பக்கம் எண் :

பக்கம் எண்:11

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
32. கரடு பெயர்த்தது
 
            மடையரு மகளிரு மல்லரு மமைச்சரும்
           கடையருங் கணக்கருங் காப்பரு முளப்பட
           இறைவினை திரியாப் பழவினை யாளரை
           வழிமுறை மரபிற்றந் தொழின்முறை நிறீஇ
     85    வாய்மொழி விதியின் மேவன வெல்லாம்
           நோக்கி மன்ன நுவலருங் காப்பின்
           அணிந்தது நகரெனப் பணிந்தவ ருரைக்கலும்
 
                    (இதுவுமது)
            81 - 87: மடையரும்...........உரைக்கலும்
 
(பொழிப்புரை) பின்னரும், மடைத் தொழிலாளரும் பணி மகளிரும் மல்லரும் உழையிருப்போரும் வாயில் காப்போரும் கணக்கரும் பிற காவலரும் உட்பட அரசியல் வினையிற் பிறழாத வழிவழிவந்த இத்தகைய தொழிலாளரை யெல்லாம் அவரவர் தொன்றுதொட்டுச் செய்து வருகின்ற தொழிலின்கண்ணே நிறுத்தி வைத்து மேலும் அரசன் கட்டளைக்கண் அமைந்தவற்றை யெல்லாம் செய்து நன்கு பார்வையிட்டு அரசன்பால் வந்து வணங்கிப் 'பெருமானே! கட்டளைப்படி கூறுதற்கரிய வலிய காவலோடு குஞ்சரச்சேரி மாளிகை அணி செய்யப்பட்டது' என்று கூறாநிற்ப என்க.
 
(விளக்கம்) மல்லர்-உடம்பு தடவி நீராட்டுந் தொழிலாளர். 'மல்லர் புல்லிக் கமழுநீ ராட்டினாரே' (2733) எனச் சிந்தாமணியினும் வருதல் காண்க. கடையர் - வாயில் காவலர். காப்பர் - பிற காவற் றொழிலாளர். இறைவினை-அரசியல் வினை. நிறீஇ-அமைத்து. வாய் மொழி என்றது அரசன் கட்டளையை. நகர் அணிந்தது மாளிகை அணியப்பட்டது. அவர் - கணக்கரும், காவலரும்.