பக்கம் எண் :

பக்கம் எண்:10

உரை
 
3. மகத காண்டம்
 
1. யாத்திரை போகியது
 
            இல்லை யாதலிற் சொல்லுவ லின்னும்
           முடியாக் கரும மாயினு முடியும்
           வாயின் முற்றித்து வயங்கா தாயினும்
     70    சாவினும் பழியார் சால்புடை யோரென
           மல்லற்றானை மறங்கெழு மன்னவன்
           செல்வப் பாவை சென்றினிது பிறந்துழி
           இம்மை யாக்கையி னியல்பின ளாகத்
           தன்மையிற் றரூஉந் தாழாப் பெருவினை
     75    உட்குடை விச்சை யொன்றுண் டதனைக்
 
               (இதுவுமது)
         67 - 75 ; இல்லை............ஒன்றுண்டு
 
(பொழிப்புரை) "நம்மைக்கடிவோர்'யாரும்இல்லையாதலானே
  யான் பின்னும் இதனைச் சொல்லுவேன். பெருமானே! முடியாத
  செயலேயாயிருப்பினும் அச் செயல் முடித்தற்கியன்ற துணைக்
  காரணமான செயலை யெல்லாம் நன்கு செய்து முடித்த பின்னர்
  அச்செயல் முடிவுற்றுத் திகழாத விடத்தும் அச்செயலின்
  பொருட்டுச் சாவுறினும் சான்றாண்மையுடையதோர் பழி கூறமாட்டார்.''
  என்றும், வளமிக்க படையையும், மறப்பண்பையும் உடைய
  பிரச்சோதன மன்னனுடைய செல்வ மகளாகிய கொல்லிப் பாவையை
  ஒத்த வாசவதத்தை இப் பிறப்பினின்றும் சென்று இனிதாக மறுபிறப்புப்
  பிறந்த விடத்தினின்றும் கழிந்து போன இப்பிறப்பின் கண் இருந்த
  உடம்போடும், பண்பாடும் வரவழைத்துக் கொடுக்கின்ற தாழ்வில்லாத
  பெரிய செயலாகிய அச்சந் தரும் வித்தையொன்றுண்டு'' என்க. 
 
(விளக்கம்) நான் கூறப்போவது. முடியாக்கருமம் என்று
  அறிவிலார் கூறினும், நாம் அக்கருமத்தைச் செய்துபார்ப்போம்,
  செய்யுங்காலத்தே அது நிறைவேறிப் பயன் தாராமற்போயினும்
  அறிஞர் நம்மைப் பழியார் என்றவாறு. மேலே அக்கருமம் இஃதென
  இயம்புகின்றான். மல்லல்-வளம், மன்னவன்-பிரச்சோதனன். பாவை -
  வாசவதத்தை,. இம்மையாக்கை என்றது வாசவதத்தை வடிவத்தை.
  உட்கு-அச்சம்..