3. அருக்கசந்திர வாதச் சருக்கம்

232.

உஞ்சை மாநக ரெய்தின ளாயத
னிஞ்சி மாட்சியு மெல்லையில் செம்மலு
மஞ்சு தோய்நெடு மாடமும் வீதியு
மஞ்சி லோதி யவையவை கண்டபின்.

                        அருக்கசந்திரன் மாண்பு

233.

பருக்கை மால்களி யானைப்பல் வேந்தரு
மிருக்க போதக வென்னும் பெருமையான்
றருக்க நீட்டமுந் தன்னிக ரில்லவ
னருக்க சந்திர னென்னு மவாச்சியன்.

                        இதுவுமது

234.

போதி சத்துவர் புத்த ரெனப்படு
நீதி யிற்பெரி யாரன நீர்மையா
னோதி நூன்மும்மை யொப்ப வுணர்ந்தவன்
வாதி கட்கோர் வயப்புலி யேறனான்.

                        இதுவுமது

235.

மாடமோங்கி மழைநுழைந் தின்குயில்
பாடு பூம்பொழிற் பாங்கரோர் பள்ளியுட்
பீட மேறிப் பெருந்தகை யார்க்கெலாம்
வீடு பேறும் வினையு முரைப்புழி.

                        நீலகேசியின் செயல்

236.

சென்று தானெய்திச் சிற்பிடத் தாற்புக்குத்
துன்று நீண்மணித் தூணணிந் தெண்ணென
நின்று நீலவைம் பாற்பெய ராளுமங்
கொன்று பல்வகை யோத்துரை கேட்டனள்.

237.

கொள்ளு மாறுந்தன் கோரகை யுட்கஞ்சி
மொள்ளு மாறு முதுகு நெளித்துண்டு
னள்ளு மாறு மணலெடுத் திட்டவை
மெள்ள மெள்ள விழுங்கு மவைகளும்.

                        இதுவுமது

238.

வழிக்கு மாறுந்தம் மண்டையி னுண்டுமன்
ஒழிக்கு மாறுமஃ தூட்டு மவைகளும்
மழிக்கு மாறுந் தலைகளை மையிட்டு
விழிக்கு மாறும் வினைய விதியினால்.

             நீலகேசி பொதுவின் வினவுதல்

239.

இனைய வேசொல்லி யிட்ட தலையராய்
வினைய நூலை வியப்பெய்து வார்க்கெலா
மனைய தேநு மறநெறி யென்றனள்
முனைவன் றன்னெறி முன்ன முணர்ந்தவள்.

                        அருக்கசந்திரன் கூற்று

240.

அவ்வு ரையம ரானுய ராசனச்
செவ்வ ரைம்மிசைத் தீத்திரள் போல்பவ
னிவ்வு ரையிவ ணென்னெனச் சொல்லினான்
றெவ்வ ரைத்திறல் வாட்டிய திண்மையான்.

                        நீலகேசி கூற்று

241.

வீரஞ் செய்து விழியல் வினையநூல்
பேர தஃதேல் பெரிது மழகிதே
யோரு மஃதோ ருறுவினை யென்பதைத்
தேரச் சொல்லுநின் றிண்பொரு ளென்றனள்.

242.

வினைய தாகிய பெற்றி விரித்துநீ
தினையி னேரும் தெருட்டெனக் கென்னவே
அனைய வவ்விர தத்தோ டறிசல
மினைய கேளென் றெடுத்தன சொல்லுமே.

 நீலகேசி அவன் கூறியவற்றிற்குக்
குற்றங்காட்டுதல்

243.

தன்னை யீந்ததும் தாரங்க ளீந்தது
மன்ன தன்பொருள் கேட்டறங் கொண்டவன்
மன்னு மில்லயன் மாந்தரைக் காணுமேற்
பின்னைச் செய்வன பேசலு மாகுமோ.

                        இதுவுமது

244.

காம மூரிற் கணிகைய ரோடன்ன
தூய்மை யுண்மையிற் றோற்றங் கரந்தவட்
சேம மாவகைச் செல்கமற் றென்பதும்
வாம நூலின் மறைபொரு ளல்லவோ.

                        இதுவுமது

245.

சிங்க தத்த ரெனப்படுந் தேரனார்
சங்க போதியி லாள்கட் டயாச்செய
விங்கி தென்னென வேழாய் தவசிகட்
கெங்கெங் காமி லெனவுரைத் தானரோ.

                        இதுவுமது

246.

யாது மில்லை யுயிரென் றறநெறி
யோதி னானவ் வுயிரிலி தன்னொடு
வேத னைதணிப் பான்வினை வீட்டிற்கும்
சாத னைநிற்குஞ் சத்துவ னாமென்றீர்.

247.

சித்த மோடிக் கலங்கித் திரியாத
நத்தம் பெற்றது நற்றவ மேற்கொண்டான்
பத்தின் மேலும் பழிசெய்யு மேற்பள்ளி
வத்தன கண்டீர் வழக்கின்கட் கூரியீர்.

                        இதுவுமது

248.

போதி யாருரு வெய்திய புற்கலர்
வேதி யாற்கிடந் தாருள ராயினான்
ஞாதி யாரென நாட்டிய கூட்டமும்
ஓதி வைத்ததொன் றுண்மை யுணர்த்துமால்.

249.

ஆரம் பிச்சி யிலிவிலங் கவ்வுருச்
சீரிற் கொத்தாள் கணிகை தெருண்டாள்பெண்
ஓரு மில்லா ளுயிரிலி யூமையுந்
தார மாக்கொஃடி ரென்றல் சலமதோ.

250.

பிறந்த வில்லினுள் வாழ்க்கை பிழைப்பெனு
மறங்கொண் டான்கொண் டவாச்சிய
                                  வேடத்தாற்
சிறந்த வல்லன சிங்கின வெங்கணுந்
துறந்த வான்பொருள் சொல்லவும்
                                 வல்லையோ.

நீலகேசி புத்தசமயத்தாரொழுக்கத்தைப்
பழித்தல்

251.

உரைப்ப பேரரு ளுண்பன மீனொடூன்
றிரைப்ப மெல்லணை செய்வ விழுத்தவம்
கரைப்ப தீவினை கண்டது சூனியம்
புரைப்பின் மார்க்கம் பொருத்த முடைத்தரோ.

                        வேறு

252.

எல்லா மசுசியு மென்ப வனவா
லல்லா லழுக்குற் றவனடிக் கேத்தலர்
சொல்லார் சுகமுஞ் சுகத னவனென்று
பல்லார் வருத்தம் பழுதனெப் பண்ணுப.

                        இதுவுமது

253.

நிலையா வெனச்சொல்லி நேர்ப பொருடூய
மலையோ ரனைய மாட மெடுப்ப
விலையே யுயிரென் றிறந்த நினைப
புலைசே யமர்ந்தவர் புத்தியின் வண்ணமே.

                        இதுவுமது

254.

மயித்திரம் பாவித்து மற்றவற் றூனை
யசிப்பன வேபோ லமர்ந்திருந் துண்ணுஞ்
சயித்தியங் காணிற் றலையினை முட்டும்
பயித்தியங் கொண்டவர் பண்புமஃ தொக்கும்.

                        இதுவுமது

255.

புத்த ருருவுக்கும் போலிக்கும் போலியை
மத்தகத் தேத்தி வணங்கி வழிபடும்
செத்த பொழுதினச் செந்தடி மென்றிடு
மத்த னுடைய வருள்வகை வண்ணம்.

              பௌத்தத் துறவிகளின் துன்பநிலை
                        வேறு

256.

பேனறாக் கூறை பெருமுடுகு
     நாறுமேற் றுக்கந் துக்கம்
மானறா நோக்கி மணற்சுமையுந்
     தான்பெரிதாற் றுக்கந் துக்கந்
கூனிறாக் கண்டாலுங் கொள்ள
     முடியாதேற் றுக்கந் துக்கந்
தானறாப் பஃறெழிலுந் தான்றுக்க
     மாதலாற் சருவ்வந் துக்கம்.

                        வேறு

257.

பொய்பொத்திச் சொல்லினவும்
     போங்கூலி கொண்டனவும்
வையத்தஞ் சுட்டனவும்
     வாழ்மருது கொன்றனவும்
கையத்தி னூனுக்கே
     கன்றிக் கலாய்த்தனவு
மையத்தை யின்றியடுப வாலோ
     வழல்நரகத் துள்ளே யடுப வாலோ.

258.

பற்றே மிகப்பெருக்கிப் பஃறொடர்ப்பா
                                 டேயாக்கி
யற்றீர்போற் காட்டி யடைக்கலமே
                                 வவ்வுநீர்
பெற்றீரே பேயுடம் பன்றேற்
                                  பெரும்பாலு
மெற்றே யிருணரகிற் கீர்க்கு மாலோ
விரக்கமொன் றில்லீரை யீர்க்கு மாலோ.

                        அருக்கசந்திரன் கூற்று
                        வேறு

259.

ஆங்கவ ளறங்கூறக்
     கேட்ட வவாச்சியன்றான்
றேங்கம ழொலிகோதாய்
     சித்தமே யல்லதில்லை
தீங்கொழுக் கென்றதெல்லாந்
     தீவினையென் னல்வேண்டார்
பூங்கமழ் காராடை
     போர்த்தவெம் புத்தரென்றான்.

                        நீலகேசி கூற்று

260.

துத்தலே வேண்டிநின்று
     தோந்தொடர்ப் பாடுநீக்காய்
சித்தமே நல்லதென்றாற்
     றேற்றலு மாவதுண்டோ
கத்திகொண்டில் லில்வாழ்பேய்
     காறலை வேறுசெய்து
குத்துவதின் னும்போழ்திற்
     கூடுமோநன் மையேடா.

                        இதுவுமது

261.

உள்ளமும் பாயிரம்மு மொக்குமேல்
                    வீடுமுண்டாம்
கொள்ளுமேற் குற்றமஃதாக் கூடுமே
                    பற்றுமாங்கண்
விள்ளுமேல் வேறதாய வேடமு
                    மன்னதேயாங்
கள்ளமே சொல்லிநின்று கன்றினாற்
                    காட்டலாமோ.

                        இதுவுமது

262.

புனைந்துநீ சொல்லும் வீடும்
     போகவுண் டாக தந்தே
நினைந்துநாங் காணி னெல்லா
     நின்றதொன் றில்லை யென்றாற்
றுனைந்துதா னுண்மை நன்று
     சூனிய மாதற் கென்றாட்
கினைந்தினைந் தேங்கி நல்லா
     யென்செயற் பால தென்றான்.

 நீலகேசி அருக்கசந்திரன் வருத்தம்
போக்கல்

263.

செத்தவ ரப்பொழுதே தேவருட்
                   செல்பவேனு
மத்தலை யின்பநோக்கா ரஞ்சுவ
                    மாக்களந்தோ
தொத்துள வாகவென்னான் சூனிய
                   வீடுசொன்ன
புத்தனை நோதுமத்த புலம்பனீ
                 போகவென்றாள்.

                        இதுவுமது

264.

புன்னெறி யவைகளெல்லாம்
     போக்கிய பாக்கியத்தாய்
நன்னெறி நன்ஞானங்
     காட்சியு நன்குகொண்டென்
சொன்னெறி திரிவாயேற்
     சோர்வில்பே ரின்பமெய்தி
மன்னுதி யென்றுமற்றுங்
     கூறினாண் மாதராளே.

                        அருக்கசந்திரனின் ஆக்கநிலை

265.

காட்டுழல் களிநல் யானை
     கால்கையி னோர்ப்பித் தேறித்
தோட்டியிட் டூர்வ தேபோற்
     சூரிய சோமன் றானும்
வாட்டடங் கண்ணி நல்லாள்
     வாக்கெனுந் தூக்க யிற்றாற்
பூட்டுபு கொள்ளப் பட்டான்
     போதியார்க் காதி யன்னான்.

                        வேறு

266.

அருக்கமா சந்திரனை
     யறங்கொளீஇ யாங்கவனை
யிருக்கும்வா யொருப்படுத்திங்
     கீதுநுனக் குரைத்தாரைப்
பொருக்கநீ சொல்லென்னப்
     புத்தனார் முதன்மாணி
முருக்குவாய்சென் றவனாம்
     மொக்கல னெனச்சொன்னான்.