பக்கம் எண் :

பக்கம் எண்:329

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
44. பிடியேற்றியது
 
           எரிதலைக் கொண்டாங் கெயிலக மெரியப்
          புறமதிற் சேரிப் பூசலு மார்ப்பும்
          உறுநீர்ப் பெருங்கட லுவாவுற் றாஅங்
          காகுலம் பெருகலி னருந்துறை தோறும்
     5    போகா தாடுநர் புன்க ணெய்தி
          மேகலை விரீஇய தூசுவிசி யல்குல்
          நீருடை களைதல் செல்லார் கலங்கிக்
          கானிரி மயிலிற் கவின்பெற வியலி
          அயிலிடு நெடுங்க ணரும்பனி யுறைத்தர
     10    உயிரேர் கணவரைத் தானை பற்றி
          நல்லது தீதென் றறியா தவ்வழிச்
          செல்வது பொருளோ செப்பீ ரோவென்
          றல்லல் கூர வலமரு வோரும்
 
                    (மங்கையர் கலக்கம்)
             1 - 13 :  எரி................அலமருவோரும்
 
(பொழிப்புரை) இவ்வாறு தீப்பற்றிக்கொண்டு உஞ்சை நகரத்தே மதிலகத்துள்ள சேரிமுதலியன எரியா நிற்றலாலே மதிலின் புறத்தேயுள்ள சேரியில் வாழ்வோர் எடுத்த கூக்குரலும் ஆரவாரமும் சேர்ந்து மிக்க நீரையுடைய பெருங்கடல் முழுத்திங்கள் நாளில் பொங்கி முழங்கினாற் போன்று துன்பம் பேரொலியாகப் பெருகாநிற்றலாலே அரிய நீர்த்துறைதோறும் அகலாது நீராடுகின்ற மகளிர்கள் அவ்வொலி கேட்டுத் துயரெய்தி மேகலையணி விரித்துக் கட்டிய ஆடையணிந்த தமது அல்குலின்கட்படிந்த நனைந்த அவ்வாடையைக் களையாராய்க் கலக்கமெய்திக் காட்டகத்தினின்றும் இரிந்தோடாநின்ற மயிற் கூட்டம்போன்று அழகுற இயங்கிக் கரைக்கட்சென்று வேல்போன்ற தமது நெடிய கண்களிலே தடுத்தற்கரிய நீர்த்துளிகள் துளியாநிற்பத் தத்தம் ஆருயிர் போன்ற கணவன்மாரை ஆடைபற்றி ஈர்த்து நிறுத்தி, 'நகரின்கண்ணுண்டான இப்பேரொலிக்குக் காரணம் நல்லதோ? தீயதோ? என்று தெரிந்துகொள்ளாமல் நீயிர் அங்குப் போவது அறிவுடைய செயலோ கூறுவீர்!' என்று மறித்துத் தம் துயர் மேலும் பெருகுதலானே மனஞ்சுழல்வோரும் என்க.
 
(விளக்கம்) எரி - தீ. மதிற்புறச்சேரி என்க. பூசல் - கூக்குரல். உறு - மிக்க. உவா - முழுமதிநாள். புன்கண் - துயர், விரீஇய - விரித்த. நீருடை - நனைந்த ஆடை. கான் - காடு. அயில் - வேல். இடு - உவமப் பொருட்டு. உறைத்தர - துளிப்ப. ஏர் : உவமவுருபு. தானை - ஆடை. கூர - மிகாநிற்ப.