பக்கம் எண் :

பக்கம் எண்:1039

உரை
 
5. நரவாண காண்டம்
 
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது
 
          நன்னீர் விரவிய செந்நிறச் சுண்ணம்
    60    குலநல மகளிரொடு கோமக னாடி
          ஐந்நூற் றிரட்டி யருங்கடை தோறும்
          பசும்பொன் மாசையும்...................
          பிடிப்புவிலை யறியாப் பெருங்கல முட்படக்
          கொடித்தேர் முற்றத்துக் குறையுடை யோர்கட்
    65    கீகென வருளி யெண்டிசை மருங்கினும்
 
         (பிரச்சோதனன் விழாக் கொண்டாடல்)
             59 - 65 : நன்னீர்...........அருளி
 
(பொழிப்புரை) இனி, பிரச்சோதன மன்னன் குலநலமமைந்த கோமகளிராகிய தேவிமாரோடு நன்னீரில் கலந்த செந்நிறச் சுண்ண நீரில் ஆடி நமது ஓராயிரம் அறநிலையங்களின் இடம் பெறலரிய முன்றில்தோறும் பசிய பொன்னாலியன்ற மாசைகளையும்............கொள்ளும் விலையை அறிதற்கொண்ணாத பேரணிகலம் உட்படக் கொடியணிந்த தேரினையுடைய நம்மரண்மனை முற்றத்தின்கண் வறுமையுடையோர்களுக்கு வழங்குக ! என்று கட்டளையிட்டருளி என்க.
 
(விளக்கம்) குலநல மகளிர் - தேவிமார்கள். மாசை - ஒரு பொற்காசு. 62 ஆம் அடியின் இறுதிச் சீர் இரண்டும் அழிந்தன. பிடிப்பு விலை - கொள்ளும் விலை. அரண்மனை முற்றம் என்பான் கொடித்தேர் முற்றம் என்றான். குறை - வறுமை.