பக்கம் எண் :

பக்கம் எண்:66

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
35. நருமதை சம்பந்தம
 
         
          கைவைத் தமைந்த கனங்குழைக் கவ்வியாழ்
          வைக றோறும் வத்தவன் காட்ட
          நிகழ்வதை யுரைக்கும் புகர்ச்சொன் மாக்கள்
          ஒன்னலர் நுழையா வுரிமை மாணகர்த்
     5    தன்மக ளொருத்தியைத் தான்யாழ் கற்கென
          ஏதின் மன்னனை யெண்ணான் றெளிந்த
          பேதை மன்னன் பின்னங் காண்பான்
          சென்றே யாயினுஞ் சிதையி னல்லது
          நன்றொடு வாரா தொன்றறிந் தோர்க்கென
     10   அரச னாசா னரும்பெறற் றந்தையெனக்
          கல்லாச் சனத்தொடு பல்லோர் சொல்ல
 
                (அயலோர் கூற்று)
          1 - 11: கைவைத்..........சொல்ல
 
(பொழிப்புரை) யாழின் கண் கைவைத்துப் பயிலத் தொடங்கிய வாசவததைக்கு அந்த யாழ்க்கல்வியை உதயணன் நாள் தோறும் நன்கு கற்பியா நிற்ப, ஊரில் நிகழ்கின்ற நிகழ்ச்சிகளைப் பிறர்க்குக் கூறும் குற்றமுடைய சொற்களை யுடைய புறங் கூறும் மாக்கள் என்னே! இஃதென்னே! தனது பகை மன்னனாகிய ஒருவனை ஆராயாது தெளிந்த நம் பேதை மன்னன், அவனைப் பகைவர் புகுத வொண்ணாத உரிமை மகளிர் வதியும் உவளகத்தின் கண்ணே புகவிடுத்து மேலும் தன் மகளிரில் வைத்து முதல்வியாகிய வாசவதத்தையை அவன்பால் இசை வகுப்பிடங்களையுடைய யாழும் பயில்க என்று பணித்தான் என்றும், எண்ணாது துணிந்த இச்செயலின் தீய விளைவினை மன்னன் பின்னர்க் காண்பது ஒருதலை என்றும் சிறிது காலஞ்சென்ற பின்னராயினும் இச்செயல் முறிந்து தீமை தருவதல்லது ஒரு நாளும் நன்மை தருவதொன்றாதலில்லை ன்பது உண்மையுணரும் அறிவுடையோர்க்கெல்லாம் இன்றே நன்கு விளங்கும் என்றும் ஆசிரியனும் அரசன்; ஆரும் பெறற் பேறுடைய அவள் தந்தையும் அரசன் ஆகலின் இச்செயலின் விளைவினைப் பின் காண்மின் என்றும், கல்லாரும் கற்றோருமாகிய பலரும் தத்தமக்குத் தோன்றியவாறெல்லாம் பழிகூறா நிற்ப என்க.
 
(விளக்கம்) கனங்குழை - வாசவதத்தை. வைகல் - நாள். வத்தவன் - உதயணன். காட்ட - பயிற்ற. தம்மோடு தொடர்பில்லாத நிகழ்ச்சிகளையும் வலிந்து அறிந்துகொண்டு தூற்றும் புன்சொற்களையுடைய கயமாக்கள் என்பார் நிகழ்வதையுரைக்கும் புகர்ச்சொல்மாக்கள் என்றார். புகர் - குற்றம். பிறர் குற்றங்கூறுதலையே தொழிலாகவுடைய மாக்கள் என்றிகழ்ந்தவாறு. ஒன்னலர் - பகைவர். உரிமைமாணகர் - உவளகம் (அந்தப்புரம்). தானம் - இசை பிறக்குமிடங்கள். ஏதின் மன்னன் - அயலானாகிய அரசன்.எண்ணான:் முற்றெச்சம். எண்ணாமல் என்க. தம் வெறுப்புத்தோன்றப் பேதை மன்னன் என்றார். இப்பொழுது காணானாயினும் பின்னரேனும் காண்பான் என்க. இச்செயல் இப்பொழுதே சிதைதல் கூடும். அங்ஙனமின்றேல் சிறிதுகாலஞ் சென்றேயாயினும் சிதைதல் ஒருதலை என்பது ஒன்றறிந்தோர்க்கு விளங்கும என்பது கருத்து. ஒன்று - உண்மை. உதயணனும் அரசன் வாசவதத்தையும் அரசன் மகள் எனவே பிறப்பு முதலியவற்றால் ஒத்த இவருடைய நெஞ்சங்கள் காமக்கலப் பெய்தாதிரா என்பார், அரசன் ஆசான், தந்தையும் அரசன் என்றார். அரசன் என்பதனைத் தந்தையொடுங் கூட்டுக. கல்லாச்சனம் - கல்லாத மாக்கள். பல்லோர் என்றது கற்றோருமாகிய பலரும் என்பதுபட நின்றது.  :