பக்கம் எண் :

பக்கம் எண்:1047

உரை
 
5. நரவாண காண்டம்
 
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது
 
          ஏற்ற முகத்தி னிறைவனும் விரும்பி
          நண்பின் மாட்சியுங் கல்விய தகலமும்
          பண்பின் றொழிலும் படைத்தொழின் மாண்பும்
          காயு மாந்த ராயினும் யாதும்
    110    தீயவை கூறப் படாத திண்மையும்
          இவற்கல தில்லை யிவனாற் பெற்ற
          அவற்கல தில்லை யரசின் மாட்சியென
 
        (பிரச்சோதனன் யூகியின் சிறந்த குணங்களை வியத்தல்)
                   106 - 112 : ஏற்ற...............என
 
(பொழிப்புரை) அதுகேட்ட அம் மன்னவன்றானும் அவன் கூறிய விளக்கங்களை ஏற்றுக்கொண்டதற் கறிகுறியான மெய்ப்பாடுடைய முகத்தினோடே அந்த யூகியைப் பெரிதும் விரும்பி அவ் வவையோரை நோக்கி நண்பினது பெருமையும் கல்வியது விரிவும் பண்பமைந்த தொழிலும் படைத்தொழிற் சிறப்பும் தன்னை வெகுளும் பகைவராயினும் சிறிதும் தீய மொழிகள் கூறப்படாமைக்குக் காரணமான மனத் திட்பமும் ஒருங்கே இவ்வமைச்சனுக்கன்றிப் பிறருக்கு அமைந்ததில்லை. இவ் வமைச்சனால் எய்தப்பட்ட அரசியற் சிறப்பும் அவ்வுதயணனுக்கன்றி வேறு அரசர்களுக்கு இல்லை என்று கூறிப் பெரிதும் பாராட்டி என்க.
 
(விளக்கம்) இறைவன் : பிரச்சோதனன். பண்பின் தொழில் - பண்புடைமையோடு செய்யுந் தொழில். காயும் மாந்தர் - பகைவர். இவற்கு : யூகிக்கு. அவற்கு : உதயணனுக்கு. உதயணனை மீண்டும் அரியணையில் இருத்தியவன் யூகியேயாதலின் இவனாற்பெற்ற அரசு என்றான்.