பக்கம் எண் :

பக்கம் எண்:1052

உரை
 
5. நரவாண காண்டம்
 
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது
 
         
    140    யூகிக் குரையா வொருங்குட னிழற்றிப்
           ............................................................
           கனவினு நனவினு மின்ப மல்லது
           நுனைவேற் றடக்கைநம் புனைமுடி வேந்தன்
           காணலன் கண்டீர் மாணல மியைந்த
           நல்வினை யுடையன் பெரிதெனப் பல்லோர்
    145     இகழ்தல் செல்லார் புகழ்வனர் புகன்று
           வாசவ தத்தையும் வத்தவ மன்னனும்
           ஏசினன........................................
 
                    (இதுவுமது)
            140 - 147 : ஒருங்கு............ஏசினன
 
(பொழிப்புரை) பின்னரும், 'அன்பனே! ''உலகத்துயிர்கள் ஒரு சேர இன்புற்று வாழும்படி தனது கொற்ற வெண்குடையால் நிழல் செய்து.........கனவும் நனவும் ஆகிய இருவேறு நிலைகளினும் இன்பமேயன்றித் துன்பத்தைக் கூர்த்த நுனியையுடைய வேலை ஏந்திய பெரிய கையையும் புனைந்த முடியையு முடைய நம் மரசன் கண்டிலன்காண். ஆதலின் அவன் மிகவும் மாட்சிமையுடைய நன்மையோடு கூடிய நல்வினையைப் பெரிதும் உடையன் என்று உலகில் பலரும் அம் மன்னனை இகழாது விரும்பிப் புகழ்வாராக ! வாசவதத்தையும் அவ்வத்தவ மன்னனும் ஏசினன' (?).........என்க.
 
(விளக்கம்) 140 ஆம் அடியையடுத்து ஓரடி முழுதும் 147 ஆம் அடியின்கண் மூன்று சீர்களும் அழிந்தன. இன்பம் நுகர்வதல்லது நம் வேந்தன் துன்பங் காணலன் என இயைக்க. இகழ்தல் செல்லார் ஒருசொல். புகன்று புகழ்வனர் என மாறுக. புகன்று - விரும்பி.