பக்கம் எண் :

பக்கம் எண்:1054

உரை
 
5. நரவாண காண்டம்
 
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது
 
          பருகுவனன் போலப் படைப்பெரு வேந்தன்
    155    அவணே யிருப்ப னிவணே னெனவே
          கருதல் வேண்டுமெனக் கைவிரல் பற்றி
          விடுக்கும் பொழுதி னெடுத்தவ னின்னேர்
          உண்டோ வொழுக்கி னென்றுபின் விடுப்ப
 
                     (இதுவுமது)
           154 - 158 : பருகுவனன்............விடுப்ப
 
(பொழிப்புரை) 'அமைச்சனே! படைகளையுடைய அப்பெரு வேந்தன் நின்னைப் பருகுவான் போல விரும்பி எதிர் பார்த்து அக் கோசம்பியின்கண்ணே இருப்பன். ஆதலால் நீ செல்க ! அங்ஙனம் செல்லினும் இவ்வுஞ்சையிலேயே யான் இருக்கின்றேன் என்றே நீ எண்ணுதல் வேண்டும். பிரிந்ததாக எண்ணுதல் கூடாது என்று தன் ஆராமையைக் கூறி அந்த யூகியினது கைவிரலைப் பற்றி விடுக்கும் பொழுதும் விடானாய் மீண்டும் அவன் கையை எடுத்து அன்பனே ! நல்லொழுக்கத்தினாலே நினக்கு ஒப்பாவார் இவ்வுலகத்தே பிறரும் உளரோ' என்று கூறிப் பின்னர் விடை கொடுத்து விடாநிற்ப என்க.
 
(விளக்கம்) வேந்தன் : உதயணன். அவணே - அக் கோசம்பியின்கண். நீ அங்குச் செல்வாயாயினும் இவணேன் எனவே கருதல் வேண்டும் என்றவாறு. எனவே நம்பால் பிரிவென்ப தொன்றில்லை என்று கூறிய வாறாயிற்று. கையைவிட நினைப்பவன் விடாமல் மீண்டும் ஒரு முகமன் கூறிவிடுத்தான் என்னும் இது அவனுடைய ஆராவன்பினை நன்கு புலப்படுத்துதல் காண்க.