|
இதுவுமது |
14. |
எனதெனச்
சிந்தித்த லான்மற்
றிவ்வுடம் பின்பத்துக் காமேற்
றினைப்பெய்த புன்கத்தைப் போலச்
சிறியவு மூத்தவு மாகி
நுனைய புழுக்குலந் தம்மா
னுகரவும் வாழவும் பட்ட
வினைய வுடம்பினைப் பாவி
யானென தென்னலு மாமே. |
(இ
- ள்.) பாவி-தீவினையாளனே!; எனது எனச் சிந்தித்தலால்
- என்னுடையது என்று யான் உரிமை கொண்டாடுதற்
கிடனாயிருத்தலாலே; இவ்வுடம்பு இன்பத்துக்கு ஆமேல் - இந்த
உடம்பு யான் இன்புறுதற்குரியதாகும் என்பாயாயின்; இஃது
உன்னுடையதாதல் தான் எங்ஙனம்? ; தினைப்பெய்த புன்கத்தைப்
போல - தினையரிசி பெய்து சமைக்கப்பட்ட சோறு போன்று; சிறியவும்
மூத்தவும் ஆகி - உருவத்தாற் சிறியனவும் பெரியனவுமாய்; நுனைய -
கூர்த்த வாயினையுடையனவாகிய; புழுக்குலந் தம்மால் - புழுக்
கூட்டங்களாலே; நுகரவும் வாழவும் பட்ட - தம்முடையதாகவே
கொண்டு உண்ணவும் உறையுளாகக் கொண்டு வாழவும் படுகின்ற;
இனைய உடம்பினை - இத் தன்மையான இந்த உடம்பினை; யான்
எனது என்னல் ஆமோ - யான் என்றாதல் என்னுடையது என்றாதல்
கூறுதல் கூடுமோ? கூடாதுகாண் என்பதாம்.
(வி
- ம்) தினையரிசியாலாய
சோறு உடலிலுண்டாகும் சிறியவும்
பெரியவும் ஆகிய புழுக்களுக்குவமை. புன்கம் - சோறு.
இதனை,
நன்னான் வருபத நோக்கிக் குறவர்
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
முத்துவிளை யாணர் நாட்புதி துண்மார்
மரையான் கறந்த துரைகொ டீம்பால்
மான்றடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கே ழிரும்புடை கழாஅ தேற்றிச்
சாந்த விறகி னுவித்த புன்கம் --புறநானூறு, 168
எனவரும் செய்யுளினும்
காண்க.
இந்த வுடலை யாம் எனதென்று கொள்வேம், இதன்கண்
வாழுகின்ற புழுக்குவங்களும் தமதாகவே கொண்டு இதனை உண்டு
இதனிடத்தேயே வாழ்கின்றன, ஆதலால் இத்தகைய வுடம்பினை
யான் எனது யாம் உரிமை கோடல் பேதைமையேயாம் என்றவாறு.
இன்னும்,
சடமீது கிருமிப்பை நானென்றன்
மலமோ
டிடர்மேவு புண்ணோ டெழக்கண்ட துண்டே
யுடன்மீதிவ் வுடல்போலு திக்கின்று புழுவைத்
திடமான மகவென்று சீராட லென்னே
எனவும்,
ஊறுதுய ருஞ்சுகமு முற்றனுப விக்கும்
பேறுபெறு தன்னுடலு மாவிபிரி யுங்காற்
கூறுசிறு புன்னெழு குடம்பையென வப்பால்
வேறுபடு மென்னிலினி மெய்யுறவு யாதே
எனவும் வரும் மெய்ஞ்ஞான
விளக்கச் செய்யுள்களும்
நினையற்பாலவாம். (14)
|