பக்கம் எண் :

பக்கம் எண்:1070

உரை
 
5. நரவாண காண்டம்
 
8. மதனமஞ்சிகை வதுவை
 
         
    100    விரலும் விரலிற் கேற்ற வங்கையும்
          அங்கைக் கேற்ற பைந்தொடி முன்கையும்
          முன்கைக் கேற்ற நன்கமை தோளும்
          தோளிற் கேற்ற வாளொளி முகமும்
          மாப்படு வடுவுறழ் மலர்நெடுங் கண்ணும்
    105    துப்பன வாயு முத்தொளி முறுவலும்
          ஒழுகுகொடி மூக்கு மெழுதுநுண் புருவமும்
          சேடமை செவியுஞ் சில்லிருங் கூந்தலும்
          ஒல்குமயி ரொழுக்கு மல்குற் பரப்பும்
          மருங்கி னீளமு நிறங்கிளர் சேவடித்
    110    தன்மையு மெல்லா முன்முறை நூலின்
          அளந்தனன் போல வளம்பட வெழுதிப்
 
                    (இதுவுமது)
              100 - 111 : விரலும்.........எழுதி
 
(பொழிப்புரை) அங்ஙனம் உணர்ந்துகொண்டவன் அப்பந்தின்மேற் கிடந்த வடுக்களுக்குப் பொருந்திய விரல்களையும், அவ் விரல்களுக்குப் பொருந்திய உள்ளங் கைகளையும், அவ்வுள்ளங்கைகளுக்கு ஏற்ற பசிய வளையலணிந்த முன் கைகளையும், அம் முன் கைகளுக்கு ஏற்றனவாக நன்கு பொருந்திய தோள்களையும், அத் தோள்களுக்கு ஏற்ற மிக்க ஒளியுடைய முகத்தையும் அம்முகத்திற்கேற்ற மாமரத்தின்கண் தோன்றும் வடுவினது பிளவுகளையொத்த மலர்ந்த நெடிய கண்களையும், பவளம் போன்ற வாயினையும், முத்துக்கள் போன்ற ஒளியுடைய பற்களையும், ஒழுகாநின்ற நீண்ட மூக்கினையும் மை எழுதும் நுண்ணிய புருவங்களையும், அழகமைந்த காதுகளையும், சிலவாகிய கரிய கூந்தலையும், குழைந்தமயிரொழுக்கினையும், அல்குற் பரப்பினையும், இடையின் நீளத்தினையும், நிறமிக்க சிவந்த அடிகளின் தன்மையையும், எல்லாம் முன்னர் முறையே நூலால் அளந்து அறிந்தவன் போல வளம்பட எழுதி என்க.
 
(விளக்கம்) அங்கை - அகங்கை; உள்ளங்கை. மாப்படுவடு - மாமரத்திலுண்டாகிய பிஞ்சு. துப்பன - பவழம்போன்ற. முறுவல் - பல். ஒழுகு கொடிமூக்கு - வளருகின்ற நீண்ட மூக்கு. சேடு - அழகு. ஒல்கும் - குழைந்த. நூல் - ஓவிய நூலுமாம்.