருடு ஆர்ப்ப இரிந்தவே
   
1778.
  • அளகு சேவலொடு ஆடி அம் காய்க்குலை
  • மிளகு வார் கொடி ஊசல் விருப்பு உறூஉம்
  • சுளகு வார் செவித் தூங்குகைக் குஞ்சரம்
  • இளகு காடு இளகப் பரி கொண்டவே
   
1779.
  • மருவி மாதவர் பள்ளியுள் விட்டதே
  • அருவிக் குன்றமும் ஐவனச் சாரலும்
  • குருவி ஆர்த்து எழு கொய் புனக் கானமும்
  • திருவில் தீர்ந்தவர் தேயமும் தேர்ந்து போய்
   
1780.
  • வண்டு துயில் கொண்டு குயில் ஆலி மயில் அகவி
  • விண்டு மது விட்டு விரி போது பல பொதுளிக்
  • கொண்டு தளிர் வேய்ந்து சினை தாழ்ந்து நனை ஆர்ந்து ஒன்று
  • உண்டு பொழில் இமையவர்கள் உலகம் உறுவதுவே
   
1781.
  • காவி கழுநீர் குவளை ஆம்பல் கடிக் கமலம்
  • தூவி மட நாரை துணை அன்னம் பயில் முது மீன்
  • மேவி உறை வண்டினொடு மல்கி விழைதகைய
  • வாவியொடு காவின் இடை மாந்தர் பதி கொண்டார்
   
1782.
  • ஐயர் உறை பள்ளி இடம் ஆண்டு அழகர் காணச்
  • செய் கழலர் தாரர் அவர் எங்கும் திரிகின்றார்
  • கொய்தகைய பூம் பொதும்பர்க் குளிரும் மரப் பலகை
  • செய்யவளின் சிறிது மிகை சேயவளைக் கண்டார்
   
1783.
  • அந் நுண் துகில் கல் அரத்தம் அல்குல் அது வருத்தச்
  • செந் நுண் துகில் உத்தரியம் புதைந்து சுவல் வருத்த
  • மைந் நுண் குழல் சிறுவன் மனம் வருத்த வடி வேல் கண்
  • கைந் நொண்டன கவற்சி நனி வருத்தக் கலுழ்ந்து ஆற்றாள்
   
1784.
  • மாசொடு மிடைந்து மணி நூற்று அனைய ஐம்பால்
  • பூசுதலும் இன்றிப் பிணி கொண்டு புறம் தாழ
  • வாச மலர் மறைந்த வழி வாமன் அடிக்கு ஏற்றித்
  • தோசமறத் துதிகள் மனத்து ஓதித் தொழுது இருந்தாள்
   
1785.
  • சிந்திப்பல் என் சிறுவன் திறம் இனி என்று எழில் நெடுங்கண்
  • வந்து பனி வார்ந்து முலைக் கலிங்கம் அது நனைப்ப
  • அந்தில் இருந்தாள் அவளுக்கு அடைந்து மனம் நடுங்கி
  • வந்தித்து இருந்தார் மகிழ்ந்து காதல் மிக மாதோ
   
1786.
  • வரை உடுத்த பள்ளி இடமாக அதில் மேயோள்
  • விரை உடுத்த போது உறையும் வேல் நெடுங் கணாள்கொல்
  • உரை உடுத்த நாவுறையும் ஒள் நுதல்கொல் அன்றித்
  • திரை உடுத்த தேமொழிகொல் என்று தெரிகல்லார்
   
1787.
  • மங்கலம் மடிந்த திரு மா மகளை ஒப்பீர்
  • இங்கு வரவு என்னை குலம் யாது அடிகட்கு என்ன
  • எம் குலமும் எம் வரவும் வேண்டில் எளிது அன்றே
  • நும் குலமும் நும் வரவும் நீர் உரைமின் என்றாள்
   
1788.
  • மோட்டு முது நீர் மலங்கு மொய்த்த இள வாளை
  • பூட்டு சிலை இறவினொடு பெருது துயில் மடியும்
  • ஈட்டம் உடையவர்கள் உறை இராசபுரம் என்னும்
  • நாட்டம் உடை நகரம் எமது ஆகும் உறை பதியே
   
1789.
  • பொன் உடைய மார்பின் புகழ் மந்திரி பொலந்தார்
  • தன்னுடைய நுண் உணர்வின் சாகரற்குத் தக்காள்
  • கொன் நெடிய வாள் கண் குருதத்தை சீதத்தன்
  • மன் நடுங்க வீங்கு திரள் தோள் மடங்கல் அன்னான்
   
1790.
  • அளப்பு அரிய நான்மறையினான்
  • அசலன் என்பான்
  • திளைக்கும் திரு ஒப்பு உடைய
  • திலோத்தமை தன் சிறுவன்
  • விளைத்து இரும்பு மேய்ந்து
  • ஒழிந்த மிச்சில் வரை மார்பன்
  • இளைப்பல் இவன் தேசு உரைப்பின்
  • புத்திசேன் இவ் விருந்தான்
   
1791.
  • செட்டி தனபாலன் மனையாள் சினவு வாள் கண்
  • பட்டம் நுதல் மின்னின் நகு பவித்திரைக்குத் தோன்றி
  • மட்டு மலர் மார்பின் மத யானை எயிறு உழுதாங்கு
  • இட்டகுறி தார் திவளப் பதுமுகன் இவ் விருந்தோன்
   
1792.
  • பொன் நகருள் வேந்தன் பெயரால் பொறியும் பெற்றான்
  • வில் மரிய தோள் விசய தத்தன் உயிர்க் கவசம்
  • பின் அரிய கற்பினவள் பிரீதிமதி காதல்
  • தன் மகனென் யான் அடிகள் தேவதத்தன் என்பேன்
   
1793.
  • எங்கள் வினையால் இறைவன் வீடிய அஞ் ஞான்றே
  • எங்கள் உயிர் நம்பியொடு யாங்கள் பிறந்தேம் ஆக
  • எங்கள் தமர் நம்பிக்கு இவர் தோழர் என ஈந்தார்
  • எங்கெழில் என் ஞாயிறு என இன்னணம் வளர்ந்தேம்
   
1794.
  • யாண்டு நிறைந்து ஏகிய பின் நந்தன் அவற்கு இளையார்
  • மாண்ட குணத்தார் நபுல விபுலரொடு மன்னும்
  • ஈண்ட வளர்ந்தேம் ஏந்து தவிசின் உச்சி மிசை எய்தித்
  • தீண்ட அரிய வெம்மையொடு திக் கயங்கள் எனவே
   
1795.
  • வில் தொழிலும் வாள் தொழிலும் வீணை பொரு தொழிலும்
  • மல் தொழிலும் தேர்த் தொழிலும் வாரணத்தின் தொழிலும்
  • நல் தொழில வாசியொடு நன் கலைகள் நீந்திக்
  • கற்றனங்கள் யாமும் உடன் கற்பனகள் எல்லாம்
   
1796.
  • வெம் சிலையின் வேடர் தொறு மீட்டு விசும்பு ஏகும்
  • விஞ்சை அரையன் மகளை வீணை பொருது எய்திக்
  • குஞ்சரமும் வென்று குண மாலை நலன் உண்ட
  • நம்பி அவன் நாமம் எவன் என்னின் இது ஆமே
   
1797.
  • கந்துக் கடன் என்ற நகர்க்கு ஆதி முது நாய்கன்
  • முந்திப் பெறப்பட்ட மகன் மூரிச் சிலைத் தடக்கைச்
  • சிந்திப்பவர் அவலம் அறு சீவகன் என் தோழன்
  • அந்தில் ஒருநாள் அவனை அரசன் ஒரு தவற்றால்
   
1798.
  • தொடிகள் தவழ் வீங்கு திரள் தோள் இறுக யாத்துக்
  • கடிகள் தவழ் குழல் மகளிர் கசிந்து மனம் கரியக்
  • கொடிகள் தவழ் மாட நகர்க் கொல்ல என மாழ்கி
  • இடிகள் தவழ்ந்திட்ட பட நாகம் என வீழ்ந்தாள்
   
1799.
  • மாதவப் பெருமை வண்ணம் மா நகர் நம்பிக்கு உற்ற
  • ஏதத்தைக் கேட்டலோடும் இருகணும் பிறந்து மாழ்கிக்
  • காதல் தம் மகனுக்கு உற்ற நவை எனக் கலங்கி வீழ்ந்தார்
  • ஆதலால் நங்கை யாரே அருள் பெரிது உடையர் என்றார்
   
1800.
  • மாழ்குபு மயங்கி வீழ்ந்த மாபெருந் தேவி தன்னை
  • ஆழ் துயர் அவித்தற்கு ஒத்த அரும் பெறல் யோகம் நாடிக்
  • காழ் பரிந்து அரைத்த சாந்தின் களிதரு நீரில் தேற்ற
  • யாழ் புரை கிளவி ஆற்றாள் மயங்கி வீழ்ந்து அரற்று கின்றாள்
   
1801.
  • கைம் மாண் கடல் படையுள் காவலனை ஆண்டு ஒழியப்
  • பொய்ம்மா மயில் ஊர்ந்து போகிப் புறங்காட்டுள்
  • விம்மாந்து யான் வீழ வீழ்ந்தேன் துணை ஆகி
  • எம்மானே தோன்றினாய் என்னை ஒளித்தியோ
   
1802.
  • கையார் இலங்கு எஃகின் கந்துக் கடன் கொடு போய்
  • மொய்யார் உவகையனாய் முற்றிழைக்குத் தான் கொடுப்ப
  • நையாள் வளர்த்த சுநந்தை நவை உற என்
  • ஐயா என் ஐயா என் ஐயா அகன்றனையே
   
1803.
  • மின் நிரைத்த பைம் பூண் விளங்கு இலை வேல் வேந்தன்
  • முன் உரைத்த மூன்று கனவும் புணையாக
  • என் உயிரைத் தாங்கி இருந்தேன் வலி ஆகாது
  • என் அரசே என்பூசல் கேளாது இறந்தனையே
   
1804.
  • கோ அ மாவாகிக் குடியோம்பி நின் குடைக்கீழ்ப்
  • பாவமே செய்தேன் பரிவு எலாம் நீங்கினால்
  • போ அம்மா என்று உரைப்பப் போவேன் முன் போயினாய்
  • ஆ அம்மா அம்மா என் அம்மா அகன்றனையே
   
1805.
  • கோமான் மகனே குரு குலத்தார் போர் ஏறே
  • ஏமாங் கதத்தார் இறைவா என் இன் உயிரே
  • காமா கடலுள் கலம் கவிழ்த்தேன் கண்ணுள் நீர்
  • பூ மாண் புனைதாராய் நோக்காது போதியோ
   
1806.
  • கந்தார் களியானைக் காவலனார் கான் முளையை
  • வந்தார் வாய்த் தீது இன்மை கேட்டு மறைந்திருந்து
  • நொந்தேன் பலகாலும் நோயோடே வீகின்றேன்
  • அந்தோ அறனே மற்று ஆற்றேனால் ஆற்றேனால்
   
1807.
  • முன் ஒருகால் என் மகனைக் கண்டேன் என் கண் குளிரப்
  • பின் ஒருகால் காணப் பிழைத்தது என் தேவிர்காள்
  • என் ஒப்பார் பெண் மகளிர் இவ் உலகில் தோன்றற்க என்று
  • அன்னப் பெடை நடையாள் ஆய் மயில் போல் வீழ்ந்தனளே
   
1808.
  • புண் மல்கு மத்தகத்த போர் வேழம் பொற்பு அழித்த
  • மண் மல்கு தாரான் பெருமாட்டி வாய் மொழி கேட்டு
  • உள் மல்கு நெஞ்சினராய் ஒய் எனவே வெய்துயிராக்
  • கண் மல்கு நீரார் முக முகங்கள் நோக்கினரே
   
1809.
  • கண்டீர் கருமம் விளைந்த ஆறு என்றாராய்
  • வண் தாரார் வண்கடகம் மின்னத் தம் கைம் மறித்துக்
  • கொண்டாம் கடல் வேலி கீழ் மகனைக் கூற்றம் ஆய்
  • உண்டாம் உயிர் என்று உவப்பு எழுந்து ஆடினரே
   
1810.
  • வீழ்ந்து மயில் போல் விசயை கிடந்தாளைத்
  • தாழ்ந்து பல தட்பம் தாம் செய்ய ஏல் பெற்றுப்
  • போழ்ந்து அகன்ற கண்ணாள் புலம்பா எழுந்திருப்பச்
  • சூழ்ந்து தொழுது இறைஞ்சிச் சொன்னார் அவன் திறமே
   
1811.
  • கொலைக்களம் குறுகலும் கொண்டு ஓர் தெய்வதம்
  • நிலைக்களம் இது என நீக்க நீங்கினான்
  • இலக்கண மடப்பிடி இயைந்து ஓர் போதகம்
  • மலைக்கணத்து இடை மகிழ்ந்து அனைய மைந்தனே
   
1812.
  • பூ உடைத் தெரியலான் போர்வை நீத்து இனிக்
  • கோவுடைப் பெருமகன் ஆதல் கொண்டனம்
  • சேவடி சேர்ந்தனம் தொழுது சென்று என
  • மாவடு நோக்கி உள் மகிழ்ந்து கூறினாள்
   
1813.
  • தரணி காவலன் சச்சந்தன் என்பவன்
  • பரணி நாள் பிறந்தான் பகை யாவையும்
  • அரண் இலான் என்கண் தங்கிய அன்பினால்
  • இரணியன் பட்டது எம் இறை எய்தினான்
   
1814.
  • விசயை என்று உலகோடிய வீறு இலேன்
  • பசையினால் துஞ்சி யான் பட்ட தீது எலாம்
  • இசைய நம்பிக்கு எடுத்து உரைத்து என் உழை
  • அசைவின்று ஐயனைத் தம்மின் எனச் சொன்னாள்
   
1815.
  • கோதை வேல் நம்பிக்கு அல்லதை இப் பொருள்
  • யாதும் கூறன்மின் யாரையும் தேறன்மின்
  • ஏதம் இன்னன இன்னணம் எய்தலால்
  • பேதை யாரொடும் பெண்ணொடும் பேசன்மின்
   
1816.
  • பகைவர் உள்ளமும் பாம்பின் படர்ச்சியும்
  • வகை கொள் மேகலை மங்கையர் நெஞ்சமும்
  • மிகை செல் மேகத்து மின்னும் செந் நில்லலா
  • புகை செய் வேலினீர் போற்றுபு சென்மினே
   
1817.
  • வணக்க அருஞ் சிலையினானை
  • ஒரு மதி எல்லை நாளுள்
  • குணத்தொடு மலிந்த பாதம்
  • குறுக யாம் கொணர்ந்த பின்றைப்
  • பணித்ததே செய்து பற்றார்
  • பகை முதல் அடர்த்தும் என்றார்
  • மணிக் கொடி மாசு உண்ட அன்னாள்
  • மற்றதே துணிமின் என்றாள்
   
1818.
  • பொறி தவ நெருங்க நோற்றுப்
  • புகர் அற நிறைந்த கொள்கைச்
  • செறி தவ விசயை பாதம்
  • சென்னியின் வணங்கி மீண்டு
  • வெறி கமழ் சோலை நண்ணி
  • வேண்டிய அடிசில் கை தொட்டு
  • எறி படை எழுக என்றார் வளை
  • எழுந்து ஆர்த்த அன்றே
   
1819.
  • பைந் துகில் மகளிர் தேன் சோர் பவளவாய் திகழ நாணிச்
  • சிந்தித்துக் கூந்தல் வாங்கிச் செவ்வணம் துடைப்பதே போல்
  • இந்திர கோபம் கௌவி இறகு உளர்கின்ற மஞ்ஞை
  • அந்தரத்து இவர்ந்த பாய் மா அரும் பொன்தார் அரவத் தாலே
   
1820.
  • சாந்தின் மேல் தொடுத்த தீம் தேன் தண் மதிக்கோடு போழப்
  • போந்து மட்டு அருவி வீழும் பொன் நெடுங் குன்றும் அம் தண்
  • ஏந்து பூங் காவு சூழ்ந்த இரும்புனல் ஆறும் நீந்தி
  • மாந்தரே மலிந்த நாடு மடுத்து உடன் சென்றது அன்றே
   
1821.
  • மதுக் குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப்
  • புதுக் கலத்து எழுந்த தீம் பால் பொங்கலின் நுரையின் பொங்கிக் கதிர்த்து வெண் மாடம் தோன்றும் செவ்வையில் காதம் நான்கின்
  • நதிக்கரை வந்து விட்டார் நச்சு எயிற்று அரவோடு ஒப்பார்
   
1822.
  • மான் அயாம் நேக்கியர் மருங்குல் போல்வது ஓர்
  • கான யாற்று அடைகரைக் கதிர்கண் போழ்கலாத்
  • தேன் அயாம் பூம்பொழில் திண்ணை வெண்மணல்
  • தானையாம் நால்வரும் தணப்பின்று எய்தினார்
   
1823.
  • வார்ந்து தேன் துளித்து மட்டு உயிர்த்து வார் மணல்
  • ஆர்ந்து போது அருந் தவிசு அடுத்தது ஒத்து மேல்
  • தூர்ந்து தேன் வண்டொடு துதைந்து உள் புக்கவர்
  • போந்து போக்கு அரியது அப் பொழிலின் பெற்றியே
   
1824.
  • தாது அணி கொழு நிழல் இருந்து தண்மதுப்
  • போது அணி அலங்கல் தாழ் பொரு இல் மார்பனை
  • யாது நாம் அடை திறம் உரைமின் நீர் எனக்
  • காதலால் பதுமுகன் கண்டு கூறினான்
   
1825.
  • திருக் கிளர் மன்னவன் சேனை மாநகர்
  • பொருக்கு ஒளி இன நிரை கோடும் கொண்ட பின்
  • முருக்கு ஒளி மலர் அடி மூரி மொய்ம்பனைச்
  • செருக் களத்து எதிர்ப்படச் சிதைவது இல்லையே
   
1826.
  • சேண் குலாம் சிலையொடு திளைத்த பின் அவர்
  • வாள் கலாம் வலித்து அமர் தொடங்கின் வல்லையே
  • மீட்கலாம் விருப்பு உடைத்து எழுக என்று தன்
  • ஆட்கு எலாம் செப்பினன் அலர்ந்த தாரினான்
   
1827.
  • இருங் கடல் மணிநிரை எய்தி நாம் கொண்டபின்
  • அருங் கடி அணி நகர் ஐயன் அங்கு இல்லையேல்
  • பெரும்படை தான் வரின் பின்றி நீங்கின் பழி
  • தரும் படித்து அன்றியும் சாற்றுவல் கேண்மினோ
   
1828.
  • மஞ்சு சூழ் விசும்பு இடை மணந்து மின் மிளிர்வ போல்
  • வஞ்சம் இல் மறவர் வாள் மிளிர்ந்து பாய் குருதியுள்
  • குஞ்சரம் குளிப்பது ஓர் நீத்தமாம் ஆதலால்
  • எஞ்சல் இல் கொள்கையீர் எண்ணிச் சூழ்மின்களே
   
1829.
  • என்றனன் புத்திசேன் என்னும் நான் மறையினான்
  • நன்று அதே பொருள் என நால்வரும் இருந்துழி
  • ஒன்றி முன் விடுத்தவர் மூவர் ஒற்று ஆட்கள் வந்து
  • இன்று இதால் பட்டது என்று இயம்பு கின்றார்களே
   
1830.
  • வளைய சுந்தரம் எனும் வாரண மால் வரை
  • முளை இளந் திங்கள் போல் முத்து உடைக் கோட்டது
  • கிளை இளம் பிடிகள் ஐந் நூற்று இடைக் கேழ் அரக்கு
  • அளைய அஞ்சன வரை அனையது அக்களிறு அரோ
   
1831.
  • கடுமதக் களிப்பினால் கார் என முழங்கலின்
  • விடுகலார் பாகரும் வெருவரக் கொன்றிடப்
  • பிடியொடும் கந்து அணைவு இன்றி நீர் உருள் பிளந்து
  • அடுகளிறு அந்தப் போதிகை பரிந்து அழன்றதே
   
1832.
  • கண் உமிழ் தீயினால் சுட நிறம் கரிந்த போல்
  • பண் உமிழ் வண்டு உலாய்ப் பரத்தரா நின்ற சீர்
  • அண்ணல் அம் களிற்றினை அடக்கினான் சீவகன்
  • வண்ண மேகலையினார் மனம் எனப் படிந்ததே
   
1833.
  • இறு வரை இவர்வது ஓர் இலங்கு எயிற்று அரி என
  • உறு வரை மார்பினான் தூசம் கொண்டு ஒய் எனப்
  • பெறல் அருங் குஞ்சரம் ஏறலின் பெருஞ் சனம்
  • அறை கடல் திரை ஒலித்து ஆங்கு என ஆர்த்ததே
   
1834.
  • அங் கை அம் தலத்தினால் அப்புது ஆது ஐ எனக்
  • கொங்கு அலர் கண்ணியான் கொம்மை தான் கொட்டலும்
  • பொங்கிய உவகையில் பொலிந்து மாக் களிறு அவன்
  • தங்கிய பயிர்த் தொழில் தடக்கையால் செய்ததே
   
1835.
  • கொட்டை அம் புரோசைதான் இருவடம் கொண்டு உடன்
  • கட்டினான் கருவலித் தடக் கையால் தோட்டியும்
  • இட்டனன் இரண்டுடன் இமிழ்க் கொளீஇ இலங்கு பொன்
  • பட்டமும் பனிவரை மின் எனக் கட்டினான்
   
1836.
  • கச்சையும் வீக்கினன் கறங்கு இரு மணி அணிந்து
  • அச்சுறு கொழுந் தொடர் யாப்பு அழித்து அடி இணை
  • உச்சியும் புரோசையுள் குளிப்ப உய்த்து உறுவலி
  • மெச்சி மேல் வேந்தனும் விழைதகத் தோன்றினான்
   
1837.
  • கோல் தொடிப் புரிசையுள் கொற்றவன் நின்று ஐயன்
  • ஏற்று இயல் காண்டும் நாம் இவண் தருக என்னவே
  • காற்று எனக் கடல் எனக் கருவரை உரும் எனக்
  • கூற்று எனக் குஞ்சரம் கொண்டு புக்கான் அரோ
   
1838.
  • குழவி அம் செல்வன் ஓர் குன்று கொண்டு ஒய் என
  • அழகிதாப் பறப்பதே போலவும் ஆர் புயல்
  • மழையை ஊர்ந்து ஓடும் ஓர் வானவன் போலவும்
  • எழுதல் ஆகா வணம் இருந்தனன் என்பவே
   
1839.
  • வனை கலத் திகிரியும் வாழ் உயிர் மேல் செலும்
  • கனை கடுங் கதழ் பரிக் கால சக்கரமும் போல்
  • வினை தகு வட்டமும் வீதியும் பத்தியும்
  • இனையவை ஏமுற இமைப்பினின் இயற்றினான்
   
1840.
  • ஒருவனே களிறும் ஒன்று ஓர் நூறு ஆயிரம்
  • திரிவவே போன்றன திசை எலாம் குஞ்சரக்கு
  • உரியவன் இவன் அலால் உலகினில் இலன் என
  • அரிதுணர் வேத்து அவை அமைக மற்று என்றதே
   
1841.
  • வள் உகிர் நுதியினால் வரி நுதல் உறுத்தலும்
  • உள் உணர் குஞ்சரம் ஒய் என நிற்றலும்
  • எள் அரும் இரு மணி கிணின் என இசைத்தன
  • வெள்ள நீர்ப் பெருஞ் சனம் வியந்து கை விதிர்த்ததே
   
1842.
  • என் மனம் நின் மனம் என்று இரண்டு இல்லையால்
  • தன் மனத்து உள பொருள் தான் தனக்கு உரைப்பது ஒத்து
  • உன் மனம் என் மனம் என்பது ஒத்து இழைத்ததால்
  • நன் மனக் குஞ்சர நம்பியோடு என்மரும்
   
1843.
  • தேவனே மகன் அலன் செல்வன் மற்று என்மரும்
  • பாவையே நோற்றனள் பாரின் மேல் என்மரும்
  • கோவனும் மக்களும் குளிர்ந்து தோள் நோக்கினார்
  • ஓ என வையகத்து ஓசை போய் உயர்ந்ததே
   
1844.
  • பிண்டம் உண்ணும் பெருங் களிறு பூட்டி அவண்
  • வண்டரும் ஓவரும் பாட மா நகர் தொழக்
  • கொண்ட தன் தம்பியும் தானும் கோயில் புகக்
  • கண்டனம் கண்ணினே என்று கண்டவர் சொனார்
   
1845.
  • பாத்தில் சீர்ப் பதுமுகன் படிவ ஒற்றாளர் சொற்கு
  • ஓத்து எனக் கொடுத்தனன் கொழுநிதி உவகையில்
  • தூத்திரள் சுறா இனம் தொக்க போல் மறவரும்
  • ஏத்த அருஞ் சிலை கை வாள் இலங்கு வேல் ஏந்தினார்
   
1846.
  • வேல் நிரை வாள் மதில் பிளந்து வெம் சமத்து இடைத்
  • தேன் நிரை களிற்றின் மேல் திண் குளம்பு அழுத்துவ
  • ஆன் நிரை வளைப்பது ஓர் பொருள் எனச் சிரித்து உடன்
  • மா நிரை பண்ணினார் வடித்த நூல் கேள்வியார்
   
1847.
  • விடை உடை இன நிரை விழுங்கல் மேயினார்
  • துடியொடு சிறுபறை துவைத்த வால் வளை
  • முடி உலகு உற நிமிர்ந்து ஆர்த்த மொய் கழல்
  • அடுபடை இளையரும் அரணம் வீசினார்
   
1848.
  • காந்தள் அம் கடி மலர்க் கண்ணி நெற்றியர்
  • ஆய்ந்து அளந்து இயற்றிய அத்து உண் ஆடையர்
  • வேய்ந்துணி அலமரும் புறத்தர் வெம் சுடர்
  • ஏந்து எழில் நவியமும் ஏந்து தோளினார்
   
1849.
  • கோன் உடை இன நிரை காக்கும் கோவலர்
  • தேனொடு கடிச் சுரும்பு அரற்றும் தே மலர்க்
  • கான் இடை இன நிரை காவல் போற்றுமின்
  • ஆன் இடை அழித்த புள் என்று கூறினார்
   
1850.
  • விடு பொறி அரவு என விளங்கு வெம் சிலை
  • அடு கணை சிதறினார் ஆர்த்த வால் வளை
  • கடுகின கால் இயல் இவுளி காண்டலும்
  • முடுகுபு கோவலர் முந்து கால் பெய்தார்
   
1851.
  • அளைச் செறி இரும் புலி அனைய ஆடவர்
  • வளைத்தனர் மணி நிரை வன் கண் ஆயரும்
  • விளைத்தனர் வெருவரத் தக்க வெம் சொலால்
  • உளைத்தனர் பூசல் விட்டு உணர்த்த ஓடினார்
   
1852.
  • தேர்த் தொகைத் தானை மன்னன்
  • சீவகற்கு இளைய நம்பி
  • வார்த் தொகை முழவம் விம்ம
  • மல் உறழ் தோளினானை
  • நீர்த் தொகைக் கழனி நாடு
  • நெடு நகர்ப் பெயரும் நுங்கள்
  • சீர்த் தொகைக் குலனும் எல்லாம்
  • தெரிந்து எமக்கு உரைமோ என்றான்
   
1853.
  • திருக்குறிப்பு அன்னது ஆயின் செப்புவல் அடிகள் செம் பொன்
  • அரித்து அசும்பு ஒழுகு குன்றத்து அருவியின் வெரீஇய மஞ்ஞை
  • பரித்தவை பழன நாரைப் பார்ப்பொடு மருதில் சேக்கும்
  • உரைத்தகு நாடும் ஊரும் குலத்துடன் உணர என்றான்
   
1854.
  • பொரு கயல் உகளிப் பாயப் பூஞ் சிறைக் குமரி அன்னம்
  • குருகினோடு இரியச் செந் நெல் கொழுங் கதிர் குவளை எற்ற
  • முருகு விண்டு இரியத் தீம் தேன் முழங்கு நீர்க் கழனி நல் நாடு
  • எரி உமிழ்ந்து இலங்கும் வேலோய் ஏமமாங்கதம் அது என்றான்
   
1855.
  • பூந் துகில் கொடுத்த தீம் தேன் அகில் புகை பொன் அனார்தம்
  • கூந்தலில் குளித்த வண்டு கொப்புளித்து இட்ட வாசம்
  • மாந்தர் மேல் தவழ்ந்து மாடம் இருள் படப் புதையும் செல்வத்து
  • ஏந்து பொன் இஞ்சி மூதூர் இராசமாபுரம் அது என்றான்
   
1856.
  • எம் குலம் அடிகள் கேட்க
  • என்றலும் எழுந்த ஓர் பூசல்
  • பொங்கு உளைப் புரவி வெள்ளம்
  • போக்கு அற வளைத்து முற்றி
  • இங்கு உள நிரையை எல்லாம்
  • கவர்ந்தது என்று இட்ட போழ்தே
  • திங்கள் வெண் குடையினான் தன்
  • திருச் செவிக்கு இசைத்தது அன்றே
   
1857.
  • எரித் திறல் வென்றி வேந்தற்கு
  • இற்றென இசைப்பச் சீறி
  • மருப்புறக் கந்து பாய்ந்து
  • முழங்கும் மால் களிறு போலத்
  • திருக் கிளர் மணி செய் பொன் தூண்
  • தீப்படப் புடைத்துச் செங் கண்
  • உருத்து எரி தவழ நோக்கி
  • உடல் சினம் கடவச் சொன்னான்
   
1858.
  • நால் கடல் பரப்பும் வந்து
  • நல் நகர்க் கண் உற்று என்ன
  • வேல் கடல் தானை பாய் மா
  • விளங்கு ஒளி இவுளித் திண் தேர்
  • கூற்று என முழங்கும் ஓடைக்
  • குஞ்சரக் குழாத்தோடு ஏகிப்
  • பால் கடல் பரப்பின் வல்லே
  • படுநிரை பெயர்க்க என்றான்
   
1859.
  • கண் அகன் கடல் அம் கோடும் பறைகளும் முழங்கி விம்ம
  • விண் அகத்து இயங்கும் மேகக் குழாம் என நிரைத்த வேழம்
  • திண் நுகப் புரவித் திண் தேர் விரைந்தன நிரந்த பாய்மா
  • மண்ணகம் மலிரக் காலாள் கடல் கிளர்ந்து எழுந்தது அன்றே
   
1860.
  • பால் நிறக் கவரி நெற்றிப் பசுங்கிளி நிறத்த பாய்மாத்
  • தான் உறப் பண்ணித் திண்தேர்த் தம்பி கோல் கொள்ள ஏறிக்
  • கூன் நிறக் குழவித் திங்கள் குளிர் கதிர் ஆர மார்பில்
  • தேன் நிறம் கொண்ட கண்ணிச் சீவக குமரன் சொன்னான்
   
1861.
  • மன்னவன் நிரை கொண்டாரை வளநகர்த் தந்து மன்னன்
  • பொன் அவிர் கழலில் தங்கள் புனை முடி இடுவியேனேல்
  • இன்னிசை உலகம் தன்னுள் என் பெயர் சேறல் இன்றாய்க்
  • கன்னிய மகளிர் நெஞ்சில் காமம் போல் கரக்க என்றான்
   
1862.
  • பார் மலி பரவைத் தானைப் பரப்பிடைப் பறப்பதே போல்
  • நீர் மலி கடாத்த கொண்மூ நெற்றிமேல் மின்னின் நொய்தாத்
  • தார் மலி மார்பன் திண் தேர் தோன்றலும் தறு கண் மைந்தன்
  • சீர் மலி பகழி ஏந்திப் பதுமுகன் சிலை தொட்டானே
   
1863.
  • குடை நிழல் கொற்ற வேந்தன் ஒரு மகன் காணக் குன்றா
  • அடி நிழல் உறைய வந்தேம் அடியம் யாம் என்ன எய்த
  • விடுகணை சென்று தேர் மேல் பின் முனா வீழ்த லோடும்
  • தொடு கழல் குருசில் நோக்கித் தூத்துகில் வீசினானே
   
1864.
  • ஏந்தலைத் தோழர் எல்லாம் இணை அடி தொழுது வீழச்
  • சேந்தன கண்ணினாலும் திண் எழில் தோளினாலும்
  • வாய்ந்த இன் சொல்லினாலும் மாலை தாழ் முடியினாலும்
  • ஆய்ந்தவன் சிறப்புச் செய்தான் அவல நோய் அவரும் தீர்ந்தார்
   
1865.
  • கழல் அவாய்க் கிடந்த நோன் தாள்
  • காளை தன் காதலாரை
  • நிழல் அவாய் இறைஞ்சி நீங்கா
  • நெடுங் களிற்று எருத்தம் மேல் ஏற்றி
  • அழல் அவாய்க் கிடந்த வைவேல்
  • அரச இளங் குமரர் சூழக்
  • குழல் அவாய்க் கிடந்த கோதை
  • தாதையூர் கொண்டு புக்கான்
   
1866.
  • வான் நக்கி நின்று நுடங்கும் கொடி மாட மூதூர்ப்
  • பால் நக்க தீம் சொல் பவளம் புரை பாவை அன்ன
  • மான் நக்க நோக்கின் மடவார் தொழ மைந்தர் ஏத்த
  • யானைக் குழாத்தின் இழிந்தார் அரிமானொடு ஒப்பார்
   
1867.
  • செம் பொன் புளகத்து இள ஞாயிறு செற்ற கோயில்
  • வம்பில் துளும்பு முலை வாள் நெடுங் கண் மடவார்
  • நம்பப் புகுந்து நரதேவன் அருளின் எய்திப்
  • பைம் பொன் புளகக் களிற்றான் அடி தாம் பணிந்தார்
   
1868.
  • வல்லான் புனைந்த வயிரக் குழை வார்ந்து வான் பொன்
  • பல் பூண் எருத்தில் பரந்த அம் சுடர் கால மன்னன்
  • மல்லார் திரள் தோள் மருமான் முகம் நோக்க மைந்தர்
  • எல்லாம் அடிகள் எனக்கு இன் உயிர்த் தோழர் என்றான்
   
1869.
  • வார் பொன் முடிமேல் வயிரம் உழச் சேந்த செல்வத்து
  • ஆர் பொன் அடி சூழ் மணி அம் கழல் ஆனை வேந்தன்
  • கார் மின் நுடங்கும் இடை மங்கையைக் காண்க சென்று என்று
  • ஏர் மின்னு தாரான் அருளத் தொழுது ஏகினாரே
   
1870.
  • தழு முற்றும் வாராத் திரள் தாமங்கள் தாழ்ந்த கோயில்
  • முழு முற்றும் தானே விளக்காய் மணிக் கொம்பின் நின்றாள்
  • எழு முற்றும் தோளார் தொழுதார் இன்னர் என்று நோக்கக்
  • கழுமிற்றுக் காதல் கதிர் வெள்வளைத் தோளினாட்கே
   
1871.
  • துறக்கம் இதுவே எனும் தொல் நகர் மன்னன் மங்கை
  • தொறுக் கொண்ட கள்வர் இவரோ எனச் சொல்லி நக்கு ஆங்கு
  • ஒறுக்கப் படுவார் இவர் என்று அங்கு அசதி யாடி
  • வெறுக்கைக் கிழவன் மகள் என்ன விருந்து செய்தாள்
   
1872.
  • அருந் தீத் தொழிலே புரிந்தான் மறை ஆய எல்லாம்
  • விருந்தா விரிப்பான் அவன் சீவகசாமி வேறா
  • இருந்தாற்கு ஓர் ஓலை கொடுத்தான் எரி குண்டலத்தால்
  • பொருந்தார் பொறியைப் புறம் நீக்குபு நோக்கு கின்றான்
   
1873.
  • மற்று அடிகள் கண்டு அருளிச் செய்க மலரடிக் கீழ்ச்
  • சிற்றடிச்சி தத்தை அடி வீழ்ச்சி திருவடிகட்கு
  • உற்ற அடிசில் மஞ்சனத்தை உள் உறுத்த காப்பும்
  • பொற்புடைய ஆக எனப் போற்றி அடி வீழ்ந்தேன்
   
1874.
  • வயிர மணிக் கலன் கமழும் கற்பக நல் மாலை
  • உயிரை மதம் செய்யும் மதுத் தண்டொடு உடையாடை
  • செயிரில் நறுஞ் சாந்து சிலை அம்பு மணி அயில் வாள்
  • மயிர் எலியின் போர்வையொடு எம் மன்னன் விடுத்தானே
   
1875.
  • வந்தவனை யாரும் அறியாமல் மறையாகத்
  • தந்து தரன் கேட்ப இது சாமி வலித்தானா
  • ஐந்து மதி எல்லையினை ஆண்டு உடையன் ஆகி
  • அம் தில் அகன்றான் தமரொடு ஆங்கண் எனச் சொன்னேன்
   
1876.
  • பட்ட பழி வெள்ளி மலை மேல் பரத்தல் அஞ்சித்
  • தொட்டு விடுத்தேன் அவனைத் தூது பிற சொல்லிப்
  • பட்ட பழி காத்துப் புகழே பரப்பின் அல்லால்
  • விட்டு அலர்ந்த கோதை அவரால் விளைவது உண்டோ
   
1877.
  • அல்லதுவும் எங்கை குணமாலை அவள் ஆற்றாள்
  • செல்லும் மதி நோக்கிப் பகலே சிறியை என்னும்
  • பல் கதிரை நோக்கி மதியே பெரியை என்னும்
  • எல்லி இது காலை இது என்பது அறிகல்லாள்
   
1878.
  • அரவு வெகுண்ட அன்ன அகல் அல்குல் நிலம் புல்லித்
  • திருவில் வளைந்தனைய திரு மேகலையின் நீங்கிப்
  • புருவ மதி முகமும் புகழ் தோளும் புணர் முலையும்
  • உருவம் அழிந்து அடிச்சி உளள் ஆம் கொல் உணர்கலனே
   
1879.
  • நாளை வரும் நையல் என நன்று என விரும்பி
  • நாளை எனும் நாள் அணிமைத்தோ பெரிதும் சேய்த்தோ
  • நாளை உரை என்று கிளியோடு நகச் சொல்லும்
  • நாளினும் இந் நங்கை துயர் நாளினும் அற்று இதுவே
   
1880.
  • நோக்கவே தளிர்த்து நோக்காது இமைப்பினும் நுணுகும் நல்லார்
  • பூக் கமழ் அமளிச் சேக்கும் மது மணவாளனார் தாம்
  • நீப்பு இலார் நெஞ்சின் உள்ளார் ஆதலான் இனைத்தல் செய்யேன்
  • போக்குவல் பொழுதும் தாம் தம் பொன்னடி போற்றி என்றாள்
   
1881.
  • இலவம் பூ அரக்கு உண்டு அன்ன பஞ்சி மெல் அடியினாள் தன்
  • புலவிச் சொல் பொறித்த ஓலை திரு முடி துளக்கி நோக்கித்
  • தலை வைத்த காப்பு விஞ்சை கொண்ட பின் தாமம் சூழ்ந்து
  • கொலை வைத்த குருதி வேலான் தோழரைக் குறுகினானே
   
1882.
  • எம் கோ மற்று என் திறம் நீர் கேட்டது என்றாற்கு எரி மணிப் பூண்
  • செங்கோல் மணி நெடுந் தேர்ச் செல்வன் காதல் பெருந் தேவி
  • தங்காத் தவ உருவம் தாங்கித் தண்டாரணியத்துள்
  • அங்காத்து இருந்தாளைத் தலைப்பட்டு ஐய அறிந்தோமே
   
1883.
  • என்னே மற்று என்னே நீர் மொழிந்தது என்னே என விரும்பி
  • முன்னே மொழிந்தால் போல் முறை நின்று எல்லாம் உடன் மொழிய
  • மன் ஆரம் சிந்துவ போல் மலர்ந்த செந்தாமரைக் கண்ணீர்
  • பொன் ஆர மார்பின் மேல் பொழியப் புன்கண் உற்றானே
   
1884.
  • அஃதே அடிகளும் உளரோ என்றாற்கு அருளுமாறு
  • இஃதா இருந்தவாறு என்றார்க்கு என்னைப் பெற வல்லார்க்கு
  • எய்தா இடர் உளவே எங்கு எங்கு என்று அத் திசை நோக்கி
  • வெய்தா அடி தொழுது வேந்தன் கோயிற்கு எழுந்தானே
   
1885.
  • இலை விரவு பூம் பைந்தார் வேந்தன் ஏந்தல் குலம் கேட்பான்
  • மலை விரவு நீள் மார்பின் மைந்தன் தோழர் முகம் நோக்கிக்
  • கொலை விரவு கூர் நுதி வேல் குமரன் என்னக் குருகுலத்தான்
  • கலை விரவு தீம் சொல்லார் காமன் என்றார் கமழ் தாரார்
   
1886.
  • அண்ணல் குருகுலத்தான் என்றால் யான் முன் கருதியது என்
  • எண்ணம் வெளிப்பட்டான் கரந்த மைந்தன் எரி செம் பொன்
  • வண்ண வரை மார்பம் முயங்கி நுண் நூல் மதியாரோடு
  • எண்ணி விய நெறியால் விடுத்தான் கோயில் புக்கானே
   
1887.
  • விள்ளா வியன் நெடுந் தேர் வேந்தன் காதல் மட மகளே
  • கள் ஆவி கொப்புளிக்கும் கமழ் பூங் கோதாய் என் மனத்தின்
  • உள் ஆவி உள்ளாய் நீ ஒழிந்தாய் அல்லை எனக் கையில்
  • புள் ஆவிச் செங் கழுநீர்க் குவளை செய்தாள் புனை பூணாள்
   
1888.
  • வார் முயங்கு மெல் முலைய
  • வளை வேய்த் தோளாள் மனம் மகிழ
  • நீர் முயங்கு கண் குளிர்ப்பப் புல்லி
  • நீள் தோள் அவன் நீங்கித்
  • தேர் முயங்கு தானையான்
  • சிறுவர் சேடார் அகல் மார்பம்
  • தார் முயங்கிக் கூந்தல் மா
  • இவர்ந்தான் சங்கம் முரன்றவே