4. மொக்கல வாதச் சருக்கம்


267.

மொக்கலன் பள்ளி வருணனை
நீவருத லொழியென்று
     நிறைபதும புரத்துக்கே
மாதிரந்தா னெறியாக
     மனம்போலச் சென்றெய்தி
மூதுரையுங் காரணமு
     முழுதெழுதி யழகிதாய்ப்
போதுகளும் பொன்மணலும்
     புனைந்தினிய பொலிவிற்றாய்.

இதுவுமது

268.

கொடிமகரக் கோபுரமு
     நெடுமதிலுங் குடிஞைகளும்
தொடிமகரத் தூணிரையுஞ்
     சொலற்கரிதாய்ச் சுவர்க்கத்தின்
படிமகரப் படிமையதப்
     பள்ளிகண் டளியள்போய்க்
கடிமகரக் கடல்கடந்து
     கலந்தந்த நலமென்றாள்.

இதுவுமது

269.

ஒழுக்கமுங் கல்விகளு
     முரைத்தனவே யொப்பனகள்
இழுக்கில்லாப் பெருந்தவத்தி
     லிங்கிகளைத் தான்கண்டு
முழுத்தாள தாய்ப்பள்ளி
     முற்றத்தோ ரரைமரத்தின்
குழுக்கொம்பர் பிடித்தொருகாற்
     குஞ்சித்து நின்றுதான்.

நீலகேசி ஒருதுறவியை வினவுதல்

270.

துன்னஞ்செய் தாடையைத்
     துவர்தோய்த்துக் கொட்டியும்
பொன்னஞ்செய் பத்தங்கப்
     புகையூட்டிக் கைசெய்து
தன்னமு மளித்தாய
     தலைசொறியு மிடையிலையா
லென்னவற்றி னாம்பயனை
     யெனக்கறிய வுரையென்றாள்.

நீலகேசி மொக்கலனை வினவுதல்

271.

ஆங்கவ ளதுவுரைப்ப
     வதற்குரிய மறுமாற்றந்
தாங்களு முரைக்கில்லார்
     தலைசாய்த்தங் கிருந்தார்
மூங்கைமையான் மொழிகொண்டேன்
     மொக்கலநற் றேரயான்
பாங்கினால் வினவுவன்
     படிறின்றி யுரையென்றாள்.

இதுவுமது

272.

வீடிற்கே யெனின்ஞானம்
     வேண்டாதே முடியுமாற்
பீடிற்கே யெனினின்னிற்
     பெருஞ்செல்வர் திருந்தினார்
மூடிற்றின் பயனென்னை
     யெனவினவ மொக்கலனு
மூடிற்றுஞ் சிறிதுளதா
     லுருவறிதற் கெனமொழிந்தான்.

நீலகேசி கூற்று

273.

படைப்பெளிதாற் கேடரிதாற்
     பலகள்வர் நவையாரா
லுடைக்கியைந்த வொலியற்றா
     லூன்றருவார்க் குணர்த்துமால்
விடக்கமர்ந்த வுள்ளத்தாய்
     வேடமு மறிவிக்குந்
தொடர்ப்பாடும் பெரிதன்றாற்
     றொட்டைநீ பூணியோ.

இதுவுமது

274.

பொன்கொண்டா ராயினும்
     போர்வைபூச் செனிற்புலையன்
வன்கண்மை யாற்செய்த
     வஞ்சமே யெனவளைப்பர்
தன்றன்மை யாகிய
     தான்பழிப்பார் தாமுளரோ
வென்கண்டு வந்திங்க
     ணிதுகொண்டா யெனச்சொன்னாள்.

275.

உண்ணன்மை தவமென்றங்
     குறுப்பெல்லா மறைக்கின்றாய்
திண்ணென்ற மனமிலைநீ
     சிறைபலவுஞ் செய்தலால்
பெண்ணென்றும் பிறவென்றுந்
     தானோக்கிப் பெரும்பேதாய்
கண்ணன்றோ வுள்ளத்தைக்
     கலக்குவன வவைகாவாய்.

இதுவுமது

276.

பெண்பாலார் கண்டக்காற்
     பேதுறுவ ரெனவுரைப்பாய்
திண்பான்மை யவர்க்கழியச்
     சிதையுநின் றவமாயின்
மண்பாலா ரவருள்ள
     மாண்புளதா யுரையாரா
லெண்பாலும் படாதாகி
     யிழுக்குநின் குணமந்தோ.

இது பௌத்தர் மண்டையின்
பயனின்மை கூறுகின்றது

277.

இழுக்கினு மிழத்தியா
     லிடறினு மதுவேயால்
விழுக்கலமால் வினைபெரிதால்
     வினைக்கேடாந் தொழிறருமா
லொழுக்கிற்கு முரித்தன்றூ
     ணோரிடையூ றுடன்கொடுக்கும்
வழுக்கின்றித் தவஞ்செய்யின்
     மண்டையாற் பயனென்னோ.

278.

சவருடைய மனைவாழ்க்கை
     யெனப்போந்து தவம்புரிந்தாய்
பவருடைய விறகிறுத்துப்
     பலகலங்க ளொருப்படுத்துற்
றுவரோடு பல்கூறை
     யுடன்புழுக்கி யொலித்திடு நீ
துவரடுதி பூவடுதி
     சோறடலே முனிந்தாயோ.

279.

வண்ணாரம் துன்னாரம் மச்சிகமே கச்சாரஞ்
சண்ணார மெனப்பிறவுந் தவத்துள் நீ கற்றனவா
லெண்ணார்ந்த காரங்க ளில்லகத்தே பயின்றாயே
லுண்ணாயே வயிறார வோர்ப்பொன்று மிலையேகாண்.

துறவோர்க்கு இன்றியமையாதது
சோறு ஒன்றே எனல்

280.

சிறந்தாய்க்கீ துரைக்கலாஞ்
     சிந்தனையை முடிப்பதே
துறந்தார்க்குக் கடனாகிற்
     சோறலாற் பிறவேண்டா
விறந்தார்க்கு மெதிரார்க்கு
     மிவட்காலத் துள்ளார்வான்
பிறந்தார்க்கு மிதுவன்றிப்
     பிறிதொன்று சொல்லாயோ.

281.

உண்டியா லுடம்புளதா
     லுடம்பினா லுணர்வாமென்
றெண்டிசையும் பரந்திசைப்ப
     வீதுனக்கே தெரியாதோ
தண்டியாய்க் கழியாது
     தவஞ்செய்த லுறுதியேற்
பண்டியாற் போக்குநின்
     பஃறொடர்ப்பா டெனச்சொன்னாள்.

மொக்கலன் நீலகேசியைச் சினந்து
அவள் சமயத்தை ஆராய்தல்

282.

அருளுடையா ளுரைப்பக்கேட்
     டாங்காரித தவனுந்தன்
பொருளுடைமைத் தருக்கினும்
     புன்ஞானக் களிப்பினு
மருளுடையார் மதிப்பினு
     மாற்றந்தான் செயற்பொருட்டா
லிருளுடைந்த கூந்தலா
     ளிட்டத்தை யெண்ணுவான்.

மொக்கலன் கூற்று

283.

தரணென்று நன்றென்றா
     ளென்றன்மை யுருவென்றாள்
அரணென்னத் தெளிந்ததுதா
     னாருகத மேமன்னு
முரணின்ற துண்மையான்
     மொக்கலனு முனிந்துரைப்பா
னிரணியனைப் போல்வந்திங்
     கிடர்ப்பட்டா யென்றானே.

நீலகேசி தன் வெற்றி விளம்பல்

284.

என்னாலும் வெலப்பட்டா
     ரிருவருள ரிங்கவரைச்
சொன்னாலு மறிதிநீ
     துடிகடியு மிடையுடைய
கொன்னாணு நெடுவேற்கட்
     குண்டலமா கேசியு
மன்னாளுக் கறமுரைத்த
     வருக்கமா சந்திரனும்.

மொக்கலன் ஐயுற்று வினாதல்

285.

என்றாளை முகநோக்கி
     யிதுபெரிதும் பொய்த்தனைநீ
யொன்றாத கொள்கையா
     ருலகினுள யாவரையும்
வென்றாள்மற் றிவள்சம்பு
     விரதியாய்த் திரிந்தெங்கும்
தன்றாரம் பிறர்க்கீந்தான்
     றருமங் கொண்டென்றானாய்.

நீலகேசி கூற்று

286.

வேதியரை முதலாக
     வெலப்பட்டா ரிவரிவரென்
றோதியாங் கவையவைதா
     மிவையிவையென் றுரைப்பக்கேட்
டாதிகா லாவணத்து
     ளார்கதரை வென்றதனை
நீதியா லுரைத்தியே
     னின்னையான் வெல்லேனோ.

மொக்கலன் கூற்று

287.

எனக்கேட்டாங் கெடுத்துரைப்பா
     னிந்திரர்க டொழப்படுவான்
றனக்காய தர்மமு
     மதர்மமுங் காலமுங்
கனப்பாட்டிற் காயமே
     யுயிருருவே புண்ணியமே
நினைக்குங்காற் பாவமே
     கட்டுவீ டெனநிறுத்தி.

இதுவுமது

288.

இப்பொருட்க ணிகழ்ச்சியு
     மிவையிவையா மெனவிரித்துச்
செப்பினா னாதன்றன்
     சிந்தைக் கெழுந்தவா
றப்பொருளு மந்நிகழ்வு
     மவையவையா வறியாதே
வப்பிள வனமுலையார்
     மணல்விளையாட் டதுவேபோல்.

நீலகேசி கூற்று

289.

மொக்கலனு மிதுகூற
     முல்லைநா றிருங்குழலா
ணக்கனளா யிதுகூறு
     நாதன தியல்பறியா
யிக்கிரமத் திந்திர
     னிருடிகளைத் தேவியரைத்
தக்கதாத் தொழுதக்கா
     லவர்தலைவ ரெனலாமோ.

இதுவுமது

290.

எந்தலைவ ரியல்பொடுநூ
     லின்னணமென் றறியாதாய்
சிந்தனைக்க ணுயினுந்
     தீமையு முரைத்திலையாற்
றந்துரைத்த தலைவனூற்
     றத்துவமா மாகவே
முந்துரைத்த பொருணிகழ்வு
     பிழைப்பின்மை முடியாவோ.

இதுவுமது

291.

அத்தியைந் தெனினல்ல
     வறுபொருளு மவையாகா
வுத்தியா வெடுத்தோது
     மொன்பதனோ டொட்டலவாற்
குத்திய பல்குறையே
     யன்றியுமிப் பொருளெல்லாம்
பொத்தியுங் காட்டுவாய்
     பொருளியைவோ பெரிதென்றாள்.

292.

சலம்படவே யுரைத்தனைநீ
     தருமத்திற் செல்லுதுமென்
றிலம்படுமே லியக்கில்லை
     யென்பதெம் முரையென்போம்
கலஞ்செல்லுங் கடலதனைக்
     காற்றேபோ லுந்தாதாம்
பலம்படு முரைநினக்குப்
     பாம்புண்ட பாலேபோல்.

இதுவுமது

293.

அல்லதற்கு மப்படியே
     யாமென்ற லதுகொள்ளாய்
செல்லவுஞ் செலுத்தவு
     நில்லவு நிறுத்தவுஞ்
சொல்லியவாய் தேய்க்குறுவாய்
     சொல்லிக்கொள் வலியதனால்
பல்லொடும் படத்தேய்த்தாற்
     பயம்பெரிதும் படுமன்றோ.

இதுவுமது

294.

கடனிலமா காயமே
     யமையாவோ விவையிரண்டு
முடனில்லை யாயினு
     மூனமிங் கெவனென்பாய்
மடனுடையை நீபெரிது
     மன்னுயிர்க்கும் புற்கலக்கு
மிடனெல்லா வுலகி
     னெல்லையும் புறப்படுமோ.

295.

பலசொல்லிக் குறையென்னைப்
     பஞ்சமா கந்தமே
யலகில்லாப் பெரும்பரப்பி
     னாகாய நினக்கில்லை
நிலைசெலவிற் கிவை வேண்டா
     நின்பொருளு மிவையல்லா
வுலகெல்லை யுரைப்பான்புக்
     குணர்வினையே வருத்துதியால்.

296.

காலநீ வெண்டாயாய்க்
     கணிகமுங் கற்பமும்
சாலமும் புனைந்துரைத்தி
     சமழ்ப்பென்னு மிலையாகிப்
பாலமா பண்டிதனே
     பழநோன்பி யிவனென்பாய்
மாலுமிங் குடையையோ
     மயக்குவதொன் றுண்டனையோ.

இதுவுமது

297.

இக்கோட்க ளெழனோக்கி
     யிவையிவையே யாமென்றா
லக்கோட்க ளெழனோக்கி
     யவையவையாக் கண்டிருந்
தெக்கோளு மில்லென்பா
     யாண்டெண்ணி யேத்துதியான்
மெய்க்கோளா லென்றியான்
     மிகைதெருட்டுந் திறங்காணேன்.

இதுவுமது

298.

கருத்தினாற் பெற்றாமோ
     கண்கூடாக் கண்டோமோ
பொருத்தனையென் றுரைக்கின்றா
     யுறுநோயைத் தீர்ப்பதோர்
மருத்துநூ லில்லையான்
     மயங்கியே சொல்லாது
திருத்தியநின் னுணர்வின்மை
     தெருட்டிக்கா ணெனச் சொன்னாள்.

299.

பொறியுணர்வின் புலமாய
     புற்கலமே யுயிரறியு
மறிவினா லறியாதே
     யாமாகா தனெவுரைப்பாய்
நெறியென்னை யிந்திரன்றன்
     நெடுநகரக் கவன்றேவி
குறியேளா நெடியேளா
     நூலொழிப்பாய் கூறிக்காண்.

300.

மெய்யளவிற் றுயிரென்று
     மெய்யகத் தடக்குரைத்தல்
பொய்யளவைக் குடங்குடத்திற்
     புகலருமை போலென்பாய்
மெய்யளவின் மெய்யுணர்வை
     மெய்யகத் தடக்குரைத்தி
யையனையே யடங்கானென்
     றதுவாதன் வண்ணக்கால்.

இதுவுமது

301.

அருவாத லாலடங்கு
     முணர்வுதா னங்கென்னிற்
பெருவாத மங்கில்லை
     பெற்றியொன் றறியாத
திருவாள னுரைவண்ணந்
     தீட்டொட்டுக் கலப்பியாப்
புருவாய வுடம்பினோ
     டுணர்வினுக் குளதாமோ.

302.

யாப்புண்டா லுழப்பதவ்
     வுயிரென்றேற் கதுவன்று
போய்ப்பிண்டத் துழப்புழப்பப்
     புலம்புவ தென்செயலென்பா
யேப்புண்பட் டான்படநோ
     யேதிலர்க்காய்ச் சோமாகிச்
சாப்புண்பட் டேனென்று
     சாற்றுவதுன் றத்துவமோ.

இதுவுமது

303.

உழப்புழப்பச் செய்கையா
     னுறுதுயருற் றேனென்றல்
பிழைப்பதுவாக் கருதாதே
     பெருவழியு ளிடறுதியா
லுழப்பறிவு குறிசெய்கை
     யொருவனவே யெனச்சொன்னார்க்
கிழிக்குவதிங் கில்லாமை
     யிதனாலே யறியென்றாள்.

304.

அருவாயில் யாப்பில்லை
     யன்றாயிற் குறைபடூஉ
மிருவாறின் கூட்டமுந்
     தீதென்ப தெம்மிடமே
மருவாதா யுரைத்ததனை
     மனங்கொள்ளா யதுவன்றிப்
பொருவாறொன் றுரைத்தாலு
     மொ     ருவாறு முணராயால்.

305.

அறிவெழுந் தவலிக்கு
மென்பதூஉ மதுவெழப்
பிறிதொன்று பேதுறுமங்
கென்பதூஉம் பெரும்பேதாய்
குறிகொண்டா ருரையன்றாற்
குற்றமே கொளலுறுவாய்
பொறிகொண்டு காற்றினையும்
போகாமற் சிமிழாயோ.

306.

பிறன்சுமவான் றானடவான்
     பெருவினையு முய்க்கில்லா
வறஞ்செய்தா னமருலகிற்
     செல்லும்வா யரிதென்று
புறம்புறம்பே சொல்லியெம்
     பொருணிகழ்ச்சி யறியாயாற்
கறங்குகளு மல்லனவுங்
     காற்றெறியத் திரியாவோ.

307.

மகனேயாய்ப் பிறப்பினு மாதுயரங் கேடில்லை
யவனாகா னாயினு மறஞ் செய்த லவமாகு
மெவனாகு மென்றெம திட்டமே யுரைத்தியா
னகைநாணி நீநின்னை நன்பகலே மறைக்கின்றாய்.

308.

வீயுடம்பிட் டுயிர்சென்று வினையுடம்பு முளதாகத்
தாயுடம்பி னகத்துடம்பு தான்வைத்த
தின்றியே
நீயுடம்பு பெற்றவா றுரையென்பாய்
நிழல்போலும்
பேயுடம்பு பிறிதுடம்பிற் புகல்பேதாய்
காணாயோ.

இதுவுமது

309.

எப்பொருளு மொன்றொன்றிற்
     கிடங்கொடுத்த விரும்புண்ணீர்
புக்கிடங்கொண் டடங்குதலே
     போலவும் தந்தைதாய்
சுக்கிலமுஞ் சோணிதமுந்
     தழீஇச்சுதையு ணெய்யனைத்தா
யொத்துடம்பி னகத்தடங்கி
     யுடன்பெருகு மெனவுரைத்தாள்.

310.

செய்வினைதா னிற்பவே பயனெய்து மென்பதூஉ
மவ்வினை யறக்கெட்டா லதுவுளையு மென்பதூஉ
மிவ்விரண்டும் வேண்டுத லெமக்கில்லை யெடுத்துரைப்பி
னைவினையி னிலைதோற்ற நாசந்தா னாட்டுங்கால்.

இதுவுமது

311.

பைம்பொன்செய் குடமழித்துப்
     பன்மணிசேர் முடிசெய்தாற்
செம்பொன்னா னிலையுதலுஞ்
     சிதைவாக்க மவைபெறலு
நம்பொன்றிங் கிவைபோல
     நரர்தேவ ருயிர்களையும்
வம்பென்று கருதனீ
     வைகலும்யா முரையாமோ.

இதுவுமது

312.

பெரும்பாவ மறத்துய்த்துப்
     பெறுதும்யாம் வீடென்னோ
மரும்பாவ காரிநீ
     யாவர்வா யதுகேட்டாய்
வரும்பாவ மெதிர்காத்து
     மன்னுந்தம் பழவினையு
மொருங்காக வுதிர்த்தக்கா
     லுயிர்த்தூய்மை வீடென்றாள்.

வேறு

313.

சொன்ன சூனைத் துறந்தவற் றட்டன
பின்னை யுண்டல் பிழைப்புடைத் தென்றியா
னன்னு தல்லைத் துறந்தவ ளட்டது
தன்னை யுண்டுந் தவசியை யல்லையோ.

314.

கொன்ற பாவங் கெடுகெனக் கையிட்டு
நின்ற தென்பது நீயுரைப் பாயெனி
னன்று துன்னின் தாதன்மை யாற்சொன்னாய்
சென்றும் வந்துந் தியானம் புகலென்றாள்.

315.

இன்ப துன்ப மிருவினைக் காரிய
மென்ப வர்க்கென்னை யேதமுண் டென்றியேற்
பின்பு பேணுந் தவத்தினி னாகிய
துன்ப வர்க்குந் துதாங்கனத் தொன்றுமே.

316.

செய்த தீவினை சென்றின்ப மாக்குமென
றிஃது ரைப்பவ ரீங்கில்லை யாயினும்
பொய்கள் சொல்லிப் புலைமக னேயெம்மை
வைதல் காரண மாநின்று வைதியோ.

317.

இந்திரி யங்களை வென்றற் பொருட்டென
வந்து டம்பு வருத்தல் பழுதென்பாய்
தந்து ரைத்த தலைமழி யாதிய
சிந்த னைக்கிவை செய்வதெ னோசொல்லாய்.

318.

புனைவு வேண்டலர் போக நுகர்விலர்
நினைவிற் கேயிடை கோளென நேர்தலா
லினைய வும்மல மேறினு மென்செய
அனைய தான்மாக்கள் யாக்கையின் வண்ணமே.

319.

பாவந் துய்த்துமென் றோமல்ல துய்ப்பினு
மாவ தின்மைக் கரசுரைத் தாயன்றோ
வோவ லின்பந் தருமெ னுயிரென்பாய்
தேவ னாகித் திரிந்துதான் காட்டிக்காண்.

320.

அழிவு காலத் தறத்தொடர்ப் பாடெலா
மொழியல் வேண்டுமென் றொற்றுமை தாங்கொளீஇ
வழியுங் காட்டுமம் மாண்புடை யார்கண்மேற்
பழியிங் கிட்டுரைத் தாற்பய னென்னையோ.

இதுவுமது

321.

சிந்த னையினுந் தீவினை யாமென்பார்க்
கந்திற் காம மமையுமென் றீரென்பாய்
சுந்த மாகச் சுவடறு வீரென
வந்தி தோறும் புடைக்க வமையுமோ.

இதுவுமது

322.

பெண்ம கள்ளிர் பிறகிட வுண்பவர்
கண்ணி னாலில்லுட் கந்தியைக் காணினு
முண்ண லம்மெனும் மோத்துடை யார்களைத்
திண்ண தாவைது தீவினை கோடியோ.

323.

பிள்ளை பெண்ணலி யாயினும் மாண்வயிற்
றுள்ள தேயென் றொழுக்கங் கொடுத்தியாற்
பிள்ளை பெண்ணலி யன்மையை யாதினா
லுள்ளங் கொண்டிழ வூசி யுரைப்பதே.

324.

மோனம் பொய்யஞ்சிக் கொண்டவன் மெய்யுரைக்
கூனந் தோன்றி லுரைத்தன னென்றியேற்
றானம் யாவர்க்குஞ் செய்வது நன்றனென்பா
யீன மென்னோ தெருச்சுமக் கிற்றியோ.

இதுவுமது

325.

உய்யக் கொள்வ னெனச் சொல்லி யுள்ளத்தாற்
கையிற் காட்டல் கரவுள தாமெனிற்
பொய்சி தைத்ததென் சொல்லிப் பெயர்ந்துரை
பொய்யு ரைத்தில னென்றல் பொருந்துமோ.

வேறு

326.

கொல்வினை யஞ்சிப் புலால்குற்ற மென்பதை
நல்வினை யேயென நாட்டலு மாமென்னை
வில்லினை யேற்றிநும் மெய்ம்மை கொளீஇயது
சொல்லினை யாதலிற் சொல்லுவன் யானே.

இதுவுமது

327.

புத்தர்கட் பத்தியிற் போதி மரந்தொழிற்
புத்தர்கட் பத்தரை யேதொழு புத்தர்கட்
பத்தியை யாக்கு மதுவெனிற் (பற்றிய)
பத்தங் குடைசெருப் புந்தொழு பாவீ.

இதுவுமது

328.

ஆங்கவர் போல வருள்செய் பவர்களை
நீங்குமி னென்பது நீர்மை யெனினது
வீங்கிதற் கெய்தா விடினிலை போதிக்கும்
தீங்கே நுமர்செய்கை தேரமற் றென்றாள்.

329.

பல்லுடை யான்றன்னைப் பண்டுகண் டேத்தினுந்
தொல்லுரை கேட்டுறுப் பேதொழு தாலும்பி
னல்வினை யாமென்று நாட்டுதி யாய்விடிற்
கொல்வதுந் தின்பதுங் குற்றமற் றென்னாய்.

இதுவுமது

330.

ஏத்தின ரேத்துக வென்றிறை போல்வன
பாத்தில பைம்பொற் படிமைசெய் தாலவை
யேத்துநர் செய்தவ ரெய்துவ நன்றெனில்
வீத்தவர் தின்பவர் வெவ்வினைப் பட்டார்.

இதுவுமது

331.

வெற்றுடம் புண்பதும் வேலின் விளிந்தவை
தெற்றென வுண்பதுந் தீமை தருமென்னை
யொற்றைநின் றாடுணை யூறு படுத்தவட்
குற்றமன் றோசென்று கூடுவ தேடா.

332.

பிடிப்பது பீலி பிறவுயி ரோம்பி
முடிப்ப தருளது போன்முடை தின்று
கடிப்ப தெலும்பதன் காரண மேனி
தடிப்பத லாலரு டானுனக் குண்டோ.

333.

ஆட்டொரு கான்மயிற் பீலி யுகுமவை
ஈட்டுதல் போலுதிர்ந் துக்க விறைச்சியைக்
காட்டியுந் தின்னுங் கருத்திலை நீ தசை
வேட்டுநின் றேயழைத் தீவினை யாளோ.

334.

மானொடு மீனில மன்னு முடம்பட
லூனடு வாரிடு வாரை யொளித்தலிற்
றானடை யாவினை யாமென்ற றத்துவந்
தீனிடை நீபட்ட தீச்செய்கை யென்னோ.

335.

குறிக்கப் படாமையிற் கொல்வினை கூடான்
பறித்துத் தின்பானெனிற் பாவமாம் பூப்போற்
செறிக்கப் படுமுயிர் தீவினை பின்னு
நெறிக்கட் சென்றாறலைப் பாரொப்ப னேர்நீ.

336.

விலையறம் போலு மெனின்வினை யாக்க
நிலையுமீ றென்பது நேர்குவை யாயின்
வலையினின் வாழ்நர்க்கும் வைகலு மீந்தாற்
கொலையென்றும் வேண்டலன் றோகுண மில்லாய்.

337.

நும்பள்ளிக் கீபொரு ளாலுணர் வில்லவ
ரெம்பள்ளி தாஞ்சென் றெடுப்ப வெனினது
கம்பலை யாம்வினை யில்கறிக் கீபொருள்
செம்பக லேகொலை யாளரிற் சேரும்.

338.

நாவின்கண் வைத்த தசைபய னேயென
வேவினை நீயுமற் றின்பமஃ தாதலிற்
றேவன்கண் வைத்த சிரத்தை செயலன்று
தூவென வெவ்வினை யைத்துடைத் தாயால்.

339.

கன்றிய காமந்துய்ப் பான்முறைக் கன்னியை
யென்றுகொ லெய்துவ தோவெனுஞ் சிந்தையன்
முன்றினப் பட்ட முயன்முத லாயின
நின்றன வுந்தின நேர்ந்தனை நீயே.

340.

தூய்மையி லாமுடை சுக்கில சோணித
மாமது போன்மெனி னான்முலைப் பாலன்ன
தூய்மைய தன்றது சொல்லுவன் சோர்வில
வாம னுரைவையந் தன்னொடு மாறே.

341.

மேன்மக்க ணஞ்சொடு கள்வரைந் தாரது
போன்மக்க ளாரும் புலால்வரை யாரெனிற்
றான்மேய்க்க ணின்ற தவசிமற் றெங்குள
னூன்மெய்க்கொண் டுண்பவ னுன்னல தென்றால்.

342.

பார்ப்பனி யோத்துநின் னோத்தும் பயமெனி
னீப்பவுங் கொளபவு நேர்து மவையவை
தூப்பெனு மில்லன வேசொல்லி நிற்குமோர்
கூர்ப்பினை நீயென்றுங் கோளிலை யென்றாள்.

343.

தூவினி னுண்புழுத் துய்ப்பனென் னாமையிற்
றீவினை சேர்ந்திலன் றின்பவ னென்னினு
மோவெனு முன்விலை வாணிக ரென்றினர்
மேவினர் தாம்விலை யேவினை வேண்டார்.

344.

அடங்கிய வம்பு பறித்தன் முதலா
வுடங்குசெய் தார்வினை யொட்டல் ரென்பாய்
மடங்கினர் வாழ்க வெனுமாற் றார்போற்
சடஞ்சொல்லித் தின்பதிங் கியார்கட் டயாவோ.

345.

தின்னு மனமுடைப் பேயெய்துந் தீவினை
மன்னு மிகவிடைத் தாய்வினைப் பட்டில்லா
ளென்னு முரைபெரி தேற்கு மிகழ்ச்சி
தன்னை வினைப்பட நீசொல்லி னாயால்.

346.

அறஞ் சொல்லக் கொள்ளு மறமென் றறிந்தாங்
கறஞ்சொல்லி னார்க்கற மாமென் றறியாய்
புறஞ்சொல்லி தன்று புலால்குற்ற மென்று
துறந்தொழிந் தாற்கொலை துன்னினர் யாரோ.

347.

அறந்தலை நின்றாங் கருளொடு கூடித்
துறந்தனன் யானென்னுஞ் சொல்லு முடையாய்
மறங்கொண்டி துண்டென்னை மன்னுயிர்க் காமே
சிறந்ததுண் டோவிது சிந்தித்துக் காணாய்.

இஃது ஆசிரியர் கூற்று

348.

பேயொப்ப நின்று பிணங்கிக்கண் டார்க்கெனு
மாயத்தி னூனுண்ண மன்னு மருமையி
னாயொப்பச் சீறி நறுநுத லாளொடு
காயக் கிலேசத்திற் கட்டுரைக் கின்றான்.

மொக்கலன் கூற்று
வேறு

349.

வெயிறெறவ் வுணங்கியும் வெள்ளிடைந் நனைந்துமூன்
டயிறலிற் பட்டினிகள் விட்டுமின்ன கட்டமாய்த்
துயிறுறந் திராப்பகற் றுன்பவெங் கடலினார்க்
கயிறெறுந் நெடுங்கணா யாவதில்லை யல்லதும்.

350.

காயம்வாட்டி யுய்த்தலிற் கண்ட நன்மை யுண்டெனின்
தீயினாற் சுடுதலுந் தெற்றியேறி வீழ்தலு
நோயினாற் றிரங்கலுந் நோன்மையென்ன லாம்பிற
நீயனா யிதற்கினி நேமியென்று சொல்லென.

நீலகேசி கூற்று
(இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடர்)

351.

புண்ணினைத் தடிதலும் போழவாற்றி நிற்றலும்
கண்ணினைக் கழிகள்ளான் மிண்டிக்கொண்டு நீட்டலும்
விண்ணுயர் நெடுவரைவ் வீற்றுவீற்று வீழ்தலும்
அண்ணலார்தஞ் செய்கையு மாவதில்லை யல்லதும்.

352.

தூக்கடம்மை யாக்கலே தொல்லைநல் லறம்மெனின்
நாக்களைப் பறித்தலுந் நான்றுவீழ்ந்து பொன்றலுந்
தீக்கள் பாய்ந்துசாதலுந் தீயசெங் கழுவ்வின்மேன்
மேக்கினைக்கொண் டேறலு மேன்மையென்ன லாம்பிற.

`பாரமிதைழு

353.

தானஞ்சீல மும்பொறை தக்கதாய வீரியம்
மூனமில் தியானமே யுணர்ச்சியோ டுபாயமும்
மானமில் லருளினைவ் வைத்தலேவ லிம்மையுஞ்
ஞானமீரைம் பாரமீதை நாடுங்கா லிவைகளும்.

354.

விருக்கமூலி யாகலும் வெள்ளிடை யுறைதலும்
மிருத்தனிற்ற லன்றியு மிட்டகூறை யெய்தலும்
மருக்கையின் மயானத்துட் சேக்கையும் மனைகளை
வருச்சியார் புகுதலும் மற்றவற்றொ டுண்டலும்.

இதுவுமது

355.

அத்திட்டாடை கோடலும்
     மமையுமென்ன நீங்கலும்
பெற்றதன்னிற் சேக்கையும்
     பேர்த்துண்ணா தொழிதலும்
குற்றமென்னப் பிச்சையுங்
     குறித்துழிப் புகாதுதான்
றுற்றியுய்த்த றன்னொடு
     துதாங்கென்றாத்தர் சொன்னவே.

356.

பாரமீ துதாங்கொடு பற்பல கிலேசமும்
நேருமனையி லுண்மையா னீரும்வேண்டி னீரெனக்
கூரிமம் வெயில்பசி கூடலங் கூடினாற்
சேர்தலில்லை நல்லறஞ் சிந்தையென்று செப்பலும்

357.

அருந்தடிக ளீரவும் மறஞ்செய்வாளிற் போழவும்
வருந்துவான துள்ளநீ மாட்சிநன்று மென்றியா
லிருந்துநின்று நன்னெறிக் கிடைப்படாத சிந்தையாற்
பெருந்தவங்கள் செய்ந்நரைப் பேசுவாயோர் பேதையே.

இதுவுமது

358.

புத்தராகு மாண்பினார் போதிசத்து வர்கட்காம்
பத்துமாய பாரமீதை பாரவிட்ட மென்றலும்
சித்தராகு மாண்பினாற் சீலமும் வதங்களும்
மெத்துணையும் மாயிரம்மா மென்றுமியாமு மென்றனள்.

359.

உடம்பினுள்ள பல்லுயிர் சாவவூனுண் மானுக்குத்
தடங்கொண்மா வரைமிசைத் தன்னையீத னன்மையேற்
படம்புனைந்த வர்கடாம் பலருமுண்ணு நீரினுள்
விடம்பெய்தாற்கு நன்றுகொல் வியாதியாளன் றீர்கென.

இதுவுமது

360.

அல்லவர்கள் சாதலை அறிந்தனன் னவனெனில்
நல்லதில்லை நஞ்சினா லென்றுநாட்டு வாயெனி
னெல்லையில்ல பல்லுயிர் தன்கணுள்ள வெஞ்சலுங்
கொல்லவந்த வூன்களும் குற்றமென்ற வாறுகொல்.

வேறு

361.

நீட்சி திரிவா மயிருகிர் காட்டினை
மாட்சியில் லாமயிர் மன்னுயி ருள்வழித்
தாட்க ணிமிருந் தலைநிமி ராவெழல்
காட்சி மரத்திற்குக் காறலை யெங்கும்.

362.

மரங்கள் வளருமென மன்னுங் கூம்பி
விரிந்த விலையின் வேற்றுமை சொன்னாய்
பொருந்து மிவையு மல்லவு மன்றோ
வொருங்கிவ் வுலகத் துயிர்களு மென்றாள்.

363.

வயாத்திரு வாக்கி வளர்பூ சணிக்குத்
தயாச்செய்கை தீதென்னுந் தத்துவங் கண்டா
யுயாப்பிழைத் தாய்மெழு கூனொடு பட்ட
வயாவதற் கீண்டுப் பயத்தலி லன்றே.

364.

யாதினு மாழ்குமம் மாழ்கியு மென்றுழி
நீதின்னுந் தோலை நெருப்பொடு கூட்டத்தி
னோதினை தேறுற நீர்க்குரைத் தாய்மற்றுஞ்
சேதனை யில்லாய் திரிவென்னை வண்ணம்.

365.

அரும்பு மலரு மரும்பிணி தீர்வு
மொருங்குதங் காரணத் தாக்க முணர்த்து
மரங்களு மன்னுயி ரெய்தின வென்ன
விரும்பொடு காந்த மியைவி றிரிவே.

366.

ஒப்ப மரங்கட் குயிருண்மை யாமினி
யிப்படித் தோன்று மிருதுக்கள் சார்ந்தனெச்
செப்பிய வேதுத் திரிவெனக் காட்டிய
வெப்பங் குளிரவை தாமவை யேயால்.

367.

மரங்கிளை யொப்புமை யாலுயி ரென்னக்
கிரந்தியும் வெப்புங் கிளக்குவை யாயி
னிரந்த வுடம்பின் விகார நினக்குப்
பரந்துண ருண்மையைப் பார்ப்படுத் தாயால்

368.

வாட்டங்க ளுண்மையின் வாழ்மரஞ் சேர்ந்தவை
நாட்டிய வாதலி னல்லுயி ரோவெனக்
காட்டிய தோலொத் திராமையும் வாடுமத்
தோட் டஞ்செய் சேம்புயிர் தொன்முடி வன்றோ.

369.

அற்ற வுடம்புக ளாறுத லான்மரந்
தெற்ற வுயிருண்மை செப்பத்தி னாமெனப்
பெற்ற பிழைசொல்லிப் பித்தெழுந் தாரொப்பக்
குற்ற மிவையெனக் கூறுதி யன்றோ.

370.

காட்டின மண்ணை முதலா வுடையன
வோட்டி யுரைத்த வுயிரென வொட்டலர்
நாட்டினுள் வாழ்பவ ரின்னரென் றாவந்த
நாட்டை யவரென்ன நாட்டிய வாறே.

371.

தாவர மாய மரமிவை தாமென
யாவருஞ் சொல்லுப வஃது மறிந்திலை
நீவி ரெவர்சொல்லச் சொல்லினீ ரென்றுநின்
சீவரம்போற் கட்டில் செப்புவ தென்னோ.

372.

மக்களுட் டோன்றிய போழ்த மரவுயிர்க்
கொப்ப வுடம்பறி வன்றியொன் றில்லெனிற்
றக்கதன் றன்மையுடைப் போதி சத்துவன்
மிக்கதென் னோதிக்கு வேற்றுமை வேண்டார்.

373.

நாண முடைய மரமுத லியாவையும்
மூணின வாழந்துமுண் ணாவிடிற் சாதலைக்
காணவும் பட்டது கஞ்சியோ டல்லதை
யாண மிலாப்பொரு ளாட்சியர் போன்றே.

நூலாசிரியர் கூற்று
வேறு

374.

மயக்குடை யாட்சியி னார்க்கு மரங்கட்கு மன்னுயிர்தாம்
பயப்பட வொக்கு மெனவே யெனமன்னும் பற்றிலனாய்
வியப்புடை யாகம மீதனெ நீயும் விரித்துரைக்கு
நயப்பிர மாணங்கண் மேற்குற்ற நாடுவன் யானெனவே.

மொக்கலன் குற்றங் கூறுதல்

375.

நிற்றலுங் கேட்டினோ டுண்மையு மின்மையு நேர்தலினு
மொற்றுமை வேற்றுமை தம்மையு மொட்டப் படுதலினுங்
குற்ற மிவையிவை யாதலைக் கேளெனக் கூறினனே
முற்று மவளது பக்க மறிதலில் மொக்கலனே.

376.

வேயொத்த தோளி நிலையுதல் வேண்டப் படுதலினாற்
காயத்தின் றன்மைய வாயெக் கருமமுங் காண்பரிதா
நாசத் தவமெனிற் றோன்றுவ தாமு நவநவமாம்
தோசத்த வாநின் பொருளெனக் கேட்டிது சொல்லினனே.

377.

நின்றன வேயென்று நில்லல
     வேயென்று நேர்பவர்க்கு
மொன்றென வேயும்பின் வேறென
     வேயுந்தம் முண்மையின்கட்
சென்றன வேயென்றுஞ் செல்லல
     வேயென்றுஞ் செப்பினர்க்கே
அன்றென லாமோ வறைந்தபல்
     குற்ற மவையவையே.

378.

நின்ற குணங்களி னித்தியமென்று நிலையிலவா
மென்ற குணங்க ளநியத மென்று மியம்புதலாற்
சென்ற குணங்க ளிருமையு மல்ல தவற்றினிற்றீர்ந்
தொன்றங்குநின்ற பொருளுள்ள தேலா
தனெவுரைத்தான்.

379.

கேடில வாய குணத்தி னிலையுங் கெடுங்குணத்தி
னீடல வென்பது நேர்ந்தினி யப்பொரு ணேர்தலில்லாய்
மூடலை யாவதன் காரண மென்னை முடிகுணத்திற்
கூடல தாய குணிப்பொருள் கூறினர் யாவரென்றாள்.

மொக்கலன் கூற்று

380.

குணங்களல் லாற்பொருள் வேறில்லை
     யாயிற் குறிப்பொருளாம்
பிணங்கல வாகிப் பிறபிற
     வாயிற் பிறபொருளா
முணர்ந்தன தாமிரு சொல்லினு
     மொன்றெனி னொன்றவையா
நுணங்கிய கேள்வியி னாயொன்
     றுரையென நோக்கினனால்.

நீலகேசியின் மறுமொழி

381.

நிலையா தனெவு முயிரில்லை
     யென்று நெறிமையினாற்
றொலையாத் துயரொடு தூய்தன்மை
     யென்றின்ன தொக்குளவாக்
கலையா விழுப்பொருட் கந்தங்க
     ளைந்திற்கும் காட்டுதலான்
மலையா திதுநுங்கண் மார்க்கத்தொ
     டென்றனள் மாணிழையே.

382.

ஆரிய சத்தைய லாற்கந்தம்
     வேறில்லை யேற்குறியா
மாரிய சத்தையுங் கந்தமும்
     வேறெனின் வேறவையாம்
பேரிவை தாமிரண் டொன்றினுக்
     கேயெனி னொன்றவையாங்
கூரிய சிந்தையி னாயொன்று
     சொல்லென்று கூறினளே.

மொக்கலன் கூற்று

383.

சொல்லலன் யானெனச் சொல்லுவை
     யாயினுஞ் சொன்மலைவாம்
சொல்லல னென்ன வினவினு
     மென்னினுஞ் சொல்லிலையாம்
சொலுவ னல்லன் ஒருவகையாச்
     சொல்லினவ் வகையாற்
சொல்லிய குற்றங்க டுன்னு
     மெனவது சொல்லினனே.

நீலகேசி மறுமொழி

384.

தன்மையி னன்மையுந் தன்னல்
     பொருள்களி னுண்மையுந்தம்
பன்மை யுடையவப் பண்புக
     ளெல்லா முடனுரையுஞ்
சொன்மை யுணரா தவர்கட்குத்
     தான்சொலற் பாடின்மையாற்
புன்மை யுடைய புறத்தீ
     ருரைக்கு முரையுமென்றாள்.

மொக்கலன் கூற்று

385.

சேற்பொருள் போலரி சிந்திய
     கண்ணாய் சிதர்ந்துரைக்கு
நூற்பொரு டாம்பரி ணாமத்
     திரிவென நோக்குதியேற்
பாற்பொரு டான்றயி ராய
     பொழுதின்கட் பாழ்த்திலதேற்
பாற்பொரு ளேயின் றயிரெனச்
     சொல்லப் பழுததென்றான்.

நீலகேசி மறுமொழி

386.

உருவப் பிழம்பப் பொருளென்
     றுரைப்பனிப் பாறயிர்மோர்
பருவத்தி னாம்பரி யாயப்
     பெயரென்பன் பாலழிந்து
தருவித் துரைத்த தயிருரு
     வாய்மும்மைத் தன்மையதாந்
திருவத்த தென்பொரு ளாதலைத்
     தேர தெளியிதென்றாள்.

மொக்கலன் கூற்று

387.

பெற்றது தானுங்கும் மாயத்
     திரிபு பயற்றியல்பே
யிற்ற திதுவென திட்டமென்
     பாயிவ் விருமையினுந்
தெற்றெனத் தீர்ந்தோர் பொருளென்னை
     தேற்றினித் தேற்றலையேன்
மற்றது வாமை மயிரெனச்
     சொல்லுவன் மன்னுமென்றான்.

நீலகேசி மறுமொழி

388.

கெட்ட திரட்சியுந் தோன்றிய
     சாந்தும் பொருளெனவும்
பட்டன வப்பொருள் பையைகளே
     என்னும் பான்மையினால்
விட்ட திரள்வினுந் தோன்றிய
     சாந்தினும் வேற்றுமையாம்
நட்டமுந் தோற்றமு நாட்டே
     னுருவிற்கு நானுமென்றாள்.

மொக்கலன் கூற்று

389.

திரியும் பொருள்க டிரிந்தாம்
     பயறுகும் மாயமுமாய்
விரியும் மெனவது வேண்டுகின்
     றாயறக் கெட்டமைக்கேற்
கரியும் முடையன் பயறொடு
     நீருங் கலந்துபெய்தா
லெரியுறு கின்றதன் றேயிது
     வோவொப்ப விற்றதென்றான்.

நீலகேசி மறுமொழி

390.

பருமை யுடைய பயற்றின்
     வழியொன்று பாவியுண்டா
யருமை யுடையவந் நீருக்கு
     மாவியன் றோவதன்றி
யிருமையுங் கெட்டுட னாயிற்கும்
     மாயமு மில்லற்கனும்
பெருமையி னாலொன்று பெற்றொன்று
     பேறின்மை பேதைமையே.

மொக்கலன் கூற்று

391.

கெடுவன தோன்றுவ நிற்பன தாமுங் குணமென்றியேற்
கெடுவன தோன்றுவ நிற்பன தாங்குண மாயினக்காற்
கெடுவது தோற்ற நிலையுத றானப் பொருளெனவும்
படுவஃ தாக வுரைப்ப தியாதின் பயத்ததென்றான்.

நீலகேசி மறுமொழி

392.

கூறிய தெக்குண மக்குணந்
     தானக் குணிப்பொருளே
தேறிய தெக்குணி யக்குணி
     தீர்ந்தில பல்குணமும்
வேறென வொன்றென விவ்வகை
     வேண்டுகின் றேற்கவைதா
மாறென்னுங் கொள்ளா முடிபு
     மொழிநின் மயக்கமென்றாள்.

மொக்கலன் கூற்று

393.

புற்கல மாய முதற்பொரு
     டத்தமுட் புல்லினவாய்க்
கற்களு நீருந் நிலத்தொடு
     காற்றழ லென்றினைய
பற்பல கூற்றாற் பிறங்கிப்
     பரக்குந் திறமென்னையோ
வுற்றவை யொன்றொன்றி னுட்புகு
     மோத்துடை யாய்க்கெனலும்.

நீலகேசியின் விடை

394.

யாத்தற் கமைந்த குணத்தின வாய வணுப்பொருள்க
ணீத்தற் கரியன நீத்த வருக்க நெறிமையினா
லேத்தற் கியைந்த விரண்டணு வாதியி னின்னணமா
மோத்திற் கிடந்த வகையிது கேளென் றுரைத்தனளே.

மொக்கலன் கூற்று

395.

இரண்டணு வாதியி னின்னண
     மேறுநின் கந்தமெனிற்
றிரண்டன வாய்த்தம்முட் சென்றுடன்
     றீண்டு மிடத்தவைதா
முருண்டன தாமொன்றி னுள்ளும்
     புடையு முடைமையினாற்
றெருண்டனம் பாகுபா டுற்றற்கு
     மென்றனன் றேரனுமே.

நீலகேசியின் விடை

396.

ஓரிட மாய முதற்பொருட் குள்ளும் புடையுஞ்சொல்லிப்
பேரிட மாக்கிப் பிளப்ப னெனவும் பிதற்றுகின்றா
யாரிட மாய வறிவிற்கு மின்னண மாதலினா
னேரிடத் தாற்பன்மை யெய்தி யுருவா நெறியுமென்றாள்.

மொக்கலன் கூற்று
வேறு

397.

வண்டாயுங் கோதாய் வரைநெல்லியின்காய தங்கை
யுண்டாய போதே யுறையூரகத் தில்லை யென்பாய்
கண்டாயிம் மெய்ம்மை பிறர்காண்டற் கரிய தென்றான்
பெண்டான மீயு மறங்கொண்ட பெருமை யினான்.

வேறு
நீலகேசியின் விடை

398.

வெய்தாய தீயுங் குளிராகிய நீரும்விண்டோய்ந்
தைதாய காற்று மவையாரு மறிப வென்றாற்
பொய்யாகு மென்னா யவைபுத்த வசன மென்பாய்
செய்தாய் முழுக்கூ ழதுபோலச் சிதைக்க வென்றான்.

மொக்கலன் கூற்று

399.

கந்தின்கட் காணாய் களியானையை யில்லை யென்பாய்
வந்திங்க ணின்ற பொழுதுண்மை மறுக்க லாமோ
தந்திங் குரைத்த வுரைதானுங் கெடுக வென்றான்
வெந்திங்கு வித்தின் னனைத்தாகிய வீடு கண்டான்.

நீலகேசி கூற்று

400.

ஆண்டில்லை யென்பன் னதுவுள்வழி யுண்டு மென்ப
னீண்டின்மை யுண்மை யிவையாக விசைத்துநின்றேன்
வேண்டி யனவே முடிப்பாய்விரி பொன்னெ யிலு
ளீண்டி யிமையோர் தொழுவானெம் மிறையு மென்னாய்.

மொக்கலன் கூற்று

401.

கொல்லேற்றின் கோடு குழக்கன்றது வாயி னக்கா
லில்லாகு மென்றி யிவையிங்ஙன முண்மை யின்மை
சொல்லேனு மல்லே னதுசொல்லுவன் யானு மன்னாய்
கொல்லேற தாகாப் பொழுதேயுடன் கூறு கென்றான்.

நீலகேசி கூற்று

402.

ஏறாய காலத் தெழினல்லது வத்து பேதங்
கூறாரெ ழாத குழக்கன்றினுக் கின்மை முன்னா
வீறாகி நிற்கும் முதலுண்மையிற் கின்மை யெங்கு
மாறியாது மில்லை கலைக்குண்மையு மற்றுமென்றாள்.

மொக்கலன் கூற்று

403.

கன்று முயலுங் கழுதைப்பெயர் பெற்ற னவுங்
குன்றுந் தலையுட் பெறப்பாடெய்தல் கோடு றுப்பா
வென்றும் மவற்றுக் கெழலில்லைநின் பேத மென்றாற்
சென்றுஞ் சிலவிற் சிலவின்மையு மாகு மென்றான்.

நீலகேசி கூற்று

404.

இல்லாத கோட்டை யுளதாக வெடுத்து மென்று
சொல்லார்கள் பேதம் சொலவேண்டுவை யாயி னக்காற்
புல்லாது நில்லாப் பொருடங்களுக் குண்மைக் கின்மை
கல்லாது நீயுங் கழுதைக்கருள் செய்தியென்றாள்.

மொக்கலன் கூற்று

405.

இல்லை வலக்கை யிடக்கைவகை யால தென்றுஞ்
சொல்லின் னதற்கு மதுவேயெனுஞ் சூழ்ச்சி மிக்கா
யொல்லை யிரண்டு முளவாக வுணர்ந்தனை நீ
நல்லை பெரிதும் மெனமொக்கல னக்க னனே.

நீலகேசி கூற்று

406.

இக்கை வகையா லதுதானுள தாயி னக்காற்
றொக்க விரண்டும் முடனாதலிற் றூய்தொருபால்
பக்கம் மதுவும் படுபாழினிக் காலு மற்றாய்ச்
செக்கின் கணைபோன்றினிச் சென்றுருள் சேம மென்றாள்.

மொக்கலன் கூற்று

407.

கைகால் வகையால் பெறப்பாடிலை காலு மற்றாய்
மெய்தா மொழிய வவைபாறெய்தல் வேண்டு தலாற்
கொய்தார் நறும்பூங் குழலாய்குழ மண்ணர் களாச்
செய்தா யுலகிற் சிறுமானுயர் தம்மை யென்றான்.

நீலகேசி கூற்று

408.

கால்கால் வகையா லுளகைகளுங் கையி னற்றாய்ப்
பாலாய் முடிய மவைபண்டை யியல்பி னாலே
யேலா திவைதா முளவெத்திறத் தானு மென்னி
னாலாவ தான முடிவி னாயொடு நண்டு மொத்தாய்.

மொக்கலன் கூற்று

409.

அல்லென் றுரைத்த வுரைதானுமெம் மாக மத்து
ளில்லென்ற வாறென் றிவையிங்ஙனம் வேண்டு கின்றாய்
சொல்லன்று நாயைந் நரிதானென்னச் சொல்லு கின்றா
னில்லென்ற வாறோ நரிதன்னையு மென்ற னனே.

நீலகேசி கூற்று

410.

நாய்கொன் னரிகொல் லெனத்தோன்றுமுணர்வு நண்ணி
யாய்சொல் லிரண்டின் னுணர்ந்தல்லதுவின்மை யென்றாய்
நீசொல் லறியா யறிவார்நெறிநேடு கில்லாய்
பேய்சொல லுபவே பலசொல்லிப் பிதற்ற லென்றாள்.

மொக்கலன் கூற்று

411.

பேரும் உணர்வும் பொருளில்லதற் கில்லையென்றி
சார்வும் மகல்வுந் தலைப்பெய்தலோ டுள்ள மின்மை
நேரிங் கிவையு முணராமையிற் கென்ற னனாய்த்
தேரன் சிறிதே தெரிகோதையை நக்க னனே.

நீலகேசி கூற்று

412.

ஆத்தன் னுரைத்த பொருடன்னையவ் வாசகத்தாற்
சாத்தன் பயின்றா லறியாவிடுந் தன்மை யுண்டோ
வீர்த்திங் குரைத்த பலதம்முளொன் றின்ன தென்னா
யோத்தின் வகையாற் பெயரோடுணர் வின்மைக் கென்றாள்.

மொக்கலன் கூற்று

413.

ஒன்றி னியற்கை யொருவான்பொருட்கில்லை யென்றே
யென்று முரைத்தி யிரும்பெய்திய வெம்மை யந்நீர்
சென்றும் மறுகித்தெறு தீக்குணஞ் சேர்ந்த தற்றேற
குன்றும் பிறவோ வினிநீகொண்ட கோளு மென்றான்.

நீலகேசி கூற்று

414.

கொண்ட வுடம்போடுயிர் தானுடன் கூடி நின்றாற்
கண்டு முணர்ந்து மவையாதென் கல்வி யில்லா
யுண்டங்க ணின்ற வுயிர்க்காக வுரைப்ப தொக்கும்
பிண்டந் நிகழ்ச்சி பிழைப்பாகு நினக்கு மென்றாள்.

மொக்கலன் கூற்று

415.

மெச்சி யிடத்தாற் பிறிதின்மை விளம்பு கின்றாய்
பிச்சை முதலாப் பெரிதாவறஞ் செய்த வன்றா
னச்செல் கதியுள் ளமரன்னெனப் பாடு மின்றே
வீச்செய்கை யெல்லா மிகழ்வாம்பிற வென்ற னனே.

நீலகேசி கூற்று

416.

ஊனத்தை யின்றி வழங்காவுழல் கின்ற போழ்து
மானத்தி னீங்கி வதங்காத்து வருந்தும் போழ்தும்
வானத்த தாய பொழுதுமன் னுயிர தென்றா
டானத்தி னுண்மை யிதுதத்துவ மாக்கொ ளென்றாள்.

மொக்கலன் கூற்று

417.

காலம் பிறிதிற் பொருளில்லெனக் காட்டு கின்றாய்
ஞால மறியத் தவஞ்செய்தவ னல்லு யிர்தா
னேலங்கொள் கோதா யெதிர்காலத்தி னின்மை யாமேற்
சீலங்கள் காத்தல் வருத்தஞ்சிதை வாக வென்றான்.

நீலகேசி கூற்று

418.

ஆற்ற வருந்தித் தவஞ்செய்து மரிய காத்துந்
நோற்றும் பெரிதுந் நுணுகாநின்ற பொழுதி னானும்
மேற்ற முடைய விமையானெனப் பட்ட போழ்துஞ்
சாற்றி னுயிர்தன் பொழுதே யுண்மை தங்கு மென்றாள்.

மொக்கலன் கூற்று

419.

நூறா னிரும்பாய் நிகழாமை நொடிதி யாங்கே
பாறான் றயிரா மெனநின்று பயிற்று தியான்
மாறா னுடையா ருரையொக்குநின் மாற்ற மென்னாத்
தேறார் தெருண்டா ரெனச் சொல்லினன் றேர னும்மே

நீலகேசி கூற்று

420.

தத்தந் நிமித்தந் தலைப்பெய்துதங் காரி யம்மா
யொத்த பொருள்க ணிகழ்வாக்க முரைத்து நின்றேன்
பித்தனி னொப்பப் பிறிதிற்பிறி தாமென் பனோ
வித்தின் வழியா னுரைநீயும்வெள் யானை யென்றாள்.

மொக்கலன் கூற்று

421.

கூடா பொருள்கள் பிறிதின்குணத் துண்மை யென்பாய்
பாடாலப் புட்பத் தனவாகிய பண்பு நாற்றம்
மோடாவ தெய்திற் றெனவையமுரைக் கின்ற தஃதா
னாடாது சொன்னா யதனன்மை யொழிக வென்றான்.

நீலகேசி கூற்று

422.

போதுக்க வாசம் புதுவோட்டைப் பொருந்தினாலும்
மேதக்க நாற்ற மிதுபூவின தென்ப மிக்கார்
தாதுக்க நின்று மவைபோக்குந் ததாக தற்கென்
றேதுக்கள் காட்டி முடித்தாளிணை யில்ல நல்லாள்.

வேறு
மொக்கலன் கூற்று

423.

வீட்டிட மென்று நின்னால்
     வேண்டவும் பட்ட தன்னை
நாட்டுவ னதுவு நாயிற்
     கென்றுநன் றென்றி யாயிற்
சூட்டடு நரகந் தானுஞ்
     சுடர்ந்தநற் சுவர்க்கந் தானும்
பூட்டின முரைத்த வக்காற்
     போந்ததங் கென்னை யென்றான்.

நீலகேசி கூற்று

424.

கதியின வகைய வாறுங்
     கந்தபிண் டங்கள் சொன்னான்
பதியின வென்ன நின்றாய்
     பாக்கனாய் காட்டு தீயால்
விதியினின் வினையட் டார்தம்
     வீட்டிட மின்ன தென்றாற்
கதுவென்னை யென்னச் சொன்னா
     லாகம மல்ல தாமோ.

மொக்கலன் கூற்று

425.

பேர்த்திவண் வார லில்லாப்
     பிறவியாந் தான மென்னிற்
றீர்த்திவண் வார லின்மை
     சேர்விடக் குண்மை யாமோ
கூர்த்தலில் வினையி னின்மை
     கூறுவ னென்றி யாயி
னார்த்துள னவனே யாயி
     னண்ணுமே வினையு மென்றான்.

நீலகேசி கூற்று

426.

பிறப்பதை வீடு மென்னே
     னவ்விடம் பேர்ப்பின் றென்னே
னுறத்தகு வினைக டாமு
     முண்மையா லொட்டு மென்னேன்
மறத்தலில் யோக பாவ
     மாசுதா மீட்டு மென்ப
திறப்பவும் வேண்டு கின்றேற்
     கெய்தல நின்சொ லென்றாள்.

மொக்கலன் கூற்று

427.

பிறக்குந்தன் ஞானத் தாலும்
     பின்னுந்தன் னுண்மை யாலும்
புறப்பொருள் கொண்டு நின்று
     புல்லிய சிந்தை யாலுஞ்     
சிறப்புடை வீடி தென்று
     செப்புநீ தீவி னையைத்
துறக்குமா றில்லை நல்லாய்
     சொல்லுநீ வல்ல தென்றான்.

நீலகேசி கூற்று

428.

நன்றியில் கார ணங்க
     ணாட்டிநீ காட்டி னவ்வு
மொன்றுநா னொட்டல் செல்லேன்
     யோகொடு பாவ நின்றாற்
குன்றினிற் கூர்ங்கை நட்டாற்
     கூடுநோ யாதிற் குண்டோ
வொன்றுநீ யுணர மாட்டா
     யொழிகநின் னுரையு மென்றாள்.

மொக்கலன் கூற்று

429.

கருவிதா னொன்று மின்றிக்
     கடையிலாப் பொருளை யெல்லா
மருவிய ஞானந் தன்னா
     லறியுமெம் மிறைவ னென்பாய்
கருவிதா னகத்தி னாய
     கடையிலா ஞான மன்றோ
மருவியார்க் கமிர்த மொப்பாய்
     மாற்றந்தா விதனுக் கென்றான்.

நீலகேசி கூற்று

430.

வினையுமவ் வினையி னாய
     விகலஞா னங்க டாமு
மினையவே கருவி யென்றா
     லிங்குநின் னுள்ளம் வையாய்
முனைவனாய் மூர்த்தி யல்லான்
     மூடுமே மாசு மென்பாய்
கனைகட லெல்லை காணுங்
     காக்கையொத் தாய்கொ லென்றாள்

மொக்கலன் கூற்று

431.

கொண்டதன் கரணந் தானு
     மில்லையேற் கூற்று மில்லை
மண்டினர் வினவு வார்க்கு
     மலைச்சிலம் பனைய னென்றா
லுண்டுதன் கரணந் தானு
     முரைக்குநர்க் குறுவ னென்னிற்
பண்டுசெய் நல்வி னையைப்
     பகவனே யென்று மென்றான்.

நீலகேசி கூற்று

432.

தனுவெனுங் கருவி தன்னாற்
     றன்னடைந் தார்க டன்னை
வினவின வுணர்ந்து சொல்லும்
     வினையினுக் கின்ன துண்டோ
சினவினுந் தேர வொன்று
     செப்புவன் செல்க தீயுட்
கனவினு நின்ன னாரைக்
     காணல னாக வென்றாள்.

மொக்கலன் கூற்று

433.

முறையினா லறிய லன்னேன் மூத்தலே யிளமை சாக்கா
டுறையல வொருவன் கண்ணே யுடனவை யாக வொட்டி
னிறைவனா ருணர்வு தானுமின்மைமே லெழலும் வேண்டி
யறைதுநா மன்ன மன்னா யன்னண மாக வென்றான்.

நீலகேசி கூற்று

434.

சீலவான் றெய்வ யாக்கை
     திண்ணிதா வெய்தி நின்றார்
காலமூன் றானு முய்த்துக்
     காட்டலுங் காண்டு மன்றோ
ஞாலமூன் றானு மிக்க
     ஞானவா னான நாதன்
போலுமென் றோர்தல் செல்லாய்
     போர்த்தனை யகமு மென்றாள்.

மொக்கலன் கூற்று

435.

நாளெல்லா மாகி நின்ற
     நன்பொரு டம்மை யெல்லாங்
கோளெல்லாந் தானொ ருங்கே
     கொள்ளுமே லீர்ங்கு வள்ளைத்
தாளெல்லாந் தானொ ருங்கே
     தானுநல் லானோர் நல்ல
வாளினா லேறு முண்டேல்
     வாய்க்குநின் னுரையு மென்றான்.

நீலகேசி கூற்று

436.

நீருநீர் தோறு மொவ்வா
     நிலையிற்றே திங்க ளென்று
மூரினூர் தோறு மொவ்வா
     வொளியிற்றே ஞாயி றென்றும்
யாரின்யார் கேட்ட றீவா
     ரன்னனே யண்ண லென்றார்
தேரனீ சொன்ன தன்னம்
     சேரல வாக வென்றாள்.

மொக்கலன் கூற்று

437.

அளவிலாப் பல்பொ ருள்கட்
     காகுபண் பாகி நின்ற
வுளவெலாப் பொதுக்கு ணத்தா
     னொருங்குகோ ளீயுமென்னிற்
பிளவெலா மாகு மன்றே
     பெற்றிதா மொத்த லில்லேற்
கொளவெலா ஞானந் தானுங்
     கொள்ளுமா றெவன்கொ லென்றான்.

நீலகேசி கூற்று

438.

ஒன்றல்லாப் பலபொ ருளு
     மொத்தொவ்வாப் பெற்றி யாலே
நின்றுகோட் செய்யு மென்றா
     னீடிய குற்ற மாகா
தென்றலா லின்ன தன்மை
     யிறைவன தறிவு மெய்ம்மை
யின்றெலாங் கேட்டு மோரா
     யேடனீ யென்று சொன்னாள்.

மொக்கலன் கூற்று

439.

எல்லையில் பொருள்க டம்மை எல்லையி லறிவி னாலே
யெல்லையின் றறியு மெங்க ளெல்லையி லறிவ னென்பாய்
எல்லையில் பொருள்க டம்மை யெல்லையின் றறியி னின்ற
வெல்லையி லறிவு தானு மெங்ஙன மெய்து மென்றான்.

நீலகேசி கூற்று

440.

துளக்கில்லாப் பலபொ ருளுந்
     தொக்கதன் றன்மை யெல்லாம்
விளக்குமே ஞாயி றொப்ப
     வென்பது மேலுஞ் சொன்னேற்
களக்குமே யன்ன மன்னா
     யாத்தன தறிவு மென்றென்
றிளக்கிநீ என்னு மஃதே
     சொல்லுதி யேழை யென்றாள்.

மொக்கலன் கூற்று

441.

ஓதலி லுணர்வு மின்றே
     லூறவற் குண்டு மாகு
மோதலி லுணர்வு முண்டே
     லொன்றுமே பலவும் வேண்டா
மோதலி லுணர்பொ ரூடா
     முள்ளவும் மில்ல வும்மே
லேதமா மில்பொ ருண்மே
     னிகழ்ச்சிதா னிறைவற் கென்றான்.

நீலகேசி கூற்று

442.

சென்றவக் குணங்க டாமுஞ்
     செல்லுமக் குணங்க டாமு
மன்றையக் குணங்க டாமு
     மப்பொருட் டன்மை யாலே
நின்றதன் ஞானந் தன்னா
     னிருமல னுணரு மென்றாற்
பொன்றின வெதிர்வ வென்றல்
     பொருள்களுக் கில்லை யென்றாள்.

மொக்கலன் கூற்று

443.

பிறவிதா னொன்று மில்லான்
     பெரியனே யென்று நின்றான்
மறவிதா னில்லை யோனி
     மன்னுநான் கென்னு மில்லா
னறவியா யுந்த நூலுள்
          ளாத்தனா மாயி னக்காற்
புறவினிற் புரளுங் கல்லும்
     புண்ணிய னாக வென்றாள்.

நீலகேசி கூற்று

444.

பிறத்தலே தலைமை யாயிற்
     பிள்ளைக ளல்ல தென்னை
யறக்கெட றான தென்னி
     லட்டக வித்து வெந்தாம்
புறப்படும் போர்வை யாலேற்
     புண்டொழு நோய ராகச்
சிறப்புடை யண்ண றன்னைக்
     கல்லெனச் சொல்லு வாய்க்கே.

இதுவுமது

445.

அடைவிலா யோனி யானா
     யாருமொப் பாரு மின்றிக்
கடையிலா ஞான மெய்திக்
     கணங்கணான் மூன்றுஞ் சூழ்ந்து
புடையெலாம் போற்றி யேத்தப்
     பொன்னெயிற் பிண்டி மூன்று
குடையினா னிறைவ னென்றாற்
     குற்றமிங் கென்னை யென்றாள்.

நீலகேசி மொக்கலன் தோற்றமையுணர்த்தல்

446.

கோதியிட் டுள்ள தெல்லாங்
     குண்டல கேசி யென்பா
ளாதிசா லாவ ணத்து
     ளார்கதர் தம்மை வென்ற
வீதியயீ தென்று சொல்லி
     வீழ்ந்தனை நீயு மென்றா
ணீதியாற் சொல்லி வென்ற
     நீலமா கேசி நல்லாள்.

வேறு

447.

பேதைக ளுரைப்பன வேசொல்லிப்
     பெரிதலப் பாட்டினைநீ
பேதைமற் றிவன்பெரி தனெப்படும்
     கருத்துடை மிகுதியினாய்
தாதையைத் தலைவனைத் தத்துவ
     தரிசியைத் தவநெறியி
னீதியை யருளிய நிருமலன்
     றகைநினக் குரைப்ப னென்றாள்.

வேறு

448.

பகைபசி பிணியொடு பரிவின பலகெட
முகைமலர் தளிரொடு முறிமரம் வெளிசெய
மிசைநிலம் விளைவெய்த விழைவொடு மகிழ்வன
திசைதொறு மிவைபிற சுகதன செலவே.

449.

குழுவன பிரிவன குறைவில நிலையின
எழுவன விழுவன விறுதியி லியல்பின
வழுவலில் பொருள்களை மலர்கையின் மணியென
முழுவது முணருமெ முனைவர னறிவே.

450.

நிறைபொறி யுளவவை யறிதலி னெறிமைய
முறைபொரு ணிகழினு முறைபடு மறிவிலன்
மறைபொரு ளுளவவ னறிவினை மறையல
விறைபொருண் முழுவது மறிதிற மிதுவே.

451.

பிணிதரு பிறவிய மறுசுழி யறுவதொர்
துணிவிது வெனநம துயர்கெடு முறைமையு
மணிதரு சிவகதி யடைதலு மருளுதல்
பணிதரு பரமன தருள்படு வகையே.

452.

சொரிவன மலர்மழை துளிகளு நறுவிரை
புரிவன வமரர்கள் புகழ்தகு குணமிவை
விரிவன துதியொலி விளைவது சிவகதி
எரிவன மணியிதெ மிறைவன திடமே.

453.

அரசரு மமரரு மமர்வனர் வினவலின்
வரைவில பிறர்களு மனநிலை மகிழ்வெய்த
உரைபல வகையினு முளபொரு ளுணரவொர்
முரைசென வதிருமெ முனைவரன் மொழியே.

454.

வினையிரு ளடுவன விரிகதி ரியல்பொடு
கனையிருள் கடிவன கடுநவை யடுவன
மனையிரு ணெறிபெற மதிகெட வடைவன
வினையமெ யிறையவ னிணையடி யிவையே.

வேறு

456.

ஆத்த னிவனென் றடிக ளடிமிசைப்
பூத்தனைத் தூவிப் பொருந்து துதிகளி
னேத்துநர் கண்டா யிருவினை யுங்கெடப்
பாத்தில் சிவகதிப் பான்மைய ரென்றாள்.
மொக்கலன் நீலகேசியை வினவுதல்

457.

ஏந்த றிறங்க ளிவையே லமைந்தன
போந்த வகையாற் பொருளும் பிழைப்பில
வீந்த விவற்றினின் வேற்றுமை வீட்டிற்கு
மாய்ந்த வகையா லறிவிமற் றென்றான்.

நீலகேசி வீட்டியல்பு விளம்பல்

458.

வித்தென்றும் வெந்தால் முளையல தாயெண்மை
யொத்தினி துண்டா முயிரும் பிறப்பின்றிச்
சித்தி யகத்துச் சிதைவிலெண் டன்மையி
னித்திய மாகி நிலையுள தென்னாய்.

மொக்கலன் கூற்று

459.

ஒக்கு மிதுவென வுள்ளங் குளிர்ந்தினி
மொக்கலன் சொல்லுமிம் மோக்கத்தைப் பாழ்செய்த
தக்கில தாகுந் தலைவ ரியல்பென
நக்கன னாய்க்கென்று நன்னுத லென்றான்.

இதுவுமது

460.

பண்டே யெனக்கிம் மயக்கம் பயந்தவன்
கண்டார் மயங்குங் கபில புரமென்ப
துண்டாங் கதனகத் தோத்துரைக் கின்றனன்
றண்டா தவனொடு தாக்கெனச் சொல்லி.

461.

சிறப்பின தென்பதைச் செப்பலுந் தெற்றெனப்
பிறப்பறுத் தின்பெய்தும் பெற்றியின் மிக்க
வறப்புணை யாகிய வாயிழை யாயான்
மறப்பில னென்று வலஞ்செய் தொழிந்தான்.

நீலகேசி கபிலபுரம் செல்லுதல்

462.

அருளே யுடைய னறனே யறிவா
டெருளா தவரைத் தெருட்டல் லதுவே
பொருளா வுடையாள் புலனே நிறைந்தாள்
இருடீர் சுடர்போ லெழுந்தா ளவன்மேல்