7. சாங்கிய வாதச் சருக்கம்


730.

நீலகேசி சமதண்டத்தினின்றும் புறப்பட்டுச் சென்று
அத்தினபுரம் என்னும் நகரத்தை எய்துதல்

ஆங்கவன் சொல்லவவ் வத்தின புரத்து
ளோங்க வொருகொடி நட்டுரைக் கிற்பவ
னாங்க ணெவர்க்கு மறையென் றிருந்தவச்
சாங்கியன் றன்னைத் தலைப்பெயச் சென்றாள்.

நீலகேசி அந்தச் சாங்கியனைக் காண்டல்

731.

சென்ற ளவன்றன் சிரத்தையைக் கண்டோத
நின்றா ளவன்றா னெறிபகர் கின்றனன்
பின்றான் பிரளையத் தாக்கமும் பேர்ச்சியு
மொன்றா வகையா லுரைகளை யொட்டா.

சாங்கியன் தத்துவமுரைத்தல்

732.

பாலொத்து நின்ற பரமாத் துமனொடு
மூலப் பகுதியு மல்லாப் பகுதியு
மேலொத் தியன்ற விதிவிகற் போடு
நூலிற் கிடந்தவ நுண்பொரு ளன்றே.

நீலகேசி அச்சாங்கியனை வினவுதல்

733.

ஒருங்கிருந் தார்கட் குடனைவ யெல்லாம்
பருங்கினன் மெய்யும் பராசரன் றன்னை
விரும்பினள் போல வினவின ளன்றே
யருங்கல மாய வறிவினுள் மிக்காள்.

இதுவுமது

734.

என்னைப் பயந்தீரிஃ தென்னெனக் கேட்டன
ணன்னுத லாயிது வென்னெறி யென்றன
னன்னனஃ தாயி னறிவி யெனச்சொல
வின்னன கேளென் றெடுத்தனன் சொல்லும்.

பராசரன் கூற்று

735.

மன்னுயிர் தெற்றென வில்லது மான்செருக்
கென்னவு மிந்திய மைந்தைந் தொருமன
மன்னதன் மாத்திரை யைந்தைந்து பூதமும்
பன்னிய வையைம் பதப்பொரு ளென்றான்.

இதுவுமது

736.

எத்திறத் தின்னுஞ்செய் யான்குண மொன்றிலன்
றத்துவ னின்பன பேதன லேபக
னித்திய னெங்கு முளனெடுங் காட்சியன்
றுத்த லுடையனென் றோன்றலு மென்றான்.

ஏனைப் பொருணிகழ்வு

737.

நின்று பரந்தரு வாய்ப்பொறி யேதுமிக்
கொன்று கிரிகையின் றப்பியத் தம்மது
சென்று செய் மானிற் செருக்கத்தி னீரெட்டு
மன்றியு மைவகைப் பூதமு மன்றே.

நீலகேசி பராசரன் கூற்றை மறுத்துரைத்தல்

738.

ஐயைம் பொருளு மிவையிவை யல்லது
தையன் மடவர றத்துவ மில்லென
மைய லுடையவர்க் காமற்றை யார்க்கிவை
பொய்யென் றுரைத்தனள் போதரிக் கண்ணாள்.

பராசரன் சினந்து நீலகேசியை நோக்கிக்கூறல்

739.

கதக்களி யானைமுன் கல்லெறிந் தாற்போற்
பதப்பொரு டம்மைப் பழுதென் றுரைப்ப
மதத்தினின் மிக்கவன் மாதரை நோக்கி
யுதப்பென்னுங் குற்ற முரையெனக் கென்ன.

நீலகேசி அத் தத்துவங்களுக்குக் குற்றங் கூறுதல்

740.

செய்யா துயிரெனச் செப்புகின் றாய்நின்னை
வையா யுயிருள தன்றெனின் வாக்கிவை
மெய்யாம் பிறசெய்கை யாதலி னாலிவை
மையா மினிநின்றன் மார்க்கமு மன்றே.

இதுவுமது

741.

எத்திறத் தின்னுஞ்செய் யானவ னென்றலிற்
றத்துவஞ் சொல்லுந் தலைமக னாகிய
சித்தியு மில்லாந் திருட்ட விரோதமும்
பொய்த்தலுள் ளிட்டவும் புல்லுமற் றென்ன.

பாராசரன் கூற்று

742.

பெருமை யுயிர்க்குரை யேன்செய்கை பின்னும்
இருமை யுயிரென தாமிடை யொன்றுங்
கரும வுயிரு மிவற்றினி னன்றே.
யருமை யுடைச்செய்கை யாக்கமு மென்றான்.

நீலகேசி கூற்று

743.

செய்யு முயிர்களுஞ் செய்யா வுயிரும்
மெய்யி னுளவெனின் மேற்கோ ளழிதலும்
பொய்யும் பொதியறை மையுமற் றல்லவு
மெய்து மிதற்கினி யென்செய்தி யென்றாள்.

நீலகேசி பராசரனை அசதியாடல்

744.

சோம்பன் குணமிலன் றோன்றா வொளிப்பின
னோம்பற் கருமையி னுண்ணுமாற் றாமையி
னாம்பின்னைச் செய்ததெ னன்கவ னின்றியும்
போம்பொழு தேலவ னாற்பொரு ளென்னோ.

இதுவுமது

745.

ஆண்டரு வாய்த்தொழில் யாதுமில் லாயின்
வேண்டின்மெய் யாதி விகிர்தி விகற்பொடு
தீண்டலு மொட்டலுந் தேரினி லாதவன்
காண்டற்குந் துத்தற்குங் காரண மென்னோ.

இதுவுமது

746.

முத்தாத் துமனை முனிந்தோ வதுவன்றிப்
புத்தாத்து மாக்கட் புரிந்தோ விரிந்தெங்குஞ்
சித்தாத் துமனாய்த் திரிவின்றி நின்ற
சுத்தாத் துமனைச் சுழற்றுவ தென்றாள்.

இதுவுமது

747.

பரமாத் துமனைப் பளிங்கடை போல
வருமாத்து மாக்களின் மன்னும் விகாரம்
தருமாத் திரையன்றித் தக்கதொன் றாக
வொருமாத் துமனை யுரைத்திடு கென்றாள்.

இதுவுமது

748.

செல்லு மெனினுஞ் சிதையுஞ் செல்லானென்று
சொல்லு மெனினுமுன் சொல்லிய தாமெய்தும்
பல்லுநுன் னாவும் பதையா துரையன்றி
யெல்லுந் துணையு மிருவினை யென்றே.

இதுவுமது

749.

யானென தென்னுஞ் செருக்கினை யீன்பது
மானெனப் பட்டது மன்னுமோர் சேதனை
தானினை யாக்குத றக்கின்ற சேதனை
மேனினைத் தானுரைத் தானல்ல னென்றாள்.

இதுவுமது

750.

மான்றான் பகுதி வழித்தோ வழித்தன்றித்
தான்றான் பிறிதோர் பொருளோ விரண்டொடு
மூன்றாவ தொன்றினி யின்றா விருந்தவிச்
சான்றா ரறியவுஞ் சாற்றினி யென்றாள்.

இதுவுமது

751.

முதற்பொரு ளேயாங் குணமது வாகின்
அதற்பிறி தென்னி னதுமனனு முண்டா
லிதற்கினி நீசொலற் பாலதென் னென்றாள்.
சுதப்பொருண் மேனன்றுஞ் சொல்லுதல் வல்லாள்.

இதுவுமது

752.

அருவாய காரண மாயவ் வியத்த
முருவா மறுதலை யொப்பிக்கு மென்பாய்
மருவாத சொல்லினை மாதிரந் தானே
பருவாய்ப் பதக படைத்திடு மென்னாய்.

இதுவுமது

753.

பகைக்குண மாகிய பகுதி விகுதி
மிகைக்குணந் தோன்றுநின் மேற்கோ ளழித்துத்
தொகைக்கணம் யாவையுஞ் சூனிய மாமா
னகைக்குண மல்லது நம்பலை யென்றாள்.

இதுவுமது

754.

புத்தேந் திரியமுங் கம்மேந் திரியமும்
பத்தேந் திரியத்தோ டொன்றாய்ப் படைத்தனை
பித்தேந் திரியமும் பேயேந் திரியமும்
குத்தேந் திரியமுங் கொண்டிலை யன்றே.

இதுவுமது

755.

தந்திர மாவன தாமிடைத் தோன்றுவ
வந்தர வாத்தும னைந்தனெ வேண்டினை
சிந்தனை யுள்ளிட்டுச் சீவன் குணமெனி
னிந்திரன் றானு மிணைநுனக் காமோ.

இதுவுமது

756.

கைகளுங் காலு மிருசா ரிடக்கரு
மெய்திய வாக்குமற் றிந்திய மாமெனிற்
செய்யும் புலனு மறியு மறிவுமற்
றெய்த வுணர்ந்திங் கெடுத்துரை யென்றாள்.

இதுவுமது

757.

காட்டிய வாறுங் கருமத்தி னாமெனி
னூட்டு முலையு முதடும் புருவமு
மாட்டுங் கவுளு மறமெல்லும் பற்களும்
கூட்டி மிடறுங் கொளக்குற்ற மென்னோ.

தன்மாத்திரைகட்கு மறுப்பு

758.

ஐந்துதன் மாத்திரை தாமணுவாற் றொடர்
கந்தங்க ணாதியிற் காம்புல னேயவை
வந்துபெருகி வரிசையி னான்மிகும்
புத்தியி னால்வகைப் பூதமு மென்றாள்.

ஒலி வானத்திற் பிறவாதென்றல்

759.

ஒன்றாய்ப் பரந்திவ் வுலகு மலோகமுஞ்
சென்றாய்க் கிடந்த தசேதனை தானென்று
மன்றா யருவா யதுவவ்வா காயமு
மென்றா ளெழினெடுங் கண்ணிணை நல்லாள்.

இதுவுமது

760.

தானரு வாய பொருளது வாமொலி
மேன்மரு வாதுரு வாதலி னான்மெய்ம்மை
நூன்மரு வாதுசொன் னாயிது வென்றனள்
மான்மரு வாவந்த நோக்கு மரியாள்.

நீலகேசி ஏனைத் தத்துவங்களும்
பொருந்தா வெனல்

761.

பகுதியின் மானில்லை யிஃதினு மஃதில்லை
தொகுதிசெய் பல்குணந் தோற்றமு மில்லா
மிகுதிசெய் பூதத்து மெய்ம்மை பெறாமற்
றகுதியின் றத்தநின் றத்துவ மென்ன.

இதுவுமது

762.

குருடனும் பங்குவுங் கூட்டத்திற் கூட்டிப்
பொருடம தாக்கமும் போத்தந் துரைப்பிற்
றெருட லிலையவர் செய்கையிற் செய்கை
யிருடன்னை யின்றி யிவையெய்து மென்றாள்.

இதுவுமது

763.

எவ்வகை யின்னும் விகார மிலாப்பொருட்
கிவ்வகை தம்மை யெடுத்துரை யென்செய்யும்
மெய்வகை யாலொப்பின் மேற்கோண் முதலிய
வவ்வகை யெல்லா மழிவுள தாமே.

இதுவுமது

764.

கூடியு மாகாக் குணத்தின நீயவட்
பாடி யுரைத்த வுயிரும் பகுதியும்
பேடிகள் சாரினும் பிள்ளை பெறாமையை
நாடியுங் காணென்று நன்னுத னக்காள்.

இதுவுமது

765.

இல்லுளி யின்றிமற் றெங்கு மிவைமுன்னும்
புல்லின வேயாற் புணர்ச்சி புதிதனெச்
சொல்லின தென்செயத் தோற்றப் படுபொருள்
பல்லன தாமவை பண்டு முளவே.

சாங்கியன் கூற்று

766.

ஆட லழித்தல் படைத்த லடங்குதல்
வீடுபெற் றாங்கண் விளங்கு நிலைமையுங்
கூடிய வைந்து குணத்தின னாதலி
னாடிய குற்றங்க ணண்ணல வென்ன.

நீலகேசி நினது ஏகாத்துமவாதம் பொருந்தாதனெல்

767.

ஓதிய வெல்லா மொருவனி னங்கொரு
நீதி வகையா னெறிமைப் படுதலும்
வாதுசெய் வார்கள் பிறராய் வருவது
மூதிய மில்லை யொழியென் றுரைத்தாள்.

இதுவுமது

768.

யானை குதிரை முதலாப் படைகுடி
யேனைய தாங்களு மெல்லா மவனெனிற்
றானென்று மாள்வது தன்னை யெனினங்கள்
கோனிவ னாமெனக் கூறினர் யாரோ.

இதுவுமது

769.

என்னை யொழித்தினி யெல்லா மவனெனச்
சொன்ன முறைமைய னாகு மவனெனிற்
றன்னை யொழித்துத் தபுத்துடன் றின்றிடிற்
பின்னை யவனையோர் பித்தனென் னாமோ.

இதுவுமது

770.

தன்கையிற் றன்கண்ணைத் தானே பொதக்குத்தி
யென்செயக் குத்தினை யென்பார் பிறரில்லை
தன்கையிற் றன்கண்ணைத் தான்பொதக் குத்துவ
தென்செய வோவிதன் காரணஞ் சொல்லாய்.

இதுவுமது

771.

தன்னைப் படைப்பின்முன் றானின்மை யாலில்லை
பின்னைப் படைக்கிற் படைக்கப் படுவதின்
முன்னைப் படைப்பென் முடிவில்லை மூடனே
நுன்னைப் படைத்தவர் யாரினி நோக்காய்.

இதுவுமது

772.

கொன்றுகொன் றிட்டுத் தவஞ்செய்யி னத்தவம்
பொன்றுமற் றாதலி னஃதும் பொருத்தமி
றின்றுதின் றிட்டுப் படைப்பிற் றெருட்சிமற்
றென்று மிலன்பெரி தேழையு மாமே.

இதுவுமது

773.

ஓர்ப்பவன் சொல்லவ னூனவன் றீனவன்
றீர்ப்பவ னோயவன் சீறு மவனுயிர்
நீப்பவன் சாபவ னீப்பவ னேற்பவன்
பேர்ப்பவ னாயும் பெறுகின்ற தென்னோ.

இதுவுமது

774.

நாயாய்க் கடிக்கு நரியாய்ப் பலகொல்லும்
பேயாய்ப் புடைத்துண்ணும் பெற்றமு மாய்க்குத்து
மீயாய் நலியு மெறும்பாய்த் தெறுமெங்கும்
தீயா னொருவனின் றேவனு மென்றாள்.

இதுவுமது

775.

வீடு தலைபெற வெந்துநெஞ் சாண்டிடத்
தாடி தவஞ்செயத் தன்கா லழித்திடப்
பாடிய கையிற் படைக்கு மிவனெனின்
மூடர்கட் டேற்ற முடிவுமுண் டாமோ.

நீலகேசி, புடைபெயர்வில்லா நிலைபேறு
பொருந்தாதனெல்

776.

நித்திய மாய பொருணின வாதலின்
வித்தினு ளுண்டென வேண்டுதி நீள்பனை
யெத்துணை யோவது வென்னினு நுன்கைக்கு
ளித்துணை யுண்டென்ப தென்னைகொ லேழாய்.

இதுவுமது

777.

இப்பொழு தில்லை யெதிரதற் குண்டெனி
னப்பொழு துண்மையு மின்மையு மாக்கி
னெப்பொரு டாங்களு மின்னன வேயெனச்
செப்பினள் தத்துவஞ் சேயரிக் கண்ணாள்.

தத்துவம் இருபத்தைந்தனெல் பிழை எனல்

778.

உருவோ டருவமா காயமு மூன்று
மிருபதின் மேலுமைந் தாக விசைத்தனை
யருவோ டலோக மசேதன மூன்றிற்
செருவோ டுரிமையிற் சேர்பவு மன்றே.

இதுவுமது

779.

ஒன்றொன்றி னொன்றி யுலகுள் வழியெங்குஞ்
சென்றவ னுண்மை பகுதி யிதுமன்னு
மென்றனை யெண்முறை யன்றிமற் றீண்டுபு
நின்றன வீறா நிலமுத னான்கே.

இதுவுமது

780.

பத்தனை யாய்நின் பரமாத் துமனையுஞ்
சித்தனை யாகக் கருதியல் சீவன்கட்
கத்தன்மை ஞானமு மென்னா யவனுக்குத்
துத்தலுங் காண்டலுஞ் சொல்லினை யன்றோ.

பராசரன் ஆருகதரறங்கோடலும் நீலகேசி
அவனை மெய்யுணர்வித்தலும்.

781.

வண்டார் குழற்பெயர் மாணிழை யிற்றெனக்
கொண்டே னெனவவன் கூறினன் கூறலும்
பண்டே லறியெனப் பராசர நீயினிக்
கண்டா யெனச் சொல்லிக் காட்சி கொடுத்தாள்.

நீலகேசி பராசரனை வாழ்த்துதல்

782.

ஐந்து மிருபது மாகிய சொற்பொரு
டந்திவை யல்லது தத்துவ மில்லென்ற
சிந்தை யொழித்துச் சினவரன் சேவடி
வந்தனை யேசெய்து வாழிநீ யென்றாள்.