பக்கம் எண் :

பக்கம் எண்:1017

உரை
 
5. நரவாண காண்டம்
 
6. நரவாணதத்தன் பிறந்தது
 
          பகைமுதல் சாயப் பசிபிணி நீங்க
     20   மாரியும் விளையுளும் வாரியுஞ் சிறப்ப
          வழுக்கா வாய்மொழி வல்லோர் வாழும்
          விழுத்தகு வெள்ளி வியன்மலை விளங்கத்
          திருத்தகு தேவி வருத்த மின்றிப்
          பொய்கைத் தாமரைப் பூவி னுறையும்
     25   தெய்வத் திருமகள் சேர்ந்துமெய் காப்பப்
 
                    (இதுவுமது)
               19 - 25 : பகை............காப்ப
 
(பொழிப்புரை) பகைமை காரணத்தோடே அழியாநிற்பவும், பசியும் பிணியும் நீங்காநிற்பவும், மழையும் கூல முதலியவற்றின் விளைவும் வருவாயும் பெரிதும் சிறவாநிற்பவும், பிழைபடாத மெய்ம்மொழியினையுடைய கலை வல்லுநரான விச்சாதரர் வாழா நின்ற சிறப்பாற் றகுதியையுடைய வெள்ளியாகிய அகன்ற மலையுலகம் விளக்க மெய்தவும், திருவுடைமையாலே தகுதியையுடைய கோப்பெருந்தேவியாருக்குத் துன்பம் உண்டாகாதபடி பதுமையென்னும் பொய்கையின் கண்ணதாகிய தெய்வத் தாமரைப் பூவிலுறையும் தெய்வமாகிய சீதேவி அத்தேவியைச் சேர்ந்திருந்து அவருடைய மெய்வருந்தாமற் பாதுகாவா நிற்பவும், என்க.
 
(விளக்கம்) முதல் - காரணம். பகைவர் குலத்தோடழிய எனினுமாம். பசியும் நீங்க என்க. விளையுள் - விளைவு. வாரி - வருவாய். கலைவல்லோர் என்க. வெள்ளிவியன்மலை என்றது, விச்சாதரருலகினை. தேவி : வாசவதத்தை. தேவியின் மெய்யைக் காப்ப என்க.