பக்கம் எண் :

பக்கம் எண்:14

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
33. மாலைப் புலம்பல்
 
           அரசவை விடுத்தபி னணிநகர் முன்னித்
          தொடர்பூ மாலைக் கடைபல போகி
          அந்தக் கேணியு மெந்திரக் கிணறும்
          தண்பூங் காவுந் தலைத்தோன் றருவிய
     5    வெண்சுதைக் குன்றொடு வேண்டுவ பிறவும்
          இளையோர்க் கியற்றிய விளையாட் டிடத்த
          சித்திரப் பூமி வித்தக நோக்கி
 
                   (உதயணன் செயல்)
           1 - 7: அரசவை .......... நோக்கி
 
(பொழிப்புரை) உதயணகுமரன் இங்ஙனம் பிரச்சோதன மன்னன் அவையை நீங்கியபின் அழகிய அரசமாளிகையை எய்தி அதனியல் கருதி மலர் மாலை தூக்கிய வாயில் பலவற்றையும் கடந்து அதனகத்தே சென்று ஆங்குள்ள கரப்புக்கேணியையும், பொறிவைத்த கிணறுகளையும் குளிர்ந்த பூம்பொழிலையும் உச்சியினின்றும் அருவி விழுவனவாகிய வெளிய சுதை தீற்றிய செய்குன்றுகளையும் பின்னும் தான் காண விரும்புவன பிறவற்றையும் இளைஞர்கள் ஆடுதற்பொருட்டு இயற்றப்பட்ட இடங்களையுடைய வியத்தகு நிலத்தையும் கண்டு அவற்றின் கலைப்பண்பாட்டினையும் நோக்கி என்க.
 
(விளக்கம்) அணிநகர் - அழகிய மாளிகை. அந்தக்கேணி - மறைக்கப்பட்ட கேணி. பொறியால் நீரிறைக்கும் கிணறு என்க. குன்று - செய்குன்று, சித்திரப்பூமி - சித்திரித்தாற் போன்ற நிலம். இதனோடு,

"எந்திரக் கிணறு மிடுங்கற் குன்றமும்
வந்துவீழ் அருவியும் மலர்ப்பூம் பந்தரும்
பரப்பு நீர்ப் பொய்கையும் கரப்பு நீர்க் கேணியும்
ஒளித்துறை இடங்களும் பளிக்கறைப் பள்ளியும்
யாங்கணுந் திரிந்து தாழ்ந்து விளையாடி"

எனவரும் மணிமேகலை (19 : 102 - 6) ஒப்புநோக்கற்பாலது.