திரு.பொ.வே.சோமசுந்தரனார் உரை

       இதுவுமது
19. வேரிக் கமழ்தா ரரசன்விடு
   கென்ற போழ்தும்
தாரித்த லாகா வகையாற்கொலை
   சூழ்ந்த பின்னும்
பூரித்தல் வாடுதலென் றிவற்றாற்பொலி
   வின்றிநின்றான்
பாரித்த தெல்லாம் வினையின்பய
   னென்ன வல்லான்.

    (இ - ள்.) வேரி கமழ் தார் அரசன் - மணங்கமழ்கின்ற மலர்
மாலையணிந்த மன்னவன்; விடுக என்ற போழ்தும் - சிறைவீடு செய்க
என்று கட்டனையிட்ட காலத்தும்; தாரித்தல் ஆகா வகையால் -
இவன்பால் எழுந்த சீற்றம் பொறுக்கலாகாமையாலே; கொலை சூழ்ந்த
பின்னும் - கொலை செய்யும்படி கட்டளையிட்ட பின்னரும்; பூரித்தல்
வாடுதல் என்று இவற்றால் - உவகையாலே தோன்றும் பூரிப்பாகிய
மெய்ப்பாட்டினாலாதல் அல்லது துன்புற்று வாடுதல் என்னும்
மெய்ப்பாட்டினாலாதல்; பொலிவு இன்றி - தன் உடம்பின்கண்
யாதொரு தோற்றமும் காணப்படுதலின்றி; நின்றான் - அமைதியாக
நின்றனன், அஃதெற்றாலெனின்; பாரித்ததெல்லாம் - தனக்கு
நுகர்ச்சியாக விரிந்து வருகின்ற நிகழ்ச்சிகள் எல்லாம்; வினையின்
பயன் என்ன வல்லான் - தான் முன் செய்த பழவினையின்
பயன்களே யன்றிப் பிறவில்லை என்னும் மெய்யுணர்வினால்
வன்மையுடையோன் ஆகலின் என்பதாம்.

     (வி - ம்.) இதனால் குறிக்கப் படுகின்ற மெய்யுணர்வாளன் யார்
என்றும் அவன் சிறைப்படுதற்கும் சிறையீடு பெறுதற்கும் பின்னர்க்
கொலை செய்க என்று மன்னன் கட்டளை யிடுதற்கும் உற்ற வரலாறு
சிறிதும் அறிகின்றிலேம். இதனால் குண்டலகேசி என்னும்
பெருங்காப்பியத்தில் இன்னோரன்ன வரலாறுகள் இருந்தன என்று
மட்டும் அறிகின்றோம்.

     இனி இச் செய்யுளால் ஒரு மன்னன் ஒருவனைச் சிறைப்பிடித்து
ஒருகால் சிறைவீடு செய்க என்றும் பின்னும் (அமைச்சர் முதலியோர்
அறிவுரை கேட்டமையாற் போலும்) கொன்று விடுக! என்றும்
கட்டளையிட்டான் என்றும்; இதற்கு ஆளாகியவன் தன் மெய்யுணர்வு
காரணமாகச் சிறைவீடு செய்க என்றபோது மகிழாமலும் கொலை
செய்க என்றபோது வருந்தாமலும் அமைதியுடனிருந்தான்
என்றுணருகின்றோம். இச் செய்யுள் இராமகாதையுள் தயரதன்
இராமனை அழைத்து இனி நீ இவ்வரசாட்சியை ஏற்றுக் கொள்க
என்று வேண்டிய பொழுது,

     “தாமரைக் கண்ணன்
      காதலுற்றிலன் இகழ்ந்திலன்”     --கம்ப - மந்திர - 70


எனவரும் கம்பநாடர் மொழியும்; யசோதர காவியத்துள் மாரிதத்தன்
என்னும் மன்னவன் மாரி என்னுந் தெய்வத்திற்குப் பலியிடுதற்குப்
பிடித்து வந்த அபயருசி அபயமதி என்னும் அண்ணனும் தங்கையும்
தம்மைப் பலியிடப் போதலறிந்தும் அமைதியுடனிருத்தல் கண்டு
அவ்விளந் துறவியை நோக்கி அவ்வேந்தன்:

       “இடுக்கண் வந்துறவு மெண்ணா
        தெரிசுடர் விளக்கி னென்கொல்?
        நடுக்கமொன் றின்றி தம்பால்
        நகுபொருள் கூறுகென்ன,”


அது கேட்ட அவ்விளந்துறவி, வேந்தே!

   
  “அடுக்குவ தடுக்கு மானால் அஞ்சுதல் பயனின் றென்றே
      நடுக்கம தின்றி நின்றாம் நல்லறத் தெளிவு சென்றாம்”


என விடை யிறுத்தமையும் நம்நினைவிற்கு வருகின்றன.

இன்னும்,


   “இடுக்கண்வந் துற்ற காலை யெரிகின்ற விளக்குப் போல
    நடுக்கமொன் றானு மின்றி நகுகதா நக்க போழ்தவ்
    விடுக்கணை யரியு மெஃகா மிருந்தழுதி யாவ ருய்ந்தார்
    வடுப்படுத் தென்னை யாண்மை வருபவந் துறுங்க ளன்றே”


எனவரும் சீவகசிந்தாமணியும் (509),

       
“பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
        சொரியினும் போகா தம,”             --குறள், 76

எனவும்,

      
 “நன்றாங்கா னல்லவாக் கண்பவ ரன்றாங்கா
        லல்லற் படுவ தெவன்”               --குறள், 329


எனவும் வரும் திருக்குறள்களும் ஈண்டு நினையற் பாலனவாம்.   (19)