பக்கம் எண் :

பக்கம் எண்:1019

உரை
 
5. நரவாண காண்டம்
 
6. நரவாணதத்தன் பிறந்தது
 
          சிறந்தோர் நாப்பட் சேதியர் பெருமகற்
          கறஞ்சேர் நாவி னவந்திகை திருவயிற்
          றரியவை வேண்டிய வசாவொடு தோன்றிப்
    35    பெரியவ ரேத்தப் பிறந்த நம்பிக்
          குதையண குமரன் றுதைத்தார்த் தோழரும்
          அகனம ரவையு மைம்பெருங் குழுவும்
          நகரமு நாடுந் தொகைகொண் டீண்டி
 
               (பிறந்த நாட் சிறப்புக்கள்)
              32 - 38 : சிறந்தோர்............ஈண்டி
 
(பொழிப்புரை) தஞ்சுற்றத்தார் சூழலின் நடுவே சேதிநாட்டு மன்னனாகிய உதயணகுமரனுக்கு, எஞ்ஞான்றும் அறமே கூறும் இயல்புடைய செந்நாவினையுடைய அவந்தி நாட்டரசன் மகளாகிய வாசவதத்தையின் திருவயிற்றிலே செயற்கரிய செயல்களையே செய்தற்கு விரும்பிய வயாவிருப்பத்தோடு கருவாகிச் சான்றோர் புகழ்ந்து பாராட்டெடாநிற்பப் பிறந்த நம்பியின் பொருட்டு அவ்வுதயணனுடைய செறிந்த மலர் மாலையணிந்த தோழரும், நெஞ்சினூடே அம்மன்னனைப் பெரிதும் விரும்புகின்ற அவையத்தாரும் ஐம்பெருங்குழுவினரும் நகரமாந்தரும் நாட்டின்கண் வாழும் மாந்தரும் மகிழ்ந்து கூட்டங் கூட்டமாகக் கூடாநிற்ப என்க.
 
(விளக்கம்) சிறந்தோர் - சுற்றத்தார். நாப்பண் - நடுவே. அவந்திகை : வாசவதத்தை. அவன் கருவிலுற்ற காலந் தொடங்கித் தேவிக்கு அரியவை வேண்டிய அசாஅத் தோன்றுதலாலே அசாவொடு தோன்றிப் பிறந்த நம்பி என்றார். பெரியவர் - சான்றோர். தோழர் : உருமண்ணுவா முதலியோர். அவை - அறங்கூறவையத்தார். ஐம்பெருங்குழு - அமைச்சர் முதலிய ஐந்து வகையினரின் கூட்டம். நகரம் நாடு என்பன ஆகுபெயர்கள். கூடி - கூட.