பக்கம் எண் :

பக்கம் எண்:901

உரை
 
2. இலாவாண காண்டம்
 
17, தேவியைப் பிரித்தது
 
          கழிக்குங் காலைக் கானத் தகவயின்
          வழுக்கில் தோழரொ டிழுக்கின் றெண்ணி
          வந்தவண் ஒடுங்கிய வெந்திறல் அமைச்சன்
          பொய்நிலம் அமைத்துப் புரிசைக் கோயில்
     5    வெவ்வழல் உறீஇ விளங்கிழைப் பிரித்து
          நலத்தகு சேதா நறுநெய்த் தீம்பால்
          அலைத்துவாய்ப் பெய்யும் அன்புடைத் தாயின்
          இன்னா செய்து மன்னனை நிறூஉம்
          கருமக் கடுக்கம் ஒருமையி னாடி
     10    உருமண் ணுவாவொடு வயந்தகற் குணர்த்தித்
 
        (1- 17. யூகியின் செயல்)
      1-10 : கழிக்குங்காலை,,,,,,,,உணர்த்தி
 
(பொழிப்புரை) இவ்வண்ணம் உதயணன்  காட்டகத்திருந்து பொழுது போக்காநிற்ப, முன்னர்க் காட்டினூடே தன் தோழரோடு கூடியிருந்து குற்றமின்றி ஆராய்ந்து துணிந்து அவ்விலாவாண நகரில் வந்து மறைந்திருந்த யூகி அந்நகரத்தில் சுருங்கை வழியுடையதோர் அரண்மனையமைத்து அதன்கண் உதயணனை வாசவதத்தையுடனே குடிபுகச் செய்து  அவ் வரண்மனையின்கண் தீயிட்டு வாசவதத்தையை உதயணனிடத்தினின்றும் பிரித்துத் தன் மகவினை அலைத்து ஆன்பாலை அதன் வாயிலே பெய்யுமோர் அன்புடைய தாய் போன்று  இன்னா செய்தும் அவனை நன்னிலைக்கண் நிறுத்தக் கருதி   அச்செயலையும் செயன்முறைகளையும் சாங்கியத்தாய் வாயிலாய்  உருமண்ணுவாவிற்கும், வயந்தககுமரனுக்கும் உணர்த்தியும் என்க,
 
(விளக்கம்) 1. கானத்து அகவயின் - காட்டின் நடுவிடத்தே. வழுக்கு - தவறு, 2, இழுக்க - குற்றம், இழுக்கின்றி எனற்பால குற்றியலிகரம் உகரமாயிற்றுச் செய்யுளாகலின். 3. அவண்- அவ்விலாவாணத் தயலிலே ஒருசார் என்க, ஒடுங்கிய மறைந்திருந்த. வெவ்விய அமைச்சுத் தொழில் ஆற்றலுடைய யூகி என்க,
    4. பொய்ந்நிலம் - உட்பொய்யாகிய சுருங்கை. புரிசைக் கோயில் - மதிலையுடைய அரண்மனை.
    5. வெவ்விய தீயினைக் கொளுவி என்க, விளங்கிழை; அன் மொழித் தொகை; ஈண்டு வாசவதத்தை என்க.
    6. நன்மையாற் றகுதியுடைய சிவப்புப் பசுவினது நறிய நெய்யுடைய இமய பாலை என்க, பசுக்களில் சிவப்புப் பசு சிறந்தது என்ப. நெய்த்தீம்பால் - நெய்யைத் தன்பாலுடைய இனியபால்;நெய்ப்புடைய பாலுமாம்,
    7, அலைத்து - துன்புறுத்தி. தாயின் - தாய்போல,
    8. இன்னா செய்தும் எனற்பால சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. நன்னிலைக்கண் நிலைபெறச் செய்யும் கருமம் என்க. கடுக்கம் ; கடிஎன்னும் உரிச்சொல் அடியாகப் பிறந்தது; மிகுதி என்க,  9. ஒருமையின் - ஐயமின்றி ஒன்றுபட. நாடி, ஆராய்ந்து 10. சாங்கியத்தாய் வாயிலாய் உணர்த்தி என்க.