பக்கம் எண் :

பக்கம் எண்:1073

உரை
 
5. நரவாண காண்டம்
 
8. மதனமஞ்சிகை வதுவை
 
          பட்டது கூறலி னொட்டிய வுவகையள்
          வழிபடு தெய்வம் வரந்தரு கின்றென
          மொழிவன ளாக முகத்தின் விரும்பித்
          தாயுந் தவ்வையுந் தம்மொடு பயின்ற
    130    ஆய்வளை மகளிரு நிகழ்ந்ததை யறிந்து
          சீரின மதித்துச் சிற்றின மொரீஇப்
          பேரினத் தவரொடு பெருங்கிளை பிரியாத்
          தலைக்கோன் மகளிர் தன்மை கூறிக்
 
                 (பரத்தையர் செயல்)
               126 - 133 : பட்டது............கூறி
 
(பொழிப்புரை) முன்பு அப் பந்து காரணமாக நிகழ்ந்த நிகழ்ச்சியையும் கூறுதலாலே, அதுகேட்ட அக் கலிங்கசேனை பொருந்திய மகிழ்ச்சியையுடையவளாய் முகத்தான் இனிது விரும்பி நோக்கி ''யாங்கள் வழிபடுகின்ற தெய்வம் தானே எம்பால் வந்து வலிந்து எமக்கு வரந்தருகின்றது!'' என்று கூறி நிற்பாளாக, அப்பொழுது அம் மதனமஞ்சிகையின் செவிலித்தாயரும் தமக்கையரும் அவரோடு பயின்ற அழகிய வளையலணிந்த தோழிமாரும் நிகழ்ந்ததனை அறிந்து கோமுகனை நோக்கித் தலைக்கோற் பட்டம்பெற்ற பெருந்தகைமையையுடைய கணிகை மகளிர் சிறந்த நல்லினத்தார்களை மிகவும் மதித்துச் சிற்றின மாந்தரினின்றும் விலகி எப்பொழுதும் பேரின மாந்தரொடு மிக்க கேண்மை பூண்டு பின்பு பிரிவில்லாது வாழும் தன்மையை எடுத்துக் கூறா நிற்ப என்க.
 
(விளக்கம்) பட்டது - மதனமஞ்சிகையின் பந்து தன்மேல் வீழ்ந்தமை காரணமாக நரவாணதத்தன் காமநோய் வாய்ப்பட்டது என்க. ஒட்டிய - பொருந்திய. தாமே பெரிதும் முயன்று பெறுதற்குரிய காதற் கேண்மை தமக்கு வலிய வருகின்றது என்பாள் வழிபடு தெய்வம் வரந்தருகின்றது என்றாள். வழிபடு தெய்வம் என்றது நரவாணதத்தனைக் கருதிக் கூறியபடியாம். வரந்தருகின்று - வரந்தருகின்றது. தாய் - செவிலித் தாயர். தவ்வை - செவிலித்தாய் மகளாய்த் தனக்கு மூத்த தோழி. சீரினம் - சிறந்த நல்லின மாந்தர். சிற்றினம் - கயவர் கூட்டம். பேரினம் - சான்றோர் கூட்டம். தலைக்கோல் மகளிர் - தலைக்கோற் பட்டம்பெற்ற கணிகை மகளிர். தலைக்கோல் மகளிர் கணிகையராயினும் கற்புக்கடம் பூண்டொழுகுதலில் தலைசிறந்தவர் என்று பாராட்டிக் கூறியபடியாம். இங்ஙனமாதலை மாதவியிடத்தும் காண்க.