சமவ சரண வருணனை
 
2999.
  • நரம்பு எழுந்து இரங்கின வீணை நன் குழல்
  • பரந்து பண் உயிர்த்தன பைய மெல்லவே
  • விருந்து பட்டு இயம்பின முழவம் வீங்கு ஒலி
  • சுரந்தன சுடர் மணிப் பாண்டில் என்பவே
   
3000.
  • மங்குலாய் அகில் புகை மணந்து கற்பகப்
  • பொங்கு பூ மாலைகள் பொலிந்து பூஞ்சுணம்
  • தங்கி இத் தரணியும் விசும்பும் தாமரோ
  • செங் கதிர்த் திருமணிச் செப்புப் போன்றவே
   
3001.
  • திலக முக் குடைச் செல்வன் திருநகர்
  • பலரும் ஏத்தினர் பாடினர் ஆடினர்
  • குலவு பல்லியம் கூடிக் குழுமி நின்று
  • உலக வெள்ளம் ஒலிப்பது போன்றவே
   
3002.
  • கான் நிரைத்தன காவொடு பூம் பொய்கை
  • தேன் நிரைத்தன செம் பொன் நெடு மதில்
  • மேல் நிரைத்தன வெண் கொடி அக் கொடி
  • வான் உரிப்பன போன்று மணந்தவே
   
3003.
  • கோலம் முற்றிய கோடு உயர் தூபையும்
  • சூலம் நெற்றிய கோபுரத் தோற்றமும்
  • ஞாலம் முற்றிய பொன் வரை நன்று அரோ
  • காலம் உற்று உடன் கண் உற்ற போன்றவே
   
3004.
  • வாயில் தோரணம் கற்பக மாலை தாழ்ந்து
  • ஏயிற்று இந்திரன் பொன் நகரின் புறம்
  • போயிற்றே அகிலின் புகை போர்த்து உராய்
  • ஞாயிற்று ஒள் ஒளி நைய நடந்ததுவே
   
3005.
  • செய்ய தாமரைப் பூவினுள் தேம் கமழ்
  • பொய் இல் சீர்த்தி வெண் தாமரை பூத்த போன்று
  • ஐயம் செய்து அடு பால் நிறப் புள் இனம்
  • மை இல் தாமரை மத்தகம் சேர்ந்தவே
   
3006.
  • மல்லன் மாக் கடல் அன்ன கிடங்கு அணிந்து
  • ஒல் என் சும்மைய புள் ஒலித்து ஓங்கிய
  • செல்வ நீர்த் திருக் கோயில் இம் மண்மிசை
  • இல்லையேல் துறக்கம் இனிது என்பவே
   
3007.
  • விளங்கு ஒளி விசும்பு அறுத்து இழிந்து மின்னு தார்த்
  • துளங்கு ஒளி மணி வணன் தொழுது துன்னினான்
  • வளம் கெழு மணிவரை நெற்றிப் பால் கடல்
  • இளங் கதிர்ப் பருதி ஒத்து இறைவன் தோன்றினான்
   
3008.
  • வினை உதிர்த்தவர் வடிவு இன்னது என்னவே
  • வனை கதிர்த் தடக்கை வைத்து இருந்த வாமனார்
  • கனை கதிர்த் திருமுகம் அருக்கன் ஆக வான்
  • புனை மலர்த் தாமரை பூத்தது ஒத்தவே
   
3009.
  • இரிந்தன இருவினை இலிர்த்த மெய்ம் மயிர்
  • சொரிந்தன கண் பனி துதித்துக் காதலால்
  • அரிந்தது மணி மிடறு அலர் பெய்ம் மாரி தூஉய்த்
  • திரிந்தனன் வல முறை திலக மன்னனே
   
3010.
  • முத்து ஒளிர் தாமமும் உருவ மாமணித்
  • தொத்து ஒளிர் தாமமும் சொரி பொன் தாமமும்
  • தத்து நீர்த் தண் கடல் பவழத் தாமமும்
  • வைத்த பூந் தாமமும் மலிந்து தாழ்ந்தவே
   
3011.
  • மணி வரை எறி திரை மணந்து சூழ்ந்த போல்
  • அணி மயிர்க் கவரிகள் அமரர் ஏந்தினார்
  • துணி மணி முக்குடை சொரிந்த தீம் கதிர்
  • பணி மணிக் கார் இருள் பருகு கின்றதே
   
3012.
  • முழாத் திரள் மொய்ம் மலர்த் தாமம் தாழ்ந்து மேல்
  • வழாத் திரு மலர் எலாம் மலர்ந்து வண்டு இனம்
  • குழாத்தொடும் இறை கொளக் குனிந்து கூய்க் குயில்
  • விழாக் கொள விரிந்தது வீரன் பிண்டியே
   
3013.
  • பிண்டியின் கொழு நிழல் பிறவி நோய் கெட
  • விண்டு அலர் கனை கதிர் வீரன் தோன்றினான்
  • உண்டு இவண் அற அமிர்து உண்மினோ எனக்
  • கொண்டன கோடணை கொற்ற முற்றமே
   
3014.
  • வானவர் மலர் மழை சொரிய மன்னிய
  • ஊன் இவர் பிறவியை ஒழிக்கும் உத்தமன்
  • தேன் இமிர் தாமரை திளைக்கும் சேவடி
  • கோன் அமர்ந்து ஏத்திய குறுகினான் அரோ
   
3015.
  • குரு குலம் சீவக குமரன் கோத்திரம்
  • அருகல் இல் காசிபம் அடிகள் வாழி என்று
  • எரி மணி முடி நிலம் உறுத்தி ஏத்தினான்
  • புரி மணி வீணைகள் புலம்ப என்பவே
   
3016.
  • மன்னவன் துறவு எனத் துறத்தல் மாண்பு எனப்
  • பொன் வரை வாய் திறந்த ஆங்குப் புங்கவன்
  • இன் உரை எயிறு வில் உமிழ வீழ்ந்தது
  • மின்னி ஓர் வியன் மழை முழங்கிற்று ஒத்ததே