பக்கம் எண் :

பக்கம் எண்:205

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
         
     280    விழாமலி சுற்றமொடு வெண்மண லேறி
            நாளத் தாணி வாலவை நடுவண்
            நிரந்தநீர் விழவினு ளிரந்தோர்க் கீக்கெனப்
            பன்னீ ராயிரம் பசும்பொன் மாசையும்
            குவளைக் கண்ணியுங் குங்குமக் குவையும்
     285    கலிங்க வட்டியுங் கலம்பெய் பேழையும்
            பொறியொற் றமைந்த குறியொடு கொண்ட
            உழைக்காப் பாள ருள்ளுறுத் தியன்ற
            இழைக்கல மகளி ரிருநூற் றுவரொ
            டியாழறி வித்தகற் கூர்தி யாவது
     290    கண்டுகொண் மாத்திரை வந்தது செல்கெனத்
 
               (பிரச்சோதனன் செயல்)
           280 - 290: விழாமலி..........செல்கென
 
(பொழிப்புரை) நீர்விழாவின்பொருட்டு இங்ஙனம்வந்து குழுமிய சுற்றத்தாரோடு பிரச்சோதன மன்னன் வெள்ளிய மணற்றிடரிலே ஏறி ஆங்கு அமைத்திருந்த நாளத்தாணி மண்டபத்தின்கண் தூய அவையின் நடுவண் அரியணையி லமர்ந்திருந்து உதயணகுமரன் நிரம்பிய அந்நீர்விழாவின்கட் கலந்து கொள்ளுங்கால் அவன் தன்பால் இரந்தோர்க்கு வழங்கும் பொருட்டுப் பன்னீராயிரம் பசும் பொன்மாசையையும் அவன் அணிதற்கென குவளை மலர் மாலைகளையும், குங்குமச் சிமிழ்களையும், ஆடைப்பேழைகளையும் அணிகலம் வைத்த பேழைகளையும், இலச்சினையிட்டு அவற்றைச் சுமந்து வருகின்ற காவலரையும், இழைத்த மணியணிகலம் ஏந்தும் ஏவன் மகளிர் இருநூற்றுவரையும், மேலும் யாழறிவித்தகனாகிய அவ்வுதயணனுக்கு ஊர்தியாகும் சிறப்புடைய தொன்றனை இனி ஆராய்ந்து கொள்ளுதலினும் காட்டில் ஈண்டு வந்தது ஒன்றே செல்வதாக எனக் கருதி என்க.
 
(விளக்கம்) நாளத்தாணி - திருவோலக்க மண்டபம். வாலவை - தூய அவை. நிரந்த - கூடிய. ஈக்கென - வழங்கும் பொருட்டு. மாசை - ஒருவகைப் பொற்காசு. குவை-சிமிழ். வட்டி-பெட்டி. பொறியொற்று-இலச்சினை; உழைக்காப்பாளர் - பக்கத்தே நின்று காவல் செய்வோர் இழைக்கலம் மகளிர் - மணிகளிழைத்த கலங்களை ஏந்தும் பணிமகளிர். இவரை உழைக்கலமகளிர் என்றுங் கூறுப. யாழறிவித்தகன் - உதயணன். இனி ஆராய்ந்து காணின் காலத்தாழ்க்கும் என்று ஈண்டு வந்ததே செல்வதாக என்று கருதி யென்க.