2. குண்டலகேசி வாதச் சருக்கம்

150.

கொல்லை முல்லைபைங் கோங்கு
     குருந்தங் கோடறண் குரவ
நல்ல மல்லிகை நறவம்
     ஞாழல் தாழைபுன் னாகம்
பல்லி தழ்ப்பனிக் குவளை
     பானல் பாதிரி பிறவு
மெல்லை யின்மல ரேந்தி
     யிறைவன திடவகைக் கெழுந்தாள்.

151.

நீட்சி யோக்கமோ டகல
     நினையநின் றெங்கணு நோக்கி
மாட்சி யால்வலங் கொண்டு
     மாதவத் திறைவனிற் பிழையாக்
காட்சி யேனெனி லெல்லாக்
     கதவமுந் திறக்கெனத் திறப்ப
வாட்சி மூவுல குடைய
     வடிகட மடியிணை தொழுதாள்.

152.

அத்தி யாளியோ டாமா
     னட்ட மங்கல மரிய
பத்தி பாவைபல் பறவை
     பயில்கொடி திமிசொடு பிறவும்
வித்த கம்பெரி துடைய
     விசித்திர வுருவநன் மலராற்
சித்த நன்னெறி பயந்தான்
     திருவடிக்கு அருச்சனை செய்தாள்.

153.

தூமஞ் சாந்தொடு சுண்ணந்
     துதியொடு பரவுபு தொழுதே
தாமந் தாழ்தர நாற்றித்
     தத்துவ தரிசிய துருவே
யாமென றையென லியந்தாங்
     கன்ன வாயிரத் தோரெண்
ணாம நல்லிசை தொடுத்து
     நாதகீ தங்களை நவிற்றும்.


(இதுமுதல் எட்டுச் செய்யுள் ஒரு தொடர்)

154.

கன்று காலனைக் கடந்தாய்
     காதற் காமனைக் கடிந்தாய்
தொன்று மூத்தலைத் துறந்தாய்
     தோற்ற மாக்கட லிறந்தா
யொன்ற நோய்பகை யொருங்கே
     யுடைந்து வெங்களத் துதிர
வென்றி ருந்தனை நீயே
     வீரர்தம் வீரர்க்கும் வீரா.

155.

சாத னோய்சரை பிறவி
     தாஞ்செய் தீவினைக் கடலுண்
மாது யருழந் துறுநோய்
     மறுகு மன்னுயிர்க் கெல்லாந்
தீதி னன்னெறி பயந்து
     திரைசெய் நீள்கரை யொருவிப்
போத ரும்புணை படைத்தாய்
     புலவர்தம் புலவர்க்கும் புலவா.

156.

அரிய வாயின செய்திட்
     டமரர் துந்துபி யறைந்து
புரிய பூமழை பொழியப்
     பொன்னெயில மண்டிலம் புதைந்த
விரிகொ டண்டளிர்ப் பிண்டி
     மரநிழ லிருந்திரு வினையும்
பிரியும் பெற்றியை யுரைத்தாய்
     பெரியவர்ப் பெரியவர்ப் பெரியாய்.

157.

பொங்கு சாமரை யேந்திப்
     புடைபுடை யியக்கர்நின் றிரட்டச்
சிங்க வாசனத் திருந்து
     தெளிந்தொளி மண்டில நிழற்றத்
திங்கண் முக்குடை கவிப்பத்
     தேவர்தந் திருந்தவை தெருள
வங்க பூவம தறைந்தா
     யறிவர்தம் மறிவர்க்கு மறிவா.

158.

ஊறி யாவது முணரா
     யுறல்வகை யிதுவென வுரைத்தி
கூறு வேனெனக் கூறாய்
     குரன்முர சனையதோர் குணத்தை
சேற லுள்ளமு மில்லையாய்த்
     திருமலர் மிசையடி யிடுதி
தேறு மாறென்னை நின்னைத்
     தேவர்தந் தேவர்க்குந் தேவா.

159.

கண்ணி னாலொன்றும் காணாய்
     காணவு முளபொரு ளொருங்கே
பெண்ணு மல்லவுஞ் சாராய்
     பிரிதலில் பேரின்ப முடையை
யுண்ணல் யாவது மிலையா
     யொளிதிக ழுருவமஃ துனதா
லெண்ணில் யார்நினை யுணர்வா
     ரிறைவர்தம் மிறைவர்க்கு மிறைவா.

160.

சொற்றி யாவதுங் கேளாய்
     சுதநயந் துணிவுமங் குரைத்தி
கற்றி யாவது மிலையாய்க்
     கடையில்பல் பொருளுணர் வுடையை
பற்றி யாவது மிலையாய்ப்
     பரந்தவெண் செல்வமு முடையை
முற்ற யார்நினை யுணாவார்
     முனைவர்தம் முனைவர்க்கு முனைவா.

161.

அன்மை யாரவர் தாந்தா
     மறிந்தன வுரைத்த பொய்யாக்கி
நின்மெ யாகிய ஞான
     நிகழ்ச்சி நீவிரித் துரைத்த
சொன்மை யாரிடை தெரிந்தார்
     தொடர்வினை முழுவதுஞ் சுடுநின்
றன்மை யார்பிற ரறிவார்
     தலைவர்தம் தலைவர்க்குந் தலைவா.

162.

ஆதி யந்தளப் பரிய
     அருகந்த பகவர்த மறஞ்சால்
சேதி யம்புக்க வர்தந்
     திருந்தடி களைப்பெருந் துதிசேர்
போதி யிற்பணிந் திருந்தாள்
     புன்னெறி தாம்பல வவற்றுள்
யாதுகொ றான்மு னென்னா
     லடர்க்கற் பாலது வென்றாள்.

வேறு

163.

ஊன்றின்ற லிழுக்கென்னா
     னுயிரினையு முளதென்னா
னோன்றலையு நோன்பென்னா
     னோக்குடைய கணிகையரே
போன்றிருந்து பொதியறுக்கும்
     புத்தன்றன் புன்னெறியை
யான்சென்றஃ தடிப்படுப்ப
     னறக்கரும மிதுவென்றாள்.

164.

மண்டலத்தி னோக்குவாள்
     மடுத்ததன தவதியால்
கண்டனடான் காம்பிலிக்
     காவலன் கடைமுகத்தோர்
தண்டழைய பொழில்நாவற்
     சாகைநட் டுரைபெறாக்
குண்டலகே சிப்பெயரைக்
     குறியாக வேகொண்டாள்.

165.

தருமத்திற் றிரிவில்லா
     டயாச்செய்தற் பொருட்டாக
நிருமித்த வகையினதா
     நெடுநகரை வலஞ்செய்து
திருமுத்தப் பீடிகைக்கட்
     சித்தரையுஞ் சிந்தித்தோர்
பெருமுத்தப் பெண்ணுருவங்
     கொண் டியைந்த பெற்றியளாய்.

166.

அந்தரமே யாறாச்சென்
     றழனுதிவே லரசர்கட்
கிந்திரனே போன்றிருந்த
     விறைமகன திடமெய்திக்
கந்திருவ மகளேன் யான்
     காவலனைக் காண்குறுவேன்
வந்திருந்த துரைவிரைந்து
     வாயிலோ யெனச்சொன்னாள்.

167.

கருங்களிறுங் களிமாவுங்
     கந்தோடு பந்தியவே
நெருங்குபுபோய் நீருண்ணா
     தேர்பண்ணா நெடுங்கடைக்குப்
பெரும்படையுஞ் சாராதிப்
     பெண்பாவி மரநட்டிங்
கிருந்ததன் றறத்தினா
     லெனக்கரிது புகலென்றான்.

நீலகேசி குண்டலகேசியை வினாதல்

168.

வாயிலோ னுரைகேட்டு
     வடிக்கண்ணாண் முகநோக்கி
கோயிலையான் புகவிலக்குங்
     குறையென்னை முறைதிருத்தும்
பூசலிங் குடையையோ
     பொருளிழவோ வுயிரிழவோ
நீயிலையார் புதனடற்கு
     நிமித்தமிங் கென்னென்றாள்.


குண்டலகேசி கூற்று

169.

என்கருமம் வினவுதியே
     லிலிங்கியரு ளென்னோடு
நன்குரைப்பார்த் தரல்வேண்டி
     நாவற்கொம் பிதுநட்டே
னுன்கரும நீ செய்வாய்
     நுழைந்தறிவு முடையையேல்
மன்பெரியான் றிருந்தவையுண்
     மாற்றந்தா வெனச்சொன்னாள்.

நீலகேசி கூற்று

170.

அப்படித்தே யெனின்வாயி
     லடைப்பொழிக யானைதே
ரெப்படியு மியங்குகநும்
     மிறைமகற்கு மிசைமினென்
றிப்படியா லிவையுரையா
     விலைநாவ லிறுத்திட்டா
டுப்போடு கனிதொண்டை
     துயில்கொண்ட துவர்வாயாள்.

காம்பிலி மன்னன் செயல்

171.

வேந்தனு மதுகேட்டே விம்முயிர்த்த
                          வுவகையனாய்ப்
பூந்தடங்க ணல்லார் புகுதுக
                            வெனப்புகலும்
போந்திருக்க வெனவிருக்கை பொருந்திய
                            வாறவர்கட்
கீந்துலகத் தியற்கையு மினிதினிற்
                            செய்திருந்தான்.

மன்னன் வேண்டுகோள்

172.

முதலவனோ டவனூலு
     மந்நூலின் முடிபொருளு
நுதலிய பொருணிகழ்வுந்
     நுங்கோளு மெமக்கறியத்
திதலைமா ணல்குலீர்
     தெருட்டுமி னெனச்சொன்னா
னதலையம் பெருங்கதவ
     மடைப்பொழித்திட் டலைவேலான்.

குண்டலகேசி கூற்று

173.

நன்றாக வுரைத்தனைநீ
     நரதேவ நின்னவையுள்
வென்றாக்கோர் விழுப்பொருளும்
     தோற்றார்க்கோர் பெருந்துயரும்
ஓன்றாக வுரையாக்கா
     லுரையேன்யா னெனச்சொன்னாள்
குன்றாத மதிமுகத்துக்
     குண்டலமா கேசியே.

வேந்தன் உடன்பாடும் மகளிர் மகிழ்ச்சியும்

174.

அறத்தகைய வரசனு
     மதுகேட்டாங் கவர்க்குரைப்பான்
சிறப்பயர்வ னன்றாக
     வென்றார்கட் கின்றேயான்
புறப்படுப்பன் றோற்றாரைப்
     பொல்லாங்கு செய்தென்றாற்
கிறப்பவும் பெரிதுவந்தா
     ரிலங்கிழையா ரிருவருமே.

அம் மகளிரிருவரும் சொற்போர் தொடங்குதல்

175.

வேனிரைத்த விரிதானை
     வேத்தவையார் வியப்பெய்தக்
கோனுரைத்த வுரைகேட்டே
     குண்டலமா கேசியுந்
தானுரைத்தாள் தான்வேண்டுந்
     தலைவனூற் பொருணிகழ்ச்சி
தேனிரைத்த கருங்குழலா
     டானும்பின் றெருட்டினாள்.

குண்டலகேசி கூறிய தலைவன்
முதலியவற்றின் இலக்கணம்
(1) தலைவன்

176.

ஆதிதான் பெரியனா
     யறங்கெடு மளவெல்லா
மூதியமே யுணர்ந்தவ
     னுறுதரும மேயுரைத்தான்
யாதனையுந் தான்வேண்டா
     னயலார்க்கே துன்புற்றான்
போதியா னெம்மிறைவன்
     பொருந்தினா ருயக்கொள்வான்.

(2) நூல் (3) பொருள் (4) நிகழ்வு

177.

முந்துரைத்தான் முந்நூலு
     மந்நூலின் முடிபொருடா
மைந்துரைப்பி லுருவுழப்
     பறிவோடு குறிசெய்கை
சிந்தனைகட் செலவோடு
     வரவுமே நிலையில்லை
தந்துரைப்பி ªù¤ரிநுதிபோற்
     றாங்கேடு நிகழ்வென்றாள்.

நீலகேசி குண்டலகேசியின் கூற்றிற்குக்
குற்றங் காட்டத் தொடங்கல்

178.

சொல்லியவந் நான்மைமேற்
     றுணிவினையுந் தான்பெயர்த்து
நல்லவையை மனங்கொளீஇ
     நான்மையின் முதல்வைத்த
வெல்லையில் குணத்தலைவ
     ரிலக்கணமென் றெடுத்ததன்மேற்
பல்வகைய பெருங்குற்றம்
     பதம்பதமாயக் கேளென்றாள்.

179.

முன்னெனப் படுவதுதான்
     முதலில்லாத் தடுமாற்றம்
அன்னதன்கட் பெரியனே
     லறங்கொண்ட தவமாகும்
பின்ன தன்கட் பெரியனேற்
     பிறழ்வெய்துங் காலச்சொ
லென்னென்றான் பெரியவா
     றிருமையினுந் திரிந்தென்றாள்.

180.

பெருமைமுன் பெற்றனனேற்
     பின்னைத்தான் முடிப்பதோர்
கருமமிங் கெவனாகுங்
     காட்டுதியேற் பெற்றிலன்முன்
றருமந்தான் கருதிநீ
     சொன்னாயேற் றலைவரே
யொருமையா லறந்தெளிந்த
     வுழப்புலையர் முதலானார்.

181.

தான்கெடினுந் தக்கார்கே
     டெண்ணற்க வென்பதனை
யூன்கொடுமை யுரைத்தானஃ
     துணர்ந்திலனே யாகாதோ
தான்கெடு மளவெல்லா
     நினைத்துரைத்த தத்துவந்தான்
மான்கடியு நோக்கினாய்
     வழியறக்கெட் டொழிவதோ.

இதுவுமது

182.

வழிவாழக் கெடுகின்றார்
     மாந்தருள் மேலாயார்
பழிபாவ மோராதான்
     பற்றினார்ப் பாழ்செய்வான்
ஒழிபாவி தலைவனென்
     றுரைப்பதனை யுலகத்தார்
கிழியோடு மாறாக்கா
     சென்றான்சொற் கேட்பவோ.

183.

நுனைத்தலைய நுண்மயிரை
     நுனியுறீஇ விதிர்த்திட்டா
லனைத்துணைய தடங்கலு
     மறக்கிடந்த பிறந்துழப்பு
நினைக்குங்காற் பிறர்க்கேயா
     மென்றியா னீயன்னா
யனைத்துணைய பெரும்பாவ
     மவன்செய்தா னாகானோ.

184.

துன்பந்தான் றீவினையின் வழித்தோன்றுந்
                          துன்பேயா
மென்பதனை நுமரேடி யெப்பொழுது
                          முரைப்பவாற்
பின்புந்தான் பிறர்பிறர்க்குப் பிறந்துழப்பே
                          யாக்கினா
லன்பினான் முன்செய்த தருவினையே
                          யாகாதோ.

185.

தனக்கொன்றும் பயனின்றித்
     தளையாளென் றான்வருந்தி
யெனைப்பெருங் குப்பையு
     மெருச்சுமப்பாற் கண்டக்கால்
நினைப்பதொன் றுடைத்தவன்செய்
     நெடும்பாவ நிச்சலும்
மனக்கினிதா வவன்றன்னை
     யாள்வார்மாண் புரையாயோ.

186.

அவ்வகையா லுழக்கின்றா
     னயலார்கள் படுகின்ற
வுய்வகையில் பேரிடரை
     யொழிப்பதன் பொருட்டாக
விவ்வகையா லருள்செய்யு
     மென்பதனை யெடுத்துரைத்தாள்
கொவ்வையந் துவர்ச் செவ்வாய்க்
     குண்டலமா கேசியே.

187.

அருளினாற் பிறர்க்குழக்கு
     மவனென்ற வவ்வுரையைப்
புரளல்நீ பிறப்பொழியும்
     பொழுதின்க ணவ்வருளைப்
பொருளன்மை கண்டானோ
     புற்கலர்தா முலர்ந்தாரோ
தெருளநீ யுரைத்துக்காண்
     டிருந்தவையா ரிடையென்றாள்.

188.

ஊடுபுக் குயிரடுந் துயரந்தா னொழிக்கின்றான்
வீடுபெற் றிறந்தனனேல் விளிகவன
                          தருள்பாவி
யோடுகிற் றிலனொன்றுந் தாதையையே
                          யுழப்பித்தோ
னாடைபற் றெனவுரைத்த வவன்போன்றா
                          னாகாதோ.

189.

அங்கிருவ ருளரன்றோ வறப்போக்கிப்
                          போவாரென்
றிங்கிருந்து நீயுரைத்தா லிவனருள்யார்
                          தெளிகிற்பார்
அங்கிருவ ருளரெனினு மவரின்முன்
                          னவையீரே
நங்கரும முலைப்பித்து நாம்போது
                          மெனநக்காள்.

190.

முன்கொன்றான் றன்றாயை
     முழுமெய்யும் போர்த்திருந்து
தின்கின்றான் பிணம்வீடுந்
     தெருட்டுங்காற் சூனியமே
யென்கின்றா னிவன் போல்வா
     ரிறைவரில் லெனவுரைப்பாய்
தன்கன்று சாக்கறப்பான்
     றயாப்பிறிதிற் குடையவனோ.

இஃது அவையோரை நோக்கிக் கூறியது

191.

கண்ணொடுகா திவையிலள்
     கரந்தன முலையிரண்டு
முன்னும்வா யுதட்டோடு
     மூக்கில ளுறுநோய்த்தி
பெண்ணழகிற் கிவள்பிறராற்
     பேசவும் படுவாளோ
எண்ணுங்கா லென்பேதை
     யெனவுரைக்கு மவனொத்தாள்.

இது புத்தனையும் குண்டலகேசியையும்
ஒருசேரப் பழித்தது

192.

பருவரலொன் றிலன்றாயைப்
     பழுப்பறித்தான் தலைவனிவள்
கருவரைமேற் றன்கணவன்
     காலனையுங் கவிழ்த்திட்டாள்
இருவரையும் போல்வாரிவ்
     விருநிலத்தின் மேலெங்கும்
பெருவழியார் பேரருளார்
     பிறர்யாரே யெனநக்காள்.

இது புத்தன் நூலைப்பழித்தது

193.

ஒண்ணுதலா யுன்றலைவ
     னொழிவின்றி யுணர்கலான்
கண்முதலா வுடையவிக்
     கருவியிற் கண்டுகேட்
டெண்ணியு முணர்தலா
     லிலைசுமக்கு மொருவன்போ
னுண்ணுணர்வு தனக்கில்லா
     னுரைத்ததுதா னூலாமோ.

பொருட்குற்றம்

194.

ஐங்கந்த மெனல்பிழைப்பா
     மறிவினின்வே றாதலாற்
சிங்குந்தன் குறியுழப்புச்
     செய்கையென் றிவைமூன்று
மிங்கொன்று முருவினோ
     டிரண்டென்னாய் மிகவுரைத்தாய்
சங்கந்தா மல்லவேற்
     றத்துவமுந் தலைப்பட்டாய்.

195.

முன்னைத்தன் முழுக்கேடு
     முழுக்கேட்டின் வழித்தோன்றும்
பின்னைத்தன் பிறிதறிவும்
     பெயர்த்துரைத்தல் பெரும்பேதாய்
என்னொக்கு மெனினெருந
     லிற்புகுந்தா னிடையிராத்
தன்னைத்தந் தெனைக்கொண்டு
     தான்சென்றா னெனலன்றோ.

இதுவுமது

196.

கள்ளனுந் தானேயாய்க்
     கையாப்புண் டவனேபோ
லுள்ளந்தா னின்றவற்றை
     யுணர்ந்தவற்றோ டறக்கெட்டிங்
கொள்ளனைத்து மில்லென்றா
     லிறப்பறித லெவனாகுந்
தெள்ளியாய் தெளிந்திருந்து
     சிந்தித்துக் காணாயோ.

இதுவுமது

197.

கோன்பட்டான் குந்தத்தாற்
     குத்துண்டா னேனாதி
தான்பட்டான் றளவீரன்
     தப்பியோ டவனருகே
யான்பட்டே னென்பவன் போல்
     யாத்திருந்தே சொல்லுதியால்
தான்பட்டான் பட்டார்க்குத்
     தன்பாட்டை யுரைக்குமோ !

198.

பிறைப்பிறப்பும் பிள்ளைகடம்
     பிறப்பினையு மெடுத்துரைப்பின்
மறைபொருள்கள் வெளிப்பட்டா
     மன்னுந்தாங் கருதுபவால்
குறையென்னை வான்வயிற்றாற்
     குண்டலமா கேசியித்
தறையகத்துப் பிறப்புரைத்தாற்
     றத்துவமாக் கொள்வாமோ.

199.

பின்னசந் தானமும்
     பிறிதில்சந் தானமு
மின்னவென் றிரண்டுரைத்
     தெத்துணையோ பொழுதோதிச்
சொன்னதன் பொருளெல்லாஞ்
     சுவடின்றி யறக்கெடுதற்
கன்னதே யெனிலாத
     னாழிநாட் டாகாதோ.

200.

எண்ணிலாப் பலகந்த
     மிடையறா வென்றுரைப்பிற்
கண்ணுறா தொன்றுதலாற்
     கலப்பிலவா மாகவே
திண்ணிதா மிடையறவு
     தீண்டுமேற் றிரண்டொன்றா
அண்ணறான் முடிந்தறக்கே
     டரியதே போலுமால்.

201

வாசனையி னாமெனினும் வழியதனின்
                          முதலதொன்
றாசனைத்து மில்லையே லறிந்துரைப்பு
                          மரிதரோ
பேசினைநீ உளதெனினும் பெருந்தாமத்
                          துண்ணூல்போல்
லோசனையி னெடியதோ ருயிருரைத்தா
                          யாகாயோ.

202.

பாதிரிப்பூப் புத்தோடு பாழ்ப்பினுந்தான்
                          பல்வழியும்
தாதுரித்தாங் கேடின்மை யென்பதுநுன்
                          றத்துவமோ
போதுரைத்த வோடுநீர் போலுடம்பு
                          பொன்றிடினும்
மூதுரைத்த வாசம்போன் முடிவுயிர்க்கே
                          யாகாதோ.

203.

சத்திதான் சென்றதே யென்றியே
                          லைந்தன்றிப்
பொத்திநீ யுரைக்கின்ற பொருளோடா
                          றாகாவோ
சத்திதா னதுவன்றி யைந்துமே யாயினும்
பித்தியாய் முழுக்கேடு பேசினா யாகாயோ.

204.

அலைபலவே யுரைத்தாளென்
     றருகிருந்தோர் கருதுதலுந்
தலைவனூல் பொருணிகழ்ச்சி
     தங்கண்மேற் குற்றங்க
ணிலைபெற வுரைத்தின்மை
     நிறுத்துவன்யா னென்றுதன்
தலைவனீ பொருள்களே
     தானாட்ட லுறவினால்.

புத்தனின் வள்ளன்மை

205.

கண்கொடுத்தான் றடிகொடுத்தான்
     கயப்புலிக்குத் தற்கொடுத்தான்
பெண்கொடுத்தா னுடம்பினையும்
     பிளந்திட்டுப் பிறர்க்கீந்தான்
மண்கொடுத்தான் மகக்கொடுத்தான்
     மன்னுந்தற் சேர்ந்தார்க்கு
விண்கொடுத்தா னவன்கொடுத்த
     விரித்துரைப்பன் கேளென்றாள்.

வேறு

206.

ஏதி லாரிடர் தீர்க்கு மெமவிறை
சாத கம்மிவை யென்று தலைத்தலை
யோகி னாணின் றொருபக லெல்லையுங்
கோதை வார்குழற் குண்டல கேசியே.

207.

நூலு நாரு மிசைத்தன வொத்தலா
னீல கேசி நெடுங்க ணாள்சொல்லு
மாலும் பேயு முடையவர் செய்கையே
போலு நீ சொன்ன புத்தர் சரிதையே.

இதுவுமது

208.

போழுங் கண்ணுந் தலையுந் தடிகளுந்
தாழ மின்றி யிவைதம்மி னோவென
வாழு மாந்த ருழைவரு வாரில்லை
கூழன் றன்னுழை யேகொளச் செல்பவோ.

209.

பிளத்த லுள்ளிட்ட வாய்ச்செல் வதிந்திர
னளத்தற் கேலவன் றானறி யும்பிற
னுளத்தை யோரல னேலவன் றேவனாக்
கிளத்த றானோர் கிழமையும் போலுமே.

210.

யாவ னாயினு மன்னவ னின்மையிற்
றேவ னென்று தெளியுந் தெளிந்தபின்
சாவ னென்பதோர் சங்கையு மின்றியே
யீவ னென்பதோ ரிச்சையுந் தோன்றுமே.

211.

உறுதி யல்ல துணர்வுடையான்றனக்
கிறுதி யேலென்று மிந்திர னெண்ணலன்
மறுதி யின்மையின் மாணிழை நீயெங்குப்
பெறுதி முன்னொடு பின்னியை யாதவே.

212.

ஆத னாற்குறந் தாங்கெழு வான்றும்ம
வேத மில்சுமை யேற்றெரு தாமென்றான்
சாத கம்மிவற் றானருள் சாதிப்பா
னோதி னார்க்கு முணர்வொருப் பாயதே.

இதுவுமது

213.

எருது பாலின்மை யெண்ணலன் றும்மலே
கருது மாதனுங் கண்முத லாயின
தருத லல்லது தங்குறை யீதனொர்
மருதின் வாழ்பகை யானவிம் மாந்தரே.

214.

பாக மேபிளந் தாற்பர காயமொன்
றாகு மேயென வீவஃ தாதன்மை
காக மேயுண்ணுங் கண்ணுமற் றன்னதே
யேக மெய்யும்விண் டாலியை யார்களே.

215.

உள்ளந் தானிரு பாகினு முண்மையாற்
கொள்கின் றானிவ னேகொல்லு வான்றனை
யெள்ளி நேரு மறிவில்லை யேற்பிணங்
கொள்ளென் றீர்ந்து கொடுப்பினுங் கூடுமே.

இதுவுமது

216.

கூறு கூறுசெய் தாலுடம் புள்ளுயிர்
வேறு வேறு செலல்வெளி றாக்கொளாய்
பாறு வாயுரைக் கும்பர மாத்தங்க
டேறு வாருள ரோதெருண் டார்களே.

இதுவுமது

217.

புத்த னார்வண்ணங் கண்ட புனையிழை
சித்த னேயென்னைச் சேர்மின் மென்றலி
னத்த கன்னருள் செய்கல னாய்விடின்
மத்த கம்பிளந் தானென்றன் மாயமே.

218.

ஆவ தின்மை யறிந்து மவத்தமே
சாவ தேயுங்கள் சத்துவர் சால்பெனிற்
காவல் பூண்ட கணவனோ டீமத்தின்
வேம வட்கும் வழுக்குண மாங்கொலோ.

219.

சாந்தி யாகத் தரும முரைப்புழிக்
காந்தி பாலியைக் கண்டு கலக்கன்றா
னேந்தி வெம்படை யாலெறிந் தாற்கிடம்
போந்து கொண்டதும் பொய்யினுட்
                        பொய்யன்றோ.

220.

யானை யுள்ளர செங்குள தங்கெலாம்
வான நின்று வழிபடல் காண்டுமான்
மீனு மல்லவும் வேதனை யெய்துழித்
தான தாதற்றா தாகதர் தன்மையோ.

221.

குரங்கு மாயவை கொல்லிய செல்வழி
யிரங்கி யேயுயக் கொண்டது மென்றியாற்
குரங்கு நேர்குதி யாக்குரங் கெங்குள
மரங்கள் பாய்ந்திடு மாண்பின வல்லவோ.

(இதுவுமது)

222.

சீல நல்லவர் நீள்குவர் சேணெனிற்
கோல மில்குரங் காட்டிக் கொல் வார்களைக்
காலுங் கையு மெழற்கெனக் காண்கிலான்
வாலை நீட்டிக் கிடத்தறன் மாட்சியோ.

223.

தாய்க்கொன் றான்றங்கு செங்குரு திப்புனல்
பேய்க்கொன் றீதல் பெருங்கொடை யென்பதை
வாய்க்கின் றாயினி மானுயர் மாசெலா
நாய்க்கென் றாலிது நல்லற மாங்கொலோ.

அரசன் கூற்று

224.

யான்செ யும்பொரு ளென்றங்கொ ரேகாந்தன்
தான்செய் திட்டனன் சாதக கற்பங்கள்
மான்செய் நோக்கி மதிப்பொழி நீயெனக்
கோன்சொ னானிது குண்டல கேசிக்கே.

அரசன் அவையோர்க்குக் கூறுதல்
வேறு

225.

முயலுரை யிதுவென மூடிக் கொண்டிருந்
தயலவர்க் குரைப்பவ ராத ரல்லரோ
புயலிருங் கூந்தலி பொருந்தச் சொல்லினாள்
வியலவ ருரையொடு விரோத மில்லையே.
அவையோர் வழிமொழிதலும், அரசன்
                          ஆணையும்

226.

அரசிறை யிதுசொல வவையி னார்களு
முரைசெறி வுடையன உரைத்த நீர்மையண்
முரைசொடு நெடுங்கொடி முழங்க நாட்டுக
விரைவொடு படுகென வேந்த னேயினான்.

நீலகேசி குண்டலகேசியை வினவுதல்
வேறு

227.

இருப்பதென் னினியன்னா யிதுநுமக்
                          குரைத்தார்யார்
சுருக்கினைக் கடிதாகச் சொல்லெனக்
                          கெனலோடும்
திருக்கிளர் மதிலுஞ்சைத் தென்றிசை
                          யகனகரு
ளருக்கசந் திரனென்னு மவாச்சிய
                          னெனச்சொன்னாள்.

குண்டலகேசியை அலக்கழித்து வெளியேற்றுதல்
வேறு

228.

கட்டுரை பலசொல்லிக் காவல் நெடுங்கடை
                          நாவலைமுன்
னட்டிவ ணகரிடை நகைசெய்து புகுந்தவிந்
                          நன்னுதலை
வட்டிகொள் பறைகொட்டி வழுவுரை
                    பலசொல்லி வாரலென்று
பெட்டன பலசெய்து பெருநகர் வாயிலைப்
                          புறப்படுத்தார்.

அரசன் நீலகேசியைப் பாராட்டுதல்

229.

புனத்திடை நறுமலர்ப் பூங்கொடி
     யன்னதோர் பொற்பினளாய்
எனைப்பல நூல்களு மியல்பினி
     னறிபவ ளேதமில்லாள்
தனக்கினி யான்செயற் பாலது
     தானென்னை யெனவுரைத்தான்
இனத்தகை யேற்றரி யிடியுரு
     மேறெனு மிவற்றை யொப்பான்.

நீலகேசி கூற்று

230.

ஆண்டகை அரசிறை அதுசொல்லக்
     கேட்டவவ் வறத்தகையா
டீண்டல னணிபிற புனைவெனு
     நினைவிலன் றினையனைத்தும்
வேண்டல னிலனொடு விழுநிதி
     யினையவும் விறற்றகையா
யீண்டினி யறநெறி யுறுகென
     வேந்திழை யியம்பினளே.

இதுவுமது

231.

வந்தது மிதுபொருண் மன்னவ
யானென நன்னுதலா
ளிந்திர னனையநின் னிறைமையி
னறநெறி யிகழலென்றாங்
கந்தர நெறிசெலற் காயிழை
யரசனை விடுத்தருக்க
சந்திர னிருந்தவத் திசைமுன்னித்
தளிரிய றானெழுந்தாள்.