(விளக்கம்) புனையிழை :
பத்திராபதி. துனை - விரைவு. துவன்றிய செறிந்த. அ - அழகு. அவந்தியன் :
பிரச்சோதனன். பெருமகன் தேவியைப் பதுமையினீக்கிச் செல்வமொடு முறைமையிற் பிழையாது
ஒழுகாநின்ற காலை என்க. பெருமகன் : உதயணன். வானோர் விழையும் அவந்தி என்க. உசாஅ -
ஆராய்ச்சி. ஈண்டு ஆகுபெயராய் ஆராய்ச்சியிற் றெளிந்த நுண்பொருளைக் குறித்து நின்றது.
நுண் மாணுழைபுலமுடைய ஒருவன் அரிதின் ஆராய்ந்து கண்ட நுண்பொருளைப் பேதைக்குரைக்குங்கால்
அவன் அதனை யுணரமாட்டாமல் தான் உணர்ந்ததனையே அதுவாகக் கொள்வன் அன்றோ? அவ்வழி
அக்குற்றம் அவ்வாராய்ச்சியாளன் பாலதேயாய்ப் பெருகுமன்றோ அங்ஙனம் பெருகிய முலை
என்றவாறு. ''கற்றன கல்லார் செவிமாட்டிக் கையறூஉங் குற்றம் தமதே பிறிதன்று'' எனப்
பிற சான்றோருங் கூறுதல் காண்க. ''காணாதாற் காட்டுவான், றான்காணான் காணாதான்
கண்டானாந் தான் கண்ட வாறு'', என வருந் திருக்குறளுங் காண்க. இனி ''உசாவினன்ன
நுண்ணிடை உசாவினைப் பேதைக் குரைப்போன் பிழைப்பிற்றாகிய வெம்முலை'' என்னு
மிதனோடு.
''அவாப்போ லகன்றத னல்குன்மேற்
சான்றோர், உசாப்போல வுண்டே
மருங்குல்--உசாவினைப் பேதைக் குரைப்பான் பிழைப்பிற்
பெருகினவே கோதைக்கொம் பன்னாள்
குயம்''
என வரும்
பழம்பாடலையும் (யா - கா. ஒழிபு) ஒப்புநோக்குக
கோமகளிர்
கருவுற்றிருக்கும் அமையத்தே அவர்தம் சக்களத்தியர் பானின்றும் விலக்கிவைத்துப் பேணல்
வேண்டும் என்பது அரசியல் விதி. இவ்விதிபற்றிப் பதுமையின் நீக்கி என்று கூறப்பட்டது.
சிறப்புப் பற்றிப் பதுமையை மட்டும் கூறினாரேனும் சக்களத்தியர் பானின்றும் விலக்கி
எனப் பொதுமையிற் கொள்க. பதுமை - பதுமாபதி. முறைமை. கருவுற்ற மகளிரைப் பேணுமுறை
என்க.
|