பக்கம் எண் :

பக்கம் எண்:1003

உரை
 
5. நரவாண காண்டம்
 
   4. வயாத் தீர்ந்தது
 
           கிளர்சே ணிமயமுங் கெங்கையுஞ் சிந்துவும்
          வளமலர்க் கயமு மணிநிலப் பூமியும்
          மேதகு மேருவு மதன்மிசைக் காவும்
    125    சிந்துவுஞ் சீதையுஞ் சீதோ தகையும்
          அந்தமில் விதையமு மணிதிக ழந்தியும்
          தேவ குருவு முத்தர குருவும்
          ஈரைந் திரதமு மிறுதி யாக
          மனத்தினும் வளியினு மிசைப்பி னோட்டி
 
                    (இதுவுமது)
              122 - 129 : கிளர்............ஓட்டி
 
(பொழிப்புரை) ஒளி கிளருகின்ற உயர்ந்த இமயமலையையும் கங்கையும் சிந்துவும் உள்ளிட்ட பேரியாறுகளையும் வளவிய மலர் நிரம்பிய நீர்நிலைகளையும் மணிமயமான நிலத்தையுடைய பரப்பினையும் மேம்பாடுடைய மேருமலையினையும் அம்மலையின் மேலுள்ள சோலைகளையும் சிந்து சீதை சீதோதகை முடிவற்ற விதையம் அழகால் திகழுகின்ற அந்தியும் தேவகுருவும் உத்தரகுருவும் பத்தாகிய இரதமும் என்னும் இவ்விடங்களையுமெல்லாம் முடியக்காட்டி அவ்வானவூர்தியைத் தன் மனத்தினும் காற்றினும் காட்டில் விரைந்து செல்லும்படி தனது நினைவிசைப்பினால் செலுத்தி என்க.
 
(விளக்கம்) கங்கை - கங்கையாறு. சிந்து (121) ஓரியாறு. நிலப்பூமி : இருபெயரொட்டு. சிந்து (125) ஓரிடம். சிந்து முதலாக இரதம் ஈறாக உள்ள இவையெல்லாம் இடப்பெயராகக் கொள்க. இசைப்பின் - தன் மனத்தை இயைத்தல் வாயிலாய் என்க.