துறவு வலி உறுத்தல்
 
2982.
  • கொல் உலைப் பொங்கு அழல் கிடந்த கூர் இலை
  • மல்லல் வேல் இரண்டு ஒரு மதியுள் வைத்த போல்
  • செல்ல நீண்டு அகன்று அகம் சிவந்த கண்ணினார்
  • அல்லல் உற்று அழுபவர்க்கு அரசன் சொல்லினான்
   
2983.
  • நல் தவம் பரவை ஞாலம் நாம் உடன் நிறுப்பின் வையம்
  • அற்றம் இல் தவத்திற்கு என்றும் ஐயவி அனைத்தும் ஆற்றாது
  • இற்று என உணர்ந்து நிற்பின் திருமகள் என்றும் நீங்காள்
  • பற்றொடே நிற்பின் என்றும் திருமகள் பற்றல் செல்லாள்
   
2984.
  • உப்பு இலிப் புழுக்கல் காட்டுள் புலை மகன் உகுப்ப ஏகக்
  • கைப் பலி உண்டியானும் வெள்ளில் மேல் கவிழ நீரும்
  • மைப் பொலி கண்ணின் நீரால் மனை அகம் மெழுகி வாழ
  • இப் பொருள் வேண்டுகின்றீர் இதனை நீர் கேண்மின் என்றான்
   
2985.
  • கொல் சின யானை பார்க்கும் கூர் உகிர்த் தறுகண் ஆளி
  • இல் எலி பார்த்து நோக்கி இறப்பின் கீழ் இருத்தல் உண்டே
  • பல் வினை வெள்ளம் நீந்திப் பகா இன்பம் பருகின் அல்லால்
  • நல்வினை விளையுள் என்னும் நஞ்சினுள் குளித்தல் உண்டே
   
2986.
  • ஆற்றிய மக்கள் என்னும் அருங் தவம் இலார்கள் ஆகின்
  • போற்றிய மணியும் பொன்னும் பின் செலா பொன் அனீரே
  • வேற்றுவர் என்று நில்லா விழுப் பொருள் பரவை ஞாலம்
  • நோற்பவர்க்கு உரிய ஆகும் நோன்மின் நீரும் என்றான்
   
2987.
  • காதல் அம் சேற்றுள் பாய்ந்த மதி எனும் கலங்கல் நீரை
  • ஊது வண்டு உடுத்த தாரான் உவர்ப்பினின் உரிஞ்சித் தேற்ற
  • மாதரார் நெஞ்சம் தேறி மாதவம் செய்தும் என்றார்
  • காதலான் காதல் என்னும் நிகளத்தால் நெடுங் கணாரே
   
2988.
  • தூமம் சால் கோதை யீரே தொல் வினை நீத்தம் நீந்தி
  • நாமம் சால் கதியின் நீங்கி நன் பொன் மேல் உலகின் உச்சி
  • ஏமம் சால் இன்பம் வேண்டின் என்னொடும் வம்மின் என்றான்
  • காமம் சாய்த்து அடர்த்து வென்ற காஞ்சனக் குன்றம் அன்னான்
   
2989.
  • நாடகம் நயந்து காண்பார் நலம் கிளர் கண்கள் சூன்றும்
  • ஆடகக் கலத்துள் ஆன் பால் அமிர்தினை நயந்து உண்பாரை
  • நீடு அகம் வெகுண்டும் கையால் பிடித்து நீறு அட்டி இட்டேம்
  • கோடகம் அணிந்த கோல முடியினாய் துறத்தும் என்றார்
   
2990.
  • சாந்தம் கிழிய முயங்கித் தட மலரால்
  • கூந்தல் வழிபட்ட கோவே நீ செல் உலகில்
  • வாய்ந்து அடியேம் வந்து உன் வழிபடும் நாள் இன்றே போல்
  • காய்ந்து அருளல் கண்டாய் எனத் தொழுதார் காரிகையார்