6. ஆசிவக வாதச் சருக்கம்

659.

நூலாசிரியர் கூற்று

கண்ணார் சிறப்பிற் கபில புரங்கடந்து
விண்ணாறு செல்வாள் வியன்மலைபோற றோற்றத்தாள்
உண்ணால் வினையு மொருவி யொளிர்மேனி
யெண்ணா துணர்ந்தானை யேத்தத் தொடங்கினாள்.

நீலகேசி அருகனை வாழ்த்துதல்
(இச்செய்யுள் தொடங்கி 6 செய்யுள்கள்
ஒரு தொடர்)

660.

அங்கம் பயந்தா னறைந்த சுதக்கடலுள்
பங்கங்கள் சாராப் பரசமையர் சொல்லுளவோ
பங்கங் கள் சாராப் பரசமையர் சொல்லேபோற்
புங்கவன்றன் சேவடியைச் சேராத பூவுளவோ.

661.

பூர்ப்பம் பயந்தான் புகன்ற சுதக்கடலுள்
சார்த்திப் பிறவாத் தவநெறிக டாமுளவோ
சார்த்திப் பிறவாத் தவநெறிக டம்மேபோற்
றீர்த்தன் றிருநாமங் கொள்ளாத தேவுளவோ.

662.

புலவ னுரைத்த புறக்கேள்வி சாரா
துலக நவின்றுரைக்கு மோத்தெங் குளதோ
வுலக நவின்றுரைக்கு மோத்தேயு மன்றிப்
பலவும் பகர்வாப் பயந்தனவே யன்றோ.

663.

அலரோடு சாந்த மணிந்தெம் மிறைவர்
மலரடியை யல்லதியா மற்றறிவ தில்லை
மற்றறிவ தில்லாத வெம்மை மலரடிகண்
முற்றவே செய்து முடிவிக்கு மன்றே.

664.

புனையுலகிற் காதிய புங்கவ னார்த
மிணையடியை யல்லதியா மின்புறுவ தில்லை
இன்புறுவ தில்லாத வெம்மை யிணையடிக
டுன்புறவி லக்கதியுட் டோற்றுவிக்கு மன்றே.

665.

இரவிடைநன் மணிபோலு மெண்ணா துணர்ந்தான்
திருவடியே யல்லதென் சிந்தனையி லில்லைச்
சிந்தனையொன் றில்லாத வெம்மைத் திருவடிக
ளந்திணையில் பேராற்ற லாக்குவிக்கு மன்றே.

நீலகேசி உறையூரினின்றும் சமதண்டம் என்னும்
ஊரையடைதல்
வேறு

666.

தொக்குட னாயவென் றொல்வினை தீர்கென
மூக்குடை யானடி மூன்றினும் வந்தித்துக்
குக்குட மாநகர் நின்று கொடிமினிற்
றக்கதிற் றான்போய்ச் சமதண்டம் புக்காள்.

நீலகேசி சமதண்டத்தில் உள்ள துறவோரைக்
கண்டு வினாதல்

667.

ஈண்டி யிருந்த விலிங்கியர் தங்கட்கு
மாண்ட துகிலல்குல் மாதரிது சொல்லும்
காண்டற் கினிதே கடிமலர்ப் பூம்பள்ளி
யீண்டுறை வாரிவர் யாவர்கொ லென்றாள்.

துறவோர் விடை

668.

காரணம் வேண்டாக் கடவுட் குழாந்தன்னிற்
பேருணர் வெய்திப் பெரிதும் பெரியவன்
பூரண னென்பான் பொருவறக் கற்றவ
னாரணங் கன்னாட் கறிய வுரைக்கும்.

இதுவுமது

669.

புயலிருங் கூந்தற் பொலங்கொடி யன்னா
யயலியர் தாமல்ல வாசீ வகர்கள்
வியலிடத் தியாரும் வியக்குந் தகையார்
மயலறு காட்சியிம் மாதவ ரென்றான்.

நீலகேசி வினாவுதல்

670.

ஆத்தனு நூலும் பொருளு நிகழ்ச்சியும்
பாத்தன சொல்லப் பயம்பெரி தாகலி
னோத்துரை யேயிங் குரையென் றுரைத்தனள்
சாத்திரம் யாவையுந் தன்னிக ரில்லாள்.

பூரணன் கூற்று

671.

என்றலு மற்கலி தானே யிறையினி
ஒன்பது வாங்கதிர் நூல்யா முடையன
மன்பெறு நுண்பொரு ளைந்தியல் பாயவை
யென்ப நிகழ்ச்சியுங் காழ்ப்பா டெனச்சொல.

இதுவுமது
வேறு

672.

அறிந்தா னிறைவ னவனா குதலாற்
செறிந்தான் பெரிதுஞ் செறியா துரைப்பி
னெறிந்தா னனைய வியல்பா குதலான்
மறிந்தான் றடுமாற் றகத்தே மயங்கி.

இதுவுமது

673.

உரையா னிறைவ னுணலு மிலனாய்த்
திரையா னரையான் றெரிவில் லுருவம்
வரையா வகைவா னிடுவில் லனையன்
புரையா வறிவிற் புகழ்பூ ரணனே.

நூலும் பொருளும்

674.

அடங்கல் குறிக்கோண் முதலா யினவாய்க்
கிடந்த கதிருட் கிளந்த பொருளுந்
தொடங்கி யுரையாந் தொகையா குவதே
யுடங்கே யணுவைந் துருவா யுளவே.

நில முதலியவற்றின் இயல்பும் பாலும்

675.

நிலநீ ரெரிகாற் றுயிரி னியல்பும்
பலநீ ரவற்றின் படுபா லவைதாம்
புலமா கொலியொன் றொழிய முதற்காஞ்
சலமா யதுதண் மையையே முதலாம்.

இதுவுமது

676.

எறித்தன் முதலா யினதீ யினவாம்
செறித்த லிரையோ டிவைகாற் றினவா
மறித்தல் லறிதல் லவைதா முயிராம்
குறித்த பொருளின் குணமா லியையே.

இதுவுமது

677.

அணுமே யினவைந் தவைதா மனைத்துங்
குணமே யிலவாங் குழுவும் பிரியு
முணன்மே யினுமுள் புகுதல் லுரையேங்
கணமே யெனினும் மொருகா லமிலை.

இதுவுமது

678.

இவையே பொருள்கள் இவற்றி னியல்பும்
சவையே அறியச் சிலசாற் றுவன்கேள்
சுவையே யுடையம் மெனநீ யிகழல்
லவையே பிறரா லழிதற் கரிய.

நீலகேசி பூரணன் கூற்றை வழிமொழிந்து கோடல்
வேறு

679.

அண்ணலு நூலும் பொருளு
     நிகழ்வு மிவையெனலு
மெண்ணினு மேனை யெழுத்தினு
     மிக்காங் கிருந்தவர்முன்
கண்ணினு மன்றிக் கருத்தினும்
     வேறெனக் காட்டலுற்றுப்
பண்ணலங் கொண்டசொல் லாளவை
     பேர்த்தும் பகர்ந்தனளாய்.

இதுவுமது

680.

முற்ற வறிந்துரை யாதவன் மோனாந் திருந்தனனேற்
செற்றம் பெரிது முடையனச் சீவன்க டம்மொடெல்லா
மற்ற முடையவர் சொல்லின வாகம மன்மையினாற்
பெற்ற வகையென்னை பேதா யதனைப் பெயர்த்தனெவே..

இதுவுமது

681.

ஒக்கலி யோகலி யென்றிரு தெய்வ முரைத்தனவேன்
மற்கலி யார்போ லறிந்தன வாயிற் செறிந்தனவாம்
தக்கில வேயறி யாதன சொல்லுத றத்துவத்தை
யிக்கலி யாள ருரைத்தவு மேதமே னாய்பிறவோ.

இதுவுமது

682.

அறிந்தா னறிந்தன தான்சொல்லி
     னார்வச் சினத்தனனா
யெறிந்தா னனையதோ ரேதத்தை
     யெய்துமவ் வேதத்தினான்
மறிந்தா னகன்றடு மாற்றத்
     தகத்தெனின் மாண்புணர்ந்தாய்
செறிந்தாங் கிருக்கிற்பி னீயுஞ்சிற்
     றாத்தனை யாகிற்றியே.

இதுவுமது

683.

ஆத்த னறிந்தன யாவையுஞ்
     சொல்லல னாய்விடினிச்
சாத்தனும் யானு மவன்றன்னிற்
     சால விசையுடைய
நாத்தனை யாட்டியோர் நன்மைகண்
     டாலு நினக்குரைத்து
மீத்தன முண்டு மிருமைக்கு
     மேத மிலம்பிறவோ.

இதுவுமது

684.

வானிடு வில்லின் வரவறி யாத வகையனென்பாய்
தானுடம் போடு பொறியின னாதலிற் சாதகனா
மீனடைந் தோடும் விடுசுட ரான்கதிர் வீழ்புயன்மேற்
றானடைந் தாற்றனு வாமிது வாமதன் றத்துவமே.

இதுவுமது

685.

முற்ற வறிந்தனன் யானென்று
     மோனங்கொண் டேயிருந்தா
னற்ற மகலவென் றானீ
     யறிந்தமை யாதினினாம்
பெற்ற வகையெனப் பேச்சின்மை
     யாலெனிற் பிள்ளைகளும்
மற்றிம் மரமு மலையுமம்
     மாண்பின வாம்பிறவோ.

இதுவுமது

686.

முடக்கு மெனினு நமிர்க்கு
     மெனினுந்தன் மூக்குயிர்த்து
நடக்கு மெனினு மிருக்கு
     மெனினுந்த னல்லுறுப்பி
னடக்கு மியல்பல்ல னன்னவற்
     றார்வத்த னாகுமன்றி
யுடக்கு மிவையில்லை யேலுயிர்
     தானுண்மை யொட்டுவனோ.

(இது நீலகேசியின் உட்கோள்)
வேறு

687.

நிலப்பாலு நீர்ப்பாலுந் தீப்பாலும் காற்றின்
புலப்பாலு நெட்டுயிரின் போக்கில்லாப் பாலும்
சொலற்பால வல்லாத சொல்லுதலால் யானு
மலப்பா தொழியேனிவ் வாசீ வகனை
யருகிருந்தார் தாமறிய வாசீ வகனை.

நீலகேசி பூரணனை நோக்கிக் கூறல்

688.

வண்ணாதி யெல்லாம் வகுப்பின் னிலப்பாலாம்
நண்ணாத மூன்றிற்கு நன்பால் பிறவாகிக்
கண்ணாதி யாலவற்றைக் காணப்பா டில்லையா
யெண்ணாதே யிந்தியக்கோ ளெய்தாமை வேண்டும்
எனைத்தும் பெறப்பாடு மில்லாத வேண்டும்.

இதுவுமது

689.

நீர்ப்பாலுந் தீப்பாலு நில்லா வளிப்பாலும்
பேர்ப்பாலே பற்றிப்பிறப்பிறவா நீபெருக்கி
யோர்ப்பி யாதுஞ்செய்யா துரைத்தா யுரைத்தமையிற்
கூர்ப்பியாது மின்றிநின் கோளழியு மன்றே
கொணர்ந்துநீ யைந்தென்ற கோளழியு மன்றே.

இதுவுமது

690.

பொருடாமி வைந்தொழியப் போத்தந் துரைப்பா
யிருடாமி வைந்தனு ளெக்கூற்ற தாமோ
விருடாமி வைந்தனுளு மெக்கூற்று மில்லே
லருடாழ்ந்து நீயிருப்ப தியாதின்பா லாமோ
அணுமயமாங் கந்தங்க டாமனந்த மன்றோ.

இதுவுமது

691.

பலவாக நீசொன்ன பாலெல்லாந் தம்முட்
கலவாவா யப்பொருளே யாதலையுங் கண்டா
லுலவாதோ வொற்றுமையும் வேற்றுமையு மென்றாற்
சலவாதி யொன்றுஞ் சமழலையே கண்டாய்
சமத்திடை யொன்றுஞ் சமழலையே கண்டாய்.

இதுவுமது

692.

பாறாம் பலவாகிப் பாலாகு மப்பொருளே
வேறாது மில்லை யெனவே விளம்புவாய்
நீறாக நின்ற நிலப்பால் பெறவேலா
நாறா வகையெனக்கு நக்குரைக்கல் வேண்டும்.

நலிந்தாற் பிறபொருட்கு நாட்டலே வேண்டு்ம்.
இதுவுமது

693.

இன்றேய தாயி னிவைபா லிவைபொருள்க
ளென்றே பலவா வெடுத்துரைப்ப தென்செய்யக்
குன்றோ மலையோ குவடோ வடுக்கலோ
வன்றோவ தன்றாலஃ தியாப்பாதல் வேண்டூம்
அவையவையே சொன்னாலஃ தியாப்பாதல் வேண்டும்.

இதுவுமது

694.

நோயில்லை வாழி கடவு ளெனவுரைத்தா
னாயினோ யின்மையினேர்ந் தாய வழியொருநாட்
டீயினும் வெய்யநோய் சேர்தலையுங் காண்டுநீ
சாயினும் தத்துவத்தைச் சாராதா யன்றோ
தடு்மாற்றக் காழ்ப்பாடுந் தாமுளவே யன்றோ.

இதுவும் அடுத்துவருஞ் செய்யுளும் ஒரு தொடர்

695.

கடுங்கதிரோன் மீதூரக் காணாக்கோ ளெல்லாம்
படும்பொழுது மெழுச்சியினுந் தம்பயனே செய்யு
நெடுங்காலம் பல்பிறவி நின்றன வெல்லா
மொடுங்காதே யேய்ந்துண் டுழிதரலே வேண்டும்
உதவாத வார்தலையு மொட்டலே வேண்டும்.

696.

எப்பாலுந் தான்கெடா வில்லனவுந் தோன்றாவென்
றொப்பியாது மில்ல துரைத்தளியின் றானுண்ணும்
துப்பாயதூச் சோற்று தூய்தல்லா தாழ்ந்துளதென்
றிப்பாவி செய்யு மிழிதகவி தென்னோ
விழுதைதான் செய்யு மிழிதகவி தென்னோ.

இதுவுமது

697.

நின்றீக கொண்டீக வுண்டீக தின்றீக
வென்றிவைகள் கூறி யிடுவார்க் கறம்வேண்டான்
கொன்றீகை தீதென்றுங் கொல்பாவ மில்லென்றுந்
தன்றீகை யுண்ணாதான் றான்கண்ட தென்னோ
தவத்தினு மில்வாழ்க்கை தான்கண்ட தென்னோ.

இது நீலகேசி பூரணனை முன்னிலைப்படுத்தோதியது

698.

இல்லாத தோன்றா கெடாவுள் ளனவென்பாய்
சொல்லாயே நெய்சுடராய்ச் சுட்டிடுமா றென்றேனுக்
கல்லாந் தயிர்த்தோடி யாழ்மிதப்புச் சொல்லுதியா
லெல்லாமொன் றொன்றிற் கிடங்கொடா வன்றே
யிழிவுயர்ச்சிக் காரணமு மில்லாதா யன்றே.

இதுவுமது

699.

ஓட்டுங் குதிரையு மொன்றே யெனிற்குதிரை
யூட்டும் பொழுதொடுதான் புல்லுண்ணும் போழ்தின்கா
னாட்டிய வீதி யதிசயத்தை நீயெமக்குக்
காட்டி யுரைப்பினின் காட்சியைக் கோடும்
கடவுட் குழாத்தார்தம் காழ்ப்பெலாங் கோடும்.

இதுவுமது

700.

வண்ண முதலா வுடைய குணமெல்லாம்
எண்ணுங்கா லப்பொருளே லீந்தி னிளங்காய்க்கட்
கண்ணினாற் கண்ட பசுமை கனிக்கண்ணுந்
திண்ணிதாக் காட்டிற் றெருண்டாயே யென்றும்
திரிந்தொழிந்த காட்டினாற் றேவனே யென்றும்.

இதுவுமது

701.

வட்ட முதலா வுடைய பொருளெல்லா
மொட்டிநீ யப்பொருளே யொன்றும்வே றில்லென்பாய்
தட்ட மழித்தோடஞ் செய்தா லதன்கண்ணும்
விட்ட வடிவு விரித்துநீ காட்டாய்
விகார மனைத்தும் விரித்துநீ காட்டாய்.

இதுவுமது

702.

மிதப்பனவு மாழ்வனவும் வேண்டுவன்யா னென்னிற்
பதப்பொரு டானான்கின் பன்மைமுடித் தாயா
மிதப்பனவே யாழ்வனதாம் வேறியாது மில்லே
லுதப்பேனு நின்சொ லுதவலவே கண்டா
லுடனேநின் பக்க முடைத்திட்டாய் கண்டாய்.

இதுவுமது

703.

தொழிற்சொற் குணச்சொல் வடிவுச்சொன் மூன்றும்
பிழைப்பில் பதமாப் பிரிவிடத்துக் காண்டு
மிழுக்கில் பொருளோ டியைத்தக்காற் சந்தி
யெழுத்தியலிற் கூட்டமு மெப்பொழுதுங் காண்டு
மிலக்கண நின்சொ லியையலவே கண்டாய்.

பொருள்களின் நால்வகை ஆக்கமுறைகள்
வேறு

704.

அதுவா வதுவு மிதுவாம் வகையு
மதுவாந் துணையு மதுவாம் பொழுதுஞ்
சதுவா நியதத் தனவா வுரைத்தல்
செதுவா குதலுஞ் சிலசொல் லுவன்யான்.

நீலகேசி அந்நான்கு முறைகட்கும் நிரலே
ஒவ்வொன்று எடுத்துக் காட்டல்

705.

அரிவை யவளாங் குழவி யவளை
யுரியா வகையா லுவந்தாங் கெடுத்த
லரிய முழமூன் றளவாம் பொழுதும்
வரிசை யுரைத்த வருட மதன்பின்.

இது மறுப்பு

706.

குழுவித் திறமுந் துறவா ளவளும்
முழுவித் ததுவும் முளையா துளதா
மிழவெத் துணையு மியல்பேன் முடியா
தழிவித் திடுவே னயநீ விரையல்.

இதுவுமது

707.

முலையும் மகவும் முறுவல் லவையும்
தலையுண் மயிரும் முகிரும் முடனே
நிலையில் லமையு மிலவா மெனினே
யலையுந் நினகோ ளுடனே யெனலும்.

இதுவுமது

708.

உளவே யெனின்முன் னுரைத்தந் நியதங்
களவே யெனலாங் கடையா மெனநீ
கிளவா தொழியாய் கிளந்த குழவிக்
களவே முழமா வவைதாம் பலவால்.

இதுவுமது

709.

உடையள் ளிவடன் னுதரத் தொருபெண்
ணடையு மவளுக் கவளவ் வகையாற்
கடையில் குழவி யவைதன் னியல்பா
நடையு மதுவே னகையாம் பிறவோ.

ஆமாங்காம் முதலியவற்றிற்கு மறுப்பு

710.

இனியாம் வகையு மிசைத்தி யெனினுந்
நனிகா ரணமாய் நடுக்கு நினகோட்
டனிகா ரியமும் முளதேற் றவறா
முனிலா மொருவன் பொழுதும் முடிவாம்.

இதுவுமது

711.

நியதந் நிகழ்ச்சிந் நியதா வுரைப்ப
தயதி யெனினீ யமையுஞ் சலமேல்
வியதி யெனினும் வெகுளல் இழுதை
பயதி யெனினு நினக்கோர் பயனே.

உயிரியல்பும் மறுப்பும்
வேறு

712.

பாலைப் பழத்தி னிறத்தன வாய்ப்பல மாட்டொடுகண்
ணாலெத் துணையு மகன்றைந்து நூறாம் புகையுயர்ந்து
ஞாலத் தியன்றன நல்லுயி ரென்பது நாட்டுகின்றாய்
மாலித் துணையுள வோநீ பெரிதும் மயங்கினையோ.

இதுவுமது

713.

ஒன்றினு ளொன்று புகலில
     வென்ற வுயிர்களெல்லா
நின்றன தந்த மகலமு
     நீளமும் பெற்றனவாய்
நன்றுநீ சொல்லுதி நாந்தொக்
     கிருந்துழி நல்லுயிர்க
டுன்றின வென்பது சொல்லா
     தினியென்ன சொல்லுதியோ.

இதுவுமது

714.

தானுள தாய வழியதன் றன்பா லியல்பெனலா
மூனுள தாய வுயிர்ப்பிர தேச முணர்வதுபோல்
வானுளம் போயுழி மன்னு மறிவிலை யேலதனை
நானுள தென்றுரை யேனதற் கியாரினி நாட்டுகிற்பார்.

இதுவுமது

715.

ஒன்றென நின்ற உயிர்தா
     னுருவின தாதலினாற்
பொன்றுந் துணையும்பல் போழெய்தும்
     பூசணிக் காயினைப்போ
லின்றெனி னாகம மாறது
     வாமினி யவ்விரண்டு
மின்றெனிற் சால வெளிதாம்
     பிறவத னின்மையுமே.

இதுவுமது

716.

எண்டனை யாக்கி யிடவகை யுட்பொரு ளீறுசொல்லி
மண்டல மாக்கி மறுத்துங் கொணரு மனத்தினையேற்
கண்டிலை நீமெய்ம்மை காழ்ப்பட்டு நின்ற கனவுயிர்க்கெண்
ணுண்டெனி னில்லை யகன்றடு மாற்ற முலப்பின்மைபோல்.

நிலப்பால் முதலியனவும், மறுப்பும்
வேறு

717.

மேற்சீர தீயோ டுயிர்காற்று விலங்கு சீராம்
பாற்சீர நீரு நிலந்தானும் பணிந்த சீரா
மேற்சீர மேற்போம் விலங்கோடு விலங்கு சீர்கீ
ழாற்சீர வீழும் மவையென்னினு மாவ தென்னோ.

இதுவுமது

718.

தீயு முயிருந் தமக்காய திசையி னாலே
போயு மொழியா திவணிற்றல் பொருத்த மன்றால்
வீயும் வகையும் வினையாக்கும் திறமு மெல்லாம்
நீயு மவற்றை நினைவாயுள வாக வன்றோ.

இதுவுமது

719.

தென்றை யுளையத் திசைதானுறப் போய காற்றேற்
பின்றை யொருநாட் பெயராததோர் பெற்றி யஃதான்
முன்றை தழுவி முனிவாக்கும் வடந்தை யஃதா
வின்றைப் பகலே யிதன்மெய்ம்மை யிசைக்கிற்றியோ.

இதுவுமது

720.

முன்சென்று வீழுந் நிலநீரை முகிலு ணின்று
பின்சென்று பெய்யுந் துளிதானும் பெருந்த வத்தா
யென்சென்ற தெய்துந் திறந்தன் னையெனக் குணர
நின்சென்ற வாற்றா லுரைத்தானெறி யாற்ற நன்றே.

காலம் இல்லை என்பதன் மறுப்பு

721.

பாலெங்கு மோதப் படுகின்ற பதப்பொ ருட்குக்
காலங்கள் சொல்லா யதுதானுன் கணக்கு மென்றாற்
சீலங்கள் காத்துக் குணனின்மையைச் செப்பு கின்றாய்
மாலிங் குடையை யதுதீர்க்கு மருந்து முண்டோ.

நீலகேசி பூரணனுக்கு அறங்கூறுதல்

722.

நோயுற்ற நுன்போற் குணமொன்றில னாய யானும்
பேய்மற் றிவடா னெனக்கண்டோர் பெரிய வன்றா
னீமற்றி துண்ணென் றறநல்க விளங்கப் பெற்றேன்
வாமத்து ணீயும் மதுபோலு மருந்தில் லையே.

இதுவுமது

723.

நோயைத் துணிந்தே யுறுநோய்முத னாடியந்நோய்க்
காய மருந்தே யறிந்தூட்டுமஃ துண்டு காட்டிற்
பாய மறுக்கும் படியாமது பல்லு யிர்க்கும்
கூயத்தி னென்னை குரவருப தேச மென்றாள்.

இதுவுமது

724.

சாதி முதலாப் பிணிதாமிவை யப்பி ணியிற்
காதி யறியில் லவைதீவினை யூண தனாற்
றீதின் றிதனில் லழுந்தல்திரி தோடத் தினால்
வேத னையது தீர்ப்பது மெய்யுணர் வாமே.

நீலகேசியின் அறவுரைகேட்டுப் பூரணன் கூறுதல்

725.

மானின்ற நோக்கின் மறவேனெடுங் கண்ணி னல்லாய்
மேனின்ற வெல்லா மிகநல்லவிம் மெய்யுணர்ச்சி
தானின்ற தன்மை தவிராதுரைக் கிற்றி யேனின்
னூனின்ற வாறே பொருணோக்குவன் யானு மென்றான்.

நீலகேசி அவனுக்கு மெய்யுணர்த்துதல்

726.

நின்ற விரலுந் நிலையாழ்ந்து முடங்க லாயிற்
சென்றவ் விரலும் மெனத்தானின் கூற்ற தாயிற்
றொன்றவ் விரலே யுறலுண்மையு மின்மை யும்மா
மென்றவ் விரலே யிதுவென்றனள் வேற்க ணல்லாள்.

பூரணன் பாராட்டுரை

727.

ஆழ்ச்சி யொருபா லதுவல்லன தம்மோ டாழா
தேழ்ச்சி யொருபா லதுதன்னொடு மின்ன தென்னச்
சூழ்ச்சி யமைந்த துணைத்தோளியர் சொற்க ளென்று
தாழ்ச்சி மனத்தா லிதுதத்துவ மென்ற னன்னா.

நீலகேசி பூரணனுக்குக் கூறுதல்

728.

பொய்ந்நின்ற வெல்லாம் புரைத்தாயினிப் பூர ணன்னே
மெய்ந்நின்ற பெற்றி யறிந்தாயிதன் மேலு நன்றாக்
கைந்நின்று முண்டுங் கடைப்பள்ளி வழியு மாக்கிச்
செய்ந்நின்று நீசெய் தவந்தானெனச் செப்பி னளே.

இதுவுமது

729.

கல்லா தறிந்த கடவுள்ளிறை யாகு மெய்ந்நூல்
சொல்லானு மல்ல னவன்சொல்லின தாகு மும்மூன்
றெல்லாப் பொருளுந் தம்பான்மை யியல்பு மேன்று
பொல்லாத போக்கி யினிப்பூரண சென்மி னென்றாள்.