பக்கம் எண் :

பக்கம் எண்:1078

உரை
 
5. நரவாண காண்டம்
 
9. மதனமஞ்சிகை பிரிவு
 
          பதனறிந்து நுகரும் பருவத் தொருநாட்
          கோல நீண்மதிற் கொடிக்கோ சம்பி
          ஞால மெல்லா நயந்துடன் காண
          முழவொடு பல்லிய முன்றிற் றதும்ப
     5    விழவொடு பொலிந்த வழகிற் றாகித்
          திசைதிசை தோறுந் திருக்கண் கூடிய
          வசையறு திருநகர் வந்துடன் றுவன்றிப்
 
                     (திருவிழா)
              1 - 7 : பதனறிந்து.......துவன்றி
 
(பொழிப்புரை) இவ்வாறு நரவாணதத்தன் மதனமஞ்சிகையோடு  முகைப்பதம் பார்க்கும் வண்டுபோல நகைப்பதம் பார்த்து இன்பம் நுகர்ந்திருக்குங் காலத்தே ஒருநாள் அழகிய நீண்ட மதில்களையுடைய அக்கொடிக்கோசம்பி நகரத்தின்கண் உலகிலுள்ள மாந்தரெல்லாம் விரும்பி ஒருங்குவந்து விழாக்காணும்படி மத்தளம் முதலிய பல வேறு இசைக் கருவிகள் அரண்மனை முற்றத்திலே முழங்காநிற்ப, திருவிழாவோடு புதுப்பொலிவுடைய அழகினையுடையதாய் நான்கு திசைகளினும் செல்வம் செழித்துள்ள குற்றமற்ற அந் நகரத்திலுள்ள மாந்தரனைவரும் ஒருங்கே வந்து கூட என்க.
 
(விளக்கம்) ஞாலம் : ஆகுபெயர். ததும்ப - முழங்க. திருக்கண் கூடிய - செல்வம் தன்னிடத்தே பெருகப்பெற்ற. நகர் : ஆகுபெயர். துவன்றி - துவன்ற.