பக்கம் எண் :

பக்கம் எண்:119

உரை
 
3. மகத காண்டம்
 
8. பாங்கர்க் குரைத்த
 
         
     
           பாசிழைச் செவிலியும் பயந்த தாயும்
     10     நங்கை தவ்வையும் வந்தொருங் கீண்டிப்
           படிநலப் பாண்டியங் கடிதூர்ந் துராஅய
           வையத் திருப்ப மருங்குனொந் ததுகொல்
           தெய்வத் தானத்துத் தீண்டிய துண்டுகொல்
           பாடகஞ் சுமந்த சூடுறு சேவடி
     15     கோடுயர் மாடத்துக் கொடுமுடி யேற
           வாதக் கொப்புளொடு வருத்தங் கொண்டகொல்
           அளிமலர்ப் பொய்கையுட்- குளிர்நீர் குடையக்
           கருங்கண் சிவப்பப் பெருந்தோ ணொந்தகொல்
           யாதுகொ னங்கைக் கசைவுண் டின்றெனச்
 
        (செவிலி முதலியோர் பதுமாபதியிடம் கூறல்)
             9 -19 ; பாசிழை.........இன்றென
 
(பொழிப்புரை) பசிய அணிகலனையுடைய செவிலித்தாயும்
  பதுமாபதியை யீன்ற தாயும் அவளுடைய உசாஅத் துணைத்
  தோழியாகிய யாப்பியாயினியும் அவள்பால் வந்து குழுமி நோக்கி
  இவட்கு இன்று துயரம் தோன்றியுளது, அத்துயரத்திற்குக் காரணம்
  யாது? ஒரோ வழி இவள் நேற்று வடிவழகுடைய எருதுகளை விரைந்து
  செலுத்திச் சென்ற வண்டியின்கண்  அமர்ந்திருந்தமையாலே இவள்
  இடைநொந்து போயதோ? அன்றிக் காமன் கோயிலினிடத்தே இவளைத்
  தெய்வந்தீண்டி வருத்திய துண்டோ? அன்றி அணியப்பட்ட பாடகத்தைச்
  சுமந்த இவளது சிவந்த அடிகள் குவடுயர்ந்த மேனிலை
  மாடத்துச்சியின்கண் ஏறியதனால் சிவந்த கொப்புளங்களோடு
  வருந்தினவோ? அன்றி வண்டுகள் முரலுகின்ற மலர்களையுடைய
  பொய்கையின்கண் இவள் குளிர்ந்த நீரிலே நெடிது ஆடியதனாலே
  இவளுடைய கரிய கண்கள் சிவவா நிற்பப் பெரிய தோள்களும் துன்புற்ற
  னவோ? இவற்றுள் இத்துன்பத்திற்குக் காரணம் யாதென அறிகின்றிலமே
  என்று கவன்று என்க.
 
(விளக்கம்) பயந்ததாய் - உதையையோடை.. நங்கை - பதுமாபதி.
  தவ்வை-செவிலியின் மகளாய்த் தனக்கு மூத்தவள்; யாப்பியாயினி.
  படி-வடிவம். உராஅய-சென்ற. கொல் அனைத்தும் ஐயப் பொருண்மைய,
  தெய்வத்தானம் -காமன்கோயில். தெய்வந் தீண்டியதுண்டு கொல்? என்க.
  பாடகம் - ஒரு காலணி. சூடுறு பாடகம் சுமந்த சேவடி என மாறுக.
  கோடு - உச்சி. அரத்தக் கொப்புள் - சிவந்த கொப்புளம். அசைவு-துன்பம்.