அறவுரை
 
2743.
  • இலங்கு குங்கும மார்பன் ஏந்து சீர்
  • நலம் கொள் சாரணர் நாதன் கோயிலை
  • வலம் கொண்டு ஆய் மலர்ப் பிண்டி மா நிழல்
  • கலந்த கல் மிசைக் கண்டு வாழ்த்தினான்
   
2744.
  • உரிமை தன்னொடும் வலம் கொண்டு ஓங்கு சீர்த்
  • திருமகன் பணிந்து இருப்பச் செய்தவர்
  • இரு நிலம் மனற்கு இன்பமே எனப்
  • பெரு நிலம் மனன் பெரிதும் வாழ்த்தினான்
   
2745.
  • தெருளலேன் செய்த தீவினை எனும்
  • இருள் விலங்க நின்று எரியும் நீள் சுடர்
  • அருளுமின் எனக்கு அடிகள் என்றனன்
  • மருள் விலங்கிய மன்னர் மன்னனே
   
2746.
  • பால் கடல் பனி மதி பரவைத் தீம் கதிர்
  • மேல் பட மிக நனி சொரிவது ஒப்பவே
  • நூல் கடன் மாதவன் நுனித்த நல் அறம்
  • கோல் கடன் மன்னனுக்கு உரைக்கும் என்பவே
   
2747.
  • தேன் நெய் தோய்ந்தன தீவிய திருமணி அனைய
  • வானின் உய்ப்பன வரகதி தருவன மதியோர்
  • ஏனை யாவரும் அமுது எனப் பருகுவ புகல்வ
  • மானம் இல் உயர் மணி வண்ணன் நுவலிய வலித்தான்
   
2748.
  • அருமையின் எய்தும் யாக்கையும் யாக்கையது அழிவும்
  • திரு மெய் நீங்கிய துன்பமும் தெளி பொருள் துணிவும்
  • குருமை எய்திய குண நிலை கொடை பெறு பயனும்
  • பெருமை வீட்டொடும் பேசுவல் கேள் இது பெரியோய்