பக்கம் எண் :

பக்கம் எண்:954

உரை
 
2. இலாவாண காண்டம்
 
20. சண்பையுள் ஒடுங்கியது
 
           துணிவுடை யாளர் துன்னினர் குழீஇ
           அணியுடை அண்ணற் கமைந்தமை காட்டிப்
           படுதிரைப் பௌவத்துக் கடுவளி கலக்கப்
           பொறியவிழ்ந்து கவிழ்ந்த பொருகலத் துய்ந்தோர்
      5    நெறிதிரிந் தொரீஇ நீத்துயிர் வழங்காத்
           தீவகம் புக்குத் தாவகங் கடுப்பப்
           பெருந்துயர் உழக்கும் அருந்துபசி மூளத்
           திண்ணிலை வரைப்பிற் சினைதொறுஞ் செறிந்து
           கண்நவை உறூஉங் கனிபல கண்டவை
 
        1 - 9 : துணிவுடையாளர்......................கனிபலகண்டு
      [ காமத்தால் உளதாகும் கேட்டினைத் துணிவுடைய தோழர்
           உதயணனுக்கு எடுத்துக் கூறித் தேற்றுதல். ]
 
(பொழிப்புரை) இங்ஙனம் பல்லாற்றானும் புலம்பா நின்ற உதயண குமரன்பால் துணிவுடைத் தோழர் சென்று குழுமி அம் மன்னனுக்குப் பொருந்துவனவாகிய மெய்ம் மொழிகளை எடுத்துக் கூறித் (19) தாமரைக் கண்ணையும், அழகுமிக்க மார்பினையும் உடைய பெருமானே! (20) காமத்தினது தன்மையை ஆராயின் அலையெறியா நின்ற கடலினூடே சூறைக்காற்று மோதி அலைத்தலானே பொறி கலங்கிக் கவிழ்ந்த மரக்கலத்தினின்றும் உடை மரம் பற்றி உயிர் உய்ந்தோர் வழி தப்பிச்சென்று உயிரினங்கள் வாழ்தலில்லாத தொரு தீவின்கட் சென்று புகுந்தனராகக் காட்டுத்தீப் போன்ற கடிய பசிப்பிணி தோன்றி அவரை வருத்தா நிற்ப அவர் அத் தீவினகத்தே உள்ள மரங்களிற் கிளைகள் தொறும் நெருங்கிக் கனிந்துள்ள காண்போர் கண்கள் துன்புறுதற்குக் காரணமான ஒளியினையுடைய பலவேறு கனிகளைக் கண்டனர் என்க.
 
(விளக்கம்) 1. வேந்தனுக்கு அறிவுறுத்தப் புகுதல் அஞ்சத்தகுந்த
  செயல் ஆதலின் தலைமகன் வெகுண்டபோதும் தம்முயிர்க் குறுதி எண்ணாமல் நீதி விடாமல் நின்றுரைக்கும் வீரமுடைமை தோன்றத் 'துணிவுடையாளர்' என்றார்,
    2, அண்ணல் ; உதயண குமரன். அமைந்தமை - பொருந்து பவற்றை
    3, பௌவம் - கடல். கடுவளி - கடிய சூறைக் காற்று
    4. பொறி - இயந்திறம். பொருகலம் - அலை முதலியவற்றாற் பொரப்படும் மரக்கலம் என்க.
    5. நெறி தீரிந்து - வழிதப்பி. ஒரீஇ - ஒருவி - விலகி.
    6. நீத்து - விலகி. உயிரினங்கள் வாழ்தலில்லாத என்பது கருத்து.
    6. தாவகம் - காட்டுத் தீ,
    7, பெருந்துயர் உழத்தற்கும் அருந்துதற்கும் காரணமான பசிப்பிணி மூள என்க.
    8, திண்ணிய நிலையினையுடைய அத் தீவக வரைப்பின் என்க, சினை - கிளை.
    9. காண்போர் கண்கள் கூசித் துன்புறுதற்குக் காரணமான ஒளியுடைய கனி என்க.