பக்கம் எண் :

பக்கம் எண்:1034

உரை
 
5. நரவாண காண்டம்
 
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது
 
          ஓடை யணிந்த வொண்பொ னெற்றிக்
          கோடுடை வேழம் பாடுபெறப் பண்ணி
          எருத்தின் மீமிசைத் திருத்தக விரீஇத்
    20    துகின்மடி யணைமிசைத் துளக்க மின்றிப்
          பாற்படு வென்றி நாற்புடை மருங்கினும்
          கண்டோர் விழையுந் தண்டாக் கோலமொடு
          நீத்தியாற் றன்ன நெடுங்கண் வீதியுட்
          போத்தர வமைந்து புகுவழி யெல்லாம்
    25    கனைபொற் கடிப்பிற் காண்டக வோச்சிப்
 
                  (முரசறைதல்)
             17 - 25 : ஓடை............ஓச்சி
 
(பொழிப்புரை) அக்கட்டளை பெற்ற வள்ளுவன் ஒள்ளிய பொன்னாலியன்ற முகபடாம் அணிந்த நெற்றியினையும் மருப்புக்களையுமுடைய யானையைப் பெருமையுண்டாக ஒப்பனை செய்து அதன் பிடரின்மேல் முரசினை அழகுற வைத்துத் துகிலை மடித்தியற்றிய அணையின்மேல் நடுக்கமின்றி இருந்து பலவேறு வெற்றியினையுடைய நான்கு திசைகளினும் தம்மைக் கண்டோர் பின்னும் காண்டற்கு விரும்பும் குறையற்ற அலங்காரத்தோடு வெள்ளமிக்க பேரியாற்றை யொத்த நெடிய இடமகன்ற வீதிகளிலே புகுந்து தாம் புகுமிடமெல்லாம் முழங்குதற்குக் காரணமாகிய பொன்னாலமைந்த குறுந்தடியால் முரசினை முழக்கி என்க.
 
(விளக்கம்) ஒண்பொன் ஓடை என்க. கோடு - மருப்பு. பாடு - பெருமை. பண்ணி - ஒப்பனை செய்து. இரீஇ - இருத்தி. முரசினை இருத்தி என்க. வீதிக்கு நீத்தத்தையுடைய ஆறு உவமை. போத்தரவமைந்து : ஒருசொல் நீர்மைத்து; புகுந்து என்க. கனை - முழக்கம். கடிப்பு - குறுந்தடி. காண் - அழகு