பக்கம் எண் :

பக்கம் எண்:108

உரை
 
3. மகத காண்டம்
 
7. கண்ணுறு கலக்கம்
 
           புன்கண் மாலை போழத் தன்கட்
     40    டீராக் கற்பிற் றேவியை மறந்து
           பேராக் கழற்காற் பெருந்தகை புலம்பிப்
           பைவிரி யல்குற் பதுமா பதிவயிற்
           கைவரை நில்லாக் காம வேகம்
           அன்றுமுத லாகச் சென்றுமுறை நெருங்கப்
 
                 (உதயணன் வருந்துதல்)
               39 - 44; தன்கண்............நெருங்க
 
(பொழிப்புரை) பிறக்கிடாத மறக்கழல் கட்டிய கால்களையுடைய
  உதயணன் தன்பாற் றீராத கற்பையுடைய தன் தேவியாகிய
  வாசவதத்தையைத் துவரமறந்து பாம்பினது படம் விரிந்தாற்போன்ற
  அல்குலையுடைய பதுமாபதியின்பால் உண்டான தனது ஒழுக்க
  எல்லையிலே அடங்காத காமவேகமானது அவளைக் கண்டநாள்
  தொடங்கிப் படிப்படியாக மிகுந்து தன்னைப் பெரிதும் துன்புறுத்து
  தலாலே துன்புற்று என்க.
 
(விளக்கம்) தன்கட்டீராக் கற்பு - தன்பானின்றும் அகலாத
  கற்புடைமை என்க. பேராக்கால், கழற்கால் எனத் தனித்தனி கூட்டுக.
  பேரா-போரிற் பிறக்கிடாத. பெருந்தகை - உதயணன். பெருந்தகை
  காமவேகம் முறை நெருங்கப் புலம்பி என்க. பை-பாம்பின் படம்,
  கைவரை - தன்னொழுக்க எல்லை. அன்று - பதுமாபதியைக்
  கண்டநாள். சென்று - மிகுந்து.