பக்கம் எண் :

பக்கம் எண்:1010

உரை
 
5. நரவாண காண்டம்
 
5. பத்திராபதி உருவுகாட்டியது
 
           நல்வினை யுடைமையிற் றொல்வினை தொடர்ந்த
           எந்திரந் தந்து கடவுளை யொத்தியென்
           றன்புகலந் தொழுகு மறிவிற் பின்னி
     20    அருளுரை யளைஇப் பொருளுரை போற்றித்
           தானணி பெருங்கலந் தலைவயிற் களைந்து
           தேனணி தாரோன் பெருஞ்சிறப் பருள
 
          (உதயணன் தச்சனுக்குச் சிறப்புச் செய்தல்)
               17 - 22 : நல்வினை.............அருள
 
(பொழிப்புரை) ''யாம் முற்பிறப்பிற் செய்த பழவினையோடு தொடர்புடைய நல்வினையை உடையே மாகலிற்போலும் நீ வலிய வந்து எந்துயர் தீர்க்கும் வானவூர்தியை இயற்றித்தந்து எம் துயர் களைந்து எங்களுக்குக் கடவுள் போல்கின்றனை !'' என்று அன்பு கலந்து அறிவொடு பொருந்தி அருள் மொழியோடு பின்னப்பட்ட பொருளுரை பலவும் கூறிப் பாராட்டித் தான் அணிந்துள்ள பேரணிகலன் ஒன்றனைத் தன் தலையினின்றும் களைந்து தேன் ததும்பும் அழகிய மாலையணிந்த அவ்வுதயணன் அத்தச்சனுக்கு வழங்கிப் பெரிய சிறப்பினைச் செய்யாநிற்ப என்க.
 
(விளக்கம்) தொல் வினை - பழைய வினை. நல்வினை - ஆகூழ். தொல்வினை தொடர்ந்த நல்வினை யுடைமையின் என மாறுக. எந்திரம் - விமானம். ஒத்தி - ஒக்கின்றாய். அன்பு கலந்து ஒழுகுகின்ற அறிவோடு பின்னுதலுற்று எழாநின்ற அருள் மொழியைக் கலந்து பேசாநின்ற பொருள் பொதிந்த உரை என்க. பெருங்கலம் - பேரணிகலம். தாரோன் : உதயணன்.