பக்கம் எண் :

பக்கம் எண்:1022

உரை
 
5. நரவாண காண்டம்
 
6. நரவாணதத்தன் பிறந்தது
 
         
    55    பொருந்தா மன்னரும் பொலிகெனுங் கிளவி
          பெருந்திறை யாக விரைந்தனர் வருக
          நிலைஇய சிறப்பி னாட்டுளுங் காட்டுளும்
          கொலைவினை கடிக கோநக ரெல்லாம்
          விழவொடு புணர்ந்த வீதிய வாகெனப்
    60    பெருங்கை யானைப் பிணரெருத் தேற்றி
          இருங்க ணதிரப் பொற்கடிப் போச்சிப்
          பெருங்கண் வீதிதொறும் பிறபுல மறிய
          இன்னிசை முரச மியமர மெருக்க
 
                     (இதுவுமது)
             55 - 63 : பொருந்தா.......எருக்க
 
(பொழிப்புரை) நம்பகை மன்னர்களும் எம்மகவினை, ''பொலிக'' என்னும் வாழ்த்துமொழியே நமக்கு அளக்கும் திறைப் பொருளாகக் கொண்டு விரைந்து வந்து எமக்குக் கேளிராகக் கடவர்! என்றும், நிலை பெற்ற சிறப்பினையுடைய நம்நாட்டின் கண்ணும் காட்டகத்தும் வாழும் மாந்தர் உயிரினங்களைக் கொல்லும் தீவினையை ஒழிக! என்றும், நமது தலைநகரெங்கும் அமைந்த கோயில்களெல்லாம் திருவிழாவோடு கூடிய வீதிகளை உடையனவாகுக! என்றும், அறிவித்துப் பெரிய கையினையுடைய யானையினது பிணருடைய எருத்தின்கண் இனிய இசையினையுடைய முரசங்களையும் இயமரங்களையும் ஏற்றி அவற்றின் கரிய கண்கள் அதிரும்படி பொன்னாலியன்ற கடிப்பினாற் புடைத்து இடமகன்ற நம் பெரிய வீதிதோறும் வேற்று நாட்டவர் அறியும் பொருட்டு முழக்குக! என்றும், துறைவியாநிற்பவும் என்க.
 
(விளக்கம்) பொருந்தா மன்னர் - பகைமன்னர். பொலிகெனும் கிளவி - பொலிக என்று கூறும் வாழ்த்துச் சொல். அவர்கள் திறை தருதல் வேண்டா, நம்பால் வந்து நம்மகவினை வாழ்த்துதலாலே அமையும் என்பது கருத்து. நிலைஇய சிறப்பு, நாடாவளம் முதலியன. நம் நகரத்திலுள்ள கோயில்களுக்கெல்லாம் விழாவெடுத்திடுக என்பான் நகர் எல்லாம் விழவொடு புணர்ந்த வீதிய ஆக என்றான். பிணர் - சருச்சரை. இருங்கண் - கரிய கண். கடிப்பு - முரசடிக்குங் குறுங்கோல். பெருங்கண்வீதி - பெரிய இடத்தையுடைய வீதி. பிற புலம் - வேற்று நாடு. இயமரம் - ஒருவகைத் தோற்கருவி. எருக்க - அறைய.