பக்கம் எண் :

பக்கம் எண்:1002

உரை
 
5. நரவாண காண்டம்
 
   4. வயாத் தீர்ந்தது
 
          எறிவளி யெடுப்ப வெழுந்துநிலங் கொள்ளும்
    115    வெதிரிலை வீழ்ச்சியின் வேண்டிடத் தசைஇ
          வினைகொள் விஞ்சை வீரிய ருலகிற்
          புனைவமை நகரமும் பூந்தண் காவும்
          நிறைப்பருங் காட்சி யியற்கைய வாகிச்
          சென்றுசே ணோங்கிய சேதி யெங்கணும்
    120    ஒன்றே போல்வன வொருநூ றாயிரம்
          வந்தனை செய்குநர் பூசனைக் களரியும்
 
                     (இதுவுமது)
              114 - 121 : எறி............களரியும்
 
(பொழிப்புரை) வீசாநின்ற காற்று எடுத்தலாலே வானத்தின் மேல் எழுந்து பின்னர் மெல்லமெல்ல நிலத்தை யடையா நின்ற மூங்கிலினது இலையின் வீழ்ச்சிபோலே தாம் விரும்பியவிடத்து மெல்ல இறங்கியும், பின்னர் ஏறியும் நல்வினையை மேற்கொண்டுள்ள விச்சாதர வீரர்கள் வாழும் உலகின்கண் ஒப்பனையமைந்த நகரங்களையும், தண்ணிய பூஞ்சோலைகளையும் கண்கொள்ளுதலரிய அழகினையுடைய தன்மையை யுடையனவாய் உயர்ந்து சென்று வானில் ஓங்கி நிற்கும் அருகன் கோயில்தோறும் ஒன்றே போல்வனவாகிய கடவுள் வழிபாடு செய்வோருடைய ஒரு நூறாயிரம் பூசனை மண்டபங்களையும் என்க.
 
(விளக்கம்) எறிவளி : வினைத்தொகை. வீசுங்காற்று என்க. வெதிரிலை வீழ்ச்சியின் - மூங்கிலிலையினது வீழ்ச்சியைப் போல. சேதி - அருகன் கோயில். களரி - தொழில் நிகழும் இடம். பூசனைக்களரி என்பது வழிபாடு செய்யும் மண்டபம் என்றவாறு.