உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
34. யாழ் கைவைத்தது |
|
பொழிறலைப் பெயர்ந்த புலம்புகொல் காலை
எழின்மணி விளக்கி னேமம் போகிக்
கலையினுங் களியினுங் காமுறக் கவைஇய
மழலைக் கிண்கிணி மடவோர் மருட்டப்
5 புரிதார் நெடுந்தகை பூவணை வைகிய
திருவீழ் கட்டிற் றிறத்துளி காத்த
வல்வேற் சுற்றத்து மெய்ம்முறை கொண்ட
பெயர்வரி வாசனை கேட்டபின்
|
|
1 -
8:
பொழில்............கேட்டபின்
|
|
(பொழிப்புரை) உதயண குமரனைப்
பாராட்டி விடையீந்து அரண்மனையிற் புகுந்து அழகிய மணி விளக்கான் அழகு
செய்யப் பட்ட தனது பள்ளியறைக்கட் சென்று ஆங்குத் தனக்குக்
காமக்கிளர்ச்சியுண்டாகும்படி தமது சிற்றடியைச் சூழ்ந்த மழலை மொழி
போன்று இனிதாக முரல்கின்ற கிண்கிணிகளையுடைய இள மாதர் தமது கலைத்
திறத்தானும் களிப்பூட்டும் திறத்தானும் தன்னை வியப்பூட்ட மகிழ்ந்து
திருமகளும் விரும்புதற்குரிய மாண்புடைய பள்ளிக் கட்டிலின்கண் பரப்பிய
மலரணை மிசைத் தங்கிய விரும்பு தற்குக் காரணமான மலர் மாலையணிந்த நெடிய
புகழையுடைய பிரச் சோதன மன்னன், அற்றை நாள் இரவின் இருள் உலகினை
நீங்கிய தனிமைத் துயரத்தைப்போக்கா நின்ற அவ்விடியற் காலத்தே
முதற் கண் தனது பள்ளிக் கட்டிலை இரவில் முறைமுறையாக நின்று
விழிப் புடன் பாதுகாத்த வலிய வேற்படையேந்திய தன் மறச்சுற்றத்தாரின்
வாய்மையை முறையாகக் கொண்ட பெயர்கள் பொறிக்கப்பட்ட
ஓலையை வாசிக்கக் கேட்ட பின்னர் என்க.
|
|
(விளக்கம்) ஏமம் போகி
மடவோர் மருட்டப் பூவணைவைகிய நெடுந்தகை, புலம்புகொல் காலைக்கட்டில்
காத்த சுற்றத்துப் பெயர் வரி வாசனை கேட்ட பின்னர் என்க.
இதனால் மன்னர் துயிலெழுந்தவுடன் செய்யும் கடமை இஃதென்பது
பெற்றாம். இரவின்கண் பள்ளியறை காக்கும் மறவர் மறம் மானம்
மாண்டவழிச் செலவும் வழிவந்த வன்கண்மையும் உடையராதலின் வல்வேன் மறவர்
என்னாது சுற்றம் என்றார். ஏமம் - பள்ளியறை : ஆகுபெயர்.
கலை-புணர்ச்சிக் கரணங்கள் என்பர், ஆடல் பாடல் முதலியனவுமாம்.
திருமகளும் விரும்பும் கட்டில் என்க. வரிசையறிந்து முறையாகப் பொறித்த
பெயர் என்க. ''பேரெழுத் தோலை'' என்பர் பின்னரும். (1 - 37 :
154.)
|