பக்கம் எண் :

பக்கம் எண்:772

உரை
 
2. இலாவாண காண்டம்
 
9. யூகி சாக்காடு
 
          புறநகர் போந்த பின்றைச் செறுநீர்
          அள்ளற் படப்பை அகல்நிலந் தழீஇப்
          புள்ளொலிப் பொய்கையொடு பூந்துறை மல்கி
          வான்கண் டன்ன வனப்பின வாகி
     5    மீன்கண் டன்ன வெண்மணல் விரிந்த
          கானும் யாறுந் தலைமணந்து கழீஇ
          அரும்பணி புன்னையுஞ் சுரும்பிமிர் செருந்தியும்
          இலையணி இகணையும் இன்னவை பிறவும்
          குலையணி கமுகொடு கொள்தெங் கோங்கு
    10     பழனம் அடுத்த கழனிக் கைப்புடைப்
          போர்மா றட்ட பூங்கழன் மறவர்
          தேர்மா றோட்டித் திண்ணிதின் அமைத்த
          கோட்டம் இல்லா நாட்டு வழிவயின்           
 
           [யூகி புட்பக நகருக்குச் செல்லும் வழியின் மாண்பு]
      1 - 13 ; புறநகர்................வழிவயின்
 
(பொழிப்புரை)  இவ்வாறு யூகி உச்சயினி நகர்ப்புறத்தைக் கடந்த பின்னர்ப் படப்பையையுடைய அகன்ற நிலத்தைத் தழுவிப் பொய்கைளும், பூந்துறைகளும், மிக்கு வானத்தை ஒத்த அழகுடைத்தாக விண்மீன்களை ஒத்த வெள்ளிய மணல் பரந்த யாறும், கானமும், கூடி மிகுந்த அரும்புகளானே அழகு செய்யப்பட்ட புன்னை செருந்தி இகணை கமுகு தெங்கு முதலிய மரங்களையுடைய மருதநிலத்தின் பக்கத்தே மறவர்களானே திண்ணிதாக அமைக்கப்பட்ட வளைவில்லாத நாட்டு வழியின்மேல் என்க.
 
(விளக்கம்) 1. செறுநீர் - சிறைசெய்து தேக்கப்பட்ட நீர்-செறுதல் - அடக்குதல். 2. அள்ளல் - சேறு. படப்பை - தோட்டம், அள்ளலையும் படப்பையையுமுடைய நிலமென்க, தழீஇ - சார்ந்த.  
    3. புள்ளொலியையுடைய பொய்கை என்க. புள் - பறவை. மருதநிலமாகலின் புள்ளொலி கூறினார்.
          'பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக்
          கம்புட் கோழியும் கனைகுரல் நாரையும்
          செங்கால் அன்னமும் பைங்காற் கொக்கும்
          கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்
          உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
          வெல்போர் வேந்தர் முனையிடம் போல'
                             (சிலப் ; 10 - 113 - 18)
என்றார் இளங்கோவடிகளாரும்.
    பொய்கை -இயற்கை நீர்நிலை, பூந்துறை - பூக்கள் மலிந்த நீராடுதுறை. மல்கி- மிக்கு,
    4. பரப்புடைமையானும் நிறத்தானும் நீர்நிலைக்கு வானம் உவமையாயிற்று,
    5. மீன் - விண்மீன். இஃது ஆற்றுமணல்கட்கு உவமை; ஆற்றின்கண் மணல் மின்னுதலைக் கண்டுணர்க, வனப்பு - அழகு,
    6. கான் - முல்லைநிலம், தலைமணந்து-கூடி. கழிஅரும்பு-மிக்க அரும்பு. கழி என்னும் உரிச்சொல்லீற்றுக் குறில் நெடிலாகி அளபெடுத்து நின்றது.
    7. அரும்பால் அழகுசெய்யப்பட்ட புன்னை என்க. சுரும்பு- வண்டு,  இமிர் - முரலாநின்ற. செருந்தி - ஒருவகைமரம்.
    8. இலைகளாலே அணியப்பட்ட இகணை என்க, இகணை- ஒரு மரம். இன்னவை-இவைபோல்வன.
    9, கமுகு-பாக்குமரம். கோள்தெங்கு - குலைகளையுடைய தென்னை
    10. பழனம் - மருதநிலம், கழனி-வயல். கைப்புடை-பக்கத்தே.
    11-12. போரின்கண் பகைவரைக் கொன்ற மறவர் தந் தேரினை ஒன்றனை ஒன்று மாறும்படி ஓட்டிப் பார்த்துத் திண்ணிதாக அமைத்த வழி, கோட்டம் இல்லா வழி, நாட்டிற் செல்லும் வழி, எனத் தனித்தனி கூட்டுக.
    13, கோட்டம்-வளைவு, வழிவயின்-வழியின்மேல்.
    மன்னர் அரண் பெரும்பாலும் மருதநிலத்தின் கண்ணதாகலான் மறவர் அமைத்த வழி என்றார். என்னை?
          'பிணங்கு கதிர்க் கழனி நாப்பண் ஏமுற்று
          உணங்குகல னாழியில் தோன்றும் ஓரெயில் மன்னன் '
           (புறநா, 338)
எனப் பிற சான்றோரும் கூறுதல் உணர்க.